Followers

Monday, August 2, 2010

தியாகசீலர் ந.சோமையாஜுலு

தியாகசீலர் ந.சோமையாஜுலு
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தான் முதன்முதலாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்முழக்கத்தை எழுப்பியது. இங்கு ஏராளமான தேசத் தொண்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். முதன்முதலாக ஆங்கிலப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்து மரண தண்டனைக்கு உள்ளான கட்டபொம்மு நாயக்கர், சுதேசிக் கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, இந்தியரைப் புல்லிலும் கேவலமாகக் கருதிய கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீரவாஞ்சி, இவர்கள் வாழ்ந்த பூமி இது. இங்குதான் தியாகசீலர் ந.சோமையாஜுலு பிறந்தார்.

திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் எனுமிடத்தில் 1902 டிசம்பர் 28ஆம் தேதி சோமசுந்தர ஐயர் சீதையம்மாள் தம்பதியருக்குப் பிறந்த குழந்தைதான் நரசிம்ம சோமையாஜுலு. இவரது இளமைக்காலக் கல்வி தூத்துக்குடியில்தான் நடந்தது. இளம் வயதில் விளையாட்டுகளிலும், உடற்பயிற்சியிலும் ஆர்வம் நிறைந்தவராக இருந்தார். அவர் மாணவராக இருந்த காலத்தில் வ.உ.சியின் தேசிய இயக்கப் போராட்டங்கள் இவர் மனதில் கிளர்ச்சியையும், உறுதியையும் ஏற்படுத்தின. அந்தக் காலத்தில் காவல்துறையினர் செய்த அத்து மீறல்கள், அக்கிரமங்கள் இவர் மனதில் புயலை எழுப்பின. ஓரளவு விவரம் புரிந்த வயதில் இவர் வ.உ.சியையும், சாது கணபதி என்ற வழக்கறிஞரையும் சந்தித்திருக்கிறார். இவரது கல்லூரி பருவத்தில் இவரது தேசியப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாகியது. வ.உ.சி.யே இவரது ஆதர்ச தலைவராக விளங்கினார். அவரது துணிச்சலும், நேர்மையும், கொண்ட காரியத்தில் விடாமுயற்சியும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்.

மகாகவியின் இறப்புக்கு முன்பு சோமையாஜுலு அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறார். அவர் பாடல்களைப் பாடும் போது கேட்டிருக்கிறார். இவையனைத்தும் திருநெல்வேலிக்கு பாரதி வந்த போது நடந்தது. இவர் முதன்முதலாக கலந்து கொண்ட தேசியப் போராட்டம் 1920இல் நடத்திய ஒத்துழையாமை இயக்கம். அது முதல் இவர் பல காங்கிரஸ் மாநாடுகளுக்குச் சென்று வரலானார். பல பெரிய தலைவர்களின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. அதோடு இவர் ஆசிரியர் பணியிலும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

1924இல் திருவண்ணாமலையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குப் பல தொண்டர்களைத் திரட்டி அனைவரும் மதுரையிலிருந்து நடந்தே திருவண்ணாமலை சென்றடைந்தனர். வழிநடையின் போது அவர்களுக்குச் சிரமம் தெரியாமல் இருப்பதற்கு பாரதியின் பாடல்கள் பயன்பட்டன. இப்போது கேரளத்தில் இருக்கும் வைக்கம் நகரில் நிலவிய தீண்டாமையை எதிர்த்து மதுரக் ஜார்ஜ் ஜோசப் தலைமையில் பலரும் சென்று கலந்து கொண்டனர். அப்போது சங்கரன்கோயிலில் இருந்த சோமையாஜுலுவும் தொண்டர்கள் புடைசூழ வைக்கம் செல்லப் புறப்பட்டபோது, போராட்டம் முடிவடைந்துவிட்டது என்று செய்தி வரவே பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

வ.உ.சியின் வலது கரம் போல செயல்பட்ட சுப்பிரமணிய சிவா, வ.உ.சியுடன் சிறை சென்றவர். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்கப் பாடுபட்டவர். அவரோடு சோமையாஜுலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிவாவைத் தனது குருவாக பாவித்தார் சோமையாஜுலு. அப்போது நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் ஒரு ஆசிரமம் நிறுவினார். அதுமுதல் சோமையாஜுலுவுக்கு வ.வெ.சு.ஐயரின் நட்பும் கிடைத்தது.

1924இல் பம்பாய் மாகாணம் பெல்காம் நகரில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்காக மதுரையிலிருந்து பெல்காம் வரையிலான 1100 கி.மீ தூரத்தை பல தொண்டர்களைக் கூட்டிக் கொண்டு சோமையாஜுலு கால்நடையாகவே புறப்பட்டுப் பாதயாத்திரை சென்றார். மாநாடு முடிந்து திரும்பும் போதும் நடந்தேதான் திரும்பி வந்தனர். 1927இல் நாகபுரி வேளேந்தும் போராட்டத்தையொட்டி மதுரையில் சோமையாஜுலு பல காங்கிரஸ் தொண்டர்களுடன் வாள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். அடுத்து கர்னல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்திலும் இவர் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போரின்போது இந்தியச் சிப்பாய்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சி செய்து பல மாதங்கள் வடமாநிலங்களைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அடக்கும் விதமாக கர்னல் நீல் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் கல்கத்தா சென்று ஆங்கிலப் படையுடன் சென்று வழிநெடுக அப்பாவி மக்களைப் பெண்கள், குழந்தைகள் உடபட பலரைக் கொன்று இந்தியச் சிப்பாய்களை அடக்கிக் கொடுமை புரிந்தவன். அவனுக்குச் சென்னையில் சிலை வைத்திருந்தார்கள். அந்தச் சிலையை அகற்ற ஓர் போராட்டம் நடந்தது. எனினும் 1937இல் ராஜாஜி அமைச்சரவை அமைந்ததும் முதல் வேலையாக அந்த நீலன் சிலை அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டது. எதிர்த்த ஆங்கில ஆதரவாளர்களுக்கு ராஜாஜி சொன்ன பதில், அதி எங்கள் சிலை, அதனை எங்கு வேண்டுமானாலும் வைப்போம் என்பதுதான்.

1930இல் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை அடுத்து சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் முதல் 15 நாட்கள் யாத்திரை செய்து உப்பு அள்ளிய நிகழ்ச்சி நடந்தது. இந்தப் போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் தொண்டர்களைச் சேர்க்கும் பணியும் மதுரையில் நடந்தது. அதில் ந.சோமையாஜுலுவின் முயற்சியால் முப்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களை மதுரை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பொதுஜன தொடர்பு வேலையை சோமையாஜுலு ஏற்றுக் கொண்டார்.

இவர் கோவில்பட்டியில் பேசிய ஒரு பொதுக்கூட்டச் சொற்பொழிவிற்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு ஆறுமாத கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்த வழக்கு நடந்த காலத்திலேயே இவர் மீது மேலும் பல வழக்குகள் போடப்பட்டன. ஆறுமாத தண்டனை முடிந்து வெளியே வரும்போது மறுபடி கைதுசெய்யப்பட்டு மறுபடி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது இவருக்கு.

மதுரையில் சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது போலீசின் கடுமையான தடியடிக்கு ஆளானார் இவர். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் இவருக்கு. கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு இவர் மீண்டும் தடியடிக்கு ஆளானார். 1932இல் இவருக்கு பத்து மாதம் சிறை தண்டனை கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி எண்ணங்கொண்ட தலைவர்கள் கூடி 1937இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி எனும் அமைப்பை ஏற்படுத்தினர். அதில் இவர் இணைந்தார். 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது இவர் யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் கைது செய்யப்பட்டார். 1940இல் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் காங்கிரஸ் நடத்திய உச்ச கட்டப் போராட்டம். வெள்ளையனே வெளியேறு போராட்டம். இதிலும் இவர் கைது செய்யப்பட்டார், ஆனால் இவரது உடல்நிலை காரணமாக இடையில் விடுதலையானார். கல்கி அவர்கள் எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்டத் தொடங்கியபோது அந்தக் குழுவில் செயலாளராக இருந்து உழைத்தவர் சோமையாஜுலு. இந்திய சுதந்திரத்துக்குப் பின் 1952இல் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து பெரும் வெற்றி பெற்றார். இவரைப் பற்றி மிக உயர்வாக எழுதியுள்ள பெரியோர்கள் இவரைச் "சொற்சோர்விலாத சோமையாஜுலு" என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தியாகிகள் வரலாற்றைத் தொகுக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. அப்படி திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதி தியாகிகள் வரலாற்றினைத் தொகுத்து வெளியிட்டார் நா.சோமையாஜுலு அவர்கள். 1972இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தினைத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதையும் இந்த நாட்டுக்காகச் செலவிட்ட தியாகி நா.சோமையாஜுலு அவர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீங்கி அமரரானார். வாழ்க நா.சோமையாஜுலு புகழ்!

4 comments:

  1. சோமையாஜுலுவும் என் தந்தையாரும் நல்ல நண்பர்கள்.இருவரும் நெல்லைச் சீமைக்காரர்கள்.ஒரு கால கட்டத்தில் நெல்லை காங்கிரஸ் என்றால் சோமையாஜுலு என்று இருந்தது.1985ல் என் தந்தையார் இறக்கும் வரை சோமையாஜுலுவுடன் கடிதத் தொடர்பு வைத்து இருந்தார்.கடைசி காலத்தில் தற்கால சுய ந‌ல‌ அரசியல் வாதிகள் அவருக்குக் கொஞ்சம் அவப் பெயரை ஏற்படுத்தினர்.

    ReplyDelete
  2. "சொற்சோர்விலாத சோமையாஜுலு"
    தியாகச் செம்மலை
    அறிந்து வியக்கிறேன்.

    ReplyDelete
  3. விக்கிப்பீடியாவில் எஸ். என். சோமையாஜுலு அவர்களை பற்றிய கட்டுரை http://tawp.in/r/2ygy துவக்கியுள்ளேன்.

    ReplyDelete
  4. விக்கிப்பீடியாவில் எஸ். என். சோமையாஜுலு அவர்களைபற்றிய கட்டுரை http://tawp.in/r/2ygy துவக்கியுள்ளேன்.

    ReplyDelete

Please give your comments here