Followers

Friday, April 27, 2012

"இதுதான் இந்தியா" இதுபோன்ற அரிய காட்சிகளை இங்குதான் பார்க்கலாம். இது போல மேலும் பல அரிய காட்சிகளை நீங்களும் காணமுடியும். இவற்றைக் கண்டு ரசிக்கவா அல்லது வருந்துவதா? தெரியவில்லை.
(சீட்டு) விளையாட இது நேரமா?

ஊர் வம்பு பேச இதுதான் இடமா?

காக்கி உடையும் தொப்பி மட்டுமா அடையாளம்?


Tuesday, October 18, 2011

தோழர் பாலதண்டாயுதம்


பொதுவுடைமைக் கட்சி தோழர் பாலதண்டாயுதம்

தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தொண்டர் தோழர் பாலதண்டாயுதம். இவர் 1918 ஏப்ரல் 4ஆம் நாள் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள மாக்கினாம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தையார் காளஹஸ்தி முதலியார். பள்ளிக்கூடப் படிப்பை முடித்துவிட்டுத் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டர் படித்தார். 1939இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இவர் இருந்த அந்த இரண்டு ஆண்டுகள் இவரை ஓர் புரட்சிகர மாணவனாக ஆக்கியது. நாட்டு சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் ஒரு போராட்டம் சாத்வீக, அஹிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது. நாடு முன்னேற, சுதந்திரம் பெற விஞ்ஞான சோஷலிசமே சிறந்தது என்று கருதிய இளைஞர் கூட்டத்தில் பாலதண்டாயுதமும் ஒருவர்.

அப்போது, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இவர்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அதற்கு தோழர்கள் மன்றம் அதாவது காம்ரேட்ஸ் கிளப் என்ற பெயரில். இந்த அமைப்பைத் தோற்றுவித்தவர் சுப்பிரமணிய சர்மா என்பவர். அந்த சர்மாவின் நெருங்கிய தோழராக விளங்கியவர் பாலதண்டாயுதம்.

ஒரு முறை நிதி வசூல் நடந்த போது ஒரு மாணவன், வசூலித்த தொகையைக் கையாடல் செய்ததை அறிந்து பாலனுக்கு ஆத்திரம் வந்தது. ஆகையால் அந்த மாணவன் பாலன் மீது பகைமை கொண்டு, அவரைப் பற்றி தவறான குற்றச்சாட்டொன்றை துணைவேந்தர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியிடம் சென்று முறையிட்டார். பாலதண்டாயுதத்தின் ஆற்றல், திறமை இவற்றின் காரணமாக பாலன் மீது பற்று கொண்டவராயினும், அரசியல் கொள்கை ரீதியாக அவர் மீது குற்றச்சாட்டு என்றதும், துணை வேந்தர் நடவடிக்கை எடுத்தார்.

அதன் பயனாக பாலதண்டாயுதம் உட்பட ஐவர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் வெளியேற்றப் பட்டனர். இதன் காரணமாக பாலதண்டாயுதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஏஸ்.வி.காட்டே அவர்களின் வழிகாட்டுதல்படி, மறுபடி சிதம்பரம் வந்து மாணவர்கள் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தினார்.

அண்ணாமலை நகர் மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்றத்தில் இருந்தது. வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தினமும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று செய்து வந்தனர். பாலதண்டாயுதம் உட்பட பல மாணவர்கள் ஊரில் பல வேலைகளைச் செய்து கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டே போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் மாணவர்கள் பக்கம் ஆதரவு பெருகி மக்களின் ஆதரவும் கிடைக்கவே, பல்கலைக்கழக நிர்வாகம் பணிந்து வந்தது.

பேச்சு வார்த்தை நடைபெற்றது. பல்கலைக்கழக நிர்வாகம் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டது ஒரே ஒரு நிபந்தனையோடு. அந்த நிபந்தனை என்னவென்றால், பாலதண்டாயுதத்தை மட்டும் மீண்டும் பல்கலைக் கழகத்தில் அனுமதிப்பதில்லை என்பதுதான் அது.

இங்கு பாலதண்டாயுதத்துக்கு ஒரு தர்ம சங்கடம். மாணவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் போராடுவதா, அல்லது நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வதா? போராட்டம் தொடர்ந்தால் மற்ற மாணவர்களின் வாழ்க்கைப் பாழாகிவிடுமே. நிபந்தனையை ஒப்புக்கொண்டால், விளைவு தன்னை மட்டும்தானே பாதிக்கும். இதில் இரண்டாவதை ஏற்றுக் கொண்டு தன்னைத் தியாக வேள்வியில் ஆஹுதியாக்கிக் கொண்டார் பாலதண்டாயுதம்.

அறிவியல் படிப்பதற்காக உள்ளே நுழைந்த பாலதண்டாயுதம் ஒரு புரட்சிக்காரராக, கம்யூனிஸ்டாக வெளியே வந்தார். வயது முதிர்ந்த நிலையில் அல்ல, அவருடைய இருபதாம் வயதிலேயே இவர் ஒரு புடம் போட்ட பொதுவுடைமை வாதியாகத் திகழ்ந்தார். இந்த மாற்றங்களின் காரணமாக பாலதண்டாயுதத்தை வீட்டில் விரோதித்துக் கொண்டனர்.

நல்ல அழகிய தோற்றம், களையான முகம், கம்பீரம், வீரம் ததும்பும் பேச்சு இவையெல்லாம் பாலதண்டாயுதத்தை இளைஞர்கள் நேசிக்கும் தலைவராக மாற்றியது. பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் துணை வேந்தர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியையும் வைத்துக் கொண்டே, பாலதண்டாயுதம் பேசுகையில் Mr.Srinivasa Sasthri is neither right nor honourable என்று விமர்சனம் செய்த துணிச்சலை துணைவேந்தர் உட்பட அனைவருமே பாராட்டினர்.

கல்லூரி நாட்களில் இவர் காதலித்த ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை இவர் மணந்தார், இவரது குடும்பத்தாரின் எதிர்ப்புக்கிடையே. இரண்டாம் உலகப் போரின் போது போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த காரணத்துக்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பதினெட்டு மாதம் சிறைவாசம் இவருக்கு.

1940இல் சிறை சென்று 1942இல் விடுதலையான இவரை உடனே மீண்டும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து வேலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர். விடுதலையாகி வெளியே வந்தபின் சென்னைக்குச் சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி"யில் பணியாற்றத் தொடங்கினார்.
இவரது தேசப் பற்றை விளக்க ஒரு நிகழ்ச்சி.

திருநெல்வேலியில் ஒரு ரயில்வே தொழிலாளர் மாநாடு நடந்தது. ஆண்டு 1945 ஜூலை மாதம். அதில் ஒருவர் பேசுகையில், "கம்யூனிஸ்டுகளுக்கு தேசப் பற்றோ, மனிதாபிமானமோ கிடையாது" என்றார். பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பாலதண்டாயுதம், கூட்ட நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பேசினார்.

அவர் சொன்னார், "நான் ஒரு கம்யூனிஸ்ட். என் பெயர் பாலதண்டாயுதம். பகத் சிங்கின் பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். கம்யூனிஸ்டுகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்று ஒருவர் சொன்னார். எது மனிதாபிமானம்? வயிற்றுக்குச் சோறு இல்லாத தாய் ஒருத்தி தன் ரத்தத்தையே பாலாக ஊட்டியும், அவளது குழந்தை உடல் வற்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், அந்தக் குழந்தையை வாங்கி தன் பிள்லையாக வளர்க்கிறார் ஒரு கம்யூனிஸ்ட். அவர் மனிதாபிமானி இல்லையா?" என்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க இவர் அனுப்பப் பட்டார். நெல்லை மட்டுமல்லாமல் இவர் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தொழிலாளர் இயக்கங்களிலும், பொதுமக்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அடக்குமுறைகளுக்கு எதிராகப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். பதுக்கல், கள்ளச் சந்தை போன்றவர்களுக்கு எதிராக இவரது போராட்டத்தால் அவர்கள் கலக்கம் அடைந்தனர்.

1946ஆம் ஆண்டு, இந்திய சுதந்திரம் கிழக்கு அடிவானத்தைல் தோன்றும் நேரம். அப்போது காங்கிரஸ்காரர் டி.பிரகாசம் சென்னை மாகாண முதல்வரானார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடங்கியது. மதுரை சதி வழக்கு என்றொரு வழக்கில் பலர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பாலதண்டாயுதம் போலீசிடம் சிக்காமல் தலைமறைவானார்.

தலைமறைவு என்றால் ஓடி ஒளிந்து கொள்வது அல்ல. போலீசுக்குத் தெரியாமல் ஊர் ஊராகச் சென்று கட்சிப் பணி, தொழிலாளர் நலப் பணி, சமூகப் பணி என்று ஊக்கத்தோடு செயலாற்றி வந்தார். தலைமறைவு வாழ்க்கை நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் போலீசார் பெரும் கூட்டமாக இவரைக் கைது செய்யக் கூடியிருக்க அந்தக் கூட்டத்தில் திடீரென்று தோன்றி பேசிவிட்டு மாயமாக மறைந்து போன சாகசமும் இவர் வாழ்க்கையில் நடந்தது.

சுதந்திரத்துக்குப் பின் 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பாலதண்டாயுதம் மறுபடியும் தலைமறைவானார். மொத்தம் ஐந்து ஆண்டுகள் நெல்லையிலும், பின்னர் சென்னையிலுமாக தலைமறைவாக இருந்தார் பல இன்னல்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு. தியாகத் தழும்பேறிய வாழ்க்கை இவருடையது.

இந்த காலகட்டத்தில் ஒரு சதிவழக்கு புனையப் பட்டது. அதில் ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, கே.பி.எஸ்.மணி, பொன்னு வேலாயுதம், அழகமுத்து, வேலுச்சாமித் தேவர், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோர் ஆயுள் தணடனை விதிக்கப்பட்டனர். மற்றொரு வழக்கில் பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1952 தொடங்கி 1962 வரை இவர் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தார். பத்தாண்டு கால சிறை வாழ்க்கை.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு 1962இல் ஆனந்த விகடனில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார் பாலதண்டாயுதம். அப்போது பரவலாக தமிழ்நாட்டில் வளரத் தொடங்கியிருந்த திராவிட இயக்கத்துக்கு எதிராக இவர் போர்க்கொடி உயர்த்தினார். அதன் பலனாக திராவிட இயக்கத்தார் இவர் மீது ஆத்திரம் கொண்டு பலவாறாக விமர்சித்தார்கள்.

1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. சீனா இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு செய்ததன் பின்னணியில் இந்தப் பிளவு ஏற்பட்டது. சீனாவுக்கு எதிராக இந்திய தேசிய ஒருமைப்பாட்டை ஆதரித்த பாலதண்டாயுதம் சீனாவை ஆதரித்த தோழர்களைக் கடுமையாக எதிர்த்தார். சீன ஆதரவாளர்கள் மார்க்சிய கம்யூனிஸ்ட் என்றும், இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க குரல் கொடுத்தோர் இந்திய கம்யூனிஸ்ட் என்றும் அழைக்கப்பட்டனர்.

இந்தியாவின் உறுதிப்பாடு, வளர்ச்சி, முன்னேற்றம் இவற்றில் அதிக அக்கறை கொண்டிருந்தார் பாலதண்டாயுதம். மோகன் குமாரமங்கலம் காங்கிரசில் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக அமைச்சராகவும் இருந்து பாடுபட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் பாலதண்டாயுதம். நந்தினி சத்பதி, கணேஷ் போன்ற தோழர்களும் இவர்களோடு காங்கிரசில் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.

1973 மே மாதம் 31ஆம் தேதி. சென்னையிலிருந்து டில்லிக்குச் சென்ற ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் விலை மதிக்கமுடியாத பல அரிய உயிர்கள் பலியாயின. அதில் 55 வயதே ஆகியிருந்த பாலதண்டாயுதமும் பலியானார். ஒப்புயர்வில்லாத ஒரு உயிர் பிரிந்தது, இந்த நாடு ஏழ்மையடைந்தது. வாழ்க பாலதண்டாயுதம் புகழ்!

Saturday, October 1, 2011


காந்தி ஜெயந்தி விழா
2-10-2011

1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் 'மகாத்மா' வானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. குடியேறி வாழ்ந்த வெள்ளையர்களின் நிற வேற்றுமை அவரை ஒரு போராளியாக ஆக்கியது. இந்தியாவுக்குத் திரும்பி இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட நினைத்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே சொன்னபடி இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்துச் சாதாரண அடித்தட்டு இந்திய மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டார். இந்தியா வெள்ளையரின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற ஏற்ற வழியொன்றை அவர் கண்டார். அதற்கு வேறு எங்கிருந்தும் கொள்கைகளை இறக்குமதி செய்யவில்லை. இந்த பாரத புண்ணிய பூமியில் காலம் காலமாய் தழைத்து வளர்ந்து வரும் சத்தியம், அன்பு, அகிம்சை இவற்றைக் கொண்டு ஓர் ஆயுதம் தயாரித்துப் போராடினார். இந்திய மக்கள் அவரைப் பின்பற்றினர். நாடும் சுதந்திரம் கண்டது, அவரும் மகாத்மாவாகவும், நாட்டின் தந்தையாகவும் ஆனார். அந்த மகானின் பிறந்த நாள் இன்று 2-10-2011. அவர் நினைவை மட்டுமல்ல, அவர் கடந்து வந்த பாதையை, அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை மீண்டும் சிந்தனை செய்வோம். எந்தக் காலத்துக்கும், எந்தப் பிரச்சினைக்கும், எந்த சிக்கலைத் தீர்க்கவும் காந்தியம் ஒன்றே வழி என்பதை என்று நாடு புரிந்து கொள்கிறதோ, அன்றே நமது துயரங்கள் யாவும் தீரும்! இது பிதற்றல் அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இதிலுள்ள உண்மை ஒவ்வொருவருக்கும் புரியும். அப்படி புரியும் காலம் வரவேண்டும். இறைவனிடம் முறையிடுவோம்.

மகாத்மா காந்தி புகழ் ஓங்குக!!

Friday, September 9, 2011


KMR.Krishnan KMR.Krishnan to KannanKrishnakumar, bcc: me
show details 11:11 (4 minutes ago)
 
என் தந்தையின் முற்றுப்பெறாத நாட்குறிப்பு அனைத்தும் அவருடைய 104வது ஆங்கிலப் பிறந்த நாள் 7 செப் 2011 அன்று மேல் குறிப்பிட்ட வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம்.தாங்கள் படித்து இன்புறுவதுடன் தங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டுகிறோம்.
இந்த மின் அஞ்சலை முடிந்தவரை தமிழ் தெரிந்தோருக்கு அனுப்பவும்.
தங்களுடைய தளத்தில் அறிவிக்கவும்.
வாழ்க வளமுடன்!

கே.முத்துராமகிருஷ்ணன்

Thursday, August 18, 2011

மதுரை மாவட்ட தியாகிகள்:


மதுரை மாவட்ட தியாகிகள்:

சுந்தரராஜ ஐயங்கார்.

இவர் 1899ஆம் ஆண்டில் பிறந்தவர். பத்தாம் வகுப்பு வரை படித்தார். இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். டாக்டர் எஸ்.சுந்தரராஜ ஐயங்கார் எனும் இவருடைய பெயரை பொதுவாக அனைவரும் I.D.F. என்றே குறிப்பிட்டு வந்தனர். இவர் சிறு வயதில் முகவும் முரடனாக இருந்திருக்கிறார். 1918இல் இந்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சியைப் பெற்றார். அதன் பயனாக துப்பாக்கி சுடும் பயிற்சியும் இவருக்கு உண்டு. மகாத்மா காந்தி இந்திய அரசியலில் புகுந்து இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கிய நாளில் அவருடைய கொள்கை, வழிமுறைகள் இவற்றால் ஈர்க்கப்பட்டு இவர் காந்தி பக்தரானார். முதன்முதலில் காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து மகாத்மா காந்தி அறிவித்த எல்லா போராட்டங்களிலும் இவர் பங்கேற்றார். மிகவும் எளிமையானவர்; எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடியவர். முதுகுளத்தூர் தாலுகாவில் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக அந்தப் பகுதிகளில் கள்ளுக்கடைகளை இரண்டு முறை மூடும்படியான நிலைமையை உண்டாக்கினார்.

1922இல் மேலூரில் இவர் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1923ஆம் ஆண்டு மறுமுறையும் மறியலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டதற்காக 6 மாத சிறை தண்டனை பெற்றார். 1932இல் நடந்த மறியலில் இவர் கைது செய்யப்பட்டு ஒரு வருட தண்டனை கிடைத்தது.

பொதுக்கூட்டங்களில் இவர் எளிமையான நடையில் பேசுவார். இவரது பேச்சில் நகைச்சுவை இருக்கும். மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர். பல சின்னஞ்சிறு கதைகளைச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பார். இவர் பேசுகிறார் என்றால், அதைக் கேட்பதற்கென்றே மக்கள் திரளாகக் கூடுவர். தொழிலாளர் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு பல தொழிலாளர் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். இவர் காலமாகிவிட்டார்.

மு.சுப்பையா பிள்ளை.

மதுரை முனுசாமிப் பிள்ளையின் மகனாக 1911இல் பிறந்தவர் சுப்பையா பிள்ளை. 1930இல் தேசிய காங்கிரசில் இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடவேண்டுமென்கிற எண்ணத்தில் இணைந்தவர். 1930ஆம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கு கொள்ளவிருக்கிறார் என்பதை அறிந்து இவரைப் பிடித்துக் கொண்டு போய் சப் ஜெயிலில் அடைத்து வைத்துவிட்டார்கள். 1932இல் அன்னிய துணி மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு ஒரு ஜவுளிக் கடையின் முன்பாக இவர் மறியல் செய்த போது கைது செய்யப்பட்டு 4 மாத கால சிறை தண்டனை பெற்றார். மதுரை சிறையில் தண்டனை காலத்தைக் கழித்தார். 1933இல் மறுபடியும் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் சமஸ்தானப் பகுதிக்குச் சென்று அங்கு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காகக் கைது செய்யப்பட்டு ஒரு வருஷம் தண்டிக்கப்பட்டு அங்கு சிறையில் இருந்தார்.

1941இல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டரை வருஷ சிறை தண்டனை பெற்று தஞ்சாவூர், வேலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார். 1940இல் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றார். அதில் இவர் கைதாகி 10 மாத கால சிறை தண்டனை பெற்று, அலிப்புரம் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். மேடைப் பேச்சில் வல்லவர். இவருடைய ஆவேசமான பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதுண்டு. இவர் காலமாகிவிட்டார்.

ர.சிதம்பர பாரதி.

1905இல் பிறந்தவர் சிதம்பர பாரதி. இவருடைய தந்தையார் பெயர் ரங்கசாமி. 1920இல் தனது 15ஆம் வயதில் அரசியலில் ஈடுபட்டார். மதுரையில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கி நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் இவர் பங்கு கொண்டார். முதலில் வன்முறையில் ஆர்வம் இருந்தபோதும், மகாத்மா காந்தியடிகளின் தாக்கம் இவரை சாத்வீகராக மாற்றியது. சுப்பிரமணிய சிவா தனி மனிதனாக ஊர் ஊராகச் சென்று சுதந்திரப் பிரச்சாரம் செய்த காலத்தில் இவர் அவருடைய பணிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். வீர சவர்க்கார் எழுதிய 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் எனும் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து 1927இல் நடந்த சென்னை காங்கிரஸ் மகாநாட்டில் அனைவருக்கும் விநியோகித்தவர். அந்த நூலை மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ்.குடும்பத்தின் டாக்டர் செளந்தரம் அவர்கள். அந்தப் புத்தகம் தடைசெய்யப்பட்டது என்பதும் அதை படிப்பதோ விநியோகிப்பதோ குற்றம் என்றிருந்த் நேரத்தில் இவர் அந்தப் பணியில் செயல்பட்டார். அந்த நூலைப் படிப்பதோ, வைத்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் இருந்த நேரம் அது. 1928இல் சென்னையில் இவர் ஒரு பத்திரிகையை நடத்தினார். அதன் பெயர் "தேசோபகாரி" என்பது. இவர் தனது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏழுமுறை, அதாவது 1922, 23, 24, 29, 32, 40, 42 ஆகிய ஆண்டுகளில் போராட்டங்களில் கலந்து கொண்டமைக்காகச் சிறை சென்ற தியாகி. மதுரை நகர காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மாகாண காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினராக இருந்து வந்தவர். நல்ல சொற்பொழிவாளர். இவரது மேடைப் பேச்சு அனைவரையும் கவர்ந்திழுக்க வல்லது. முன்னாள் சட்டசபை உறுப்பினராக இருந்த இவர் காலமாகிவிட்டார்.

மதுரை தியாகராஜ சிவம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் ஒரு கிராமத்தில் கிராம முன்சீபாக இருந்த சுப்பையர் என்பவரின் குமாரன் இவர். 1900ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆஜானுபாகுவான தேகக் கட்டு, முறுக்கு மீசை, வெள்ளை கதர் ஆடை இவற்றோடு இவர் பெரும் கூட்டத்திலும் பளிச்சென்று தோற்றமளிப்பார். மனதால் மிகவும் மென்மையானவர். இரக்க குணம் படைத்தவர். 1921ஆம் ஆண்டு வாக்கில் சுப்பிரமணிய சிவா மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஊர் ஊராகச் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்த காலத்தில் பல இளைஞர்கள் அவருடைய பேச்சால் கட்டுண்டு காங்கிரஸ் இயக்கத்திற்குள் இணைந்தனர். அப்படி வந்தவர்களில் தியாகராஜ சிவமும் ஒருவர். தான் வகித்து வந்த ஆசிரியர் பணியை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் இவர் ஈடுபட்டார். காரியத்திலும் செயலிலும் இவர் மிகவும் கண்டிப்பானவர். அவருடைய பேச்சே மிகவும் கண்டிப்பு மிகுந்ததாக இருக்கும். அவருடைய காலத்தில் இளைஞர்களின் ஆதர்ச புருஷராக விளங்கியவர் நீலகண்ட பிரம்மச்சாரி. தானும் அவரைப் போல ஒரு தீரமிக்க சுதந்திரப் போராளியாக ஆக வேண்டுமென்பதற்காகத் தன்னுடைய பெயரையும் முதலில் தியாகராஜ பிரம்மச்சாரி என்று வைத்துக் கொண்டார். சுப்பிரமணிய சிவத்திற்கு இவரை மிகவும் பிடிக்கும். இவரை அன்புடன் பீமண்ணா என்றுதான் அழைப்பார். சுப்பிரமணிய சிவம் மதுரையில்ருந்து தொழுநோய் காரணமாக ரயிலில் ஏற அனுமதிக்கப்படாமையால் கால் நடையாகவே நடந்து தொண்டர்களுடன் பாப்பாரப்பட்டிக்குச் சென்று அங்கு உயிர் துறந்தார் அல்லவா? அப்போது சிவம் மகாசமாதி அடைந்த பிறகு அவர் நினைவாக இவர் தன்னுடைய பெயரை தியாகராஜ சிவம் என்று மாற்றிக் கொண்டு, உலகுக்குத் தான் சிவத்தின் வாரிசு என்பதை உணர்த்தினார்.

இவர் 1922இல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டும், 1932இல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் இவர் மொத்தம் பதிமூன்றரை மாதங்கள் சிறையில் இருந்தார். தன்னுடைய சிறை வாசத்தை இவர் கடலூர், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கழித்தார். இவர் சிறந்த பேச்சாளர். இவருக்கு செல்லம்மாள் எனும் மனைவி இருந்தார்.

மதுரை எஸ்.வி.கே. தாஸ்.

1916ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1936இல் தனது இருபதாம் வயதில் காங்கிரசில் சேர்ந்தார். 1938ஆம் ஆண்டு முதல் பல ஊர்களுக்கும் சென்று கிராம மக்களிடம் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரசின் முழு நேர தொண்டனாக இவர் பணியாற்றினார். ஹரிஜன முன்னேற்றம், கள்ளுக்கடை எதிர்ப்பு ஆகிய போராட்டங்களில் இவர் பங்கு கொண்டார். காசியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மதன்மோகன் மாளவியா அவர்களின் பெயரால் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இவர் பணியாற்றி வந்தார். அடிப்படையில் சோஷலிச எண்ணம் உடைய இவர் 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற சோஷலிஸ்ட் கட்சியில் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டார். 1949இல் இவரோடு இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொண்டரான பங்கஜத்தம்மாள் என்பவரை இவர் மறுமணம் செய்து கொண்டார். 1972இல் இவர் காலமானார்.

மதுரை தியாகி வி.கே.டி.பங்கஜத்தம்மாள்.

இளம் வயதிலேயே பால்ய விவாகம் செய்து கொண்டவர் இவர். கணவர் சீனிவாச ஆழ்வாருடன் பஜனைப் பாடல்களும், மேடைகளில் சுதந்திரப் பாடல்களும் பாடி பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் நடத்தி வந்தார். இவர் பலமுறை சிறை சென்றார். இரண்டரை ஆண்டுகள் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1972 வரை இவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. காந்திஜி தலைமையில் இவர் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் 1979 ஜூலை 1இல் இறந்தார்.


திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து.

மதுரை மாவட்டம் திம்மநத்தம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.ஆர்.தங்கமுத்து. இவர் பிறந்தது 24 பிப்ரவரி 1914ஆம் வருஷம். இவர் இளம் வயதில் இந்திய சுதந்திரப் போரில் பங்கு கொண்டவர். 1932ஆம் வருஷம் அன்னிய துணி பகிஷ்காரம் செய்து ஜவுளிக் கடைகளின் வாயிலில் மறியல் செய்தார். எனினும் இவர் வயதை எண்ணி இவரைக் கைது செய்யவில்லை. 1942இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறிய போது பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். ஆங்காங்கே காங்கிரசில் பங்கு பெற்ற தொண்டர்கள் பலரும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி இவரும் 1942இல் பாதுகாப்பு கைதியாக ஒரு வருஷ காலம் சிறை வைக்கப்பட்டார். இவருடைய தந்தையார் தேசிய இலவச பள்ளிக்கூடமொன்றை நடத்தி வந்தார். ஏழை எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அறிவினை ஊட்ட இவர் அந்தப் பள்ளியைப் பயன்படுத்தினார். அது தவிர கதர் அபிவிருத்தி, கதர் பிரச்சாரம் விற்பனை ஆகியவற்றிலும், ஹரிஜன சேவைகளிலும் இவர் பணியினைத் தொடர்ந்தார். முதலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் உறுப்பினராக இருந்த இவர் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் வாழ்நாளில் ஏழைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தி இருந்தார்.

மதுரை கே.என்.கிருஷ்ணன்.

மதுரை நாகசாமி ஐயரின் மகனாக 15-3-1915இல் பிறந்தவர் கிருஷ்ணன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி இவரும் தேச சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தியடிகள் அறிவித்த போது இவர் அதில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்தில் இவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை கிடைத்தது. இவர் மொத்தம் மூன்று முறை சிறை சென்றிருக்கிறார். அலிப்புரம் முதலான பல சிறைகளில் இவர் தண்டனை அனுபவித்து இருக்கிறார்.

மதுரையில் 'தீச்சட்டி' கோவிந்தன் எனும் போலீஸ் அதிகாரி இருந்தார். இவர் 1942 அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ஊர்வலமாகச் சென்ற பெண்களைப் பிடித்து போலீஸ் வண்டியில் ஏற்றி வெகுதூரம் கொண்டு சென்று ஒருவரும் வரமுடியாத காட்டுப் பகுதியில் அவர்களது துணிகளை உருவிக்கொண்டு விட்டுவிட்டு வந்துவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் கொடுத்த துணிகளை அணிந்து கொண்டு அந்தப் பெண்கள் அழுதுகொண்டு வீடு வந்து சேர்ந்தனர். இந்தச் செய்தியைக் கேட்ட மதுரை தேசபக்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அந்த இன்ஸ்பெக்டர் 'தீச்சட்டி' கோவிந்தனை பழிவாங்குவது என முடிவெடுத்தனர். அந்த இன்ஸ்பெக்டரின் உண்மையான பெயர் விஸ்வநாதன் நாயர் என்பது. ஒரு நாள் அந்த இன்ஸ்பெக்டர் தனியாக மாட்டிக் கொண்ட நேரத்தில் தேசபக்த இளைஞர்கள் ஒன்றுகூடி அவர் மீது அக்கினி திராவகத்தை ஊற்றி, அவர் முகத்தையும் உடலையும் சேதப்படுத்தி விட்டுத் தப்பிவிட்டனர். அந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் கே.என்.கிருஷ்ணனும் ஒருவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அதில் அக்கினி திராவகம் வீசியதாக இவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

இருந்தாலும் போலீஸ் இவர்களை விடுவதாக இல்லை. வேறு ஏதாவது வழக்கில் இவர்களை கைது செய்துவிட துடித்தது. இந்திய பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள் தூக்கிச் சட்டத்தின்படி இவர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி ஒரு வருடமும் மூன்று மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். தஞ்சாவூர், வேலூர் ஆகிய சிறைகளில் இவர் இருந்தார்.

அநீதிகளைக் கண்டு பொங்கும் குணமுள்ளவர் இவர். மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தியாகி. நல்ல உழைப்பாளி. தமிழ்நாடு தியாகிகள் சமிதியின் மதுரை நகரப் பொதுச் செயலாளராக இருந்தவர். மாகாண தியாகிகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர்களில் இவரும் ஒருவர். மதுரை நகர முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். அமரர் ந.சோமையாஜுலுவுக்கு உறுதுணையாக இருந்து வந்தவர். மக்கள் போற்றும் மாபெரும் தியாகி.

மு. பழனியாண்டி சேர்வை.

இவர் 1930இல் ராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போரில் தொண்டராகச் சென்று கைதாகி சிறை சென்றவர். அந்த வழக்கில் இவருக்கு 6 மாத சிறை தண்டனை கிடைத்தது. ஊர் ஊராகப் பயணம் செய்து காங்கிரஸ் கொள்கைகளை மக்களுக்கு விளக்கி வந்தவர். 1942இல் நடந்த குவிட் இந்தியா போரில் இவருக்கு ஒன்றரை வருட ஜெயில் தண்டனை கிடைத்தது. வேலூரில் இவர் பாதுகாப்பு கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். காந்தியக் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சிறந்த காந்தி பக்தர். அகிம்சை கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். இவர் மட்டுமல்லாமல் இவருடைய குடும்பத்தில் இவரது சகோதரர்களும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு தியாகங்கள் புரிந்தவர்கள். தம்பி சண்முகம் மற்றும் பல நண்பர்கள் இவருடன் தேச சேவையில் ஈடுபட்டனர்.

மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்.

1910இல் பிறந்த பரமன் தனது 20ஆம் வயதில் 1930இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பு உள்ள இவர் கதர் இயக்கத்திலும் ஆர்வமுடையவராக இருந்தார். கை தக்கிளியில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். தக்கிளியில் நூல் நூற்பது எப்படி என்பதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். இவர் முதல் உலக யுத்தத்தின் போது ராணுவத்தில் சேர்ந்தார். முதல் உலகப் போரின் போது பிரிட்டன் இந்திய ராணுவத்தினரை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். இவர் அப்போது மெஸபடோமியாவுக்குச் சென்றிருந்தார். ராணுவப் பணியை விட்டுவிட்டு இந்திய தேசியப் பணிக்குத் திரும்பினார். 1940இல் காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கேற்றார். அதில் கைது செய்யப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் 4 மாத காலம் அடைக்கப்பட்டார். இவருடைய மூத்த சகோதரர் அய்யாக்கண்ணு பிள்ளை மதுரையில் பிரபலமான மனிதர். பரமன் ஒரு சிறந்த தேசிய வாதி.

மதுரை எம்.என்.ஆதிநாராயணன்.

மதுரையில் நாராயணசாமி நாயக்கரின் மகனாக 1913ஆம் வருஷம் பிறந்தவர் ஆதிநாராயணன். 1930இல் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பி காங்கிரசில் உறுப்பினரானார். 1932இல் அன்னிய துணி பகிஷ்காரம் நடந்து வந்த போது, இவர் தொண்டர்களுடன் அன்னிய துணிகளை விற்கும் ஜவுளிக் கடைகளின் முன்பு அன்னிய துணிகளை வாங்காதீர்கள் என்று மறியல் செய்தார். அதற்காக இவருக்கு 6 மாத சிறை தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டு மாத சிறை தண்டனை என்பது தீர்ப்பு. அபராதம் கட்ட மறுத்து சிறை தண்டனையை அனுபவித்த பின் இவர் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார். 1930 உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கி, பல போராட்டங்களில் 1942 வரை இவர் பங்கு பெற்றிருக்கிறார். பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சிறைகள் இவருக்கு சிறை வாசம் செய்யும் இடமாக இருந்தன. தொழிலாளர் நலனில் அக்கறையுடன் தொழிற்சங்கங்களிலும் பங்கு பெற்றார் இவர். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சங்கத்துக்குத் தலைவராகவும் இருந்தார்.

எம்.ஆர்.எஸ்.மணி.

1912இல் மதுரையில் எஸ்.ராமசாமி சேர்வை என்பவரின் மகனாகப் பிறந்தவர் மணி. 1930இல் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்துக்கு மதுரையில் தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில் தேர்வாகி திருச்சி செல்ல காத்திருந்த சமயம் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரை பாளையங்கோட்டையில் கொண்டு போய் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான போது 4 மாத காலம் சிறைவாசம் முடிந்த நிலையில் இவர் விடுதலை செய்யப்பட்டார். 1941இல் இவர் யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார். அதற்காக இவர் கைது செய்யப்பட்டு 11 மாத காலம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து 1942இல் விடுதலையாகி வெளியே வந்த இவரை மறுபடியும் கைது செய்து மதுரையில் 1 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் சிறை சென்றார். இப்போது அவர் சென்றது அலிப்புரம் ஜெயில். 1943இல் விடுதலையானார். ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை. மீண்டும் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதியாக வேலூரில் 1 மாதம், தஞ்சையில் 18 மாதங்களும் காவலில் வைக்கப்பட்டார். மதுரையில் இருந்த தேசபக்தர்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போனவர்களில் இவரும் ஒருவர். தொழிலாளர் சங்கங்களில் ஈடுபாடு கொண்டவர். பெருந்தலைவர்களாக இருந்த பசும்பொன் தேவர், ப.ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டவர். மதுரையில் மணீஸ் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார்.

ஏ.வி.செல்லையா.

இவரது தந்தையார் ஒரு சிறந்த தேசபக்தர். எனவே அவருடைய பிள்ளைகளும் அப்படியே. இவர் தன்னுடைய சுதந்திரப் போரை 1930இல் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் தொடங்கினார். 1942லும் புரட்சியில் பங்கு கொண்டு சிறை சென்றார். இவர் ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்று இருந்திருக்கிறார். 1942இல் ஒரு குண்டு வீச்சு சம்பவம். அதில் உயிர் இழந்திருக்க வேண்டிய இவர், மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்தார். அந்த குண்டு வீச்சினால் இவர் தலையில் ஏற்பட்ட தழும்பு கடைசி வரை இருந்தது. இவருடைய சகோதரர் அணுகுண்டு ஏ.வி.அய்யாவு ஓர் பிரபலமான போராட்டக்காரர். தேசபக்தர். இவரும் பலமுறை சிறை சென்றிருக்கிறார். சுதந்திரப் போரட்ட வீரர்களை ஒன்றிணைத்து அந்தச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் செல்லையா.

எம். சிவசாமி.

மா.இருளாண்டி பிள்ளை என்பவரின் மகன் இவர். 1920இல் பிறந்தவர். 1940இல் இவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். 1942 புரட்சியில் இவர் பல இடங்களில் புரட்சியைத் தூண்டியமைக்காகக் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவருக்கு 6 மாத சிறை தண்டனை கொடுத்து பெல்லாரி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

து. நவநீதகிருஷ்ணன்.

மதுரையில் துரைசாமி நாயுடு என்பவருக்கு 1909இல் பிறந்தவர் து.நவநீதகிருஷ்ணன். 1930இல் சட்ட மறுப்பு இயக்கத்தின் மூலம் இவர் சுதந்திரப் போரில் குதித்தார். அந்தப் போராட்டத்தில் இவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. 1930 ஆகஸ்ட் முதல் இவர் பாளையங்கோட்டை, ராஜமகேந்திரபுரம், சிறைகளில் அடைக்கப்பட்டார். காந்தி இர்வின் ஒப்பந்தப்படி இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சிறந்த நிர்வாகி, சிறந்த தேசபக்தர்.

Monday, August 8, 2011



இந்திய சுதந்திரத் திருநாள்

வாழ்த்துக்கள்

15 ஆகஸ்ட் 2011


                             JAI HIND!

Saturday, August 6, 2011

விருதுநகர் சதி வழக்கு


பெருந்தலைவர் காமராஜ்

விருதுநகர் சதி வழக்கு

1942ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தியத் திருநாடு கொந்தளிப்பில் ஆழ்ந்த நேரம். தமிழ்நாடு அதிலும் பின்தங்கிவிடவில்லை. தேவகோட்டை கலவரம், திருவாடனை சிறை உடைப்பு, குலசேகரப்பட்டினம் கலவரம், புகளூர் தண்டவாளப் பெயர்ப்பு, கோவை சூளூர் விமான தளம் எரிப்பு போன்ற பல புரட்சிகள் நடந்து கொண்டிருந்த நேரம்.

இதற்கெல்லாம் முன்னோட்டமாக 1933ஆம் வருஷம் தென் தமிழ்நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்வோம்.

அந்தக் காலத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் தீவிர காங்கிரஸ்காரர்களாக விளங்கிய கு.காமராஜ், அவருடைய நண்பர் கே.எஸ்.முத்துச்சாமி ஆகியோர் சுதந்திரப் போர் எழுச்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிகழ்ச்சியொன்றை இப்போது பார்ப்போம்.

ஒரே ஊரைச் சேர்ந்த இவ்விருவரும் காங்கிரசில் பிரபலமாக வளர்ந்து வந்தார்கள். கு.காமராஜ் அவர்களின் பெற்றொர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார். கே.எஸ்.முத்துச்சாமி அவர்களின் பெற்றோர் கே.சங்கரநாராயண ஆச்சாரி, அன்னபூரணத்தம்மாள்.

1933இல் உதகமண்டலத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்த வங்காள மாநிலத்தின் கவர்னர் சர் ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்வதற்காசென்னையில் ஒரு சதி நடந்ததாகவும் அதில் கே.அருணாசலம் (அருண்), சபாபதி, கண்ணாயிரம், ஹைதர் அலி என்கிற சங்கர், வாங்கார்டு இன்சூரன்ஸ் கம்பெனி அதிபர் ஹெச்.டி.ராஜா இவர்களோடு வங்கத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்கார், கோவை சுப்பிரமணியம் ஆகிய 21 பேர் கைது செய்யப்பட்டு 'சென்னை மாகாண சதி வழக்கு' என்ற பெயரில் ஒரு வழக்கு நடந்தது. (இந்த வழக்கு குறித்த நமது கட்டுரை "சென்னை சதி வழக்கு" எனும் தலைப்பில் நமது வலைத்தளம் http://www.tamilnaduthyagigal.blogspot.com வெ ளியாகியிருக்கிறது. தயவு செய்து அதனைப் பார்க்க வேண்டுகிறேன்.)

இந்த வழக்கில் அப்போது தமிழகத்தில் தீவிரமாக இருந்த தேசபக்தர்கள் சிலரில் காமராஜ் போன்றவர்களையும் இணைக்க ஒரு முயற்சி நடந்தது. ஆனால் பாவம், அவர்களால் முடியவில்லை. காமராஜ் அவர்களை அந்தச் சதிவழக்கில் பிரிட்டிஷ் அரசு சேர்க்க விரும்பியதற்கு முக்கிய காரணம் இருந்தது. அதாவது காமராஜ் 1930இல் உப்பு சத்தியாகிரகத்தை ஆதரித்துப் பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்தார். அப்போது அதே சிறையில் அடைபட்டிருந்த லாகூர் சதி வழக்கில் ஷாஹீத் பகத் சிங்கின் தோழர்கள் காமராஜ் அவர்களுக்கு பழக்கமாகினர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காமராஜ் அவர்களையும் சதி வழக்கில் பிணைக்க முனைந்தனர்.

உண்மையில் வங்க கவர்னராக இருந்த ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்யவும், வங்கியைக் கொள்ளை அடிக்கவும் புரட்சிக்காரர்கள் திட்டமிட்டது உண்மைதான். இதில் பங்கு பெற்ற தமிழ் நாட்டு வீரர்களில் கே.அருணாசலம் (அருண் - இவர் பிந்நாளில் 'ஆனந்தவிகடன்' இதழில் தொடராகப் பல தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார்) விருதுநகர் சென்று காமராஜ் அவர்களை சந்தித்தார் எனது ஒரு காரணம். அருணாசலம் புதுச்சேரி சென்று இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வைத்திருந்தார். ஆனல் இதில் எதிலும் காமராஜ் பங்கு பெறவில்லை என்பதுதான் உண்மை.

'சுதந்திரச் சங்கு' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர் இந்த அருணாசலம். இவரையும் இவரோடு தொடர்புடைய மற்ற புரட்சிக்காரர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்து விட்டனர். இந்த முயற்சியில் காமராஜ் அவர்களையும் சேர்த்துவிட அவர்கள் செய்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை.

எனவே அடுத்த சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தனர் போலீசார். காமராஜரை எப்படியும் மாட்டிவிட வேண்டுமென்பது அவர்களது திட்டம். அந்த சமயம் பார்த்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் காவல் நிலையங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. போதாதா போலீசாருக்கு காமராஜரை மாட்டிவிட. இந்த நிகழ்ச்சிகளுக்கு காமராஜ், முத்துச்சாமி இவர்கள்தான் காரணம் என்று சந்தேகித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் தவிர மாரியப்பன் எனும் பத்திரிகை நிருபர், நாராயணசாமி, வெங்கடாசலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது நடந்த அந்த வழக்கில் கே.எஸ்.முத்துச்சாமிதான் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். இரண்டாவது குற்றவாளியாக கு.காமராஜ் பெயர் இருந்தது. மற்றவர்களும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றனர்.

இவர்கள் ஐந்து பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயாரிப்பதில் போலீசார் திணறினர். குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அங்கெல்லாம் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பாவம்! எப்படியாவது இவர்களை இதில் மாட்டிவிட வேண்டுமே என்ன செய்வது? ஒரு முடிவுக்கு வந்தனர். ஐந்தாவது குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருந்த வெங்கடாசலம் என்பவரை மிரட்டி அப்ரூவராக ஆக்கிவிட முயன்றனர். இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டவர் டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்தசாரதி ஐயங்கார்.
                                                          பார்த்தசாரதி ஐயங்கார்

இவர் பிந்நாளில் காமராஜ் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை நகர் போலீஸ் கமிஷனராக இருந்தார் - இவருக்கு காமராஜ் அவர்களிடமிருந்து எந்தவித தொல்லையும் நேர்ந்ததில்லை - பழி வாங்கப்படவில்லை என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். மற்றொரு முறை இவர் சென்னையில் பணியாற்றிய சமயம் ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக சென்னைக்கு விஜயம் செய்தார். காமராஜ் உட்பட பலரும் அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். அனுமதிச்சீட்டு கொண்டுவரவில்லை என்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான காமராஜை பார்த்தசாரதி ஐயங்கார் விமான நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். அதற்காகவும் அவர் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையை காமராஜ் எடுத்ததில்லை. அதுதான் காமராஜ் அவர்களின் பண்பு)

காமராஜ், முத்துச்சாமி ஆகியோர் மீதான இந்த வழக்கு தென் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலிருந்து இவர்களை வெளிக்கொணர தலைவர் சத்தியமூர்த்தி, குமாரசாமி ராஜா போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர். அப்போது ராஜபாளையம் விஜயம் செய்த காந்திஜி டி.எஸ்.எஸ்.ராஜனிடம் இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இவர்கள் இருவருக்காகவும் மதுரை தேசபக்தர், பிரபல பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆஜரானார். மதுரையில் வழக்கு நடந்தது. ஆங்கிலேயரான மன்றோ என்பவரின் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் வாதம் போலீசாரின் பொய் வழக்கை நிர்மூலமாக்கியது.

ஜார்ஜ் ஜோசப் முன் வைத்த அலிபி முக்கியமானது. காமராஜ், முத்துச்சாமி இருவரும் விருதுநகர் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் அவ்விருவரும் அவ்வூரில் நடந்த பொருட்காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரியான அனந்தராமகிருஷ்ணன் என்பாருடன் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.

உயர் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அனந்தராமகிருஷ்ணன் பொய்சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். காமராஜ் பொருட்காட்சியில் தன்னுடன் தான் இருந்தார் என்பதை அவர் உறுதி செய்தார். உண்மை பேசிய குற்றத்துக்காக அந்த அதிகாரி உடனே அங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது.

அடி, உதை தாங்காமல் அப்ரூவராகி பொய்யான வாக்குமூலம் கொடுத்த வெங்கடாசலமும் சத்தியத்துக்கும், மனச்சாட்சிக்கும் பயந்து தான் பொய் வாக்குமூலம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

நீதிபதி மன்றோ தனது தீர்ப்பில் அரசாங்கத் தரப்பு நம்பத்தகுந்த வாதங்களை முன்வைக்கவில்லை. மகா புத்திசாலிகளான இந்த இளைஞர்கள் வெடிகுண்டு வீச இப்படிப்பட்ட கேலிக்கூத்தான நடவடிக்கைகளைச் செய்திருப்பார்கள் என்பதை நம்பமுடியவில்லை என்று கூறினார். முடிவில் ஐந்து பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்த பொய் வழக்கு காமராஜ், முத்துச்சாமி ஆகியோரின் புகழை தமிழகம் முழுவதும் பரவும்படி செய்தது. காமராஜ் இந்த வழக்கை எந்தவித புலம்பலோ அல்லது குற்றச்சாட்டுகளோ சொல்லாமல், தன் மடியில் கனமில்லை என்பதால் தீரத்தோடு எதிர்கொண்டு முறியடித்தார். வீரர்களுக்கு என்றுமே தோல்வி கிடையாது; கோழைகளுக்குத்தான் அனைத்துமே என்பதை நிரூபித்தார். வாழ்க காமராஜ்--முத்துச்சாமி புகழ்!!

பெருந்தலைவர் காமராஜ்