Followers

Thursday, January 6, 2011

தியாகி பால்பாண்டியன்

ஸ்ரீவைகுண்டம் தியாகி பால்பாண்டியன்

சிதம்பரனார் மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பெருங்குளம் எனும் கிராமத்தில் பிறந்தவர் எஸ்.பி.பால்பாண்டியன். சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்துக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனது வாழ்நாளெல்லாம் உழைத்தவர் இவர். எண்பது வயதினைக் கடந்து பெருவாழ்வு வாழ்ந்து தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர். 1935இல் தனது 18ஆவது வயதிலேயே தேச சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தொடர்ந்து 80 ஆண்டுகள் வரை நாடு, மக்கள் என்று ஊருக்கு உழைத்த தியாகப் பெருமகன் இவர்.

1942இல் நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு எனும் போராட்டம் கடுமையாக நடந்தது. அந்தப் போராட்ட காலத்தில் இவரது பங்கு பெரிதும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. வெள்ளையர் ஆட்சியை வீழ்த்த இவர் அயராது உழைத்தார். அரசாங்கம் போட்ட அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்தார். தடையை மீறி ஊர்வலம் நடத்தினார். இதற்காக ஸ்ரீவைகுண்டம் சப் ஜெயிலில் மூன்று மாத காலம் சிறை தண்டனையை அனுபவித்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுக்காக இவர் சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

1947ஆம் ஆண்டு முதல் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டிருந்த ஆதிதிராவிட மக்களின், விவசாயக் கூலிகளின் குறைகளைக் களைந்திட அயராது போராட்டத்தில் ஈடுபட்டார். 1950ஆம் ஆண்டில் தனி மனிதனாக அந்த மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். தூத்துக்குடி சப் கலெக்டர் அனுவலகத்துக்கு முன்பாக இவர் தனியொரு மனிதனாக உண்ணாவிரதம் மேற்கொண்டதை மக்கள் மறக்கமுடியாது.

ராஜாஜியின் வழிகாட்டுதலோடு மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், தென் தமிழ்நாட்டின் மற்ற பல இடங்களிலும் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் இவரும் தீவிரமாகப் பங்கு கொண்டார். நாட்டு மக்களுக்காக, குறிப்பாக விவசாயக் கூலிகளுக்காகத் தனது விளை நிலங்களையும், மனைவியின் நகைகளையும் விற்று போராடியவர் இந்த தியாக சீலர். வாழ்க தியாகி பால்பாண்டியன் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here