Followers

Saturday, July 23, 2011

மாடசாமி பிள்ளை


மாடசாமி பிள்ளை

யார் இந்த மாடசாமி? திருநெல்வேலி சதி வழக்கில், கலெக்டர் ஆஷ் கொலை சம்பந்தமாகத் தேடப்பட்டவர். வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தேசபக்தர். நெஞ்சுரம் மிக்கவர். ஆஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவான இவர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் போய்விட்டது. அவர் இருக்குமிடம் மட்டுமா தெரியாமல் போய்விட்டது. அவர் யார் என்பதே இன்றைக்குப் பலருக்குத் தெரியாமல் வரலாற்றில் முக்கிய இடம்பெறாமல் போய்விட்ட தியாகி அவர்.

ஆஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் இவர் காணாமல் போய்விட்டதாகப் போலீசார் சொல்லி வந்தனர். இவரது ஊர் ஒட்டப்பிடாரம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.பிறந்த ஊர். இந்தப் புனித பூமியில் பிறந்த மாடசாமி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வன்முறைப் புரட்சியில் ஈடுபட்டிருந்தது வியப்புக்குரியது அல்ல.

வீரர் மாடசாமி திரு வ.உ.சியின் தோழராகவும், சீடராகவும் இருந்து சட்டத்திற்குட்பட்ட முறையில் நடந்த சுதேசிக் கிளர்ச்சியில் பங்கு கொண்டவரும் ஆவார். தலைமறைவான பிறகு அவர் என்ன ஆனார்? செவி வழிச் செய்தியாக இவர் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி புதுச்சேரிக்குச் சென்று விட்டதாகச் சிலர் தெரிவித்தனர். அங்கு தங்கியிருந்த காலத்தில் இவருக்கு வ.வெ.சு.ஐயருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மாடசாமி குறித்து போலீசாரின் இரகசியக் குறிப்பு கூறும் செய்தி: "தூத்துக்குடி போலீஸ் துணை சுப்பரின்டெண்ட் ஜான்சன் தலைமறைவாகிவிட்ட மாடசாமிப் பிள்ளையைப் பிடிக்க எத்தனையோ முயன்றும் முடியவில்லை. அவரது வீட்டிலுள்ள பொருட்களையும் அவருக்குச் சொந்தமான நிலங்களையும் பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியில் இவர் இருக்கிறார் என்ற செய்தி அறிந்த பிரிட்டிஷ் போலீசார் அவரை அங்கும் சென்று வேட்டையாடத் தயாராகினர். இந்தச் செய்தியறிந்த மாடசாமி அங்கிருந்து தப்பி சிங்கப்பூர் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு சென்ற பிறகு அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார் என்கிற விஷயங்கள் எல்லாம் மர்மமாகவே இருந்து வருகின்றன. ஒரு சமயம் அவரைக் கொழும்புவில் பார்த்ததாகச் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இரும்புப் பிடியிலிருந்து தப்பி உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் காலமாகி யிருக்க வேண்டும். இப்படிப்பட்ட தியாகிகளின் வாழ்க்கையை என்னவென்பது? எப்படிப் போற்றுவது?

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்கள் "விடுதலைப் போரில் தமிழகம்" எனும் நூலில் மாடசாமி குறித்து எழுதியிருக்கிறார். அவர் சொல்கிறார், "மாடசாமி கோழைத்தனத்தால் தலைமறைவாகி விடவில்லை. தண்டனைக்குப் பயந்தும் தப்பியோடவில்லை. அந்நாளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியோடி, புரட்சிச் செயல்களில் ஈடுபடுவது புரட்சியாளரின் வேலை திட்டமாக இருந்தது. காந்திய சகாப்தம் பிறந்த பின்னர்தான் இந்த முறை பெருமை தரத் தக்கதல்ல என்று தேசபக்தர்களால் கருதப்பட்டது".

திரு மாடசாமியைப் பற்றி அவர் சாந்திருந்த 'அபிநவ பாரதம்' எனும் புரட்சி இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்து நடத்தி வந்தவரும், ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்கில் 7 ஆண்டுகள் கடும்காவல் தண்டனை பெற்றவருமான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுவதையும் ம.பொ.சி. தனது நூலில் குறிப்பிடுகிறார்.

"எனது புரட்சிப் படையில் மாடசாமி பிரதானமானவர். மகா தீரர்; சூரர்; வீரர்! இவரைப் போல உறுதியும் துணிவும் மிகுந்தவரைக் காண்பது அரிது. இவர் சகலகலாவல்லவர். எந்த நிமிஷத்திலும் எந்த வேஷத்தையும் போட்டுத் திறமையுடன் செயல்பட வல்லவர். போலீசாரைப் பல தரம் ஏமாற்றியுள்ளார். நெருங்கியவர்களைத் தவிர வேறு யாராலும் இவரை அடையாளம் காண இயலாது. அவ்வளவு சாமர்த்தியசாலி. ஒட்டப்பிடாரம்தான் இவரது சொந்த ஊர். திருமணமானவர். குழந்தைகளும் உண்டு. அப்படியிருந்தும் இவர் புரட்சி வேள்வியில் குதித்து நீந்தினாரென்றால், இவரது ஆண்மையையும், உறுதியையும் என்னென்று புகழ்வது."
(இந்தியச் சுதந்திரப் போர்)

ம.பொ.சி. அவர்கள் மாடசாமியின் வரலாற்றைத் தொடர்ந்து எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி: "மாடசாமி தலைமறைவானபின் அவருடைய சொத்துக்களை யெல்லாம் நீதிமன்றத்தின் ஆணைப்படி அரசு பறிமுதல் செய்துவிட்டது. அதனால், கணவனைப் பிரிந்து அவரது மனைவி தம் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன பாடுபட்டாரோ? தேசபக்த மாவீரனுக்கு மக்களாகப் பிறந்த பாவத்திற்காக அந்தக் குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் எவ்வளவு காலம் அல்லலுற்றனவோ? அவர்களது தியாக வாழ்வுக்குத் திரை விழுந்து விட்டதே!"

வாழ்க தியாகசீலர் மாடசாமிப் பிள்ளை புகழ்!!

1 comment:

Please give your comments here