Followers

Saturday, November 13, 2010

கல்கி T. சதாசிவம்


கல்கி T. சதாசிவம்

ராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் T.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவராக இருந்த ரா.கிருஷ்ணமூர்த்தி வெளியேறி வந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் இருந்தமையால் அதில் பணிபுரிந்தார். சதாசிவம் அவர்கள் பள்ளி இறுதி வரை படித்தவர். 1921ஆம் ஆண்டில் ஒரு மகாமகம் வந்தது. அதற்கு சாரணர் தொண்டராகச் சென்றவர் சதாசிவம். அப்படி கும்பகோணம் போன இடத்தில் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவருடைய சிம்ம கர்ஜனை சதாசிவத்தை ஒரு தேசபக்தனாக ஆக்கியது.

அதுமுதல் சுப்பிரமணிய சிவாவின் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் சதாசிவம். சிவா அவர்கள் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் கட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலம். அதற்காகப் பாப்பாரப்பட்டியில் இருந்த நிலத்தில் ஒரு அடிக்கல்லை அப்போதைய பெருந்தலைவர் வங்கத்துச் சிங்கம் சி.ஆர்.தாஸ் அவர்களைக் கொண்டு நாட்டியிருந்தார். பாரதமாதா ஆலயப் பணிக்காக பாரதாஸ்ரமம் அமைக்கப்பட்டது. அதில் சேர்ந்த சதாசிவம் தேசத் தொண்டில் முழு மூச்சாக இறங்கினார்.

பாரதமாதா ஆலயம் அமைப்பதற்காக ஊர் ஊராக பஜனை செய்துகொண்டு செல்லும் தேசபக்தர் கூட்டத்தில் உண்டியல் எடுத்து வசூல் செய்தார். நிதி சேர்ப்பதில் சமர்த்தர் எனும் பெயரை அப்போதே அவர் பெற்றார். 1922இல் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1923இல் மறியல் போராட்டம், அன்னிய துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் இப்படிப்பட்ட காந்திய நெறியில் போராடி 15 மாத சிறை தண்டனை பெற்று சிறை சென்றார்.

கதர் இயக்கத்திலும் இவர் பெரும் பங்கு வகித்தார். ஊர் ஊராகச் சென்று கதர் துணி மூட்டைகளை எடுத்துச் சென்று கதர் என்பது தேசியத்தின் அடையாளம் சுதந்திரம் வேண்டுவோர் கதர் அணிவதன் மூலம் கிராமியத் தொழிலுக்கு ஆதரவு தருவதோடு, சுதந்திரத்துக்கும் பாடுபடுபவர்களாக ஆகமுடியும் என்று சொல்லி பெருமளவு கதர் துணிகளை விற்பனை செய்தார். ஆங்காங்கு போய் மக்கள் மத்தியில் சாங்கோபாங்கமாகப் பேசி கதர் துணி விற்பார், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ப்பார், இப்படி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றார் சதாசிவம்.

இவர் இரக்க குணம் உடையவர். தன் கண்ணெதிரில் யாராவது கஷ்டப்படுவது கண்டால் உடனே தன் கையில் இருப்பதைக் கொடுத்து அவர்களது கஷ்டத்தை நீக்க உதவி செய்வார். 1930 சுதந்திரப் போர் வரிசையில் மிக முக்கியமான ஆண்டு. ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் துவங்கிய ஆண்டு. திருச்சியில் நடந்த மறியலில் கலந்து கொண்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். மாநில காங்கிரஸ் அலுவலகம் திருச்சியில் இருந்தமையால் அவர் அங்கு மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்தார்.

இவருக்கு ராஜாஜியையும், அவர் மூலமாக மகாத்மா காந்தியடிகளையும் நன்கு அறிந்திருந்தார். இவர் சிறை சென்று மீண்ட சமயம் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி புதிய பத்திரிகை தொடங்க முயன்று கொண்டிருந்தார். சதாசிவம் அவரோடு இணைந்து "கல்கி" எனும் பத்திரிகையைத் தொடங்க ஆலோசனைகளைக் கூறி வேலைகளை ஆரம்பித்தார். எழுத கல்கியும், நிர்வாகம் சதாசிவம் என்றும் அன்று தொடங்கிய கல்கி ராஜநடை போட்டு பயணத்தைத் தொடங்கியது. அடடா! கல்கி படைத்த இலக்கியங்கள்தான் எத்தனை எத்தனை? அத்தனையும் சதாசிவம் அளித்த ஊக்கம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கல்கியும், சதாசிவமும் இணைபிரியாத ராஜாஜி தொண்டர்களாக விளங்கினார்கள். இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள ஆங்கரை எனும் ஊரில் பிறந்தவர். தந்தையார் பெயர் தியாகராஜன். தியாகராஜனுடைய 16 குழந்தைகளில் இவர் 3ஆவது குழந்தை. 4-9-1902இல் இவர் பிறந்தார். 1936இல் இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியைச் சந்தித்தார். 10-7-1940இல் இவர்களது திருமணம் நடந்தேறியது. அதே ஆண்டில்தான் கல்கி பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இவர் தனது 95ஆம் வயதில் 22-11-1997இல் அமரத்துவம் அடைந்தார். குருநாதரின் ஆலோசனைக்கிணங்க இசையுலக சக்கரவர்த்தினியாகத் திகழ்ந்த எம்.எஸ்.சுப்பலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ். அவர்கள் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருக்கு உந்துசக்தியாக இருந்து பாடுபட்டவர் சதாசிவம். இந்த தம்பதியினரின் நிதி உதவி கச்சேரி மூலம் இந்திய நாட்டில் பயன்பட்ட ஆலயங்கள், நிறுவனங்கள் எத்தனையோ! இன்று இருவரும் அமரராகி விட்டனர். வாழ்க சதாசிவம் புகழ்!

1 comment:

  1. என் அப்பாவும் ராஜாஜிக்கு கல்கி மூலமாகவே அறிமுகம்.சதாசிவமும் அப்படியே. இதன் காரணமாக அப்பாவும் சதாசிவமும் பங்காளிக‌ளைப் போல்
    நடந்து கொண்டார்கள்.சதாசிவத்திற்கு அதிகமாக இடம் கொடுப்பதாக ராஜாஜியிடம் அப்பா மனத்தாங்க‌ல் கொண்டதுண்டு. பிற்காலத்தில் நடந்த
    நிகழ்வுகளைக்கொண்டு ராஜாஜியின் கணிப்பு சரிதான் என்று அப்பா சமாதனம் அடைந்தார்

    ReplyDelete

Please give your comments here