Followers

Saturday, November 13, 2010

எம்.சங்கையா

பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் பல புரிந்த தொண்டர்களை கணக்கெடுத்தால் அது மாளாது. அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து இந்த வலைத்தளத்தில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அப்படி பீராய்ந்து பார்த்துக் கையில் தட்டுப்படும் ஒரு சிலரைப் பற்றியாவது முதலில் கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் மதுரை மாவட்டத்தில் தேடியபோது கிடைத்த சில அரிய தொண்டர்கள் வரலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது. இப்படியும் தியாகிகள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சிந்திய ரத்தத்தில் கிடைத்த சுதந்திரம் இன்று என்ன பாடுபடுகிறது. நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. கிடக்கட்டும் இன்று பெரியகுளம் தாலுகாவில் வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் கம்மவார் நாயுடு குலத்தில் உதித்த நடுத்தர வசதி படைத்த குடும்பத்தில் வந்த எம்.சங்கையா எனும் தியாகி பற்றி பார்ப்போம்.

வெங்கடாசலபுரத்தில் கி.மாத்தி நாயக்கர் என்பவர் ஒரு கெளரமான மனிதர். விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் எம்.சங்கையா. இளம் வயதில் மகாத்மா காந்தியின் பெயரையும் அவரது பேராற்றலையும் பற்றி தெரிந்து கொண்டு ஒரு காந்தி பக்தர் ஆனார். மதுரையில் என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரை வைத்தியநாத ஐயர், ஜார்ஜ் ஜோசப் போன்ற பெரிய காந்திய வாதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். இவரும் தன்னை காந்தி பணியில், நாட்டுச் சுதந்திரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1934இல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்துவிட்டு பின்னர் அங்கிருந்து பெரியகுளத்துக்கும் விஜயம் செய்தார். விடுவாரா இந்த சந்தர்ப்பத்தை சங்கையா, ஓடிப்போய் மகாத்மா தரிசனம் செய்தார். மகாத்மாவைப் பார்த்ததாலோ, அல்லது அவர் அருளிய உபதேசத்தாலோ, இவர் தனது பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டு சுதந்திர வேள்வியில் கலந்து கொண்டார்.

1936இல் சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. அதில் சக்திவேல் என்பவர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார். இவரது வெற்றிக்காக கிருஷ்ணசாமி ஐயங்கார், சொக்கலிங்கம் பிள்ளை போன்ற அன்றைய காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து ஊர் ஊராகப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் பயணம் செய்ய இப்போது போல விரைவு வாகனங்கள் கிடையாது. கால் நடையாக நடந்தே சென்று எல்லா கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தார் இவர்.

தேசிய பத்திரிகைகளுக்கு உள்ளூர் முகவராக இருந்து பத்திரிகைகளை விநியோகம் செய்யலானார். அப்போது தேனி தியாகராஜன் இந்தப் பகுதியில் இருந்த வீறுகொண்ட காங்கிரஸ்காரர். இன்னும் சொல்லப் போனால் தேனி தியாகராஜன் காலத்தில் அந்தப் பகுதிகளில் சுயமரியாதை இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் தியாகராஜன். தேனி ஆற்றுப்படுகையில் நடைபெறவிருந்த சுயமரியாதை கூட்டம் நடைபெற முடியாமல் தேனி தியாகராஜனின் ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. அந்த தேனி தியாகராஜனுடைய வலது கரமாக இருந்து செயல்பட்டவர்களில் நமது சங்கையாவும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பெரியகுளம் தாலுக்கா குழுவின் செயலாளராகவும் இருந்தார். ராஜாஜி அமைச்சரவை ராஜிநாமா செய்தவுடன் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் ராஜிநாமா செய்யச் சொன்னார். அந்த கோரிக்கையை கோஷமிட்டுக்கொண்டு இவர் ஊர்வலமாகச் சென்றபோது கைதுசெய்யப்பட்டு இந்தய பாதுகாப்புச் சட்டத்தின்படி 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் உசிலம்பட்டி நிதிமன்றத்தில் நான்கரை மாத தண்டனையும் ஐம்பது ரூபாய் அபராதமும் பெற்றார். அபராதம் கட்ட மறுத்து இவர் மேலும் ஒரு மாதம் சிறையில் இருந்தார். மதுரை, வேலூர் ஆகிய ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டார். விடுதலையான பிறகும் கூட இவரைப் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருந்தது.

1941இல் மகாத்மா அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு பல ஊர்களுக்கும் சென்று கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார். அப்படி அவர் சென்னையில் பாண்டி பஜாரில் கோஷமிட்டுக்கொண்டு சென்றபோது தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அந்த தண்டனை காலத்தை இவர் அலிப்புரம் சிறையில் கழித்துவிட்டு விடுதலையானார்.

1942 வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது. இவர் மக்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டிவிட்டதாக போலீஸார் இவரை எச்சரிக்கைச் செய்தனர். தேனி போலீசார் இவரை கண்காணித்தபடி இருந்தனர். பாதுகாப்பு கைதியாக பெரியகுளம் சப் ஜெயிலில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுதலையானார். 1943இல் இவரது தந்தையார் ஏற்பாட்டின்படி இவருக்கும் லட்சுமி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது. இவருக்கு நாடே குடும்பம் என்பதால் நாட்டுச் சேவையில் சதா கழித்து வந்தார். 1943 முதல் 1947 வரையில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். பின்னர் செயலாளராகவும் பணியாற்றினார். இவருக்கு சுதந்திரத்துக்குப் பிறகு அரசாங்கம் தாமரைப் பட்டயம் அளித்து கெளரவித்தது. மத்திய மாநில ஓய்வூதியமும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் தன் குடும்பத்தோடு இந்தத் தியாகி சுதந்திரக் காற்றி சுவாசித்து வாழ்ந்தார். வாழ்க எம்.சங்கையா புகழ்.

கல்கி T. சதாசிவம்


கல்கி T. சதாசிவம்

ராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் T.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவராக இருந்த ரா.கிருஷ்ணமூர்த்தி வெளியேறி வந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் இருந்தமையால் அதில் பணிபுரிந்தார். சதாசிவம் அவர்கள் பள்ளி இறுதி வரை படித்தவர். 1921ஆம் ஆண்டில் ஒரு மகாமகம் வந்தது. அதற்கு சாரணர் தொண்டராகச் சென்றவர் சதாசிவம். அப்படி கும்பகோணம் போன இடத்தில் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவருடைய சிம்ம கர்ஜனை சதாசிவத்தை ஒரு தேசபக்தனாக ஆக்கியது.

அதுமுதல் சுப்பிரமணிய சிவாவின் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் சதாசிவம். சிவா அவர்கள் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் கட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலம். அதற்காகப் பாப்பாரப்பட்டியில் இருந்த நிலத்தில் ஒரு அடிக்கல்லை அப்போதைய பெருந்தலைவர் வங்கத்துச் சிங்கம் சி.ஆர்.தாஸ் அவர்களைக் கொண்டு நாட்டியிருந்தார். பாரதமாதா ஆலயப் பணிக்காக பாரதாஸ்ரமம் அமைக்கப்பட்டது. அதில் சேர்ந்த சதாசிவம் தேசத் தொண்டில் முழு மூச்சாக இறங்கினார்.

பாரதமாதா ஆலயம் அமைப்பதற்காக ஊர் ஊராக பஜனை செய்துகொண்டு செல்லும் தேசபக்தர் கூட்டத்தில் உண்டியல் எடுத்து வசூல் செய்தார். நிதி சேர்ப்பதில் சமர்த்தர் எனும் பெயரை அப்போதே அவர் பெற்றார். 1922இல் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1923இல் மறியல் போராட்டம், அன்னிய துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் இப்படிப்பட்ட காந்திய நெறியில் போராடி 15 மாத சிறை தண்டனை பெற்று சிறை சென்றார்.

கதர் இயக்கத்திலும் இவர் பெரும் பங்கு வகித்தார். ஊர் ஊராகச் சென்று கதர் துணி மூட்டைகளை எடுத்துச் சென்று கதர் என்பது தேசியத்தின் அடையாளம் சுதந்திரம் வேண்டுவோர் கதர் அணிவதன் மூலம் கிராமியத் தொழிலுக்கு ஆதரவு தருவதோடு, சுதந்திரத்துக்கும் பாடுபடுபவர்களாக ஆகமுடியும் என்று சொல்லி பெருமளவு கதர் துணிகளை விற்பனை செய்தார். ஆங்காங்கு போய் மக்கள் மத்தியில் சாங்கோபாங்கமாகப் பேசி கதர் துணி விற்பார், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ப்பார், இப்படி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றார் சதாசிவம்.

இவர் இரக்க குணம் உடையவர். தன் கண்ணெதிரில் யாராவது கஷ்டப்படுவது கண்டால் உடனே தன் கையில் இருப்பதைக் கொடுத்து அவர்களது கஷ்டத்தை நீக்க உதவி செய்வார். 1930 சுதந்திரப் போர் வரிசையில் மிக முக்கியமான ஆண்டு. ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் துவங்கிய ஆண்டு. திருச்சியில் நடந்த மறியலில் கலந்து கொண்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். மாநில காங்கிரஸ் அலுவலகம் திருச்சியில் இருந்தமையால் அவர் அங்கு மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்தார்.

இவருக்கு ராஜாஜியையும், அவர் மூலமாக மகாத்மா காந்தியடிகளையும் நன்கு அறிந்திருந்தார். இவர் சிறை சென்று மீண்ட சமயம் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி புதிய பத்திரிகை தொடங்க முயன்று கொண்டிருந்தார். சதாசிவம் அவரோடு இணைந்து "கல்கி" எனும் பத்திரிகையைத் தொடங்க ஆலோசனைகளைக் கூறி வேலைகளை ஆரம்பித்தார். எழுத கல்கியும், நிர்வாகம் சதாசிவம் என்றும் அன்று தொடங்கிய கல்கி ராஜநடை போட்டு பயணத்தைத் தொடங்கியது. அடடா! கல்கி படைத்த இலக்கியங்கள்தான் எத்தனை எத்தனை? அத்தனையும் சதாசிவம் அளித்த ஊக்கம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கல்கியும், சதாசிவமும் இணைபிரியாத ராஜாஜி தொண்டர்களாக விளங்கினார்கள். இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள ஆங்கரை எனும் ஊரில் பிறந்தவர். தந்தையார் பெயர் தியாகராஜன். தியாகராஜனுடைய 16 குழந்தைகளில் இவர் 3ஆவது குழந்தை. 4-9-1902இல் இவர் பிறந்தார். 1936இல் இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியைச் சந்தித்தார். 10-7-1940இல் இவர்களது திருமணம் நடந்தேறியது. அதே ஆண்டில்தான் கல்கி பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இவர் தனது 95ஆம் வயதில் 22-11-1997இல் அமரத்துவம் அடைந்தார். குருநாதரின் ஆலோசனைக்கிணங்க இசையுலக சக்கரவர்த்தினியாகத் திகழ்ந்த எம்.எஸ்.சுப்பலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ். அவர்கள் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருக்கு உந்துசக்தியாக இருந்து பாடுபட்டவர் சதாசிவம். இந்த தம்பதியினரின் நிதி உதவி கச்சேரி மூலம் இந்திய நாட்டில் பயன்பட்ட ஆலயங்கள், நிறுவனங்கள் எத்தனையோ! இன்று இருவரும் அமரராகி விட்டனர். வாழ்க சதாசிவம் புகழ்!

Friday, November 12, 2010

ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி

மதுரை ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி வி.கே.டி.பங்கஜத்தம்மாள் தம்பதி

மதுரையில் குடும்பம் குடும்பமாகச் சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்கள் அதிகம். மதுரை வைத்தியநாத அய்யர் குடும்பம், என்.எம்.ஆர்.சுப்பராமன் குடும்பம் இப்படி எத்தனையோ குடும்பங்கள் சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்கள். அந்த வரிசையில் ஸ்ரீநிவாச ஆழ்வார், பங்கஜத்தம்மாள் தம்பதியினரைக் குறிப்பிடலாம்.

மதுரையில் திருமலை ஆழ்வார் என்பவரின் மகன் ஸ்ரீநிவாச ஆழ்வார். இவருக்கு இசை நன்றாக வரும். அதோடு பாடல்களை இயற்றிப் பாடும் திறன் இருந்ததால் இளம் வயது முதல் தானே பாடல்களை இயற்றிப் பாடிவந்தார். தேசியப் பற்றி ஏற்பட்டுவிட்ட இவருக்கு, எழுதும் பாடல் எல்லாம் தேசியப் பாடல்களாகவே அமைந்துவிடும். அந்தக் காலத்தில் நாட்டில் நிகழும் எந்தவொரு பெரிய நிகழ்ச்சியையும் பாட்டு வடிவில் எழுதி பாடி, புத்தகமாக வெளியிடும் பழக்கம் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அப்போது நடந்த சில கொலை நிகழ்ச்சிகளைக் கூட பாடலாக வடித்த பாவலர்கள் நம் மத்தியில் இருந்தார்கள். ஸ்ரீநிவாச ஆழ்வாரை தனது இளம் வயதில் மிகவும் பாதித்த நிகழ்ச்சி 1919இல் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் டயர் என்பானால் கொடூரமாக சுடப்பட்டு இறந்தார்கள். இந்த படுகொலை நிகழ்ச்சியை ஸ்ரீநிவாச ஆழ்வார் கவிதைவடிவில் எழுதி, சோகமும் வீரமும் இழைந்தோடும்படியாகப் பாடி மக்கள் மத்தியில் அனுதாபத்தையும், சுதந்திரப் போரின்பால் ஈர்ப்பையும் உண்டாக்கினார்.

1930இல் ராஜாஜி தமிழ்நாட்டில் திருச்சி முதல் வேதாரண்யம் வரையில் உப்பு எடுக்கும் சத்தியாக்கிரக பாத யாத்திரையை மேற்கொண்டார். இந்தப் போரில் அவரே நேரில் தேர்ந்தெடுத்த நூறு தொண்டர்களை அழைத்துச் சென்றார். அப்படிச் சென்ற மதுரை தொண்டர்களில் ஒருவராக ஸ்ரீநிவாச ஆழ்வார் கலந்து கொண்டு காந்தியத்தில் தனக்கிருந்த ஆழ்ந்த பற்றை வெளிக்காட்டினார். வழியில் நடந்த சிரமங்களையெல்லாம் நாட்டுக்காகப் பொறுத்துக் கொண்டு கைதாகி சிறைப்பட்டு ஓராண்டு திருச்சி சிறையில் கிடந்தார்.

தேசபக்தர் சுப்பிரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் தொடங்கவிருந்த பாரதாஸ்ரமத்தில் சிவாவின் தொண்டராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். சுதந்திரம் எனும் சூரிய உதயத்தைக் காணாமலே இவர் 1937இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவருக்கு ஏற்ற மனைவியாக அமைந்தவர் பங்கஜத்தம்மாள். இவ்விருவருக்கும் இளம் வயதில் பால்ய விவாகம் நடைபெற்றிருந்தது. அதாவது அந்த அம்மையாருக்குத் திருமணத்தின்போது வயது 7. ஸ்ரீநிவாச ஆழ்வார் நன்றாகப் பாடுவார் என்பதைப் பார்த்தோமல்லவா. அவர் அப்படி தேசியப் பாடல்களை பஜனையாகப் பாடிக்கொண்டு தெருத்தெருவாகப் போவது வழக்கம். அப்போதெல்லாம் அவருடைய மனைவி பங்கஜத்தம்மாளும் அவரோடு பஜனை பாடிக்கொண்டு செல்வார். அது தேசிய பஜனை. இவர்களுக்கு மதுரையில் செல்லுமிடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. பஜனை பாடுவது மட்டுமல்லாமல் இந்த அம்மையார் மேடைகளில் ஏறி சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிவந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான காங்கிரசின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார். இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இத்தனை தியாகங்களையும் இந்த தம்பதியினர் நம் நாட்டுச் சுதந்திரத்துக்காகச் செய்தனர். இவர்களுக்கு வாரிசுகள் உண்டா? இருந்தால் அவர்கள் யாரேனும் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைத்தார்களா? பாவம் ஊருக்கு உழைத்து, சிறையில் அடைபட்டு, ஏழ்மையில் மாண்டுபோன பல்லாயிரக்கணக்கான தேசபக்தர்கள் வரிசையில் இந்த ஏழை பஜனை செய்யும் தியாகிகளையும் சேர்த்துக் கொள்வோம்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசின் போக்குப் பிடிக்காமல் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் அம்மையார். சுதந்திரத்துக்குப் பின்னும் நாட்டு மக்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், சுரண்டல் இவைகளால் தாக்குண்டு வருந்தியதைப் பொறாமல் இவர் சோஷலிச இயக்கத்தில் சேர்ந்து சுதந்திர இந்தியாவிலும் காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடினார். ஜனநாயக முறையில் தேர்தலிலும் நின்று பார்த்தார். முடியுமா? சுதந்திரப் போர் காலத்தில் கள்ளுக்கடை மறியலிலும், சுதேசிப் பொருட்களை வாங்கு என்று போராடியும் சிறை சென்ற அம்மையார், பதுக்கலை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் போராட்டத்தைத் தொடர்ந்தார். பிறவி போராளியான இந்த அம்மையார் 1979 ஜூலை 1ஆம் தேதி அமரரானார். இந்த புரட்சி தீபத்தின் பெயரை மற்றுமொருமுறை உச்சரித்துப் புண்ணியம் பெறுவோம். வாழ்க பங்கஜத்தம்மாள் புகழ்!

Thursday, November 11, 2010

எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

சினிமாவும், தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுது போக்குச் சாதனாமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக் காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டது. இவர் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழில் நாடக நடிப்பு. தனது தொழில் துறையிலேயே மக்களுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சுதந்திர தாகத்தை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவு செய்து கொண்டார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஓர் நல்ல நாடக ஆசிரியரும்கூட. இவருடைய நாடகங்களில் எல்லாம் தேச உணர்வைத் தூண்டும்படிதான் எழுதுவார். பார்ப்பவர்களுக்கும் அவை ஓர் புதிய எழுச்சியை உருவாக்கும்.

இவர் நாடகங்களில் மக்கள் உணர்வுகளைத் தூண்டச் செய்யும் விதத்தில் மகாகவி பாரதியாரின் "கரும்புத் தோட்டத்திலே" எனும் பாடலையும், ஜாடையாக வெள்ளைக்காரர்களைக் குறிப்பிட்டு "கொக்கு பறக்குதடி" என்ற பாடலும் பிரசித்தம். "கதர் கப்பல் வருகுதே" என்றொரு பாடல். அது தேசிய சிந்தனையை ஊட்டுவதாக அமைந்தது. காங்கிரஸ் இயக்கத்துக்காக யார் யாரெல்லாம் அழைக்கிறார்களோ அங்கெல்லாம் போய் நாடகம் போட்டு ஆங்காங்கு தேசபக்தியை ஊட்டிவந்தார் இவர். இவர் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தையும் தேச சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வந்தார். பல நேரங்களில் போலீசார் வந்து நாடகத்தைப் பாதியில் நிறுத்தி விடுவார்கள். இவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட்டால், இவர் சிறை செல்வதையே வழக்கமாகக் கொண்டார்.

விடுதலையாகி வெளியே வந்த பிறகும் மீண்டும் அதே நாடகத்தைப் போடுவார், அதே வசனங்களைப் பேசுவார். தடையை மீறியும் பல நேரங்களில் இவர் நாடகங்களை நடத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால், அன்றைய நாடகங்கள் அனேகமாக புராண நாடகங்கள்தான். அதில் இவர் முருகனாகவோ, சிவனாகவோ நடித்துக் கொண்டிருப்பார். இவரை மேடையிலேயே வைத்து கைது செய்து கொண்டு போவார்கள். அப்போது விஸ்வநாத தாஸாக இல்லாமல் முருகனாகவோ, சிவனாகவோதான் சிறைக்குச் செல்வார். ஒரு முறை இவர் திருநெல்வேலியில் நாடகம் போட்டு கைதானபோது இவருக்காக கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வழக்கில் வந்து வாதாடியிருக்கிறார்.

இவர் சிறைப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கொதித்தெழத் தொடங்கினர். போலீசாரோடு மோதினர். இவர் மதுரை ஜில்லா போர்டு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். திருமங்கலம் காங்கிரஸ் கமிட்டிக்கு இவர் நிறைய நிதி சேர்த்துக் கொடுத்திருக்கிறார். இப்படி தன் வாழ் நாளெல்லாம் நாடகம், நாட்டுப்பணி, சிறைவாசம் என்றிருந்தவரின் முடிவு அற்புதமானது.

சென்னையில் இவர் ஒரு நாடகத்தில் முருகனாக வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தார். நாடகத்தின் முடிவில் மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையோடு காட்சி கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் அப்போதே அவர் ஆவி பிரிந்து காலமாகிவிட்டார். மக்கள் கலங்கிப் போனார்கள். மயில் வாகனத்தின் மீது முருகனாகக் காட்சியளித்தவர் அடுத்த நொடி பிணமாகப் போனது அனைவரையும் பாதித்து விட்டது. வாழ்க தியாக விஸ்வநாததாஸ் புகழ்!

எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பாடிய "கொக்கு பறக்குதடி"

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு தனது நாடகங்கள் மூலம் தேசிய உணர்வை நாடெங்கும் பறப்பிய தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களை அறியாதார் யார்? அவருடைய 'வெள்ளை கொக்கு பறக்குதடி" எனும் அது எந்த நாடகமாக இருந்தாலும் மக்கள் பலமுறை பாடச் சொல்லிக் கேட்பார்கள். அந்த முழுப்பாடலும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய அந்தப் பாடலை இயற்றியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். அதனை நாடக மேடைகளில் பாடி பெருமை சேர்த்தவர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ். தன் நாடகமொன்றில் முருகன் வேடமிட்டு மயில் மீது அமர்ந்தபடி அமரரான அந்த தேச விடுதலைப் போராட்ட வீரர் பாடிய அந்தப் பாட்டிப் படியுங்கள். அந்த தியாக புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

கொக்கு பறக்குதடி பாப்பா!

கொக்குப் பறக்குதடி பாப்பா நீயும்
கோபமின்றி கூப்பிடடி பாப்பா (கொக்கு)

கொக்கென்றால் கொக்கு நம்மைக்
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே
ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா (கொக்கு)

வர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா (கொக்கு)

தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு - அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)

கொந்தலான மூக்குடைய கொக்கு அது
குளிர்பனி கடல் வாசக் கொக்கு
அந்தோ பழிகாரக் கொக்கு நம்மை
அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)

மக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன்
மமதை அழிய வேண்டும் பாப்பா
வெட்க மானமில்லா அந்தக் கொக்கு இங்கே
மடியப் பறக்குதடி பாப்பா (கொக்கு)

பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழி பாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா (கொக்கு)

Friday, November 5, 2010

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி மாநகரம் பல நூறு தியாகிகளை இந்திய சுதந்திரத்துக்கு அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட பல தியாகிகளில் வக்கீல் ரா.நாராயண ஐயங்கார் என்பவர் முதன்மையானவர். அவர்களுடைய காலம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதால், சுதந்திரப் போர் முக்கியமான கட்டத்தை நெருங்கிய சமயத்தில் இவர்கள் எல்லாம் களத்தில் இல்லை. அதனால் பெரும்பாலும் இவர்களது வரலாறு வெளியே வராமலேயே போய்விட்டது. என்றாலும் இவர்களது பங்களிப்பு மறக்கக்கூடியவைகள் அல்ல.

1919இல் பஞ்சாபில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையை அடுத்து நாட்டில் பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்பு அதிகமாகியது. மகாத்மா காந்தி ஒத்துழையாம இயக்கத்தைத் தொடங்கினார். 1919இல் தமிழகத்தில் திருநெல்வேலியில் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து தீரர் சத்தியமூர்த்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவரது தீர்மானத்தை மிதவாத காங்கிரசைச் சேர்ந்த சர் சி.பி.ராமசாமி ஐயரும், சீனிவாச சாஸ்திரியாரும் எதிர்த்துப் பேசினர். அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டு சட்டசபைகளுக்குப் போகவேண்டுமென்பது அவர்களது வாதம். இவர்களது எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக இவ்விருவரும் காங்கிரசிலிருந்து வெளியேறிவிட்டனர். இவ்விதம் அந்தக் காலத்தில் தீவிர வாதிகள், மித வாதிகள் என்ற ரீதியில் காங்கிரசார் பிரிந்திருந்தனர். இதில் ரா.நாராயண ஐயங்கார் தீவிரவாத கோஷ்டியில் அங்கம் வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் நாராயண ஐயங்கார் சட்டக்கல்வி படித்து வக்கீலாகத் தொழில் தொடங்கினார். காங்கிரஸ் இயக்கத்திலும் இவர் தீவிரமாக பங்குபெறத் தொடங்கினார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் அலுவலகம் சின்னக்கடைத்தெருவின் அருகில் இரட்டை மால் வீதியில் இருந்தது. அப்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் சுவாமிநாத சாஸ்திரி, சையத் முர்டூசா சாஹேப் ஆகியோர் முக்கிய பதவிகளில் இருந்தனர். 1920 வாக்கில் வ.வெ.சு.ஐயரும் மாவட்ட காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.

அப்போது திருச்சி தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆசிரியர் கல்கி அவர்கள் தனது படிப்பை நிறுத்திவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இப்படி இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக ஊர் ஊராகச் சென்று பஞ்சாப் ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றியும், நாட்டுக்கு சுயராஜ்யம் தேவை என்பதைப் பற்றியும் பேசினார்கள். ரா.கிருஷ்ணமூர்த்திக்கு (கல்கி) நல்ல குரல் வளம். மென்மையான கீச்சுக்குரல். அவர் மகாகவி பாரதியாரின் பாடல்களை அருமையாகப் பாடுவார்.

1921இல் கதர் மற்றும் இந்தி பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த வடநாட்டுக் காரரான பிரதாப்நாராயண வாஜ்பாய் என்பவர் திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் பேசிய பேச்சுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஓராண்டு சிறையும், இவரது உரையை தமிழில் மொழிபெயர்த்த பாலகிருஷ்ண சாஸ்திரிக்கு ஓராண்டு சிறையும் கொடுக்கப்பட்டது. பின்னர் இவர் சிறையிலிருந்து வெளிவந்த பின் உடல்நலம் கெட்டு காலமானார். அவரது ஈமக் கிரியைகளை பாலகிருஷ்ண சாஸ்திரியே செய்தார்.

1925இல் அகில இந்திய கதர் நூல் நூற்போர் சங்கத்தின் தலைவராக க.சந்தானம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் செயலாளராக ரா.நாராயண ஐயங்கார் பணி புரிந்தார். திருச்சி தியாகி சங்கிலியாப் பிள்ளை கதர் வஸ்திராலய ஊழியராகப் பணிபுரிந்தார். இந்தக் கதர் கடை திருச்சி பெரிய கடைத்தெருவில் பீமா லஞ்ச் ஹோம் எதிரில் இருந்தது.

1926-27இல் மகாத்மா காந்தி தென்னிந்திய சுற்றுப்பயணம் வந்தார். அப்போது அவர் திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்தில் தங்கினார். அவருடன் ராஜாஜி, மகாதேவ தேசாய், கஸ்தூரிபாய், மீராபென் ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த வீட்டில் காவல் வேலையைச் செய்தது தொண்டர் ரா.நாராயண ஐயங்கார்.

மகாத்மா காந்தி அப்போது திருச்சியில் இருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயரின் மனைவி வந்து அவரைச் சந்தித்து சேரன்மாதேவி குருகுல உரிமைகள் அனைத்தையும் மகாத்மாவிடம் ஒப்படைத்தார். 1930இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இயக்கத்தின் பொறுப்பை போகும் வழியிலுள்ள ஊர்களில் கவனித்துக் கொள்ள ரா.நாராயண ஐயங்கார் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் கல்லணையில் தொண்டர்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யக்கூடாது, உணவு அளிக்கக்கூடாது என்று தஞ்சை கலெக்டர் தார்ன் போட்டிருந்த உத்தரவுக்கு எதிராக மக்கள் ரகசியமாக மரத்தில் சோற்று மூட்டைகளைக் கட்டி வைத்து தொண்டர்களை எடுத்துச் சாப்பிடும்படி ரகசிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

உப்பு சத்தியாக்கிரகத்துக்கு உதவுவதற்காக திருச்சியில் ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த முகாம் நடத்த கிலேதார் தெருவில் இருந்த நீலாம்பாள் எனும் அம்மையார் தனது வீட்டைக் கொடுத்திருந்தார். அவரை போலீசாரும், அரசாங்க அதிகாரிகளும் எவ்வளவோ மிரட்டியும் அவர் படிந்து வரவில்லை. முகாம் அங்குதான் நடந்தது. ஒவ்வொரு நாளும் அந்த முகாமிலிருந்து ஐம்பது தொண்டர்கள் வேதாரண்யம் பயணமாயினர்.

அப்போது நாராயண ஐயங்காருக்கு விருதுநகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் கல்யாண கோஷ்டியொன்று விருதுநகரிலிருந்து வருகிறது. அவர்களை ரயில் நிலையத்துக்கு வந்து சந்திக்கவும் என்று இருந்தது. இவருக்கு ஒன்றும் புரியவில்லை. யாருக்குக் கல்யாணம். அந்த கல்யாண கோஷ்டியில் வருபவர்கள் யார்? ஒன்றும் தெரியவில்லை. விலாசமும் சரியாகத்தான் இருந்தது. சரி எதற்கும் போய் பார்க்கலாம் என்று இவரும் போய் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். ரயில் நின்றது. அதிலிருந்து ஒரு கோஷ்டி. அதில் ஒருவருக்கு மஞ்சள் வேட்டியணிந்து மாலையுடன் இருந்தார். அவருடன் அவர் தோழர் ஒருவர். இவர்களுக்குப் பாதுகாப்பாக போலீசார். பார்த்தால் ஒருவர் காமராஜ், மஞ்சள் வேட்டிக்காரர் அவரது தோழர் முத்துச்சாமி. அவரது திருமண வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு திருச்சி அழைத்து வரப்பட்டிருந்தார் முத்துச்சாமி. உடன் காமராஜ். அந்த கோஷ்டியை டாக்டர் ராஜன் இல்லம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.

உப்பு சத்தியாக்கிரகம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் நாராயண ஐயங்காருக்கு வேதாரண்யத்திலிருந்து ஒரு கடிதம். கு.லட்சுமணசாமி முதலியார் என்பவர் எழுதியிருந்தார். அதில் "இங்கு கிரெளன் பிராண்ட் சரக்கு ரொம்பவும் மும்முரமாக எடுபடுவதால், அதனுடன் போட்டிபோடக்கூடிய நல்ல சரக்குகளை அனுப்பவும்" என்றிருந்தது. இது என்ன? ஒன்றும் புரியவில்லையே என்று இவருக்குக் குழப்பம். அதன் பொருள் பின்னர் இவருக்குப் புரிந்தது. அது "அங்கு போலீசின் அடக்குமுறை அதிகமாக இருக்கிறது. ஆகையால் அதனை எதிர்த்து நிற்கக்கூடிய தொண்டர்களை அனுப்பவும் என்று இருந்தது.

இவர்கள் முகாம் நடத்த இடம் கொடுத்த நீலாம்பாள் பற்றி சொன்னோமல்லவா? போலீஸ் அவரை மிரட்டியபோது, வீடு தன்னுடையது அதனை இவர்களுக்கு வாடகைக்குத் தந்திருக்கிறேன் என்று பதில் சொல்லும்படியும் அவருடைய வக்கீல் சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் சாட்சிக் கூண்டில் ஏறி, தான் விரும்பிதான் இந்தப் பணிக்காக தனது வீட்டைக் கொடுத்ததாகக் கூறி சிறை புகுந்தார்.

ரா.நாராயண ஐயங்கார் தண்டிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவருக்குக் கல் உடைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. வக்கீலாக இருந்தவர் அங்கு போய் கல் உடைத்தார். வக்கீலான இவரை சிறையில் 'சி' வகுப்பில் வைத்திருந்ததனால் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் கிளர்ச்சி செய்து இவருக்கு 'பி' வகுப்பு கிடைக்க வகை செய்தது. விடுதலையாகி இவர் திருச்சி வந்தபோது இவருக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. "சங்கு" கணேசனுடன் சேர்ந்து "காங்கிரஸ்மேன்" எனும் வாரம் மும்முறை பத்திரிகை நடத்தினார். திருச்சி தியாகி எஸ்.வெங்கட்டராமன் தொடங்கி நடத்திய "ஜெயபாரதி" எனும் பத்திரிகையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். "இந்துஸ்தான்" எனும் வார இதழில் 11 ஆண்டுகள் பணி. 'தினமணி', 'சுதேசமித்திரன்' ஆகியவற்றில் சுதந்திர எழுத்தாளராக அடிக்கடி எழுதிவந்தார். தனது எண்பதாவது வயதைத் தாண்டி வாழ்ந்த இவர் திருச்சியில் காலமானார். திருச்சி மாவட்டம் அளித்த சிறந்த தியாகிகளில் ரா.நாராயண ஐயங்காரும் ஒருவர். வாழ்க அவரது புகழ்!

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை தந்த பல தேசபக்தர்களில் பழனிக்குமாரு பிள்ளையும் ஒருவர். இவர் 24-9-1898இல் பிறந்தார். 1908இல் தேச விடுதலைக்காக நடைபெற்ற போராட்டம் இவரை இழுத்துக் கொண்டது. அப்போது சுயராஜ்ய வேட்கை உள்ளவர்கள் பலர் இந்தியாவில் புதிது புதிதாகத் தோன்றிய பல ஆன்மிக, அரசியல் இயக்கங்களில் சேரந்தனர். அதன்படி இவர் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினர் ஆனார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு சுயராஜ்யக் கட்சி என்று தனியாக காங்கிரசிலிருந்து பிரிந்து போய் ஒரு கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக பழனிக்குமாரு பிள்ளை பதவி வகித்தார்.

சுதந்திரப் போராட்டம் நேரடியாக இந்திய சுதந்திரம் எனும் கோரிக்கையை வைத்துப் போராடுவதற்கு முன்பாக மகாத்மா காந்தியின் ஆணைக்கிணங்க பல சமூக, அடித்தட்டு மக்களைக் காப்பாற்றும் பல இயக்கங்களை அறிவித்தார். அதில் ஒன்றுதான் ஏழை உழைப்பாளிகளை குடியின் கேட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற கள்ளுக்கடை மறியல் போராட்டம். 1922இல் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஒரு வாரம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கூட்டங்களில் பேசும்போது எதிர்கட்சியாக இருந்த ஜஸ்டிஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி இவர் பல முறை அவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். 1930இல் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரையிலான உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை மேற்கொண்டார். அதில் இவர் தொண்டராகக் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், உப்பு சத்தியாக்கிரகத்தை ஆதரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அதன் காரணமாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு சிவகாசி சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இவர் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

1932ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். ராமநாதபுரம், மதுரை ஆகிய ஜில்லாக்களில் காங்கிரஸ் கமிட்டியில் போராட்டக் குழுவில் தலைமை வகித்து இவர் வழிநடத்திச் சென்றதால் இவர் மீது வழக்கு வந்தது. மறியல் நடத்தியக் குற்றத்துக்காக இவருக்கு 2 வருட தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் தண்டனைகளை அலிப்பூர், திருச்சி சிறைகளில் கழித்து விடுதலையானார்.

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் (தீச்சட்டி கோவிந்தன்) மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில் இவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவருக்கெதிராக வலுவான சாடிசிகள் எதுவும் இல்லாமல் போகவே இவர் விடுவிக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவரது தீவிரமான ஈடுபாட்டைக் கவனித்த போலீஸ் இவரை போலீஸ் காவலில் வைத்துக் கொண்டு, சில நாட்களுக்குப் பின் வெளியே விட்டனர்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, ந.சோமையாஜுலு, காமராஜ் ஆகிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் பழனிக்குமாரு பிள்ளை. பெருந்தலைவர் காமராஜருடன் ஒன்றாக இவரும் அவரும் ஒரே சிறையில் இருந்திருக்கின்றனர். இவருக்கு காமராஜருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது விருதுநகரில். அப்போது இவர் அவ்வூரில் ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார். இவர் பொது நலனுக்காக அயராது பாடுபட்டு எப்போதும் பிறருக்கு உதவுவதிலேயே காலத்தைச் செலவிட்டார். இவர் 14-7-1977இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க பழனிக்குமாரு பிள்ளையின் தியாகம்!

ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரை ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரையைச் சேர்ந்த இந்த இஸ்லாமியப் பெரியவர் தன்னுடைய சுதந்திரப் போராட்ட வாழ்க்கையை 1910இல் அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தோடு தொடங்கினார். இவர் பல மொழிகளில் வல்லுனர். இவர் மேடையேறி பேசினால் அனைவரும் ஆழ்ந்து கவனிப்பர். இவருடைய பேச்சுக்கள் எப்போதும் வீண் பேச்சாக இருந்ததில்லை. பல மொழி நூல்களிலிருந்தும், பல்நாட்டு அறிஞர் பெருமக்களின் உரைகளிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசுவார். அவர் பேசுகிறார் என்றால் மதுரையிலும் சுற்று வட்டாரங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வர். அன்றைய ஆங்கில ஆளும் வர்க்கத்தை இவர் தனது பேச்சினால் கலங்க அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போதைய மதுரை மாவட்டம் மிகப் பெரிய அளவுடையது. அங்கெல்லாம் இவர் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊக்கினார். கம்பீரமான இவரது தோற்றமும், பேச்சும் அவற்றில் பொதிந்து கிடக்கும் சுதந்திர வீராவேசமும் மக்களிடையே ஒரு எழுச்சியை ஊட்டுவதாக அமைந்திருந்தது. 1921இல் இவர் நிலக்கோட்டை தாலுகாவில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடைகளுக்குத் தொண்டர்களோடு போய் அங்கு குடிக்க வரும் மக்களை பணிவோடு வேண்டிக் கொள்வார். குடிக்காதீர்கள். குடித்தால் நீங்களும், உங்கள் குடும்பமும் அழிந்து போகும். மனத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போதையில் மனிதர்களை இருக்க வைத்து வெள்ளைக்காரன் இந்த நாட்டில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறான். பெற்ற பொன்னாட்டையும், பிறந்த ஊரையும் அன்னியனுக்கு அடிமையாக்கப் போகிறீர்களா? குடித்துவிட்டு போதை மயக்கத்தில் சாக்கடையில் விழுந்து கிடக்கப் போகிறீர்களா? சுதந்திரப் பொன்னாட்டைப் பார்க்கப் போகிறீர்களா. அப்படியானால் குடியை இன்றோடு நிறுத்தி விடுங்கள் என்பார்.

அதற்கு பதில் என்ன தெரியுமா? குடிகாரர்கள் ஏசுவார்கள். சிலர் அடிப்பார்கள். எச்சிலை உமிழ்வார்கள். கள்ளுக்கடைக் காரர்கள் அடியாட்களைக் கொண்டு தொண்டர்களை அடித்து விரட்டுவார்கள். இத்தனையும் எந்த முணுமுணுப்புமின்றி காந்திய வழியில் அகிம்சை முறையில் இவர் எதிர் கொள்வார். எத்தனை பெரிய மனிதர். இப்படி குடிகாரர்களிடமும், கள்ளுக்கடை அடியாட்களிடமும் அடிவாங்குகிறாரே என்று மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம், ஆதரவு பெருகி வரத் தொடங்கிற்று. தூய வெண்ணிற ஆடை, இஸ்லாமியருக்கு உரிய தாடி, தலையில் குல்லாய், கரங்களில் மூவண்ணக் கொடி, கண்களில் சுதந்திர வெறி இவற்றோடு இந்தத் தூயவரைப் பார்த்த மக்கள் இவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர்.

இவரை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத ஆளும் வர்க்கமும் அவர்களது அடிவருடிகளும் இவரை ஒரு கொள்ளை வழக்கில் சம்பந்தப் படுத்தி வழக்குத் தொடுத்தனர். வழக்கு நடந்து செஷன்ஸ் கோர்ட்டுக்குச் சென்றது. அங்கு இவருக்கு எதிரான எந்தப் புகாரும் போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை என்று இவர் விடுதலையானார். பொய் வழக்குப் போட்டுவிடுவது எளிது. ஆனால் அந்தப் பொய்யிலிருந்து விடுபட்டு உண்மையை வெளிக் கொணர்ந்து வெற்றிகரமாக வெளிவருவது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. ஹாஜி முகமது மெளலான சாகிப் இதில் வழக்காடி வெளியே வந்தார்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அங்கு இவரது பேச்சு மதுரை மாவட்டத்தை விட்டு வெளியே வந்து சென்னை மாகாண பிரதிநிதிகளின் மத்தியில் வெளிப்பட்டது. இவரது பேச்சில் இருந்த வேகம் ஆட்சியாளர்களை மிரளவைத்தது. செடிஷன், அதாவது ராஜத்துரோகம், கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு இவர் மீது போடப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932ஆம் வருடம் மதுரை நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

தேசத்தை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அந்த அளவுக்கு இவர் தனது மதத்தையும் மதித்தார். தேசபக்தி, மதபக்தி இரண்டும் இவரது இரண்டு கண்கள். இப்படிப்பட்ட தேசிய முஸ்லிம்கள் அன்று நாட்டு சுதந்திரத்துக்குப் பாடுபட்டதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இவரது பெயர் சுதந்திரப் போராளிகள் வரிசையில் மதுரையில் சிறப்பாகப் பேசப்பட்டது. மதுரை முனிசிபல் உதவி சேர்மனாகவும், பின்னர் சேர்மனாகவும் இருந்து மதுரை நகரத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். சிறப்பாக தென் மாவட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை மிகச் சிறப்பாகப் பேணிக் காப்பாற்றப்பட்டது.

எந்த ஊருக்குப் போனாலும் சரி, எந்த அவசர வேலைகளுக்கிடையிலும் அந்தந்த வேளைகளில் தொழுகைக்குப் போவதை நிறுத்தியதே கிடையாது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறையிலிருந்த முஸ்லீம்கள் தொழுகை நடத்தத் தனி இடம் ஒதுக்கித் தரப் போராடி வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல, இருண்டு கிடந்த சிறைச்சாலைகளில் விளக்குகளும், குடிதண்ணீர் வசதிகளும் இவர் வாங்கித் தந்தார். இவர் 1886இல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. வாழ்க ஹாஜி முகம்மது மெளலான சாகிப் புகழ்!

Wednesday, November 3, 2010

தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்

A.Y.S. பரிசுத்த நாடார்

ஒரு ஊரின் பெயரைச் சொன்னவுடன் சிலரது பெயர்கள் நினைவுக்கு வரும்; அதுபோல தஞ்சாவூர் என்றதும் நினைவுக்கு வரும் பெயர் A.Y.S. பரிசுத்த நாடார். தேசியப் பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணியில் 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி A.யாகப்ப நாடார் - ஞானம்மாள் தம்பதியருக்குப் பிறந்த அருந்தவச் செல்வங்கள் மூவரில் இளைய மகன் இவர். இவரது மூத்த சகோதரர் A.Y.அருளானந்தசாமி நாடார், இவரது சகோதரி இதயமேரி அம்மாள்.

இவர் தஞ்சாவூர் நகராட்சியின் சேர்மனாக நீண்ட காலம் பதவி வகித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தஞ்சாவூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியவர். மூன்று முறை தேர்தலில் வென்று பதினைந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றிய இவர் தி.மு.க.வின் தலைவர் தஞ்சையில் போட்டியிட்டபோது மட்டும், ஒரே ஒரு முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர். நாட்டுப் பற்றோடும், மக்கள் நலனில் அக்கறை உணர்வோடும் இவர் சமூகப் பணிகளில் செயலாற்றியவர். இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் Air Raid Warden பொறுப்பில் வான்வழித் தாக்குதல் பாதுகாப்பாளராகப் பணியாற்றியவர் இவர். அவரது உயரிய செயல்பாடு காரணமாக அன்றைய அரசாங்கம் இவருக்கு "ராவ் சாஹேப்" விருதை வழங்கி கெளரவித்தது. தேசப்பற்று காரணமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றினார். தஞ்சை நகர காங்கிரஸ் தலைவராக 21 ஆண்டுகள் இருந்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காரியக்கமிட்டி உறுப்பினராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இப்படி பல நிலைகளில் இவர் கட்சிப்பணியாற்றியிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜ் அவர்களும் ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் இவரது நேர்மையையும், நிர்வாகத் திறமையையும், கடுமையான உழைப்பையும், தொண்டுள்ளத்தையும் கண்டு இவரிடம் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.

சிறுபான்மை இன ரோமன் கத்தோலிக்க நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரான இவருக்கு எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல மதிப்பும், நல்லெண்ணமும், மரியாதையும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இவரும் இவரது மூதாதையர்களும் இந்தப் பகுதி மக்களுக்கு, அவர்கள் எந்த சாதி, இனத்தைச் சேர்ந்தவராயினும் பாகுபாடின்றி நான்கு தலைமுறைகளாகப் பெரும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி, அவர்களை உயர்த்துவதற்காக இடைவிடாது பாடுபட்டிருக்கிறார்கள். அந்த நன்றியுணர்வை இன்றளவும் சுற்றுப்புற கிராம மக்களிடம் பார்த்து உணர முடிகிறது. தர்ம காரியங்களுக்கும், உதவிகள் தேவைப்படும் தகுதி வாய்ந்த இளைய தலைமுறையினருக்கும் இந்தக் குடும்பம் விளம்பரமின்றி செய்து வரும் பெரும் பணிகளை மக்கள் மனதார பாராட்டி மகிழ்கிறார்கள்.

A.Y.S. பரிசுத்த நாடார், தஞ்சை தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இவற்றில் கல்வி பயின்றார். விளையாட்டுகளில் ஆர்வமுடையவர் இவர்; குறிப்பாக கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்டு சென்னை மாகாண கால்பந்துக் குழுவில் விளையாடியிருக்கிறார். மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். டென்னிஸ் ஆட்டத்திலும் இவர் வல்லவராக விளங்கியிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி, இவர் தனது 61ம் வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று அதற்கான உரிமம் பெற்றுத் தன்னந்தனியராக விமானம் ஓட்டி பாராட்டுதல்களைப் பெற்றவர் என்பதுதான்.

அரசியல், வணிகம், விளையாட்டு போன்ற துறைகளைத் தவிர இவர் ஈடுபட்டு பெருமை சேர்த்த வேறு பல துறைகளும் உண்டு. பாரத சாரண இயக்கத்தில் உதவி இயக்குனராக இருந்தவர்; தஞ்சை மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூர் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூரில் இருக்கும் யூனியன் கிளப்பின் தலைவர்; காஸ்மாபாலிடன் கிளப்பின் தலைவர்; தோல்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இப்படிப் பலப்பல. இவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அங்கு இவரது அயராத உழைப்பாலும், நேர்மை நெறிகளாலும் சிறப்பிடம் பெற்று விளங்கியிருக்கிறார்.

1949ம் ஆண்டில் முதன்முதலாக தஞ்சாவூரில் ROTARY CLUB OF THANJAVUR என்ற பெயரில் முதல் ரோட்டரி சங்கத்தைத் தோற்றுவித்து அதன் சாசனச் செயலாளராக இருந்திருகிறார். தஞ்சாவூரில் ரோட்டரி இயக்கத்தின் முன்னோடியாக இவர் திகழ்ந்திருக்கிறார். 1946ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான புதுச்சேரி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென்மாநில தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் நிர்ணய சபை, அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் குழு அமைத்தபோது, சிறுபான்மையினரின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக வேண்டும் என்ற நோக்கில் Rev.Fr. Jerome D'Souza அவர்களின் தலைமையில் அமைந்த சிறுபான்மையோர் குழுவில் இவரும் அங்கம் வகித்து அரிய பணியாற்றியிருக்கிறார். இந்தப் பெருமகனார் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் திரைப்படம் அறிமுகமான காலத்திலேயே திரைப்படக் கொட்டகைகளை அமைத்து மக்கள் பார்க்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்.

அரசியல், சமூகத்தொண்டு, கல்விப்பணி, தொழில்துறை என்று பல்முனை வித்தகராக விளங்கிய பெருந்தகையாளர் A.Y.S.பரிசுத்த நாடார் திருமதி பிலோமினா சூசையம்மாள் தம்பதியருக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் குலவிளக்குகளாகத் திகழ்கின்றனர். அவர்கள் S.P.ஜெரோம், S.P.ஜேம்ஸ், S.P.ஜார்ஜ், S.P.பெஞ்சமின், S.P.பெலிக்ஸ், S.P.செல்வராஜ், S.P.அந்தோணிசாமி, S.P.அருள்தாஸ் ஆகியோராவர். இவர்களுக்கு ஒரு சகோதரி; அவர் பெயர் S.P.மேரி ஞானம் அருள்.

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"

என்பது வள்ளுவர் வாக்கு. “உலகத்தில் பேரறிவாளரிடம் இருக்கும் செல்வமானது, ஊருக்கு நடுவில் இருக்கும் குளத்து நீர் எல்லோருக்கும் பயன்படுவதைப் போன்றது” என்பது இதன் பொருள். அப்படிப்பட்ட பேரருளாளர்கள் புகழ் ஓங்கட்டும்!

அக்கினித் திராவக அபிஷேகம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயருக்கு அக்கினித் திராவக அபிஷேகம்.

1942 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம். மதுரையில் தேசியத் தொண்டர்கள், சொர்ணத்தம்மாள் உள்ளிட்ட பெண்கள் உட்பட பலர் ஊர்வலமாகச் சென்று மகாத்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்படி அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ஊர்வலத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியது. ஊர்வலத்தில் வந்த சில தொண்டர்களையும், இரண்டு பெண்கள் அனைவரையும் ஒரு லாரியில் ஏற்றி ஊருக்கு எட்டு மைல் தள்ளி ஒரு வனாந்திரப் பிரதேசத்துக்குக் கொண்டு சென்று, அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு வந்து விட்டார்கள். நட்ட நடுக் காட்டில் நிர்வாண கோலத்தில் அந்த தாய்மார்களும், தொண்டர்களும் அன்று பட்ட வேதனை. அப்பப்பா, கொடுமை. இந்தக் கொடுமையைச் செய்தவன் ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். பெயர் விஸ்வநாதன் நாயர். இவரைத் தீச்சட்டி கோவிந்தன் என்று குறிப்பிடுவார்கள். தேசபக்தர்களுக்கு கொடுமையான தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றவர்.


இந்த நிகழ்ச்சியின் காரணமாக மதுரை இளைஞர்களுக்கு இந்த விஸ்வநாதன் நாயர் மீது ஒரு கண். அவனை பழி தீர்த்துக் கொள்வதற்காக நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்த்தது. அவர்கள் அந்த கொடுங்கோல் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயரை நடுவில் விட்டு அக்கினித் திராவகத்தால் அபிஷேகம் செய்து ஆனந்தப் பட்டனர். பழிக்குப் பழி. எங்கள் தாய்க்குலத்தை நிர்வாணமாக்கி அவமதித்த விஸ்வநாத நாயரே, இனி வாழ்நாள் முழுவதும் நீ செய்த அந்த கொடுமையை உன் முகத்தையும் உடம்பையும் பார்த்துப் பார்த்து நினைவு படுத்திக் கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டனர்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் மீது அக்கினித் திராவகம் வீசிய நபர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், வழக்கை நிரூபிக்கப் போதிய சாட்சிகள் கிடைக்கவில்லை. எனவே அக்கினித் திராவகம் வீசினார்கள் என்பதற்குப் பதிலாக அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ராமானுஜம் ஐயங்கார், கோ.குப்புசாமி, டி.தர்மராஜ் சந்தோஷம், முதலான வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இறுதியில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் பழிக்குப் பழி வாங்கும் செயலை வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரத் திலகங்கள் K.B.ராஜகோபால், D.ராமகிருஷ்ணன், ஆகிய இருவரும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர். இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நீலகண்டன் என்பாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும், லட்சுமணன், காயாம்பு தேவர், கோமதிநாயகம் ஆகியோருக்கு தலைக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டன.

மற்ற எதிரிகளான ஓ.ஆர்.சுந்தர ராவ், டி.எம்.கோபாலாச்சாரி, ஏ.என்.விசுவநாதன், ரத்தினம் பிள்ளை, சோமுப் பிள்ளை, கணபதி பிள்ளை, சங்கிலித்தேவர், நாராயணன், குருநாதன் ஆகியோர் செஷன்ஸ் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் இவர்களில் பலர் மறுபடியும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிவிஷன் மனு செய்தனர். திரு ஜெயராமன் என்ற வழக்கறிஞர் எதிரிகளுக்காக வாதிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. இவர்கள் தவிர மேலும் பலர் தடையை மீறியதற்காகவும், ராஜதுவேஷப் பேச்சிற்காகவும் சிறை தண்டனை பெற்று மதுரையின் பெருமையை உலகறியச் செய்தனர். வாழ்க மதுரை தியாகசீலர்களின் புகழ்!

Sunday, October 31, 2010

கவி கா.மு.ஷெரீப்



கவி கா.மு.ஷெரீப்

தமிழ் திரை உலகில் பல கவிஞர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களில் பலர் இன்றும் நமது நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது பல பாடல்கள் நமது நெஞ்சங்களில் ஆழப்பதிந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. தங்களது கவித்துவம் வெளிப்பட வேண்டும், திரையுலகின் மூலம் தங்களது பெயரும் புகழும் வெளி உலகில் பரவ வேண்டும் என்பதோடு, வாழ்க்கைக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது என்பதற்காக இவர்கள் இந்தத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

அப்படிப்பட்ட பல கலைஞர்கள், கவிஞர்கள் நமது நாடக மேடைகளிலிருந்து தான் தமிழ்த்திரை உலகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களில் உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கம்பதாசன், பாபநாசம் சிவன், வாலி, நா.காமராஜ், நா.முத்துக்குமார், கு.மா.பாலசுப்பிரமணியன், கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவர்கள் தவிர இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் பல இளைய தலைமுறை கவிஞர்களும் அடங்குவார்கள்.

நூறு ஆண்டுகள் ஆனபின்பும் இவர்களது பல பாடல்கள் அன்றும் பாடப்பட்டுக் கொண்டிருக்கும், அத்தகைய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் பல. இவர்களது கவிதைகளை இசை அமைத்து கேட்டு இன்புறும் வண்ணம் இசை அமைத்துக் கொடுத்த அமரத்துவம் வாய்ந்த இசை இயக்குனர்களைத்தான் மறக்கமுடியுமா? சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்டராமன், ஜி.ராமநாத ஐயர், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வேதா போன்ற பலர் என்றும் நிலைத்திருக்கும் பாடல்களை இசை அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம் எம்.ஏ.வி.பிக்சர்ஸ், ஏ.பி.நாகராஜன் அவர்களின் படங்கள் இவைகளில் எல்லாம் அதிகமாகப் பாடல்களை இயற்றியவர் கவி.கா.மு.ஷெரீப். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. நல்லதொரு தேசிய வாதி. காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தேச விடுதலைப் போரிலும் ஈடுபாடு கொண்டவர். காங்கிரசில் தமிழ் மொழிபால் ஆர்வம் கொண்ட பலர் அன்று தமிழ்நாட்டில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தொண்டர்களாகத்தான் இருந்து வந்தார்கள். அவர்களில் கவி.கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவர்களைச் சொல்லலாம்.

கவி.கா.மு.ஷெரீப் அன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் எனும் சிற்றூரில் பிறந்தவர்.இவர் 11--8--1914இல் பிறந்தார். 1973 அக்டோபர் 10ஆம் தேதி காலமானார். தஞ்சை மாவட்டக் காரரான இவருக்கு தேசியமும், மொழியும் இரு கண்களாக இருந்தன. சின்ன வயதில் மற்ற திரைத்துறை கவிஞர்களைப் போலவே இவரும் பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். பின்னர் இவரது பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெறலாயின. அப்படிப் புகழ் பெற்ற பாடல்களின் வரிசை மிகப் பெரிது. முதன் முதலாக இவர் 1948இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மாயாவதி" எனும் படத்திற்குத்தான் பாடல் இயற்றினார். முதல் பாட்டை ஏ.பி.கோமளா எனும் பாடகிதான் பாடினார். அதனைத் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் மிக விரைவாகத் தொடர்ந்தது.

எம்.ஏ.வேணு அவர்களின் தயாரிப்பில் சேலத்தில் தயாரான டவுன் பஸ் எனும் படத்தில் பாடப்பட்ட "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?" என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து ஏ.பி.நாகராஜனின் கதை வசனத்தில் வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்த "மாங்கல்யம்" படத்தில் வந்த "பொன்னான வாழ்வு மண்ணாகலமா?" என்கிற சோகப் பாட்டு. "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்ற பாட்டு "பணம் பந்தியிலே" படத்தில். சிவகாமி எனும் படத்தில் "வானில் முழு மதியைக் கண்டேன்" என்ற பாடல். ஏ.பி.நாகராஜனின் வெற்றிப் படமான "மக்களைப் பெற்ற மகராசி"யில் பொங்கலுக்கு வெளியான இந்தப் படத்தில் வந்த "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?", "அன்னையின் ஆணை"யில் வந்த "அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை", எம்.ஏ.வி.பிக்சர்ஸ் "முதலாளி"யில் "குங்குமப் பொட்டுக்காரா, கோணக் கிராப்புக்காரா" பாடல், நான் பெற்ற செல்வத்தில் "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்" பாடல் இப்படி இவரது திரையுலகப் பாடல் பயணம் தொடர்ந்தது.

இந்தக் கால கட்டத்தில் இவரது அரசியல் மேடைப்பேச்சு, தமிழரசுக் கழகம், காங்கிரஸ் மேடைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ம.பொ.சி.யின் நிழல் போல செயல்பட்ட இவரும் "தமிழ் முழக்கம்", "சாட்டை" போன்ற இதழ்களை நடத்தினார். ஜானிகான் ஜான் தெரு, தேனாம்பேட்டையில் இவரது அலுவலகம் அமைந்திருந்தது. பிரபலமான அரசியல் வாதியாகவும், திரைத்துரைப் பிரமுகராகவும் இவர் இருந்தார். இவர் இளமையில் திருவாரூரில் இருந்த சமயம் "ஒளி" எனும் பத்திரிகையை நடத்தி வந்தார். பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிவரும் நாளில் இவரது சிபாரிசின் பேரில்தான் கருணாநிதி சேலம் மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்தார்.

இப்போது போல திரையுலகக் கவிஞர்களுக்கு அதிகம் பாட்டு எழுத வாய்ப்புக்கள் வராது. இவர் ஓர் ஆண்டுக்கு ஓரிரு பாடல்கள் மட்டும்தான் எழுதுவார். அப்படி எழுதுகின்ற பாடலுக்கும் அதிக நாட்களை இவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இசை அமைப்பாளர்கள் கவிஞர்களைத் தேடிப் பின் தொடர்ந்துகொண்டு இருப்பார்களாம் பாட்டு தயாராகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டு. இவரே அது பற்றி எழுதியிருக்கிறார். அதில் இவர் குறிப்பிடும் செய்தி, இசை அமைப்பாளர் இசையை வாசித்துக் காட்டும் போதே சில கவிஞர்கள் தூங்கிவிடுவார்களாம் என்பதும் ஒன்று.

இவரைப் பற்றிய மற்றொரு தகவல் திரையுலகில் பரவியிருந்தது. அது "சிவலீலா" எனும் நாடகத்துக்காக கவி.கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்களை ஏ.பி.நாகராஜன் தனது திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களில் எடுத்துக் கையாண்டார் என்பதுதான். அதன் முழு விவரமும் நமக்குத் தெரிய வரவில்லை. இவர் நிறைய அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். கவிதைகள் தவிர, கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவருக்குத் தமிழ்நாடு அரசு 1972இல் கலைமாமணி விருதினை அளித்துக் கெளரவித்தது. இவர் எழுதிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். திரைத்துறையில் வாய்ப்பு குறைந்த பிறகு, அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்று இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு ஆன்மிக வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தார். மிக உயர்ந்த குணங்களையும், தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட மிகச் சிறந்த ஆன்மிக வாதியாகவும் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப். வாழ்க கவி.கா.மு.ஷெரீப்பின் புகழ்!


"தமிழ் முழக்கம்" கவி கா.மு.ஷெரீப்

(கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதி "தினமணி" தமிழ்மணியில் வெளியான கட்டுரையிலிருந்து நன்றியுடன் வெளியிடப் படுகிறது)

கவி கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல் லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே', இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?', 'ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே' ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தி, யார் எழுதியது என்று 'குவிஸ்' நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி கா.மு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

'தமிழரசுக் கழகத்துடன்' இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

"தமிழ் முழக்கம்", "சாட்டை" போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தோந்தைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். "அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. "ஒளி" என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்" என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

"கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்" என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர். "எனக்கென எஞ்சி நின்றவை -- புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று" என்றும், "புதிய தமிழகம் தோன்ற உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது" என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைதவர். அவரின் முதல் கவிதை "குடியரசு" ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது.

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள் என்று சிலம்பொலி செல்லப்பன் குறிப்பிடுகிறார்.

"சீறாப்புராணம்" சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்" என்று கி.ஆ.பெ.புகழ்ந்துள்ளார்.

"தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக" என்று 1946ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939ஆம் ஆண்டில் "சந்திரோதயம்" என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். 'அன்னையா? கன்னியா?' என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956இல் 'சாட்டை' இதழில் எழுதினார். தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் 'தமிழ் முரசு' என அவர் எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால் ம.பொ.சி.யின் தமிழ் அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையைத் "தமிழகக் களக்கவினர்" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார். திரு வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார், செய்வது போல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948இல் அறிஞர் அண்ணாவின் 'சந்திரமோகன்' நாடகத்தில் 'திருநாடே' என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.

"மாயாவதி" என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். 'பெண் தெய்வம்', 'புது யுகம்' ஆகிய படங்கலுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியது போல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை 'மச்சகந்தி' என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். 'சிவ லீலா' என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், 'பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான 'காதர்ஷா முகம்மது ஷெரீப்' என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.

இளங்கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீப்பின் பெயர் நின்று ஒலிக்கும்.
****


Thursday, September 2, 2010

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
திருமதி மங்களம் பகவதி, பி.ஏ.,பி.எட்.,
திருவாரூர்.

நீலகண்ட பிரம்மச்சாரி - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன். தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன். இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர். இவர் ஒருவருக்காக இருபதுக்கும் மேற்பட்ட சிறை அறைகள் கொண்ட பகுதியில் நடுவில் ஒரு அறையத் தேர்ந்தெடுத்து அதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர். இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், பர்மாவில் ரங்கூன் சிறையிலும் அடைபட்டுக் கிடந்தவர். தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88ஆவது வயதில் 1978ம் வருஷம் மார்ச் மாதம் 4ம் தேதி காலமானவர். நம் காலத்தில், நம் கண்முன்பாக வாழ்ந்து மறைந்த இந்த வீர புருஷனின் வரலாற்றை மக்கள் மறந்து விடக்கூடாது. இவரை நந்தி மலையில் மகாத்மா சந்திக்க முயன்றும், இவர் இருந்த குன்று மிக உயரத்தில் இருந்தமையால் மகாத்மாவின் செயலாளர் மகாதேவ தேசாய் சென்று இவரை அழைத்து வந்து மகாத்மாவைச் சந்திக்க வைத்த வரலாறும் நமக்குக் கிடைக்கிறது. யார் இந்த நீலகண்ட பிரம்மச்சாரி? இவரது சாதனைகள்தான் என்ன என்பதை இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டாமா? தேசப்பற்று என்பது என்ன, அதற்காக ஒருவர் எந்த அளவுக்குத் தியாகங்களைப் புரியலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நீலகண்ட பிரம்மச்சாரியின் வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பார்த்தால் போதும். இனி இந்த தியாக புருஷனின் வரலாற்றைச் சிறிது பார்க்கலாம்.

திருவையாறு பாரதி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம் ஒவ்வோராண்டும் "மகாகவி பாரதியார் பற்றிய ஓர் அஞ்சல் வழிக் கல்வியை" நடத்தி வருகின்றனர். அதில் இவ்வாண்டு ஒரு பாடத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி எழுதிவிட்டு, அதுகுறித்த ஒரு கேள்வியையும் கேட்டிருந்தனர். அதற்கு விடை தெரிந்து கொள்ள முயன்றபோது சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட திரு ரா.அ.பத்மநாபன் எழுதிய "புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி" எனும் நூல் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த நூல் இப்போது கிடைப்பதில்லை, அதனை மறுபதிப்பு செய்து வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த நூலில் உள்ள சில செய்திகளை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1911ல் மணியாச்சி ரயில் நிலயத்தில் வாஞ்சிநாதன் எனும் வீர தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டபோதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. இவர் 1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகவாகப் பிறந்தார். இவருக்கு 2 தம்பிகள் 5 தங்கைகள். இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்த செல்வம் வறுமைதான். சீர்காழி இந்து உயர்நிலைப்பள்ளியில் 4ம் பாரம் எனும் ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இவர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்த 'ஊட்டுப்புரை' சத்திரத்தில் தங்கிக் கொண்டார். அங்கு சிலகாலம் இருந்தபின் சென்னைப் பட்டணம் வந்து திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் டி.யு.சி.எஸ்.சில் பணிபுரிந்தார். அவரது நேர்மைத் திறத்தால் இவர் அங்கு சாமான்கள் வாங்கும் முகவராக நியமனமானார். அப்போது 1905ல் லார்டு கர்சான் வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர். அவர்களில் நமது நீலகண்டனும் ஒருவர்.

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. அப்போது சென்னை வந்திருந்த தூத்துக்குடி தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நீலகண்டனுக்கு பாரதியார் அறிமுகம் செய்து வைத்தார். அவரது சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுத் தருவதாக நீலகண்டன் உறுதியளித்தார். எனினும் அப்படி செய்ய முடியாமல் அரசியல் வேலைகள் நீலகண்டனை தன்வசம் இழுத்துக் கொண்டன. வங்காளத்து புரட்சி வீரரும் தேசபக்தருமான சந்திரகாந்த் சக்ரபர்த்தி என்பவர் சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் நீலகண்டனைத் தனது புரட்சி இயக்கத்து ஏற்றவராகக் கருதியதால் அவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு செயலாற்றினார்.

தஞ்சை மாவட்ட ஒரு ஆசாரமான பிராமண குடும்பத்துச் சின்னங்களோடு விளங்கிய நீலகண்டன், தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியை எடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார். தமிழகத்தின் முதன்முதல் குடுமியை எடுத்த இந்து இவராகத்தான் இருப்பார். 1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் இங்கும் தொடங்கப்பட்ட இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். இதில் பாரதியாரின் உறவினர் சங்கரகிருஷ்ணன் என்று ஒருவர். இவர் 1908ல் சென்னை வந்தார். இந்த காலகட்டத்தில் நீலகண்டனை இரகசியப் போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். இவர் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். பிரம்மச்சாரி என்பதற்கு திருமணமாகாமலும், பெண்கள் தொடர்பே இல்லாதவர் எனும் பொருள்படக்கூடிய சொல். இருந்த போதிலும், குடும்ப பந்தங்களில் ஈடுபடாத, கொண்ட குறிக்கோளுக்காகப் பாடுபட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற பொருளில் அவர் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டார். மேலும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொள்ளாமல் பொதுவாக இந்தத் திருநாட்டின் தேசபக்தன் எனப் பொருள்படும்படி இந்தச் சொல்லை அவர் பயன்படுத்தினார்.

போலீசாரின் கண்களில் படாமல் தங்களது புரட்சி இயக்க வேலைகளில் ஈடுபட இந்த "அபினவ பாரதம்" எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு. பாரதியார் சென்னையிலிருந்து பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த போது, நீலகண்டனும் அங்கே சென்றார். சைகோன் சின்னையா என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் இவர் "சூர்யோதயம்" எனும் பத்திரிகையைத் தொடங்கி அதில் பாரதியாரின் சீடனும், தம்பி என்று அவரால் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பரை பணியில் அமர்த்திக் கொண்டார். வ.உ.சியின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறைவாகப் புதுச்சேரியில் இருந்தார். இவர் வ.உ.சிக்குத் தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுத்தார். அதையறிந்த நீலகண்டன் தனி நபர் கொலைகளில் தனக்கு நம்பிக்கையில்லை எனவும் நாட்டில் ஒரே சமயத்தில் புரட்சி செய்து வெள்ளையனை வெளியேற்ற வேண்டுமென்பதே தான் ஈடுபட்டுள்ள அபினவ பாரத இயக்கத்தின் நோக்கம் என்பதையும் தெளிவு படுத்திவிட்டு ஆஷ் கொலைசெய்யப்படும் போது தான் இங்கிருந்தால் தன்னையும் அதில் பிணைத்து விடுவார்கள் என்று எண்ணி வடக்கே காசிக்குச் சென்று அங்கு ஓர் தேசபக்தர் வீட்டில் தங்கி இருந்தார்.

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிக்கு அவர் வன இலாகாவில் வேலை பார்த்து வந்ததால் தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் போலீசிடம் சிக்கியதால் வாஞ்சிக்கு துணை நின்றதாக நீலகண்டனும் தேடப்பட்டார். 1911 ஜூலையில் நீலகண்டன் கல்கத்தா போலீஸ் கமிஷனர் சர் சார்லஸ் டக்கார்டு என்பவருக்குத் தான் சரணடைய விரும்புவதாகக் கடிதம் எழுத, இவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார். இவரை விசாரணை செய்த நீதிபதி ஏ.எம்.சி.டாம்போ என்பவர் இவர் மீது மரியாதை கொண்டு நெல்லை நீதிமன்றத்தில் இவர் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட்டபோது, இவரது தோற்றத்தையும், முகத்தில் இருந்த தேஜசையும் கண்டு இவருக்கு ஒரு நாற்காலி கொடுத்து அமர வைக்குமாறு உத்தரவிட்டார். நீலகண்டனை அந்த நீதிமதி மிகவும் மரியாதையோடு நடத்தியதோடு, அவர் மீது தனது வாழ்நாளின் கடைசி வரை பக்தி பாராட்டி அவருக்கு சகல மரியாதைகளையும் செய்து வந்தார், இவரது நண்பராகவும் திகழ்ந்தார்.

ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. சங்கரகிருஷ்ணனுக்கு 22. 1912 பிப்ரவரி 12ல் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை. விசாரணையின்போது சென்னையிலும் தண்டனை காலத்தைக் கோவை சிறையிலும் கழித்தார். சிறையிலும் இவரது புரட்சி ஓயவில்லை. சிறையில் தனக்குக் கடுங்காவல் தண்டனை என்பதால் விறகு வெட்டச் சொல்லுகிறார்கள், நான் ஒரு அரசியல் கைதி எனக்கு இந்த வேலைகள் தரக்கூடாது, படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார். இவர் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாறியது. அரிசிச் சொறும் படிக்க நூல்களும் தரப்பட்டன. ஜெயில் உடை நீக்கி சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து இவர் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார், பிறகு பெல்லாரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பிரிட்டிஷ் ஆதிக்க வர்க்கம் அந்த நாளில் சுதந்திரப் போர் வீரர்களை எந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தி யிருந்தால் நீலகண்டன் போன்ற மன உறுதி படைத்த வீரர்கள் கூட தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 1914ல் உலக யுத்தம் தொடங்கியது. அப்போது இவர் சிறையிலிருந்து தப்பியோடி பிறகு மாட்டிக்கொண்டு அதற்கும் சேர்த்துத் தண்டனை அடைந்தார்.

இவர் சிறையில் ஒழுங்காக நடந்துகொண்டால் ஏழாண்டு சிறை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றார்கள். ஆனால் இவரது செயல்பாடுகளால் இவரது தப்பிச் செல்லும் முயற்சியும் சேர்த்து இவருக்குத் தண்டனைக் காலம் ஏழரை ஆண்டுகளாக்கப்பட்டது. 1912 பிப்ரவரி 15ல் தொடங்கி இவரது தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாரைத் தொடர்பு கொண்டார். பாரதியாரும் இவருக்கு அவ்வப்போது தனது சிரம தசையிலும் உதவி புரிந்தார். பாரதியார் காலமானபோது இவரைத்தான் பாரதிக்கு கொள்ளிவைக்கச் சொன்னார்கள், இவர் மறுத்துவிடவே அந்தப் பொறுப்பு பாரதியாரின் உறவினரும், தமிழ்நாடு இந்தி பிரச்சார இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஹரிஹர சர்மாவுக்குச் சென்றது.

பாரதியார் இவருக்கு அறிமுகப்படுத்திய தொழிலாளர் இயக்கங்களின் முன்னோடியும், பொதுவுடமைவாதியுமான தேசபக்தர் சிங்காரவேலரின் தொடர்பு இவரைப் "போல்ஷ்விக் பிரசுரங்கள்" வெளியிடத் தூண்டின. அது ஆயுதப் புரட்சியைத் தூண்டும் பிரசுரங்கள். இந்த குற்றத்துக்காக இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தண்டனை 1922 முதல் தொடங்கியது. சிறையில் நன்னடத்தைக்காக சில ஆண்டுகள் குறைக்கப்பட்டு 1930ல் ரங்கூன் மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். இந்த தண்டனைக் காலம் முழுவதும் இவர் நாட்டின் பல்வேறு ஊர்களில் இப்போது பாகிஸ்தானிலுள்ள முல்டான், பெஷாவர், பர்மாவில் ரங்கூன் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார். விடுதலையானதும் சென்னை திரும்பி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி', 'இந்து' பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

இளம் வயது தொடங்கி புரட்சிப் பாதையில் பயணித்த நீலகண்டனுக்கு இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 'பரிவிராஜக' (பற்றுக்களை விடுத்த சந்நியாச வாழ்க்கை) வாழ்க்கையை மேற்கொண்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் இவை எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்வது அவருக்கு ஒரு மாறுதலாக இருந்தது. இந்த வாழ்க்கையில் அவர் பெயர், புகழ், குற்றச்சாட்டு என்று எதையும் சுமக்காமல் வாழ்க்கை கனமில்லாமல் இருந்ததை உணர்ந்து கொண்டார். வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்த இவர் வேறு எதிலும் மனம் ஈடுபடாதிருக்க வேண்டி சதா சர்வ காலமும் அனைத்துக்கும் மூலாதாரமான பிரணவ மந்திரமான "ஓம்" எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார். இவரை இப்படிப் பார்த்தவர்களுக்கு இவர் எருக்கஞ்சேரி நீலகண்டனாக இல்லாமல், சுவாமி ஓம்காரானந்தாவாகத் தெரிந்தார். இவரது மன உறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். பரதேசி வாழ்க்கை மேற்கொண்ட இவர் அதனை விரும்பாமல் ராணியிடம் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

1933ல் டிசம்பர் மாதம் அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள நந்தி எனும் சிற்றூரை அடைந்தார். இப்போது அவர் சுவாமி ஓம்கார். அப்போது அவருக்கு வயது 44. அது தொடங்கி தனது இறுதிக் காலம் 88ம் வயது வரை அவரது இருப்பிடமாக இவ்விடம் அமைந்தது. நந்தி கிராமத்துக்கு அருகேயுள்ள சுல்தான்பேட்டை அருகேயுள்ள சென்னகிரி எனும் மலையடிவாரத்தில் இவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். இவர் இருந்த இடம் மிக செங்குத்தான மலைச்சரிவு என்பதனால் எவரும் அவ்வளவு எளிதில் இந்த இடத்துக்குச் செல்ல முடியாது. அவர் இந்த ஆசிரமத்தில் தனது ஆன்மிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய புரட்சி வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள், துறவற வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள் என வாழ்க்கை இரு சரிசமமான பிரிவுகளாக அமைந்து விட்டது.

அந்த மலைவாழ் மக்கள் சிலர் அடிக்கடி சாது ஓம்காரை வந்து சந்தித்துத் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அப்படியொரு முறை அவர் கொடுத்த பூஜை தீர்த்தம் அவர்களது நோய்களைத் தீர்த்தது என்ற செய்தி பரவ, பலரும் இவரிடம் தீர்த்தம் பெற்றுக்கொள்ள வரலாயினர். 1934ல் இவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது இவர் மனத்தில் ஓர் கேள்வி எழுந்தது: "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். நோய்களை குணப்படுத்தும் அதிசய மனிதன் என்ற பெயரும் புகழும் பெறவா என்னை ஆண்டவன் படைத்தான். எப்போதும் கூட்டம் சூழ்ந்திருக்க மன அமைதியின்றி தியானத்தில் ஈடுபடமுடியாமல் இருப்பதற்கா இங்கு வந்தேன். என் யோகப் பயிற்சி என்ன ஆவது" என்பது அவர் மனம் எழுப்பிய கேள்வி.

அவ்வளவுதான், அவர் அந்தக் கூட்டத்திலிருந்தும், பெயரும் புகழும் தேடிவரும் சந்தர்ப்பத்தைக் கைகழுவிவிட்டு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சென்னகிரி மலையின் உச்சியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓர் பாழடந்த மண்டத்தைச் சிறிது செப்பனிட்டு அங்குள்ள ஒரு சுனையைச் சுத்தம் செய்து அங்கேயே தங்கினார். இந்தப் பணிகளில் அவருக்கு உதவிய கிராம மக்களுக்கு 1934ல் அவர் ஓர் சமாராதனை செய்து உணவளித்து நன்றி தெரிவித்தார். அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் இவர் பாலும் பழமும் மட்டுமே உண்டு வந்தார். 1936ல் மகாத்மா காந்தி மைசூர் வந்திருந்தபோது சாது ஓம்காரை சந்திக்க விரும்பினார். அவர் இருந்த மலையுச்சிக்கு அவரால் போகமுடியாததால் அவரது செயலாளர் மகாதேவ தேசாயை அங்கு அனுப்பி அவரைச் சந்தித்து மகாத்மாவைக் காண அழைத்தார். அவரும் அப்படியே வந்து மகாத்மாவுடன் சில மணிகள் ஆன்மிக சிந்தனைகள் பற்றி உரையாடினார்.

1936 முதல் அவர் சுமார் 30 ஆண்டுகாலம் சுற்றுப்பயணம் செய்தார். பிறகு 1966ல் முதுமை காரணமாக ஊர் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார். அவர் இருந்த சென்னகிரி உச்சியில் காட்டுத்தீ பரவியதால் மறுபடியும் சுவாமி ஓம்கார் மலையடிவாரத்துக்குத் தனது ஆசிரமத்தை மாற்றிக் கொண்டார். இவருக்கு சமூகத்தின் பலமட்டத்திலும் சீடர்கள் உருவானார்கள். பல சாதியினர், கடவுள் நம்பிக்கை உள்ளோர், அற்றோர், அரச குடும்பத்தினார், அடிமட்ட மக்கள், இளையோர், முதியோர் என்று இவரைத் தேடி வரும் மக்கள் அதிகமானார்கள். இவரது நீண்ட நெடிய அரசியல், பொது வாழ்வு, ஆன்மிகம் பற்றி மூன்று நூல்களை எழுதியுள்ளார். 1909 முதல் 1917 வரை இவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளை "மெய் ஒப்புதல்" எனும் நூலாக எழுதினார், ஆனால் அதை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை.

இவரது இரண்டாவது நூல் "உபதேஷ்" எனும் தலைப்பிலானது. 1946ல் பெங்களூரில் வெளியிடப்பட்டது. மூன்றாவது நூல் "தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்". இதுவும் பெங்களூரில் வெளியானது. தீவிரவாதம், புரட்சிகர இயக்கம் இவற்றில் இளமை வேகத்தில் ஈடுபட்டு பின்னாளில் ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டுத் துறவியாக மாறிய இவரது வாழ்க்கை இன்றைய பல புரட்சிகர இயக்கத்தாருக்கும் ஓர் நல்ல வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி சத்குரு ஸ்ரீ ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், பிங்கள வருஷம், மாசி மாதம் 20ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண பக்ஷம் தசமி திதியில் 1978 மார்ச் மாதம் 4ம் தேதி மாலை 4.10க்கு இவ்வுலக பந்தங்கள் நீங்கி இறவா புகழுடம்பு எய்தினார்.

அவருக்கு இறுதிக்காலம் சமீபித்துவிட்டது என்ற தகவல் சீர்காழி எருக்கஞ்சேரியிலிருந்த அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவரது இளவல் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி வந்து அவருக்கு சாம வேத முறைப்படி சுவாமி ஓம்காரின் காதில் கர்ண மந்திரம் ஓதினார். அவரது உடல் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரளான மக்கள் வந்து மரியாதை செலுத்தினர். மறுநாள் மார்ச் 5ம் தேதி ஞாயிறு காலை சுமார் 2000 பேர் ஆசிரமத்தில் கூடியிருக்க, ஆசிரமத்து வளாகத்திலேயே சுவாமி ஓம்கார் அவர்களின் பூதவுடல் அக்னிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

நீலகண்ட பிரம்மச்சாரி போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. தனது எண்பத்தி எட்டு ஆண்டு வாழ்க்கையில் நாற்பத்தி நான்கு வயது வரை இந்திய சுதந்திரத்துக்காக பலம் பொருந்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராகத் தன்னையே சுதந்திர வேள்வியில் ஆஹூதியாக அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரருக்கு எங்காவது ஒரு இடத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கிறதா? எங்காவது ஒரு சிலை உண்டா? இவரது புரட்சி வாழ்க்கை எந்த பாட நூலிலாவது இடம் பெற்றிருக்கிறதா? நாட்டில் எங்கு திரும்பினாலும் ஒரே சிலைகள் மயமாகக் காட்சி அளிப்பதும், பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஏதேதோ எழுதப்பட்டிருப்பதும் கண்டு இந்த சுதந்திர வீரனுக்கு எதுவுமே இல்லையா? இப்படிப்பட்டவர்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்கப்பட்டால், புதிதாகத் தியாகிகள் உருவாக முடியுமா? தன்னலமற்ற நாட்டுச்சேவை இனி கிடைக்குமா என்று நல்ல உள்ளங்கள் வருந்தத்தான் செய்யும். என்ன செய்வது? இதுபோன்ற தியாகிகளை வணங்கினால்தான் இந்த நாட்டில் தேசபக்தி வளரும், புதிய தியாகப் பரம்பரை தோன்றும். வாழ்க நீலகண்ட பிரம்மச்சாரி (சுவாமி ஓம்காரானந்தா) புகழ்!

(1889ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த தினம்)
(1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி இவரது நினைவு தினம்.)

Thursday, August 26, 2010

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

இவர் 1888ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் வந்து பிறந்த எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம். ராமேஸ்வரம் சென்று ஆண் குழந்தை வேண்டிப் பிறந்ததால் ராமலிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. கவிஞரின் தாயார் அம்மணி அம்மாள் இதிகாச புராணங்களை யெல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார்.

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912இல் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய "கத்தியின்றி" பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது "சுதந்திரச் சங்கு" பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

இவரது அத்தை மகள் முத்தம்மாளை மணந்து கொண்டாரல்லவா, அவர் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தைல் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள். இவர் எழுதிய "மலைக்கள்ளன்" எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு 'அரசவைக் கவிஞர்' எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் 'பத்மபூஷன்' விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய "காந்தி அஞ்சலி" எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞரின் ஆயுள் முடிந்து விட்டது. வாழ்க நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புகழ்

.
நினைத்த மாத்திரத்தில் சுதந்திரம் பெறலாம்
சொல்கிறார் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம்;
பிச்சை கேட்க வேண்டுமோ, பிறர் கொடுக்க வல்லதோ?
'வேண்டும்' என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும்
யாண்டிருந்து வருவது? யார் கொடுத்துப் பெறுவது?

'அடிமையல்ல நான்' எனும் ஆண்மையே சுதந்திரம்;
தடியெடுக்க வேண்டுமோ? சண்டையிட்டு வருவதோ?
ஆசைவிட்ட பொழுதிலே அடிமை வாழ்வும் விட்டிடும்;
மீசை துள்ளி வாயினால் மிரட்டினால் கிடைப்பதோ?

அஞ்சுகின்ற தற்றபோது அடிமையற்றுப் போகுமே
நஞ்சுகொண்டு யாரையும் நலிவு செய்து தீருமோ?
நத்திவாழ்வ தில்லையென்ற நாளிலே சுதந்திரம்
கத்தி கொண்டு யாரையும் குத்தினாற் கிடைக்குமோ?

கள்ளமற்ற நேரமே காணலாம் சுதந்திரம்;
உள்ளிருக்கும் ஒன்றை வேறு ஊரிலார் கொடுப்பவர்?
தீமையோடு உறவுவிட்ட திண்மையே சுதந்திரம்
வாய்மையோடு உறவறாத வன்மையே சுதந்திரம்.


ஒப்பற்ற காந்தியால் உலகம் வாழும்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை
கற்பனைக்கிங் கில்லையந்தக் காளிதாசன்
செவிநாடும் கீர்த்தனைக்கு தியாகராஜரில்லை
தேசிய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா
உத்தமராம் காந்திதனை உவந்து பேச.

சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும்
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்
எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள்
எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார்
தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.

கொலைகளவு பொய்சூது வஞ்சமாதி
கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு
தலைசிறந்த பிறவியெனும் மனித வர்க்கம்
சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி
உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ
ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி
விலைமதிக்க முடியாத செல்வமன்றோ
வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்?

புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும்
போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவைதன்னில்
களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும்
சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த
தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும்
உத்தமரைக் 'கண்டோமா' என்னும் ஏக்கம்
ஒவ்வொரு நாள் நமக்கெல்லாம் உதிப்பதுண்டே!

குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடரி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம் வரத் தடியடியால் ரணமுண்டாக்கி
நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட
அத்தனையும் நான்பொறுத்து அகிம்சை காத்து
அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்துடட்டில் சிரிப்பினோடும்
உயிர்துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை.

என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால்
எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகுமன்றோ?
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ?
கன்றினுக்குத் தாய்போல உயிர்கட்காகக்
கரைந்துருகும் காந்தியை நாம் நேரில் கண்டோம்
இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம்
எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க.

கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்
கடலென்றாற் குறைவாகும் கருணை வெள்ளம்
புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம்
தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி
தளர்வாகும் எழுபத்து ஒன்பதாண்டில்
யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்
ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க.

தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டு ஓட்டுவோம்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டு கிடிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார்
சுத்தமெனும் ஜாதியால் தொடப்படாது என்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும் கொடிய ரென்று சொல்வதோ?

நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம்
நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம்
ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞான மனிதனை
அருகிலே வரப் பொறாமை அறிவிலே பொருந்துமோ?

செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை
ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!
முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?

உயிரிருக்கும் புழுவையும் ஈசனுக்கு உறையுளாய்
உணருகின்ற உண்மை ஞானம் உலகினுக் குரைத்த நாம்
உயருகின்ற ஜீவருக்குள் நம்மோடொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற தொத்துக் கொள்ள லாகுமோ?

அமலனாகி அங்குமிங்கும் எங்குமான கடவுளை
ஆலயத்துள் தெய்வமென்று அங்கிருந்து எண்ணுவோம்
விமலனான கடவுள் சக்தி மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவர் யாவும் அந்த விமலனென்ப தெப்படி?

ஞாயமல்ல ஞாயமல்ல ஞாயமல்ல கொஞ்சமும்
நாடுகின்ற பேர்களை நாமிடைத் தடுப்பது
பாயுமந்த ஆற்றிலே பருகிவெப்பம் ஆறிடும்
பறவையோடு மிருகமிந்தப் பாரிலார் தடுக்கிறார்?

Monday, August 23, 2010

பி.சீனிவாச ராவ்

விவசாயிகளின் எழுச்சி நாயகர் பி.சீனிவாச ராவ்

த்மிழ்நாட்டில் சுதந்திரப் போட்டாத்தில் ஈடுபட்டு தொண்டு புரிந்தவர்களில் பி.சீனிவாச ராவ் ஒருவர். இவர் தனது போராட்டத்தை ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் நிலையில், அந்த ஏகாதிபத்தியம் இந்த நாட்டில் வேரூன்ற காரணங்கள் எவை என்று கண்டு, அந்த ஆணிவேரை அறுத்தெறிய முயன்றவர். வயல்களில் உழைக்கும் விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலிகள், உழைப்பாளிகள் இவர்களைச் சுரண்டிக்கொண்டு, வெள்ளைக்காரர்களுக்குச் சாமரம் வீசும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை அகற்றினாலே, வெள்ளைக்காரர்கள் தானாகவே இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுவார்கள் என்பது இவரது கருத்து. இந்த நோக்கத்துக்காக அவர் என்ன செய்தார்?

1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. அந்தச் சங்கத்தை தமிழகம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி கிராமம் தோறும் பிரச்சாரம் செய்து சுற்றி அலைந்து உழைத்தவர் சீனிவாச ராவ். இவரைப் பற்றி இன்றுகூட கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தவிர மற்றையோர் அறிந்து கொள்ளவில்லை, அறிந்துகொள்ள முயன்றதுமில்லை. இவர் கர்நாடக மாநிலத்தில் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி இருக்கும் குடகு நாட்டில் பிறந்தவர். இவர் யார் எவர் எங்கிருந்து வந்தார் என்பதையெல்லாம்கூட பிறருக்குத் தெரிவிக்க விரும்பாமல் தான் ஈடுபட்டிருக்கும் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் சீனிவாச ராவ்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் சென்னையில் இவருடன் சிறையில் இருந்தவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அமீர் ஹைதர்கான் போன்றவர்கள். சுதந்திரப் போர் ஒரு புறம், விவசாயிகளின் எழுச்சி மற்றொரு புறம் என்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் இவர் தனது இயக்கத்தை மையமாகக் கொண்டார். இவர் ஆரம்ப கால அரசியலின்போது இவருடன் இணைந்து போராடிய பல தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் எஸ்.வி.காட்டே, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்டராமன் ஆகியோர். இவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைசிறந்த தொண்டர்கள்.

இவர் அதிகமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பாமல், செயல் ஒன்றே குறியாகத் தன் வாழ்நாளைக் கழித்தார். கீழத் தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி போன்ற பகுதிகள்தான் இவரது போராட்டக் களமாக இருந்தது. இந்த ஓய்வறியாத தொண்டனின் மறைவுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகையான "ஜனசக்தி" இவர் நினைவாக கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டது. அதில் பல தலைவர்களும் இம்மாமனிதன் பற்றிய பல செய்திகளைக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்துமே மிக விளக்கமாக அமைந்திருந்தன. அவற்றில் ப.ஜீவானந்தம் போன்றோர் எழுதிய கட்டுரைகள் பல செய்திகளை உள்ளடக்கி இருந்தன. அதிலிருந்து சில பகுதிகளை இங்கு காணலாம்.

ப.ஜீவானந்தம்: "தன் பெற்றோர் உற்றாரைப் பற்றி, ஊர் பேர் பற்றி இதுவரை மறந்தும் பேசாத ஒரு விசித்திர மனிதர் அவர். அதே பொழுதில் 1930லிருந்து நம்மை விட்டுப் பிரிந்த வரை தமிழகத்தையே தாயகமாகக் கொண்டு வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்திருந்தார். எனது வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தேசபக்தரையோ, புரட்சி வீரனையோ நான் எதிர்ப்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஓர் அபூர்வ பிறவி அவர்."

"1930இல் சென்னையில் பிரகாசம் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ரத்த பைசாசமே போலீஸ் கமிஷனர் கன்னிங்காம் உருவத்தில் வந்து நடத்திய கொடிய அடக்குமுறைச் சித்திரவதையை இன்று நினத்தாலும் உடலும் குடலும் பதறும். அந்தப் போராட்டத்தில் புலுசு சாம்பமூர்த்தி, காஸா சுப்பாராவ், துர்க்காபாய் முதலான தேசபக்தர்களோடு மாணவராக இருந்த சீனிவாச ராவும் கலந்து கொண்டார். நாட்டின் பெருமையைக் காத்த வீரர்களில் ஒருவர் இவர்."

"ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆளாகி, நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று மூச்சுகூட விடமுடியாத நிலையில் 2/65 பிராட்வேயை உறைவிடமாகக் கொண்டு ஒரு எடுப்புச்சாப்பாட்டை மூன்று பேர், சில வேளைகளில் நான்கு பேர் உண்டு பணிபுரிந்த காலம் அது. அப்போது சீனிவாச ராவி எங்களுக்கு ஒரு நட்சத்திரமாக விளங்கினார்."

ஹெச்.டி.ராஜாவின் 'நியு ஏஜ்' பத்திரிகையில் முழுநேரமும் பணிபுரிந்தார். 1935இல் காங்கிரஸ் கட்சிக்குள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் சென்னைக் கிளையை முதலில் அமைத்தவர் சீனிவாச ராவ். இவர் சிறிது அதிகமான நேர்மையாளர். தனக்கு சரி என்றும் நீதி என்றும் பட்டுவிட்டால் அதில் உறுதியாக நிற்பார். அவருடைய கண்டிப்புக்கும், பொறுப்புணர்ச்சிக்கும் பயந்து பலரும் சற்றுத் தள்ளியே இருப்பார்கள். அவருடைய கொள்கை பிடிப்பும், சுயநலமின்மையும் அத்தகையது."

"வெளிமாநிலக்காரர் என்பதாலும், தமிழ் சரியாகப் பேச முடியாததாலும் மணலி கந்தசாமி போன்றோருடன் சேர்ந்து 1943இல் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அவர்களை ஒரு போராட்ட சக்தியாக உருவாக்கினார். அதுமுதல் 30 ஆண்டுகள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்த தமிழகத்தின் ஒப்பற்ற தலைவன். அந்த விவசாயிகளின் தலைவர் இறந்த போது திருத்துறைப்பூண்டியில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆயிரமாயிரம் விவசாயிகள் கண்ணீர் சிந்தி அந்தத் தலைவனை வழியனுப்பிய காட்சி கல்லும் கரையச் செய்யும் காட்சியாகும்."

எம்.ஆர்.வெங்கட்டராமன்: "வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அக்கிரமம் என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டித்து விடுவார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அங்கத்தினராக இருந்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் செயலாளராகவும் இருந்தார். அன்னியத் துணிகள் பகிஷ்காரம் நடந்த போது இவர் போலீசாரால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார். பூட்ஸ் காலால் மிருகத்தனமாக மிதிக்கப்பட்டார். அத்தனை அடிகளையும் அஞ்சாத நெஞ்சத்தோடு எதிர் கொண்டவர் சீனிவாச ராவ்."

பி.ராமமூர்த்தி: "கண்டிப்பு, கட்டுப்பாடு, எளிய வாழ்க்கை இவைகளுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் சீனிவாச ராவ். தொண்டனுக்குத் தொண்டனாக, நண்பனுக்கு நண்பனாக, தலைவனுக்குத் தலைவனாகத் திகழ்ந்தார். ஆகவே தான் அவரது மறைவுச் செய்தி கேட்ட சில மணி நேரத்தில் தஞ்சை மாவட்டமே, தமிழகமே கதறி அழுதது. அவரது இறுதிப் பயணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்."

ஏ.எம்.கோபு: "கன்னடத்தில் உயர்சாதியான பிராமண குலத்தில் பிறந்து, காவிரி நதி தீரமான தஞ்சைத் தரணியின் வற்றாத வளத்தின் வித்தாகவும், வேராகவும், விளங்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் அவதரித்த லட்சக்கணக்கான வேளான் தொழிலாளரின், குத்தகைதாரர்களின், குறுநில உடைமையாளர்களின் விமோசனத்துக்காக அரும்பாடுபட்டு, தஞ்சையில் உயிர் நீத்து, திருத்துறைப்பூண்டியில் மீளாத்துயில் கொண்ட் தமிழகத்தின் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் சீனிவாச ராவ்."

பி.சீனிவாச ராவி 1961ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குத் தஞ்சாவூரில் காலமானார். அவர் உயிர் பிரிந்தபோது அவருடன் அப்போது தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காத்தமுத்து, தஞ்சை ஏ.வி.ராமசாமி, கே.நல்லகண்ணு ஆகியோர் உடனிருந்தனர். அவர் உடல் பி.ராமமூர்த்தி, எம்.காத்தமுத்து, கே.டி.ராஜு ஆகியோரால் திருத்துறைப்பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முல்லை ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், தொண்டர்களும் கண்ணீர் சிந்த 30-9-1961 இரவு 10-30 மணிக்கு எரியூட்டப்பட்டது.

போராட்டத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்த ஒரு ஏழைப்பங்காளனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வாழ்க தோழர் பி.சீனிவாச ராவ் புகழ்!

Wednesday, August 18, 2010

"காந்தி ஆஸ்ரமம்" அ.கிருஷ்ணன்

"காந்தி ஆஸ்ரமம்" அ.கிருஷ்ணன் (1908 - 1985)

காந்தி ஆஸ்ரமம் திரு அ.கிருஷ்ணன் அவர்கள் 1908ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திருநெல்வேலி நகரத்தில் பிறந்தார். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய கல்வி திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு வரை நடந்தது. இளம் வயதில் தேசிய உணர்வு ஏற்பட்ட காரணத்தால் அப்போது நடந்த பல தேசிய இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் பம்பாய் நகரில் இருந்த உறவினரிடம் வேலைக்காக அனுப்பப்பட்டார். அங்கு இவர் 1927 -29 ஆண்டுகளில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பம்பாய் பெரு நகரம் என்பதோடு இவருடைய தேசிய இயக்கத்தில் ஈடுபடவும் அங்கு இவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. கதர் துணிகளை மொத்தமாக வாங்கி தோளில் சுமந்துகொண்டு விற்பனை செய்து தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார். மகாத்மா காந்தியிடம் இவர் இந்தப் பணிக்காக பெற்ற பாராட்டை இவர் பெருமையாகக் கருதினார்.

பம்பாயிலிருந்து தமிழகம் திரும்பி விளாத்திகுளம் எனும் ஊரில் பொதுப்பணித்துறையில் மேஸ்திரியாகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கு இருந்த கதர் கடைக்கு இவர் அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி அங்கு சென்ற போது கதர் கடையில் இருந்த ஒரு பத்திரிகை இவர் கண்களில் பட்டது. அது "விமோசனம்" எனும் பத்திரிகை. அது திருச்செங்கோடு நகரத்தில் ராஜாஜியால் தொடங்கப்பட்ட 'காந்தி ஆசிரமத்தின்' வெளியீடு. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. உடனே அந்த பத்திரிகைக்கு சந்தா அனுப்பியதோடு கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளை ஏற்று அலுவலகத் தொடர்பினாலும், பொதுத்தொடர்பினாலும் பலரிடம் சந்தா வசூலித்து 'விமோசனம்' பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார். இவரது ஆர்வத்தையும், தேசபக்தியையும் கல்கி வெகுவாகப் பாராட்டி இவரை திருச்செங்கோடு வந்து தன்னைச் சந்திக்குமாறு கடிதம் எழுதினார்.

கல்கியின் வேண்டுகோளை ஏற்று கிருஷ்ணன் 1930இல் திருச்செங்கோடு சென்று அங்கு கல்கியைத் தேடினார். இவர் போனபோது கல்கி அங்கு இல்லை. பிறகு அவர் வந்தபின் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆசிரமத்தில் சேர்ந்தார். அந்த ஆண்டு ராஜாஜி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காக திருச்சியிலிருந்து டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து நூறு தொண்டர்களுடன் பாதயாத்திரை சென்றார். இவருக்கும் அந்த சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்ள ஆசைதான். ஆனால் இவரை அப்போது வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

அதுமுதல் ராஜாஜி கிருஷ்ணனின் ஆதர்ச தலைவர் ஆனார். சுதந்திரப் போரில் நடைபெற்ற பல போராட்டங்களில் இவர் பங்கு பெற்றார். 1932ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1933 வரை சுமார் ஒரு வருட காலம் சிறை தண்டனை பெற்று கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்தார். அதன் பிறகு 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ராஜாஜி தலைமையில் போராட்டத்தில் கைதாகி இரண்டாம் முறையாக சிறையில் இருந்தார்.

நாமக்கல்லில் இராமலிங்கம் பிள்ளையோடு போராட்டங்களில் கலந்து கொண்டு கொல்லிமலைப் பகுதிகளில் காவல்துறையின் கண்களில் படாமல் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்தினார். அப்போது இவரோடு இருந்த பல தேசபக்தர்களுக்கு இராமலிங்கம் பிள்ளையின் சகோதரி மகன் இராமசாமி பிள்ளை (கரூர்) சைக்கிளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு, பாத்திரங்கள் தெரியாமல் அதன் மீது வைக்கோலை வைத்துக் கொண்டு ரகசியமாகக் கொண்டு செல்வாராம். காந்தியத்தில் முழுமையாக நம்பிக்கை கொண்ட இவர் இளமை முதல் கதர் மட்டுமே அணிந்து வந்தார்.

1930 தொடங்க்கி 1970 வரை இவர் காந்தி ஆஸ்ரமப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 1970இல் பணி நிறைவு பெற்று தன் பிள்ளைகள் பேராசிரியர் கி.கண்ணன், திரு கி.முத்துராமகிருஷ்ணன் ஆகியோரோடு வசித்து வரலானார். இவரது வாழ்க்கையில் இறைவன் விளையாடிவிட்டார். இவரது மூத்த மகனை இவர் 1977ஆம் ஆண்டில் பறிகொடுத்தார். புத்திர சோகம் இவர் மனதை ஆழமாகப் பாதித்திருந்தாலும் அதனை சிறிதுகூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் கீதையின் வழிகாட்டுதல்படி நன்மை தீமைகளைச் சமமாகப் பாவித்துத் தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். மூத்த மகனை இழந்த பின் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் 1985இல்தான் இவர் மறைந்தார்.

திருச்செங்கோடு ஆசிரிமத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அதோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆசிரமத்தில் இவர் நிர்வாகம் செய்த காலத்தில் இவருக்கு கதர் பணியில் ஈடுபாட்டோடு சிறப்பாகப் பணியாற்றினார். கதர் இயக்கத்தில் அப்போது தீவிரமாக இருந்த கோவை ஐயாமுத்து போன்றவர்களோடு இவருக்குத் தொடர்பு இருந்தது. ஆசிரமத்தில் இராட்டையில் நூல் நூற்கவும், கதர் துணி தயாரிக்கவும் இவர் அதிக ஈடுபாடு காட்டினார். 1940இல் இவர் நாகபுரிக்கருகில் இருந்த வார்தா காந்தி ஆசிரமம் சென்று அங்கு மகன்வாடி கிராமோத்யோக் வித்யாலயாவில் கையினால் காகிதம் செய்யும் முறையைக் கற்று வந்தார். திருச்செங்கோடு திரும்பி இங்கிருந்த தொண்டர்கள் பலருக்கும் கையினால் காகிதம் செய்யும் முறையைப் பயிற்றுவித்து எல்லோருக்கும் பயன்படும்படி கைத்தொழிலை வளர்த்தார்.

அப்போது திருச்செங்கோடு ஆசிரமத்தின் காதி பண்டார் எனும் கதர் கடையின் நிர்வாகியாக பழனிச்சாமி பண்டாரம் என்பவர் இருந்தார். அவர் 1945இல் காலமான போது கிருஷ்ணன் அந்த பண்டாரின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதுமுதல் சுமார் இருபத்தைந்தாண்டுகள் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வந்தார். சேலத்தில் இப்போது உள்ள 'ராஜாஜி காதி பவன்' அன்று ஆசிரமத்தில் இருந்த காதி பண்டாரின் வளர்ந்த நிலைதான்.

தியாகி அ.கிருஷ்ணனுக்கு மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் அதிக ஈடுபாடும் பக்தியும் உண்டு. தன் மகன் ஒருவருக்கு இராமகிருஷ்ணன் என்று பெயரிட்டதே இந்தக் காரணம் தொட்டே. அன்றைய சேலம் மாவட்டத்தில் பல இடங்களுக்கும் பயணம் செய்து மேற்கண்ட மகாங்களைப் பற்றிய பெருமைகளைப் பரப்பியதோடு பல விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் பாடல்களை நல்ல குரல் வளத்தோடு இவர் பாடுவதைக் கேட்டு உருகாதவர் இருக்க முடியாது. உணர்ச்சி பூர்வமாக, பாடல்களின் கருத்துக்கேற்ப இவர் பாரதி பாடல்களைப் பாடிக் கேட்க பலரும் விரும்புவர். நல்ல இசை வளம், குரல் வளம் இவருக்கு உதவி புரிந்தது.

மூத்த மகனை இழந்து விட்டாலும், இவரது மற்ற இரு மகன்களிடமும், தன் மகளிடமும் அன்பு பூண்டு இவர் தனது மனைவியோடு இருந்து 1985இல் காலமானார். வாழ்க தியாகி 'காந்தி ஆஸ்ரமம்' அ.கிருஷ்ணன் புகழ்!