Followers

Thursday, February 10, 2011

கம்பன் அடிப்பொடி சா.கணேசன்


கம்பன் அடிப்பொடி சா.கணேசன்

காந்தியடிகள் 1927இல் காரைக்குடிக்கு வந்தபோது அவரைத் தமது "கற்பக நிலையத்துக்கு" அழைத்து பணியாற்றும் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் சா.கணேசன். அந்த நாள் முதல் அரசியலில் ஆர்வம் காட்டிய சா.கணேசன் 1936க்குப் பிறகு தேசியத்தில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

உலகத்தையே அதிசயத்தில் ஆழ்த்திய காந்தியடிகளின் தனிநபர் சத்தியாக்கிரக அறப்போர் மதுக்கடை மறியலாக கண்காட்சி என்ற பெயரில் நடந்த சூதாட்டக் கள மறியலாக ஆங்காங்கே பரிணமித்தபோது சா.கணேசன் 1941இல் காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் அந்த மறியல்களை நாடறிய நடத்தி காரைக்குடியிலிருந்து தன்னந்தனியராய்ப் பாதயாத்திரையாகச் சென்னைக்குச் சென்றார். வழியில் ஏற்பட்ட துன்ப அனுபவங்கள் அவரின் சுதந்திர தாகத்தை மேலும் தூண்டின. அவரது உடலின் ஒவ்வொரு ரத்த நாளமும் ராணுவ வீரனைப் போன்ற யுத்த எதிர்ப்பைக் காட்டிக் கொடுத்ததால் அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதன் பயனாய் நான்கு மாதம் உத்தரப் பிரதேசம் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கச் சூறாவளி எங்கும் பரவியது. அதனால் அந்நிய ஆதிக்கத்தின் அடக்குமுறை சூடேறிக் கனன்று கொண்டிருந்த உச்சமான காலம் அது. ஆகஸ்ட் போராட்டம் எனப் பிரகடனப் படுத்தப்பட்ட அந்தச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மறைந்திருந்தே வாலி மீது அம்பு தொடுத்த ராமனைப் போல தலைமறைவாயிருந்தே சா.கணேசன் போராட்டத்தை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.

கணேசனாரை எங்கு கண்டாலும் சுடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது பிரிட்டிஷ் அரசு. மாறு வேஷம் தரித்துக் கொண்ட நிலையில் பதுங்கிய்ப் பாய்ந்து கொண்டிருந்த சா.கணேசனின் இல்லம் அந்நிய அரசின் அநியாய ஜப்தியால் சின்னா பின்னப்பட்டது. அன்றைய மதிப்பில் மூன்று லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால் ஜப்தி இரகசியத்தை முன்பே தெரிந்து கொண்ட சா.கணேசன் நாம் அரிதாக முயன்று சேகரித்து வைத்திருந்த 5000 புத்தகங்களைக் கொண்ட நூல் நிலையத்தை மட்டும் காமதகனத்தில் தீக்கிரையாகாத கிளியைப் போல உறவினர்கள் நண்பர்கள் மூலமாகக் காப்பாற்றிக் கொண்ட திறன், அவர் கம்பன் அடிப்பொடியாக இலக்கிய உலகில் நிலைத்த புகழ் பெருமை பாராட்டு முதலியவையெல்லாம் பெறுவதற்குரிய அச்சாரத்தைத் தந்தது என்றால் அதில் மிகையில்லை.

இப்படி அஞ்ஞாதவாசம் போல் ஓராண்டு தலைமறைவாக இருந்தவர் மாறு வேடத்தில் மறைந்தே ரேக்ளா வண்டியில் சென்னை வந்தார். தம் பால் பரிவும் பாசமும் மிக்க நண்பர்களான மெ.நா.சித.சிதம்பரம் செட்டியார், எம்.என்.எம்.மெய்யப்பன், கி.நாராயணன் செட்டியார் போன்றவர்கள் காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவதைக் கேட்டறிந்து கண்ணீர் மல்கி கசிந்துருகினார். தம் அரசியல் குருவான ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் வேடம் கலைந்து வெளியே வந்து சென்னையில் காவல் துறையினரிடம் சரணடைந்து இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றார். சிறையிலிருந்த செல்வராக வெளியேறிய வீரத் தழும்பின் அரசியல் அடையாளம் தான் அவரைச் சட்டை அணியாத சா.கணேசனாகக் கண்டு கொண்டது உலகம்.
= தெ. முருகசாமி. நன்றி: தினமணி சுதந்திர பொன்விழா மலர்.

1 comment:

  1. கம்பன் அடிபோடியாரைப் பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete

Please give your comments here