Followers

Saturday, July 31, 2010

ஐ. மாயாண்டி பாரதி

ஐ. மாயாண்டி பாரதி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

மதுரை நாட்டுக்களித்த தியாகசீலர்கள் அனேகரில் ஐ.மாயாண்டி பாரதி முக்கியமானவர். சுதந்திரப் போரில் மதுரையின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என்பதை என்றும் மறக்க முடியாது. அது போலவே சுதந்திரப் பொன்விழா ஆண்டில் மதுரை தியாகிகள் மலரை தியாகி ந.சோமையாஜுலு அவர்கள் மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவந்திருக்கிறார். இதில் மிக நுணுக்கமாக அனைத்து தாலுகாக்களிலும் இருந்த தியாகிகள் பலரது வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். அவர்களில் ஐ.மாயாண்டி பாரதியின் வரலாறும் ஒன்று.

இவர் 1917ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையார் கு.இருளப்ப ஆசாரி. பின்னாளில் கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டைவர் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதன் முதலாக 1931இல் கள்ளுக்கடை மறியலில் இவர் தனது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் 1932இல் சட்டமறுப்பு இயக்கத்தின் போது, போராட்டத்தைப் பற்றி விளக்கும் துண்டுப் பிரசுரங்களை இவர் விநியோகித்தார்; சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப் படுத்தினார். அது தவிர சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் சுதந்திரச் சங்கு போன்ற பத்திரிகைகளை கூவிக் கூவி விற்றார். ராஜாஜி கொண்டு வந்த ஆலயப் பிரவேசச் சட்டத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்த ஆலயப் பிரவேசத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். 1935இல் ஜவஹர் வாலிபர் சங்கம் எனும் ஓர் இயக்கத்தைத் தொடங்கி இளைஞர்களை ஒன்று திரட்டி தேச சேவையில் ஈடுபடுத்தினார். வாசக சாலைகளை உருவாக்கி அங்கெல்லாம் மக்கள் சுதந்திரப் போர் செய்திகளைப் படிக்கும்படி வகை செய்தார்.

இவர் ஒரு எழுத்தாளர்; இலக்கியவாதி. திரு வி.கலியாணசுந்தரனார் நடத்திய "நவசக்தி" பத்திரிகையிலும், மகாகவி பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பப் பிள்ளையின் "லோகோபகாரி"யிலும் இவர் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். மேலும் பல சிறு பத்திரிகைகளிலும் எழுதி சுதந்திரத் தீயை எங்கும் பரப்பினார். இவரது எழுத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்க்குரல் உரக்க எழும். ஆட்சியாளர்களுக்கு இவரது எழுத்து சிம்ம சொப்பனமாக விளங்கியது.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் எம்.என்.ராயை மதுரைக்கு வரவழைத்து மாநாடு நடத்தி அதில் பெரிய தலைவர்களைப் பேச வைத்தார். 1940இல் இரண்டாம் உலக யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கைதானார். இதில் இவருக்குக் கிடைத்தது 7 மாத கடுங்காவல் தண்டனை. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைந்து கிடந்தார். வேலூர், தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் இவரது சிறை வாழ்க்கைக் கழிந்தது. அடிப்படையில் பொதுவுடமை கருத்துக்களில் மனம் ஈடுபட்ட இவர் முழுநேர கம்யூனிஸ்டாக மாறினார்.

சிறையிலிருந்து விடுதலையான பிறகு வெளியே வந்து அப்போது கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்த ஜீவாவை ஆசிரியராகக் கொண்ட "ஜனசக்தியில்" வேலைக்கு அமர்ந்தார். அதில் இவர் சுமார் 20 ஆண்டுகள் உதவி ஆசிரியராக இருந்து அனல் கக்கும் கம்யூனிச பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

1950இல் இவர் ஒரு சதிவழக்கொன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றார். சுதந்திர இந்தியாவிலும் சிறைவாசம் அனுபவித்த ஒருசில தேசபக்தர்களில் ஐ.மாயாண்டி பாரதியும் ஒருவர். 1952இல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது. அப்போது 1953இல் மாயாண்டி பாரதி விடுதலை செய்யப்பட்டார். 1962இல் சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்தியாவில் கம்யூனிச இயக்கம் இரண்டாகப் பிளவு பட்டது. சீன ஆதரவு நிலை எடுத்த இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட் கட்சி) இவர் அங்கம் வகித்தார். அந்த கட்சி நடத்திய "தீக்கதிர்" எனும் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்ந்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து கொண்டே இவர், அனைத்துக் கட்சி சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் மாவட்டக் குழுவின் பொதுச்செயலாளராக இருந்தார். சமூக சிந்தனை, இலக்கியச் சிந்தனை, எழுத்தாற்றல் மிக்க சுதந்திரப் போர் வீரர் மாயாண்டி பாரதி. வாழ்க இவரது புகழ்!

1 comment:

  1. 'பரலி சு.நெல்லையப்பப் பிள்ளையின் "லோகோபகாரி"யிலும் இவர் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார்'


    இது நான் அறியாத செய்தி! நன்றி!

    ReplyDelete

Please give your comments here