Followers

Wednesday, November 28, 2012

கோமதிசங்கர தீட்சிதர்

கோமதிசங்கர தீட்சிதர்

தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் பெருந்தலைவர்களுள் திரு கோமதிசங்கர தீட்சிதருக்குத் தனியிடம் உண்டு. மிகவும் மரியாதைக்குரியவராகவும் அவர் கருதப்பட்டார். காந்தியம் எனும் தத்துவத்துக்கு ஓர் வடிவம் கொடுத்ததைப் போல தன்னை உருவாக்கிக் கொண்டவர் 'தாத்தா' என்று பலராலும் அழைக்கப்பட்ட இந்த கோமதிசங்கர தீட்சிதர்

கோமதிசங்கர தீட்சிதர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் பிறந்தவர்..பின்னர் சேரன்மாதேவிக்குக் குடிபெயர்ந்தவர். இளம் வயதிலேயே திரு நெல்வேலி மாவட்டத்தில் அப்போது வேகமாகப் பரவிய தேசபக்தி உணர்வின் காரணமாக தீட்சிதரும் சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மகாத்மா காந்தியின் ஆணைப்படி சற்றும் மகாத்மாவின் ஆணையிலிருந்து பிறழாமல் தன்னையொரு காந்தியத் தொண்டனாக ஆக்கிக் கொண்டார். எப்போதும் தூய கதராடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, எங்கு போவதென்றாலும் நடந்தே போவது என்ற கொள்கையைக் கடைசி வரை கடைபிடித்து வாழ்ந்தவர் தீட்சிதர்.

சுதந்திரத்துக்காகப் போராடிய காலத்தில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய இவர் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை சட்டசபையில் மூன்று முறை உறுப்பினராக இருந்திருக்கிறார். அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து இவர் 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றவர் இவர். தமிழக அரசியலில் திரு காமராஜ் தலைமையை ஏற்றுக் கொண்டு உண்மையான காங்கிரஸ்காரராக திரு காமராஜ் காலத்திலும், பின்னர் அமைந்த திரு எம்.பக்தவத்சலம் அவர்கள் காலத்திலும் இவருடைய பங்களிப்பு சட்டசபையில் குறிப்பிடத்தக்கதொன்று. 1967 தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் தோற்று அந்த ஆண்டில் தி.மு.க.முதன்முறையாக அரசு அமைத்தபோதும், இவர் போட்டியிட்ட அம்பாசமுத்திரத் தொகுதி மக்கள் இவர்பால் காட்டிய நம்பிக்கை, அன்பு காரணமாக இவர் அபாரமான வெற்றியைப் பெற்றார்.

எந்த பதவிக்கோ அல்லது தனது பதவியைக் கொண்டு எந்தவிதமான ஆதாயங்களுக்கோ ஆசைப்படாமல் ஒரு துறவியைப் போல் வாழ்ந்தவர் தீட்சிதர். அரசாங்கத்திலாகட்டும், வெளியிலாகட்டும் தனது பதவி, அந்தஸ்து இவற்றைக் கொண்டு தனக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ எந்தவித ஆதாயத்தையும் தேடவும் இல்லை, மற்றவர்கள் தேடவும் விடவில்லை. அத்தனை கெடுபிடியான தூய வாழ்க்கையை வாழ்ந்தவர் இந்த முரட்டுக் கதருடை அணிந்த காங்கிரஸ்காரர்.

சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் தொடங்கிய பாரத்வாஜ ஆசிரமம், அவர் காலத்துக்குப் பிறகு கைமாறி இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஆளுமைக்குள் வந்திருக்கிறது. வ.வெ.சு.ஐயர் காலமான பின் இவருடைய மகன் திரு மகாதேவன் என்பவர் இங்கு மேலாளராகவும், விடுதி காப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். தேசிய பாரம்பரிய உறவு, சேவைக்காக மட்டுமே பயன்பட்டது, ஆதாயத்துக்காக அல்ல என்பது இவரது வாழ்வு காட்டுகிறது.

இவருடைய தொகுதி மக்கள் தங்கள் குறைகளுடன் இவரிடம் வந்துவிட்டால், உடனே அந்தக் குறைகளைக் களைய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வார். அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த பிரதிபலனையும் இவர் எதிர்பார்த்ததில்லை. சேரன்மாதேவியில் தாமிரவருணி ஆற்றைக் கடந்து செல்ல மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையை அங்கொரு பாலம் அமைத்து அவர்கள் சிரமத்துக்கு முடிவு கட்டினார். இவருடைய முன் முயற்சியால் கட்டப்பட்டப் பாலத்தைத் திறந்து வைக்க அப்போதைய சென்னை கவர்னர் ஜெயசாமராஜ உடையார் வந்தார். இந்தப் பாலத்தால் பயண தூரம் மிகக் குறைந்தது கண்டு மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை சட்டமன்றத்தில் இவர் பதவி வகித்த காலத்தில் சும்மா சென்று உட்கார்ந்துவிட்டு வரும் பழக்கம் இவரிடத்தில் கிடையாது. தினமும் இவருடைய பங்கேற்பு இருக்கும். அவை அத்தனையும் சட்டமன்ற ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. சட்டமன்றம் நடக்கும் நாட்களில் தினமும் செய்தித் தாட்களில் இவர் கேட்ட கேள்வி அல்லது எழுப்பிய பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். அந்த அளவுக்குத் தன்னை மக்கள் சேவையில் இணைத்துக் கொண்டவர் கோமதிசங்கர தீட்சிதர். வாழ்க கோமதிசங்கர தீட்சிதர் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here