Followers

Tuesday, May 18, 2010

திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்
68. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக பர்மா சென்று குடியேறியவர்களில் லட்சுமி அம்மாளும் ஒருவர். மகாத்மா காந்தியடிகளின் மீது அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். காந்தியப் பொருளாதாரம், காந்தியடிகளின் கதர் கொள்கை இவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பர்மாவில் இவர் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்களை ஒன்றுதிரட்டி 'கதர் சேவா சங்கம்' என்ற அமைப்பை நிறுவி, அவர்களைக் கைராட்டை மூலம் நூல் நூற்கச் செய்து அவற்றைத் துணியாக்கி அணிந்து வரத்தொடங்கினார்.

இந்தியாவிலிருந்தும் கதர் துணிகளை வரவழைத்து லாபம் இல்லாமல் கொள்முதல் விலைக்கே இந்தியர்களுக்கு விற்று கதர் அணியத் தூண்டினார். பர்மாவில் இவரது மதிப்பும் மரியாதையும் அதிகரித்து வந்தது. அந்த லட்சுமி அம்மாளுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். இவர் ஒருமுறை இந்தியா வந்தபோது அப்போது மைசூரில் தங்கியிருந்த மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய கதர் பணி பற்றி சொல்லி, கதர் நிதிக்காக காந்தியடிகளிடம் 15 ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார். லட்சுமி அம்மையாரின் கதர் பணி பற்றியும் தேசபக்தி பற்றியும் கேட்டறிந்த காந்தியடிகள் பெருமகிழ்ச்சியுற்று பேசியதோடு, கதர் இயக்கத்தில் இவ்வளவு ஆர்வம் கொண்ட நீங்கள் நன்கொடை கொடுப்பதில் மட்டும் ஏன் கஞ்சத்தனம் செய்தீர்கள் என்றார். அதற்கு அம்மையார் தன்னிடம் அவ்வளவுதான் பணம் இருக்கிறது என்று சொல்லி சமாளித்தார்.

இந்த சம்பாஷணையின் போது ராஜாஜியும் அங்கு உடனிருந்தார். காந்தியடிகள் சொன்னார், "நான் விரும்பும் நன்கொடை வேறு. நீங்கள் பணத்தைப் பற்றி சொன்னதாக நினைக்கிறீர்கள். இல்லை. உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களல்லவா, அவர்களில் ஒருவரை தேசப் பணிக்காக நீங்கள் ஏன் அர்ப்பணிக்கக்கூடாது” என்று புன்னகைத்தார். அடிகளின் கேள்வியின் பொருள் அப்போதுதான் லட்சுமி அம்மாளுக்குப் புரிந்தது.

காந்தியடிகள் இப்படிக் கேட்டதும் லட்சுமி அம்மாள் மகிழ்ச்சியடைந்தார். தேச சேவைக்கு வீட்டிற்கு ஒரு பிள்ளை என்பது போல அண்ணல் காந்தியடிகள் தன்னிடம் கேட்டது தன் ஜென்மம் சாபல்யமடைந்தது போல நினைத்தார். "பாபுஜி தங்கள் விருப்பப்படியே என்னுடைய மூன்று குமாரர்களில் ஒருவனைத் தேச சேவைக்காகத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்றார். உடனே ரங்கூனில் இருந்த தன் மூத்த மகனுக்கு கடிதம் மூலம் நடந்த விவரங்களை எழுதினார். ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருந்த அந்த மகனும் தாய் சொல்லைத் தட்டாமல் தன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியா வந்தார். அகில இந்திய சர்க்கா சங்கத்தை அடைந்து விவரங்களைக் கூறினர். திருப்பூர் சென்று அங்கு கதர் பணியினை மேற்கொள்ளுமாறு இவர் அனுப்பி வைக்கப்பட்டார். கதர் பணியோடு நாட்டுச் சுதந்திரப் போரிலும் தீவிரமாக பங்கு கொண்டார் அந்த இளைஞர் அவர்தான் பி.எஸ்.சுந்தரம் என்பவர். தியாகி கொடிகாத்த குமரன் அணிவகுத்துச் சென்று போலீசார் தடியடியில் உயிர் இழந்தாரல்லவா அந்த குழுவுக்குத் தலைமை ஏற்று நடத்திச் சென்றவர் இந்த சுந்தரம் தான்.

அன்று, திருப்பூர் குமரன் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அன்று; 10-1-1932 அன்று, குமரனை அடித்து வீழ்த்திவிட்டார்களே, என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஏன்? என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விநாடி, போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முகமது என்பவர் திடீரென இவர் மீது பாய்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கினார். பாவம் அந்த இன்ஸ்பெக்டர் அவர் மட்டும் அடிக்கிறாரே, அவரது கரங்கள் வலிக்குமே என்று கூட இருந்த கான்ஸ்டபிள்களும் தங்கள் பங்குக்குத் தாக்கினர். அவர்கள் அடித்த அடியில் சுந்தரத்தின் இரண்டு கால்களிலும் எலும்புகள் முறிந்தன. கீழே விழுந்து கிடந்த அவரை கான்ஸ்டபிள்கள் தூக்கிப் பிடித்து நிறுத்திக்கொள்ள மீண்டும் கைகள் நோகும் வரை அடித்தான் அந்த அரக்கன் முகமது. மயங்கி கீழே விழுந்தார் சுந்தரம். அத்தனை பேரிலும் அதிகமாக அடிவாங்கியவர் இவர்தான். உடலில் மொத்தம் பத்தொன்பது இடங்களில் எலும்புகள் முறிந்தன என்பது பின்னர் தெரிந்தது.

அன்றைய போரில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மூவரில் இராமன் என்பவருக்கு இதயத்துக்கு அருகில் மார்பு எலும்பு முறிந்திருந்தது. சுந்தரம் பல எலும்பு முறிவோடு கிடந்தார். தலையில் அடிபட்ட குமரன் மட்டும்தான் நினைவினை இழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். நினைவு திரும்பிய சுந்தரம் குமரன் நிலைபற்றியே திரும்பத் திரும்ப விசாரித்துக் கொண்டிருந்தார். குமரன் இறந்த செய்தி கேட்டு தன் உடல் வேதனைகளைக்கூட மறந்து அழுதார். பின்னர் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

போலீஸ் அடித்த அடியில் சுந்தரம் தன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டதை உணர்ந்தார். எலும்பு முறிவுகளால் உடல் நலம் கெட்ட போதும், காதுகள் இரண்டும் முழுவதுமாக செயல் இழந்துவிட்ட போதும் தொடர்ந்து தேச சேவையில் ஈடுபட்டு உழைத்தார் சுந்தரம். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இவரை இப்படி செயலிழக்கச் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பதவி உயர்வு பெற்று, பெருமையோடு பணி ஓய்வும் பெற்று சுகமாக வாழ்ந்தார். பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது: "மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோரிதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? தர்மமே வெல்லுமெனுஞ் சான்றோர் சொல் பொய்யாமோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெல்லாம் போதாதோ?".

சுதந்திர இந்தியாவைப் பார்க்காமலே திருப்பூர் குமரன் இளம் வயதில் தடியடியில் உயிரிழந்தான். அதே வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சுந்தரமும் இராமனும் நடைப்பிணங்களாக வாழ்ந்து சுதந்திர இந்தியாவைப் பார்த்த பின் உயிரிழந்தனர். இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் எந்த குறையுமின்றி நலமாக வாழ்ந்தனரே. இறைவா! இதுதான் உந்தன் நீதியா என்று நமக்குக் கதறத் தோன்றுகிறது.

இவர்களையெல்லாம் இன்று நாம் போற்றிப் புகழ் பாடலாம். சிலைகள் வைத்து மாலைகள் போடலாம். வாழ்க வாழ்க என்று வாய் நிறைய கோஷம் போடலாம். அவர்களது படங்களை சுவற்றில் மாட்டி பூக்களையிட்டு வணங்கி மகிழலாம். ஆனால் அவர்கள் இழந்தவற்றை, உடல் நலத்தை இந்த சுதந்திர நாடு அவர்களுக்குத் திருப்பித் தரமுடியுமா. முடியாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காவது தண்டனை கொடுக்க முடிந்ததா? அதுகூட வேண்டாம் அவர்களைப் போற்றி பதவி உயர்வு கொடுக்காமலாவது இருந்திருக்கலாம் அல்லவா. இதெல்லாம் நமது மனக்குமுறல்தான் என்றாலும் ஆண்டவர் காதுகளில் அவை விழவில்லையே! அதுதான் குறை. வாழ்க மாவீரன் சுந்தரம் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here