Followers

Friday, August 5, 2011

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு


குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு

நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரம் இந்திய நாடு முழுவதையுமே திரும்பிப் பார்க்க வைத்தது. சுதந்திரப் போரில் தமிழ்நாடு தனது வீரப்புதல்வர்களின் தியாகத்தை வெளியுலகுக்குத் தெரிவித்த நிகழ்ச்சி இது. தூக்குமேடைக்கு அருகில் சென்று மீண்ட இரு பெரும் தியாகிகளின் வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்துவிட்ட சம்பவம் இது. இதன் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

1942 ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் மெளலான அபுல்கலாம் ஆசாத் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டது. அந்த தீர்மானம்தான் புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம்.

இந்தத் தீர்மானத்தின் மீது நேருஜி பேசும்போது ஆங்கிலேயார்கள் தாமாகவே முன்வந்து மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவைவிட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்று உறுதிபட தெரிவித்தார். மகாத்மா காந்தி பேசுகையில் இந்தப் போரில் இந்திய சுதந்திரப் போர் வீரர்களுக்கு விடுத்த செய்தி "செய் அல்லது செத்து மடி" என்பதாகும்.
                                                                  statue of K.T.Kosalram
இந்த ஆகஸ்ட் தீர்மானம் நெடிய வாசகங்களைக் கொண்டது. இந்தத் தீர்மானத்தின் வாசகங்களில் காந்திஜி கடைப்பிடித்த அகிம்சை வழியில் போரிடப்போவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒளிந்திருந்த ஒரு சூட்சுமத்தை அறிவுசால் காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்து கொண்டார்கள். அந்த வாசகம் 'காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டால், காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தத்தமக்கு வழிகாட்டியாகி, எப்படிப் போராடுவது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்' என்பதுதான் அது.
                                                    Kulasekarapattinam temple Arch


1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு இந்தத் தீர்மானம் நிறைவேறியது. அன்றிரவே மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மெளலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் போன்றவர்கள் மாநாடு நடந்த ஊரிலேயே கைதாகினர். உடல் நலம் கெட்டு பாட்னாவில் இருந்த பாபு ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, மகாதேவ தேசாய் போன்றோரும் கைதாகினர்.
                                                    Kulasekarapattinam Beach

கைதான தலைவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர் பிரிட்டிஷ் ஆட்சியினர். இவர்கள் ஒரே இடத்துக்குக் கொண்டு செல்லப்படாமல் வெவ்வேறு ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
                                                    A deserted street of Kulasekarapattinam

இந்த ரகசிய நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பம்பாய் முதலான இந்திய நகரங்கள், ஊர்கள், கிராமங்கள் தோறும் மக்கள் திரண்டு பொதுவிடங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன, ரயில்வே தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன, தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டன, தபால்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அரசாங்க உயர் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் தாக்குதலுக்கு ஆளாகினர்.

                                                                    Inside a foreign jail

நாடெங்கும் பெரும் கிளர்ச்சி உண்டாகியது. அருணா ஆசப் அலி போன்ற பெண் தொண்டர்கள் சாகசங்களில் ஈடுபட்டனர். கைதாகாமல் வெளியில் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், அச்சுத் பட்டவர்தன், அசோக் மேத்தா, ராம் மனோஹர் லோஹியா போன்ற சோஷலிஸ்ட்டுகள் தலைமையேற்று போராட்டத்தை வலிமைப் படுத்தினர்.

நாடெங்கும் தொண்டர்களே தலைமையேற்று தத்தமக்குத் தோன்றியபடி போராடத் தொடங்கினார்கள். இந்திய சுதந்திரப் போர் தொடங்கிய நாளுக்குப் பிறகு முதன் முதலாக இயமம் முதல் குமரி வரைய்ல் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஒரு மக்கள் இயக்கமாக நடத்திய போர் இந்த ஆகஸ்ட் புரட்சிப் போர்.
                                                                   Prisoners

பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்றிருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சஞ்சீவி ரெட்டி, சத்தியமூர்த்தி, பக்தவத்சலம் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் கைதாகினர். பெருந்தலைவர் காமராஜ் சிறிது காலம் தலைமறைவாகத் திரிந்து போராட்ட உத்திகளை வகுத்துத் தொண்டர்களுக்கு அறிவித்துவிட்டுத் தாமாகவே போலீசில் சரணடைந்தார்.
                                                              A prisoner inside jail

தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கோவையில் சூலூர் விமான நிலையம் தீப்பற்றி எரிந்தது. புகளூரில் ரயில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டு சரக்கு ரயில் தடம் புரண்டது. தேவகோட்டையில் தியாகிகள் கைதாகி அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சிறை உடைக்கப்பட்டது. திருவையாற்றில் முன்சீப் கோர்ட், பதிவாளர் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது, சீர்காழியில் உப்பனாறு பாலத்துக்கு வெடிவைக்க முயன்றதாக இளைஞர்கள் சிலர் கைதாகினர்.
                                                      Congress Volunteers in an agitation

காங்கிரஸ் தொண்டர்கள் தவிர, இந்தப் போரில் பொதுமக்களும் பெருமளவில் பங்கு கொண்டனர். கட்சிகளுக்குள் இருந்த வேற்றுமைகள் மறைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நாடே அல்லோலப் பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் போரில் முன்னிலை வகித்த திருநெல்வேலியின் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
                                                               Preparing the gallows

நெல்லை அதிக அளவில் சுதந்திரப் போர் வீரர்களை அளித்த பிரதேசம். அங்கு தொண்டர்கள் கூடி திருநெல்வேலி பிரதேசத்தை சுதந்திர பூமியாகப் பிரகடனம் செய்ய முயன்றனர். அதற்காக வீரர்கள் ஒன்றுகூடினர். இந்த ரகசியக் கூட்டத்தில் கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ்.பெஞ்சமின், எம்.எஸ்.செல்வராஜன், சுந்தரலிங்கம், த.தங்கவேல், நாராயணன், ஆர். செல்லதுரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு "சுதந்திர சேனை" என்ற பெயரில் ஒரு படையை அமைத்தனர்.
                                                                                Rajaji

1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி. ஆறுமுகநேரியில் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு ரகசியக் கூட்டம் நடந்தது. அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த ஊர்களிலிருந்தெல்லாம் தொண்டர்கள் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தங்கவேல் நாடார் என்பவர் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பம்பாய் காங்கிரசின் தீர்மானம் விளக்கப்பட்டது. கே.டி.கோசல்ராம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூடும்படியும், அப்போது நாம் என்ன செய்ய வேண்டு மென்பதைச் சொல்வதாகப் பேசினார். தொண்டர்கள் அவர் அறைகூவலை ஏற்று உறுதிமொழி தந்தனர்.
                                                                      Rajaji

ஆகஸ்ட் 12. ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூட்டம் நிரைந்து வழிந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் கே.டி.கோசல்ராம் பேசினார். இறுதியில் "அனைவரும் உப்பளம் நோக்கிப் புறப்படுங்கள்" என்று உத்தரவிட்டார். கூட்டமும் அங்ஙனமே அவரைப் பின் தொடர்ந்தது.

அங்கு உப்பளத்தில் அமர்ந்து கோசல்ராம் அமைதியாக சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். மக்களும் அவரைப் பின்பற்றினர். ஆயிரக்கணக்கானோர் அப்போது கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதை விட்டுவிட்டு போலீஸ் அவர்களை பயங்கரமாகத் துன்புறுத்தத் தொடங்கினர். நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்பட்டன. தலையிலும் மார்பிலும் ரோமங்களைப் பிடுங்கி அலற விட்டனர், மிருகங்களை அடிப்பது போல தொண்டர்களைத் தாக்கினர்.

அவர்கள் அனைவரும் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான பிறகு தொண்டர்கள் போலீசின் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு பதுங்கி விடவில்லை. மாறாக செப்டம்பர் முதல் தேதி கோசல்ராம் தலைமையில் மறுபடி ஒன்றுகூடினர். போலீசாரின் அராஜகப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தனர்.

நாம் அகிம்சை வழியில் அவர்களை எதிர் கொள்ள முடியாது. ஆகவே தற்காப்புக்காக ஒரு தற்கொலை படையை அமைக்க முடிவு செய்தனர். உடனே தற்கொலைப் படை உருவாக்கப்பட்டது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் தொண்டர்கள் தங்கள் கைகளைக் கீறி ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.

கை விரலில் ஊசியால் குத்தி ரத்தக் கையெழுத்திட்ட பலரில் குறிப்பாக ஜி.மகராஜன், அமலிபுரம் எஸ்.பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், கொட்டங்காடு ஏ.டி.காசி, மெய்யன்பிறப்பு டி.சிவந்திக்கனி, பரமன்குறிச்சி டி.நாகமணி வாத்தியார், செட்டியார்பத்து எம்.அருணாசலம், வாழவல்லான் டி.பச்சப்பெருமாள், கொழுவைநல்லூர் வி.இரமலிங்கம் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.
                                                           Nehru, Rajaji & Patel

புரட்சிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாக வெள்ளைக்கண்ணு நாடார், வீரபாகு நாடார், துரைசாமி நாடார், வடிவேல், சுடலைமுத்து, கே.சுப்பையன் ஆகியோர் உறுதியளித்தனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு தொண்டர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரு வேறு திசைகளில் சென்றனர்.

மெய்ஞானபுரத்துக்கு ஒரு பிரிவும், சாத்தான்குளத்துக்கு மற்றொரு பிரிவும் சென்றது. மெய்ஞானபுரத்தில் அஞ்சல் அலுவலகம் தாக்கப்பட்டது. அங்கு தீ வைக்கப்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விழித்தெழுந்த ஊர்மக்கள் இவர்களைத் திருடர்கள் என்று நினைத்துத் துரத்தி வந்தனர். மாதாகோயில் மணியை அடித்து மக்களை எழுப்பினர். தேசபக்தர்களை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர்.

செய்வதறியாது திகைத்த புரட்சி வீரர்களில் ஒருவர் திடீரென்று 'வந்தேமாதரம்' என்று குரல் எழுப்ப, மற்றவர்களும் உரக்க முழங்கினர். ஆகா! வந்திருப்பவர்கள் தேசபக்தர்களாச்சே என்று ஊர்மக்கள் உணர்ந்தனர். உடனே அவர்களும் வந்தேமாதரம் முழக்கமிட்டனர்.

கூட்டத்தினர் அங்கிருந்து புறப்பட்டு குரும்பூர் எனும் ஊரின் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் தங்களிடம் நிலையத்தை ஒப்படைத்துவிட்டு ஓடிவிடும்படி கூறவே அவரும் ஓடிப்போனார்.

சாத்தான்குளம் நோக்கிப் போன புரட்சியாளர்கள் அங்கிருந்த காவல் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தைத் தன்வசப் படுத்திக் கொள்ள புரட்சிக்காரர்கள் ஒரு புதிய வழியைக் கடைப்பிடித்து ஏமாற்றி காவலர்களை லாக்கப்பில் தள்ளிப் பூட்டிவிட்டனர்.

புரட்சிக்காரர்களின் செயல் மாவட்டத் தலைமையிடத்துக்குப் போய்விடாமல் இருக்க அங்கிருந்த தந்திக் கம்பிகளை அறுத்தனர். ஆனால் செய்தி நெல்லை கலெக்டர் எச்மாடி என்பவருக்குப் போயிற்று. அவர் மலபார் ஸ்பெஷல் போலீசாருடன் சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு விரைந்தார்.

தங்களைப் பிடிக்க மலபார் போலீஸ் வருவதை அறிந்து புரட்சிக்காரர்கள் காட்டுக்குள் புகுந்து தலைமறைவாகினர். புரட்சித் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். புரட்சிக்காரர்கள் இதற்கெல்லாம் பயப்படவில்லை. துப்பாக்கிகள், குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டனர்.

மலபார் போலீசார் ஆறுமுகநேரி, சாத்தான்குளம், திருச்செந்தூர், மெய்ஞானபுரம், குரும்பூர் முதலான ஊர்களில் முகாமிட்டிருந்தனர். புரட்சிக்காரர்கள் போலீச்சில் சிலரையும் தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வந்தனர். இந்தப் பணியில் சோஷலிஸ்ட்டான மங்களா பொன்னம்பலம் என்பவர் ஈடுபட்டார். அவர் அப்போது 18 வயதான இளைஞன்.

1942 செப்டம்பர் 29ஆம் தேதியன்று நள்ளிரவு புரட்சி வீரர்களைக் கொண்ட ஒரு கூட்டம் குலசேகரப்பட்டினம் உப்பளம் நோக்கிச் சென்றது. இந்த குலசேகரப்பட்டினம் கன்னியாகுமரியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர். அவ்வூர் உப்பளத்துள் நுழைந்த தொண்டர்களைப் போலீஸ் தாக்கத் தொடங்கியது. தொண்டர்களும் திருப்பித் தாக்கினர். குறைவான எண்ணிக்கையில் இருந்த போலீசாரைக் கட்டிப் போட்டுவிட்டு தொண்டர்கள் அவர்களது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

1942 செப்டம்பர் 30 விடியற்கால வேளை. பொழுது இன்னம் முழுமையாக புலரவில்லை. இருள் மண்டியிருந்தது. நான்கு மணியிருக்கலாம். தொண்டர்கள் உற்சாகத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த முஸாபரி பங்களா வாயிலில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி குடிபோதையில் கையில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு இவர்களை எதிர் கொண்டான்.

கூட்டத்தில் வந்து கொண்டிருந்த பி.எஸ்.ராஜகோபாலன் எனும் இளைஞரின் நெஞ்சைக் குறிபார்த்து அந்த லோன் துரை தன் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு சுட்டுவிட முயற்சி செய்தான். அவன் இருந்த நிலை, துப்பாக்கியைப் பிடித்திருந்த சூழல், இவன் ராஜகோபாலனைச் சுட்டுவிடுவானோ என்று அனைவரும் பதறினர். அப்போது உடன் வந்த பல தொண்டர்களில் ஒருவர் தன் கையிலிருந்த வேல்கம்பை உயர்த்தி அந்த லோன் துரையின் மார்பில் பாய்ச்சினார். அதே நொடியில் உடன் வந்த தொண்டர்கள் அரிவாளைக் கொண்டும், வேல் கம்புகளாலும் அவன் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டனர்.

லோன் துரை கீழே சாய்ந்தான். இரத்த வெள்ளத்தில் பிணமானான். பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி அவன் உடலில் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாகத் தெரிந்தது.

லோன் துரையின் மரணம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிவிட்டது. கே.டி.கோசல்ராம் உட்பட சுமார் 500 பேர் மீது வழக்கிப் பதிவு செய்யப்பட்டது.

குரும்பூர் ரயில் நிலையம் பறிக்கப்பட்டது, மெய்ஞானபுரம் தாக்கப்பட்டது குறித்து "குரும்பூர் சதி வழக்கு" பதிவாகியது.

லோன் துரையின் கொலை "குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு நாடு முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

விசேஷ அதிகாரங்களைக் கொண்ட சிறப்பு கோர்ட் வழக்கை விசாரித்தது. இராஜகோபாலன், காசிராஜன், பெஞ்சமின், மங்களா பொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம், நாராயணன் ஆகிய 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யர், ஐ.சி.எஸ்.

பிரபல வழக்கறிஞர் டேனியல் தாமஸ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வழக்கறிஞர் குழு குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆகி வாதிட்டனர்.

1942 அக்டோபர் மாதம் வழக்கு தொடங்கியது. 1943 பிப்ரவரி ஆறாம் தேதி முடிவடைந்து, எட்டாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யருக்கு தேசபக்தர்கள் மீது என்னதான் அப்படி கோபமோ தெரியவில்லை. தேசபக்தர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கில் முதல் எதிரி காசிராஜனுக்கும், இரண்டாவது எதிரி ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அதோடு மூன்று மூன்று ஜன்ம தண்டனை (60 ஆண்டுகள் சிறை) 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். ஆக மொத்தம் தூக்கு தவிர 74 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஏ.எஸ்.பெஞ்சமின் இந்த வழக்கில் மூன்றாவது எதிரி. இவருக்கு 63 ஆண்டுகள் சிறை. இது தவிர மெய்ஞானபுரம் வழக்கில் ஆயுள் தண்டனை (20 ஆண்டுகள்) குரும்பூர் ரயில் நிலைய வழக்கில் 17 ஆண்டுகள், ஆக மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை.

மற்ற எதிரிகளான செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜென்ம தண்டனை. ஏனையோருக்கு 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் தீர்ப்பை வாசித்து முடித்தவுடன் முதல் இரு எதிரிகளான காசிராஜனும், இராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்து சிரித்துக் கொண்டு கேட்டனர், "நீதிபதி அய்யா அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரு ஜன்மம் ஆனால் தாங்கள் எங்களுக்கு மூன்று ஜன்ம தண்டனையும், அதுதவிர தூக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறீர்கள். தண்டனையை நாங்கள் எப்படி அனுபவிப்பது, தூக்குக்குப் பிறகு ஜன்ம தண்டனைகளா அல்லது அதற்கு முன்பாகவா?" என்றனர். நீதிமன்ற வளாகம் துக்கத்தையும் மீறி சிரிப்பலைகளில் மிதந்தது.

இந்த கலகலப்புக்கிடையே ஒரு குரல், "இது தெரியாதா? இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவை அனைத்திலும் வரிசையாக இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விடமாட்டார்" என்று கேட்டது. மறுபடியும் ஒரே சிரிப்பலை.

மதுரை சிறைச்சாலை இவர்களின் இருப்பிடமாயிற்று. அப்போது மதுரை சிறையை உடைத்து இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர பசும்பொன் தேவர் ஐயா அவர்கள் ஒரு முயற்சியில் இறங்கினார். அந்த ரகசியம் எப்படிக் கசிந்ததோ தெரியவில்லை கைதிகள் அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர்.
தளபதி கே.டி.கோசல்ராம் ஒன்றரை ஆண்டு தண்டனை பெற்றார்.

காசிராஜன், இராஜகோபாலன் இருவரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இருவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டனர். இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் இவர்கள் இருவருக்கும் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இருவருக்கும் சுமார் 20 வயதுதான் இருக்கும். ராஜாஜி அவர்கள் பொது மருத்துவமனைக்குச் சென்று இவர்கள் இருவரையும் உடல்நலம் விசாரித்தார்.

இந்த வழக்கு நடந்து வந்த காலத்தில் குற்றவாளிகளின் வயது காரணமாகவும் தீர்ப்பின் கடுமை காரணமாகவும் தமிழக பத்திரிகைகள் இவர்களுக்கு ஆதரவாக எழுதி வந்தது. 'தினமணி' பத்திரிகையும் வேறு பல பத்திரிகை எழுத்தாளர்களும் இவர்களுக்கு ஆதரவாக எழுதி மக்கள் மத்தியில் இவர்கள் பால் அனுதாபத்தை உருவாக்கினர். ராஜாஜி அவர்கள் இவர்களுடைய விடுதலைக்காக பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

சென்னை உயர்நீதி மன்றம் இவர்கல் அப்பீலைத் தள்ளுபடி செய்தது. மறுபடி ரிவிஷன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இவ்விருவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று பல்லாயிரக் கணக்கில் தந்திகள் அரசாங்கத்துக்குப் பறந்தன.

உச்ச நீதிமன்றத்திலும் இவர்களது மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

இறுதி முயற்சியாக பிரிட்டனில் இருந்த பிரிவி கெளன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். தேசபக்தர் இருவர் சார்பிலும் பிரபல ஆங்கிலேய வழக்கறிஞர் பிரிட் என்பார் வாதிட்டார். ஏற்பாடு செய்து உதவியவர் ராஜாஜி.

லோன் எனும் ஆங்கிலேயரைக் கொன்ற குற்றவாளிகள் என்பதால் இவர்களிடம் அந்த நீதிபதிகளும் இரக்கம் காட்டவில்லை. இவர்களது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தூக்கு தண்டனை உறுதியாயிற்று இவ்விரண்டு தேசபக்தர்களுக்கும்.

அந்தக் காலகட்டத்தில் இந்திய சுதந்திரம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய வைசிராய்க்கு ஒரு கருணை மனு அனுப்பப்பட்டது. வைசிராய் அவர்களை நேரில் சந்தித்து ராஜாஜி அவர்கள் செய்த முறையீடு வேலை செய்தது. தூக்கு தண்டனை இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

அதற்குள் 1946இல் இந்திய சுதந்திரம் நெருங்கி வந்துவிட்ட சமயம், சென்னை மாகாணத்தில் ஒரு இடைக்கால சர்க்கார் உருவாகியது. அதற்கு பிரபல காங்கிரஸ்காரரும், மிகப் பெரிய வழக்கறிஞருமான ஆந்திர கேசரி என வழங்கப்பட்ட டி.பிரகாசம்காரு முதலமைச்சராக வந்தார். அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் நல்ல காரியம் சிறையில் வாடிய தேசபக்தர்களையெல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார். கூட்டத்தோடு தூக்குமேடை காசிராஜனும், தூக்குமேடை ராஜகோபாலனும்கூட வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர்.

இவர்கள் தவிர கே.டி.கோசல்ராம் உள்ளிட்ட மற்ற பல தேசபக்தர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இப்படியாக ஒரு வீர காவியம் வரலாற்றில் எழுதப்பட்டு புகழ்பெற்றது. அதுமுதல் இவ்விரு சுதந்திரப் போராட்ட வீரர்களையும் "தூக்குமேடை ராஜகோபாலன்", "தூக்குமேடை காசிராஜன்" என்று வழங்கலாயினர்.

இந்தச் சுதந்திரப் பொன்னாளில் இவர்கள் போன்ற மாவீரர்களைப் போற்றி வணங்குவோம். அப்போதுதான் இவர்களைப் போன்ற தன்னலமற்ற தியாகிகள் இந்த மண்ணில் தோன்றுவார்கள். வாழ்க குலசேகரப்பட்டினம் தியாகிகள் புகழ்!!












Sunday, July 31, 2011

சுதந்திர தின வாழ்த்து


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!! வந்தேமாதரம்!!!

64ஆம் ஆண்டு சுதந்திர நாளில் ஓர் உறுதிமொழி ஏற்போம். ஊழலை ஒழிப்போம். ஊழல் வாதிகளை உதறித் தள்ளுவோம். உலகத்து நாடுகளுக்குத் தலைமை ஏற்போம். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு. வந்தேமாதரம்!

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?

எண்ணமெலாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

தர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்!
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம் கேட்டால்
எம்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?

இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்று கொடு வழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்
ஓயும் முன்னர் எங்களுக்கிவ் ஓர் வரம் நீ நல்குதியே.
***

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவு உற்றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.
***

-- மகாகவி சுப்பிரமணிய பாரதியார

Monday, July 25, 2011

வேலூர் சிப்பாய்கள் புரட்சி


வேலூர் சிப்பாய்கள் புரட்சி

1857இல் வட இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வேலை செய்த இந்திய சிப்பாய்களின் கலவரம் மிகப் பிரபலமானது. அதை வீர சவார்க்கர் முதல் பல சரித்திர ஆசிரியர்களும் முதல் சுந்ததிரப் போர் என்கின்றனர். அதற்கும் முன்னதாக தமிழ் நாட்டில் வேலூரில் சிப்பாய்கள் செய்த கலவரம் ஒன்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

தென் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியார் சிறுகச் சிறுகத் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டு வந்த நிலையில், தெற்கே பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மு நாயக்கரும், சிவங்கைச் சிங்கங்களான பெரிய மருது சென்ன மருது ஆகியோர் தூக்கில் போடப்பட்டு இறந்த பிறகு கிழக்கிந்திய கம்பெனி தென்னகத்தில் காலூன்றிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தது. சிவகங்கைப் போர் முடிந்தது. பெரிய மருதும் சின்ன மருதும் கொல்லப்பட்டு கொடுமையாக அவர்களது தலை துண்டிக்கப்பட்டு மக்கள் பார்வையில் படும்படி நட்டு வைக்கப்பட்டது. தென்னகம் முழுவதும் கம்பெனியின் அதிகாரத்திற்குட்பட்டு இருந்தது.

இந்த சூழ்நிலையில் இருட்டில் திடீரென்று தோன்றிய பளிச்சிடும் மின்னல் போல வேலூரில் ஒரு புரட்சி தொடங்கியது. 1806ஆம் வருஷம் வேலூரில் நடந்த நிகழ்ச்சி குறித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூறும் வரலாற்றை இப்போது பார்ப்போம்.
                                                    Vellore Fort - Another view
கோட்டையில் இளவரசர்கள்.

"வேலூர் நகரத்தில் சுற்றிலும் அகழிகளைக் கொண்ட மிகப்பெரிய கோட்டை ஒன்று இன்றும் இருந்துவரக் காண்கிறோம். ஆற்காட்டு நவாபின் ஆட்சியில் இருந்த இந்த கோட்டையானது கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கைகளுக்கு மாறியது. இதன் விளைவாக மைசூர் போரில் கம்பெனியாரிடம் தோல்வியுற்று மாண்டுபோன மாவீரன் திப்பு சுல்தானின் மக்கள் பிரிட்டிஷ் படைகளால் கைது செய்யப்பட்டு இந்த வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஏதோ ஒருவர் அல்லது இருவர் அல்ல. பதெனெட்டு பேர். ஆம்! ஆண் மக்கள் பன்னிருவர், பெண் மக்கள் அறுவர். இவர்களில் ஆண் மக்களில் இருவர்க்குத் திருமணம் ஆகியிருந்தது. இவர்களையும் சேர்த்து திப்புவின் குடும்பம் முழுவதையும் வேலூர் கோட்டையிலே குடியமர்த்தியது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. அவர்களுக்குத் தேவைப்படும் பணியாட்களையும் அமர்த்திக் கொடுத்து, நெருங்கிய சுற்றத்தாரையும் அவர்களுக்குத் துணை சேர்த்துக் கொடுத்தது. மாற்றான் மக்களாயினும் அவர்களுடைய சுதந்திரத்தைப் பறித்துக் கைது செய்திருப்பினும் அவர்களை மரியாதையாக நடத்தினர் கம்பெனியார்.

வெள்ளையர்களும், இந்தியர்களுமான ராணுவத்தினர் வேலூர் கோட்டையில் காவலுக்கு நிறுத்தப் பட்டனர். இந்திய ராணுவத்தினரிலே தமிழரும் இருந்தனர். அவர்கள் எண்ணிக்கையிலே மிகுதி என்று சொல்லப்படுகிறது.
                                                                     William Bentick
மதத்தில் தலையீடு.

இந்திய சிப்பாய்களிடம் மத ரீதியான மாறுதலை ஏற்படுத்த கம்பெனி முயன்றது. காதில் கடுக்கன் அணிவது தமிழர் வழக்கம். வேலூர் கோட்டையிலிருந்த சிப்பாய்களிலும் பலர் கடுக்கன் அணிந்திருந்தனர். அவர்கள் தங்கள் காதணிகளைக் கழற்றிவிட வேண்டுமென்று வெள்ளை ராணுவ அதிகாரிகள் ஆணை பிறப்பித்தனர். வழக்கமாகத் தலையில் அணிந்திருந்த குல்லாயிலும் மாறுதல் செய்யப்பட்டது. தோலால் ஆன காலணியும் வழங்கப்பட்டது. இந்த மாறுதல்களெல்லாம் தமிழினத்தைச் சார்ந்த சிப்பாய்களுக்குப் பிடிக்கவில்லை. அரை நூற்றாண்டுக்குப் பின், மத உணர்ச்சியைத் தாக்கக்கூடிய வகையில் இந்து சிப்பாய்களிடம் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட கம்பெனி ஆட்சி மாறுதல்களைத் திணித்ததால்தான் வடபுலத்தில் சிப்பாய்ப் புரட்சி தோன்றியது. அதற்கு முன்மாதிரியாக இருந்தன வேலூர் சிப்பாய்களிடம் வெள்ளை ராணுவ அதிகாரிகள் திணித்த மாறுதல்கள். இந்த மாறுதல்களை எதிர்த்த சிப்பாய்களில் பலரைக் கைது செய்து, அவர்களைச் சென்னைக்கு அனுப்பி அங்கே அவர்களுக்குக் கசையடித் தண்டனை வழங்கப்பட்டது.

நள்ளிரவில் பூத்த புரட்சி!

இந்தக் கொடுமை வேலூரிலே தங்கியிருந்த சிப்பாய்களிடையே பழிவாங்கும் உணர்ச்சியை உண்டாக்கியது. வேலூர்க் கோட்டையில் காவலில் வைக்கப்பட்ட மைசூர் இளவரசர்களும் சிப்பாய்களிடையே புரட்சியைத் தூண்டியிருக்க வேண்டும். கோட்டைக்கு வெளியே வேலூர் நகரில் வாழ்ந்த சுதந்திர உணர்வுடைய தமிழ் மக்களோடும் கோட்டையிலிருந்த புரட்சி மனம் படைத்த சிப்பாய்களும் இரகசியத் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.

1806ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதியன்று இரவு பிரிட்டிஷ் ராணுவத்தைச் சார்ந்த தளபதிகள் சிலர் கோட்டைக்குள்ளேயே இந்திய சிப்பாய்கள் மத்தியில் தங்கி உறங்கினர். காவலுக்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிப்பாய்களும் இரவு நேரத்தைக் கழிக்கக் கோட்டைக்குள்ளே தங்கினர். அன்று நடுநிசி கழிந்த பின்னிரவு நேரத்தில் சரியாக மூன்று மணிக்குப் புரட்சி வெடித்தது. போர்த்தளவாடங்கள் நிரப்பப்பட்டிருந்த அறையை இந்தியச் சிப்பாய்கள் கைப்பற்றினர். லெஃப்டினென்ட் கர்னல்கள் எண்மர் தங்கியிருந்த இல்லத்தையும் சிப்பாய்கள் முற்றுகையிட்டனர். தளபதிகளும் ஆங்கில ராணுவத்தினருமாக வெள்ளை நிறத்தவர் பலர் புரட்சி வீரர்களால் கொல்லப்பட்டனர். பல மணி நேரம் வேலூர்க் கோட்டைக்குள்ளே துப்பாக்கி வெடிச்சத்தம் ஓயவில்லை. பொழுது விடிந்து காலைக் கதிரவன் அடிவானத்தில் தோன்றிய பின்னரும் புரட்சி நீடித்தது. லெஃப்டினென்ட் கர்னல்களில் சிலர் எப்படியோ கோட்டையைவிட்டு வெளியேறித் தலைமறைவாயினர். கோட்டைக்குள்ளே பீரங்கிகளும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
                                                                     War Memorial
8 மணி நேரப் புரட்சி

கோட்டைக்குள்ளிருந்த சுமார் நானூறு வெள்ளை வீரர்களில் சுமார் இருநூறு பேர் வரை கொல்லப்பட்டு விட்டனர். கேப்டன் மாக்லாசலன் என்ற வெள்ளைத் தளபதி உள்ளிட்ட பலர் படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். இதற்குள் வெளியிலிருந்து வெள்ளைப் படைகள் தருவிக்கப்பட்டன. அப்படையினர் கோட்டையின் தலைவாயிலைக் கைப்பற்றி, கோட்டைக்குள்ளிருந்த படை வீரர்களை முற்றுகையிட்டனர்.

ஜூலை 9ஆம் தேதி பின்னிரவு நேரத்தில் தொடங்கிய புரட்சி 10ஆம் தேதி முற்பகல் வரை சரியாக எட்டு மணி நேரம் நடைபெற்றது. இதற்குள் காப்டன் யங், லெஃப். வுட்ஹவுஸ், கர்னல் கென்னடி ஆகிய ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆற்காட்டிலிருந்த தளபதி வெள்ளைப் படையைத் திரட்டிக் கொண்டு வேலூர் நகருக்கு விரைந்தான். ஆற்காட்டுப் படை இந்தியப் புரட்சி வீரர்களை வெற்றி கண்டு கோட்டையைக் கைப்பற்றியது. இந்தப் புரட்சியில் வேலூர் நகர மக்களிலே ஆண்களும் பெண்களுமாகப் பலர் பங்கு கொண்டனர் என்று "ஆற்காட்டு ரூபாயின் அருஞ்செயல்கள்" எனும் நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

புரட்சியில் தோற்ற இந்தியச் சிப்பாய்கள் வெள்ளையர்களால் பழிவாங்கப்பட்டனர். அவர்களில் சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கோட்டையிலும் வேலூரின் சுற்றுப் புறங்களிலும் வேட்டையாடி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியச் சிப்பாய்களை வெள்ளையர்கள் கைது செய்தனர்.

வெள்ளையனுக்கு வெற்றி

வேலூரில் நடந்த சிப்பய் புரட்சியானது எட்டு மணி நேரத்திற்குள் ஓய்ந்துவிட்டது. அதிலே இந்துக்களும், இஸ்லாமியர்களும் பங்கு கொண்டனர். இந்திய சிப்பாய்களிலேயே சிலர் துரோகிகளாக மாறி, ஆங்கில தளபதிகளிடம் புரட்சி வீரர்களின் அந்தரங்கத் திட்டத்தை முன்கூட்டி அறிவித்திருந்ததனால் வெள்ளையருக்கு வெற்றி கிடைத்தது. முஸ்தபா எனும் துரோகிக்கு இரண்டாயிரம் பகோடாக்களைப் பரிசாக அளித்து கெளரவித்தது வெள்ளை அரசு. துரோகச் செயலுக்குக் கிடைத்த வெகுமதி அது.

புரட்சிக்குப் பின்னர் அதிலே முன்னணியிலிருந்தவர்களுக்கு மரண தண்டனையும், ஆண்டுக் கணக்கில் சிறைத் தண்டனையும் கம்பெனி அதிகாரிகளால் விதிக்கப்பட்டன. வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த மைசூர் திப்பு சுல்தானின் மக்கள் கைதிகளாக இருந்த நிலையிலேயே, *கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டு அங்கே காவலில் வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் நிகழ்ந்தத்டாலும், தமிழரும் பங்கு கொண்டதாலும் மைசூர் சுல்தானின் மக்கள் சிறை வைக்கப்பட்டதன் காரணமாக எழுந்த வேலூர் புரட்சியானது சுதந்திரப் போரில் தமிழகம் ஆற்றியுள்ள பங்கிலே சிறப்பிடம் பெறுகிறதெனலாம்."

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கல்கத்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட மைசூர் புலி திப்புவின் மக்களின் கதி என்ன என்று பத்திரிகையாளர்கள் விசார்த்து அறிந்த வகையில், அவர்களின் வாரிசுகள் அங்கு குடியேறி, காலணிகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

1857 இந்திய சிப்பாய் கலகம் என்று வர்ணிக்கப்பட்ட 'முதல் சுதந்திரப் போருக்கு' முன்னதாக நடந்தது நமது வேலூர் சிப்பாய் புரட்சி. பெயர் தெரியாத அந்த வீரத் தியாகிகளுக்கு நமது வீரவணக்கங்களை அளித்திடுவோம். வாழ்க வேலூர் புரட்சி வீரர்கள் புகழ்!

Saturday, July 23, 2011

மாடசாமி பிள்ளை


மாடசாமி பிள்ளை

யார் இந்த மாடசாமி? திருநெல்வேலி சதி வழக்கில், கலெக்டர் ஆஷ் கொலை சம்பந்தமாகத் தேடப்பட்டவர். வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தேசபக்தர். நெஞ்சுரம் மிக்கவர். ஆஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவான இவர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் போய்விட்டது. அவர் இருக்குமிடம் மட்டுமா தெரியாமல் போய்விட்டது. அவர் யார் என்பதே இன்றைக்குப் பலருக்குத் தெரியாமல் வரலாற்றில் முக்கிய இடம்பெறாமல் போய்விட்ட தியாகி அவர்.

ஆஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் இவர் காணாமல் போய்விட்டதாகப் போலீசார் சொல்லி வந்தனர். இவரது ஊர் ஒட்டப்பிடாரம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.பிறந்த ஊர். இந்தப் புனித பூமியில் பிறந்த மாடசாமி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வன்முறைப் புரட்சியில் ஈடுபட்டிருந்தது வியப்புக்குரியது அல்ல.

வீரர் மாடசாமி திரு வ.உ.சியின் தோழராகவும், சீடராகவும் இருந்து சட்டத்திற்குட்பட்ட முறையில் நடந்த சுதேசிக் கிளர்ச்சியில் பங்கு கொண்டவரும் ஆவார். தலைமறைவான பிறகு அவர் என்ன ஆனார்? செவி வழிச் செய்தியாக இவர் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி புதுச்சேரிக்குச் சென்று விட்டதாகச் சிலர் தெரிவித்தனர். அங்கு தங்கியிருந்த காலத்தில் இவருக்கு வ.வெ.சு.ஐயருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மாடசாமி குறித்து போலீசாரின் இரகசியக் குறிப்பு கூறும் செய்தி: "தூத்துக்குடி போலீஸ் துணை சுப்பரின்டெண்ட் ஜான்சன் தலைமறைவாகிவிட்ட மாடசாமிப் பிள்ளையைப் பிடிக்க எத்தனையோ முயன்றும் முடியவில்லை. அவரது வீட்டிலுள்ள பொருட்களையும் அவருக்குச் சொந்தமான நிலங்களையும் பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியில் இவர் இருக்கிறார் என்ற செய்தி அறிந்த பிரிட்டிஷ் போலீசார் அவரை அங்கும் சென்று வேட்டையாடத் தயாராகினர். இந்தச் செய்தியறிந்த மாடசாமி அங்கிருந்து தப்பி சிங்கப்பூர் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு சென்ற பிறகு அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார் என்கிற விஷயங்கள் எல்லாம் மர்மமாகவே இருந்து வருகின்றன. ஒரு சமயம் அவரைக் கொழும்புவில் பார்த்ததாகச் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இரும்புப் பிடியிலிருந்து தப்பி உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் காலமாகி யிருக்க வேண்டும். இப்படிப்பட்ட தியாகிகளின் வாழ்க்கையை என்னவென்பது? எப்படிப் போற்றுவது?

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்கள் "விடுதலைப் போரில் தமிழகம்" எனும் நூலில் மாடசாமி குறித்து எழுதியிருக்கிறார். அவர் சொல்கிறார், "மாடசாமி கோழைத்தனத்தால் தலைமறைவாகி விடவில்லை. தண்டனைக்குப் பயந்தும் தப்பியோடவில்லை. அந்நாளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியோடி, புரட்சிச் செயல்களில் ஈடுபடுவது புரட்சியாளரின் வேலை திட்டமாக இருந்தது. காந்திய சகாப்தம் பிறந்த பின்னர்தான் இந்த முறை பெருமை தரத் தக்கதல்ல என்று தேசபக்தர்களால் கருதப்பட்டது".

திரு மாடசாமியைப் பற்றி அவர் சாந்திருந்த 'அபிநவ பாரதம்' எனும் புரட்சி இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்து நடத்தி வந்தவரும், ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்கில் 7 ஆண்டுகள் கடும்காவல் தண்டனை பெற்றவருமான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுவதையும் ம.பொ.சி. தனது நூலில் குறிப்பிடுகிறார்.

"எனது புரட்சிப் படையில் மாடசாமி பிரதானமானவர். மகா தீரர்; சூரர்; வீரர்! இவரைப் போல உறுதியும் துணிவும் மிகுந்தவரைக் காண்பது அரிது. இவர் சகலகலாவல்லவர். எந்த நிமிஷத்திலும் எந்த வேஷத்தையும் போட்டுத் திறமையுடன் செயல்பட வல்லவர். போலீசாரைப் பல தரம் ஏமாற்றியுள்ளார். நெருங்கியவர்களைத் தவிர வேறு யாராலும் இவரை அடையாளம் காண இயலாது. அவ்வளவு சாமர்த்தியசாலி. ஒட்டப்பிடாரம்தான் இவரது சொந்த ஊர். திருமணமானவர். குழந்தைகளும் உண்டு. அப்படியிருந்தும் இவர் புரட்சி வேள்வியில் குதித்து நீந்தினாரென்றால், இவரது ஆண்மையையும், உறுதியையும் என்னென்று புகழ்வது."
(இந்தியச் சுதந்திரப் போர்)

ம.பொ.சி. அவர்கள் மாடசாமியின் வரலாற்றைத் தொடர்ந்து எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி: "மாடசாமி தலைமறைவானபின் அவருடைய சொத்துக்களை யெல்லாம் நீதிமன்றத்தின் ஆணைப்படி அரசு பறிமுதல் செய்துவிட்டது. அதனால், கணவனைப் பிரிந்து அவரது மனைவி தம் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன பாடுபட்டாரோ? தேசபக்த மாவீரனுக்கு மக்களாகப் பிறந்த பாவத்திற்காக அந்தக் குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் எவ்வளவு காலம் அல்லலுற்றனவோ? அவர்களது தியாக வாழ்வுக்குத் திரை விழுந்து விட்டதே!"

வாழ்க தியாகசீலர் மாடசாமிப் பிள்ளை புகழ்!!

Friday, July 15, 2011

பொட்டி ஸ்ரீராமுலு

பொட்டி ஸ்ரீராமுலு

ஆந்திர மாநிலத்தின் பிதா பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி. இவருடைய உயிர்த்தியாகம்தான் ஆந்திரா உருவாகக் காரணமாக இருந்தது. ஆகவே ஆந்திர தெலுங்கு மக்கள் போற்றும் தியாகியாக இவர் விளங்குகிறார். நாமும் நமது சென்னை மாகாணம் எப்படி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்தது என்ற வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாமே.
Charminar, Hussaini sagar

காந்தியத்தில் நம்பிக்கையுடைய தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு. சத்தியம், அகிம்சை, தேசபக்தி இவற்றில் ஈடுபாடும் ஹரிஜன் முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர். இவர் சென்னையில் அண்ணாபிள்ளை தெருவில் வசித்து வந்த குருவய்யா மகாலக்ஷ்மம்மா தம்பதியரின் மகனாக 16-3-1901இல் பிறந்தார். தெலுங்கு ஆரிய வைசிய குலத்தைச் சேர்ந்தவர் இவர். இவர்கள் பொதுவாக சைவ உணவை உட்கொள்பவர்காளக இருப்பார்கள். இளம் வயதில் காந்திஜியின் தாக்கம் இவருக்கு இருந்ததால் அவருடைய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது இருபதாம் வயது வரை சென்னையில் படித்தார், பின்னர் Sanitary Engineering படிப்பை பம்பாயில் விக்டோரியா ஜுபிலி டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டில் படித்தார். அந்த நாளில் ரயில்வே மண்டலங்கள் பல பெயர்களில் அறியப்பட்டன. சென்னையில் சதர்ன் மராட்டா ரயில்வே (MSM) என்றும், நாகைப்பட்டினத்திலும் பின்னர் திருச்சியிலும் இருந்த மண்டலம் தென் இந்திய ரயில்வே (SIR) என்றும் இருந்தது. அது போல இவர் Great Indian Peninsular Railwayயில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இவர் சுமார் நான்கு ஆண்டுகள் ரூ.250 மாதச் சம்பளத்தில் பணியாற்றினார். இவர் தனது 26ஆம் வயதில் 1927இல் மனைவியை இழந்தார். அதன் பின் உலக வாழ்க்கையில் பற்று நீங்கியவராக வேலையிலிருந்தும் வெளியேறினார். தனது சொத்துக்களை தனது சகோதரர்களுக்கும் தாய்க்கும் எழுதிக் கொடுத்துவிட்டு மகாத்மா காந்தி நடத்தி வந்த சபர்மதி ஆசிரமத்தில் சென்று சேர்ந்து கொண்டார்.
Hightech city

சொந்த வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தவிர்க்க இவர் நாட்டுச் சுதந்திரப் போரில் தீவிர பங்கு கொண்டார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு கைதானார். 1941இல் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு கொண்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு எனும் போராட்டத்தின் போது இவர் மூன்று முறை கைதானார். குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் கிராம புனருத்தாரண பணிகளை மேற்கொண்டு செயல்பட்டார். ஆந்திர பகுதியில் கிருஷ்ணா ஜில்லாவிலும் இவர் ஏமனி சுப்பிரமண்யம் என்பவர் தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். 1943, 1944 ஆகிய ஆண்டுகளில் நெல்லூர் மாவட்டத்தில் ராட்டையில் நூல் நூற்க மக்களுக்கு ஊக்கம் அளித்தார். இவர் எல்லோரிடமும் சமமாகப் பழகுவதோடு, கிடைத்த இடத்தில் யார் வீடாக இருந்தாலும் அங்கு உணவை ஏற்றுக் கொள்வார். 1946 முதல் 48 வரையிலான காலகட்டத்தில் இவர் நெல்லூர் ஜில்லாவில் ஹரிஜனங்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து மூன்று முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நெல்லூரில் மூலப்பேட்டை எனுமிடத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் ஹரிஜன ஆலய பிரவேசத்துக்காகப் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஹரிஜன முன்னேற்றத்துக்காக இவர் பல முறை போராடியிருக்கிறார்.
Osmania University

இவருடைய போராட்டங்கள் காரணமாக மாவட்ட கலெக்டர்கள் வாரத்தில் ஒரு நாள் ஹரிஜன முன்னேற்றம் குறித்த பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர். வயதான காலத்தில் இவர் நெல்லூரில் தங்கியிருந்தார். ஹரிஜன முன்னேற்றம் தான் இவருடைய வாழ்க்கையின் குறிக்கோள். அந்த வாசகங்கள் அடங்கிய அட்டையை இவர் எப்போதும் அணிந்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார். இப்படி இவர் தெருத் தெருவாக பிரச்சார அட்டையைத் தூக்கிக் கொண்டு அலைவதைக் கண்டு இவர் ஒரு மனநலம் இல்லாதவர் என்றுகூட மக்கள் கருதத் தொடங்கினர்.
Location of Hyderabad

அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ் பேசும் பகுதிகள் தவிர, ஆந்திரத்தின் பெரும் பகுதி, கன்னடம் பேசும் பெல்லாரி போன்ற பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவைகளெல்லாம் சென்னை மாகாணத்திற்குட்பட்டிருந்தன. மொழிவாரி மாகாணப் பிரிவினை அப்போது ஏற்படவில்லை. ஆகையால் பொட்டி ஸ்ரீராமுலு சென்னை மாகாணத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களின் நலன்களைக் காப்பதற்காகவும், தெலுங்கு மக்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தைக் காப்பதற்காகவும், இந்த தெலுங்கு மக்களின் உரிமைக் குரலை அரசாங்கம் கேட்கவேண்டும் தனி ஆந்திர மாநிலத்தைப் பிரித்து அமைத்திட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். இவருடைய தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி இவர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.
Tirupathy Venkateshwara temple

இவரது போராட்டத்தைக் கண்டு பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இவருக்கு ஒரு உறுதி மொழி அளித்தார். தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழிதான் அது. இந்த உறுதி மொழியின் பேரில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். அதன் பிறகு உடனடியாகவோ, பல காலம் கழித்தோ தனி ஆந்திர மாநிலம் பிரிப்பது குறித்து எந்த நடவடிக்கையைக் காணோம், இப்போதைய தெலுங்கானா பிரச்சினை இழுத்தடிப்பது போலத்தான் அப்போதும் நடந்தது. பார்த்தார் பொட்டி ஸ்ரீராமுலு. இவர்கள் சும்மா வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று நினைத்தார். ஆகையால் இவர் மறுபடியும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 1952 அக்டோபர் 19 அன்று சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் தனி ஆந்திரம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.
Godavari bridge near Rajamundhry

அவரது கோரிக்கையின் முக்கிய அம்சம் சென்னை மாநகரம் புதிதாக அமையப்போகும் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஆகவேண்டும் என்பதுதான். மிக சாதாரணமாகத் தொடங்கிய உண்ணாவிரதம் ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவைப் பெறாமலேயே, பொதுமக்களிடையே ஒரு பரபரப்பை உண்டாக்கத் தொடங்கியது. இந்த கோரிக்கைகள் குறித்து பல வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகும் கூட அன்றைய அரசாங்கம் இவைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவு எதையும் அறிவிப்பதாகத் தெரியவில்லை. உண்ணாவிரதம் தொடர்ந்து நடந்தது. நாளாக நாளாக பொட்டியின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. அவர் நிலைமை கவலைக்கிடமாக ஆகியது. இந்த நிலையில் 1952 டிசம்பர் மாதம் 15 நள்ளிரவு, 16 விடியற்காலம் பொட்டி ஸ்ரீராமுலுவின் ஆவி பிரிந்தது.
Andhra Pradesh

தனி ஆந்திர மாநில கோரிக்கைக்காக பொட்டியின் உயிர் தியாகம் நிறைவேறியது. தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு மக்களின் ஏகோபித்த போற்றுதலுக்கு உள்ளானார். அவரது இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு மக்கள் அவரது தியாகத்தைப் பாராட்டி கோஷங்கள் எழுப்பினர். சவ ஊர்வலம் மெளண்ட் ரோடை அடைந்த போது, ஊர்வலம் மிகப் பெரியதாக ஆகியது. கோஷங்களுக்கிடையே ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அந்தப் பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன. கலவரம் நடக்கும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. மற்ற பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து சேர்ந்தனர், கலவரம் பெரிதாகியது. சென்னை மாநகரில் தொடங்கிய இந்த கலவரங்கள் மெல்ல பரவி, ஆந்திரப் பகுதிகளான விஜயநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமகேந்திரபுரம், எல்லூரு, குண்டூர், தெனாலி, ஓங்கோல், நெல்லூர் ஆகிய இடங்களிலும் கலவரம் தொடங்கியது. அனகபள்ளி எனும் ஊரிலும் விஜயவாடாவிலும் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்ந்து நாலைந்து நாட்களாம வேகம் அடைந்து கொண்டிருந்தது. சென்னை நகரிலும் ஆந்திர நகரங்களிலும் கலவரம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது.
Kuchipudi dance

1952 டிசம்பர் 19ஆம் தேதி பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா எனும் புதிய மாநிலம் பிரிக்கப்படும் என்ற முடிவை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கலவரங்கள் அடங்கின. புதிய மாநிலம் அமைவதை எதிர்பார்த்து ஆந்திர மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். 1953 அக்டோபர் முதல் தேதி கர்நூலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திரா எனும் புதிய மாநிலம் உருவாகியது. எனினும் ஹைதராபாத் சமஸ்தானத்துக்குட்பட்ட தெலுங்கு பேசும் தெலுங்கானா பகுதிகள் 1956 வரை ஹைதராபாத்துடனேயே இருந்து வந்தது. 1956 நவம்பர் 1ஆம் தேதி தெலுங்கானா பகுதிகள் ஆந்திரத்துடன் சேர்ந்து ஆந்திரப் பிரதேசம் என்று பெயர் பெற்று விளங்கிற்று. இந்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்துக்கு ஹைதராபாத்தை தலைமையிடமாக அரசு அறிவித்தது.

1956இல் அதே நாளில் கேரளா என்றும் கர்நாடகா என்றும் புதிய மாநிலங்கள் தோன்றின. அதனைத் தொடர்ந்து பம்பாய் மாகாணத்திலிருந்து குஜராத், மஹாராஷ்டிரா எனும் மாநிலங்கள் 1960இல் உருவாகின. தென் இந்தியாவில் பல தென்னிந்திய மொழிகள் பேசப்படுவதால் ஒன்றுபட்ட சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மொழிவாரி மாநிலம் என்பது பண்டித ஜவஹர்லால் நேரு செய்த புரட்சிகரமான நடவடிக்கை. மொழியின் அடிப்படையில் மொழிவாரி மாநிலம் அமைந்த காரணத்தால் அந்தந்த மொழிகள் வளரவும், மேன்மையடையவும் வழிவகுத்தது.

புதிய ஆந்திர மாநிலம் உருவாவதற்காக சென்னை நகரில் பொட்டி ஸ்ரீராமுலு 82 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அவர் புதிய ஆந்திரா மாநிலத்துக்கு சென்னை நகரம் தலைநகராக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார். சென்னை இல்லாத ஆந்திர மாநிலம் தலையில்லாத முண்டம் என்று அவர் வர்ணித்தார். அவர் உண்ணாவிரதம் இருந்த இந்த 82 நாட்கள் வரையிலும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும், சென்னை மாகாண பிரதமர் (அன்று அதுதான் முதல்வருக்குப் பெயர்) ராஜாஜியும் என்ன காரணத்தினாலோ அவருடைய உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்தவோ, மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ஆகாரம் கொடுக்கச் செய்யவோ முயற்சி செய்யவில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்ததில் இவர்கள் இருவரும் இந்திய ஒற்றுமையில் நம்பிக்கை வைத்திருந்ததும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து போனால் அவரவர் போட்டியில் ஒருவருக்கொருவர் பூசலிட்டு இந்திய ஒற்றுமை அழிந்து போகும் என்று நம்பியதாகத்தான் இருக்க முடியும். எனினும் இந்திய வரலாற்றில் ஜதின் தாஸ் ஒருவர்தான் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர், மற்ற அனைவரும் தடுக்கப்பட்டோ, கட்டாயப்படுத்தி உண்ணா நோன்பை கைவிட்டிருக்கிறார்கல். பொட்டி ஸ்ரீராமுலு அதற்கு விதிவிலக்காக அமைந்து விட்டார். அவரது உயிர்த்தியாகம் புதிய மொழிவாரி மாநிலம் பிரியக் காரணமாக இருந்தது.

Jawaharlal Nerhru & Gandhiji
இந்த உயிர்த்தியாகத்தின் காரணமாக பொட்டி ஸ்ரீராமுலுவை "அமரர்" எனும் பொருளில் தெலுங்கில் "அமரஜீவி" என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். எப்படியிருந்தாலும் ஆந்திர மக்கள் பொட்டி ஸ்ரீராமுலுவை அமரர் ஸ்ரீராமுலு என்று என்றென்றும் மனதில் வைத்துப் போற்றுவார்கள்.

Monday, July 11, 2011

பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ஆர்.

P.R.'s Centenary Photo

பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி

(இவர் பிறந்த நூற்றாண்டு விழா 2008இல் நடைபெற்றது. அது சமயம் பி.ராமமூர்த்தி குறித்து சி.ஐ.டி.யு. தலைவராக இருந்த பாண்டே என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் "பீப்பிள்ஸ் டெமாக்ரசி" எனும் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. தமிழகத் தியாகிகள் வரிசையில் இதற்கு முன்பு பி.ஆர். பற்றி ஓர் கட்டுரை வெளியாகியிருக்கிறது. இது முழுக்க முழுக்க அவர்கள் கட்சியின் பார்வையில், அதன் தலைவர்களில் ஒருவரால் எழுதப்பட்டது)

பி.ஆர். என்று கட்சிக்காரர்களாலும், தோழர் பி.ராமமூர்த்தி என்று அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது. 1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.
Communist symbol

1920இல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார். அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926இல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.
P.R. Addressing Public Meeting

1927இல் இங்கிலாந்திலிருந்து சைமன் என்பவர் இந்தியாவில் சுதேசித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தம் காண இந்தியா வந்தார். அவர் வரவை காங்கிரசார் எதிர்த்தனர். நாடு முழுவதும் "சைமன் திரும்பிப் போ" என ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அந்த சைமன் எதிர்ப்புப் போர் சுதேசிகளுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. பஞ்சாபில் லாலா லஜபதி ராய் போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்து பின்னர் இறந்து போனார். அலகாபாத்தில் நேரு உட்பட பல தலைவர்கள் போலீசார் தடியடியில் காயமடைந்தனர். தமிழ்நாட்டிலும் பல தலைவர்கள் கலந்து கொண்டு சிறைப்பட்டனர். பம்பாயில் சைமன் வந்து இறங்கியதும் ஒரு மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், போலீஸ் தடியடியும் நடந்தது. லாலா லஜபதி ராயைத் தடியால் அடித்த சார்ஜெண்ட் சாண்டர்ஸ் லாஹூரில் கொலை செய்யப்பட்டார். அதில் சம்பந்தப்பட்ட பகத் சிங் தொடங்கிய பாரதி நவ ஜவான் சபா எனும் அமைப்பில் ராமமூர்த்தி ஓர் உறுப்பினர் ஆனார்.
Ajoy Gosh

1929இல் லாஹூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். அப்போதெல்லாம் காங்கிரஸ் ஜனவரி 26ஐ சுதந்திர தினம் என்று கொண்டாடி வந்தனர். அந்த விழாவிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார். பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். அங்கு விடுதலை ஆன பிறகு சென்னைக்கு வந்து இங்கு அரசியல் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார். 1933இல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மகாநாட்டை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. தடையை மீறி மகாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. குதிரை மீதமர்ந்து போலீஸ் நடத்திய தடியடியில் ராமமூர்த்தி தாக்கப்பட்டார். அங்கு இருந்த காலகட்டத்தில் கம்யூனிச இயக்க நூல்களையும் காரல் மார்க்ஸ் நூல்களையும் படிக்க நேர்ந்தது. பி.சுந்தரையா எனும் கம்யூனிஸ்ட் தோழரின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. அவரோடு சேர்ந்து கொண்டு ஒரு சதி வழக்கிலும் இவர் பங்கு பெற்றார்.
EMS Namboodripad

அதன் பின் பாட்னாவில் நடந்த அகில இந்திய காங்கிரசிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார். காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரி சோஷலிச சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு கூட்டம் நடத்தினார். அதில் இராமமூர்த்தி கலந்து கொண்டார். அங்கு இவருக்கு மலையாளத்தைச் சேர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுடன் தொடர்பு ஏற்பட்டது. சென்னை திரும்பிய ராமமூர்த்தி ஏ.எஸ்.கே.ஐயங்காருடன் சேர்ந்து சென்னை மாகாண புரட்சிகர மாணவர் இயக்கத்தைத் தொடங்கினார். அதில் பி.சுந்தரையா கலந்துகொண்டு பேசினார். 1936இல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 1934இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர். சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

சென்னை தவிர, மதுரை, கோவை ஆகிய இடங்களிலும் இவரது தொழிற்சங்க பணி சிறப்பாக வளர்ந்து வந்தது. 1937இல் இந்திய மாகாண சர்க்காருக்கு ஆங்காங்கே தேர்தல் நடந்தது. சென்னை மாகாண தேர்தலையொட்டி ஜவஹர்லால் நேரு சென்னை வந்தார். அவருடைய தேர்தல் கூட்டச் சொற்பொழிவை ராமமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்தார். அதற்காக அவர் கூட்டம் முடிந்த பின் கைது செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி பெரு வெற்றி பெற்றது. இங்கு ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், ராஜாஜி பிரதமர் (அந்தக் காலத்தில் மாகாண முதல் மந்திரியை பிரதமர் என்றுதான் சொல்வார்கள்) பதவி வகித்த காலத்தில் இவர் பல தொழிலாளர் போராட்டங்களைத் தலைமை வகித்து நடத்தினார்.

1937இல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1939இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார். அவரும் வெற்றி பெற்றார். காந்தி பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்று ஒப்புக் கொண்டார். 1939இல் ஜெர்மனி போர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஹிட்லரின் இந்த யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் என்று முதலில் கம்யூனிஸ்டுகள் வர்ணித்தனர். யுத்த எதிர்ப்புக் கொள்கைக்கால பல கம்யூனிஸ்டுகள் கைதானார்கள்.

1940இல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். சென்னை சதி வழக்கு ((II): சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932இல் நடைபெற்றது. அது குறித்த ஒரு கட்டுரை இதே வலைப்பூவில் வெளியாகியிருக்கிறது. இது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார். சென்னையில் இவர்கல் ஒரு முகாம் அமைத்து, அங்கிருந்து அரசுக்கு எதிரான வெளியீடுகளை சுற்றுக்கு விட்டும், பிரச்சாரங்களில் ஈடுபட்டும் கட்சிப் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்காணித்த போலீஸ் இவர்களைக் கூண்டோடு கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். ஏ.எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் பாதிக்கப்பட்டவர்கள்.

1941இல் இவர்கள் எல்லோரும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெல்லாரி சிறை கொடுமையான சிறையாக இருந்த போதிலும் அங்கு ராமமூர்த்தி மற்ற கைதிகளை உட்காரவைத்து மார்க்சிசம் பற்றிய வகுப்புகள் எடுத்து வந்தார். 1941இல் ஜெர்மனியின் நாசி ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். ரஷ்யா மீது ஜெர்மனி படையெடுத்தது என்றவுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஹிட்லர் தங்கள் மீது படையெடுத்ததைப் போல உணர்ந்தனர். அது வரை ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட யுத்தம் இப்போது மக்கள் யுத்தம் என்று பிரகடனப் படுத்தப் பட்டது. இதையொட்டி இங்கிலாந்து நாடு ஜெர்மனிக்கு எதிராக நடத்தும் போருக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்தனர்.

முந்தைய நிலையில் பிரிட்டிஷ் அரசுக்கு போர் முயற்சிகளில் ஒத்துழைப்பு கிடையாது என்று இருந்த நிலையை ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் மாற்றிக் கொண்டு பிரிட்டிஷுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கலாயினர். அதனால் இவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர். ராமமூர்த்தியும் சிறையிலிருந்து வெளி வந்து சுதந்திர மனிதரானார். 1942 ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மகாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதில்தான் "வெள்ளையனே வெளியேறு" தீர்மானம் நிறைவேறியது. மகாத்மா காந்தி பேசும்போது இந்தப் போரில் ஒன்று செய்து முடிப்போம் இல்லையேல் செத்து மடிவோம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி "செய் அல்லது செத்து மடி" என்ற அறைகூவல் விடுத்தார். நேரு பேசும்போது, பிரிட்டிஷ் அரசு சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தானாக பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுப் போய்விடுவதுதான் புத்திசாலித்தனம். மக்களால் பிடரியைப் பிடித்துத் தள்ளும் நிலைமை வராமல் அவர்களாகவே போய்விட இது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு என்று பேசினார். பம்பாய் தீர்மானத்துக்கு கம்யூனிஸ்டுகள் பல வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வந்தனர். அவை தோற்கடிக்கப் பட்டன.

அன்று இரவே எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்டுகள் கைதாகவில்லை. அவர்கள் வெளியில் இருந்துகொண்டு காங்கிரஸ்காரர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்தினர். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் எனும் இடத்தில் நடந்த ஒரு ஆங்கில போலீஸ் அதிகாரியின் கொலையில் ராஜகோபாலன், காசிராஜன் எனும் இருவர் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். அதை எதிர்த்து வழக்காட ராஜாஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அதில் ராமமூர்த்தி செயலாளராக இருந்தார். முடிவில் அந்த வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப் பட்டு ஆயுள் தண்டனையாக ஆகியது. அதிலிருந்து அந்த ராஜகோபாலன் தூக்குமேடை ராஜகோபாலன் என்று அழைக்கப்பட்டார். ராமமூர்த்தி தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் சென்று பேசினார்.

1946இல் கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்ற காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. 1946இல் ராமமூர்த்தி மதுரையில் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்து போராடினார். அப்போது ராமமூர்த்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் தொழிலாளர்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர். எனினும் மதுரை சதி வழக்கு என்று ஒன்றை இவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தது. அதிலும் இவர் விடுதலையாகி விட்டார். சுதந்திரம் வரும் நேரம் இவரும் சுதந்திரமாக வெளிவந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

 1952இல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் அமைத்து, சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அரசு செய்யலானார். பி.ராமமூர்த்திதான் எதிர் கட்சித் தலைவர். மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் போல இனி இருக்க முடியுமா? சந்தேகம்தான்.

 1952இல் இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னி, வைகை என்று இரண்டு பெண்கள். 1953இல் பி.ராமமூர்த்தி மதுரையில் நடந்த கட்சி காங்கிரசில் போலிட் பீரோ உறுப்பினராக ஆனார். கட்சியின் பத்திரிகையான "நியு ஏஜ்" இதழின் ஆசிரியராகவும் ஆனார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் பெரும் தலைவராகவும் இவர் விளங்கினார். பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு தொழிற்சங்கம் அமைந்தது. சி.ஐ.டி.யு. என்பது அது. அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.

முதிர்ந்த வயதின் காரணமாக இவர் 1987, டிசம்பர் 15 அன்று காலமானார். தமிழகம் தந்த சிறந்த கம்யூனிஸ்ட் தலைவராக பி.ராமமூர்த்தி விளங்கினார். வாழ்க பி.ஆர். புகழ்!

Sunday, July 10, 2011

வைக்கம் சத்தியாக்கிரகம்

வைக்கம் சத்தியாக்கிரகம்

நம்மில் பலர் 'வைக்கம் சத்தியாக்கிரகம்' என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்வதையும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரை வைக்கம் வீரர் என்ற அடைமொழியோடு குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறோம். இல்லையா? அந்த வைக்கம் சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. பெரியவர்கள் பலர் அதைப் பற்றி அறிந்திருப்பார்கள். என்றாலும் இன்றைய அவசர உலகில் இளைஞர்கள் இது குறித்து எத்தனை தூரம் ஆர்வம் காட்டி தெரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆர்வம் உள்ளவர்களுக்காக அந்த சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி சிறிது இப்போது பார்க்கலாம்.

எந்தவொரு பழைய நிகழ்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளும்போது அந்த நாளில் நிலவிய சமூக அமைப்பு, வாழ்க்கை முறை, மக்களின் கண்ணோட்டம் இவைகளை மனதில் கொண்டு அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்த நிகழ்ச்சியாகத்தான் அதை கவனிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலைகள் எனும் எடைக்கல்லைக் கொண்டு அன்றைய நிகழ்ச்சிகளை, நடவடிக்கைகளை எடைபோடக்கூடாது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய தீண்டாமை, அதிலும் கேரளப் பகுதிகளில் நிலவிய ஆச்சாரம், இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிடமுடியாது. எனவே 1924-25 ஆண்டு வாக்கில் கேரள பிரதேசமான வைக்கத்தில் தீண்டாமை எப்படி கடைப்பிடிக்கப் பட்டிருக்க வேண்டும், என்பதை மனதில் நிறுத்தி மேலே படியுங்கள்.

தீண்டாமை என்பது நமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடு. இதை கற்றறிந்த பலரும் சொன்னார்கள். இந்து மத சாஸ்திரங்களில் இதுபோன்ற தீண்டாமை கொள்கைகளுக்கு ஆதாரமே இல்லையென்று பல பெரியோர்கள் சொன்னார்கள். யார் கேட்கிறார்கள். அந்தந்த காலத்துக்கு சில கேடுகள் நம்மை வந்து ஒட்டிக் கொள்கின்றன. இன்றைய முன்னேறிய சமூகத்தில் வேரோடிவிட்ட சில சமுதாயக் கேடுகளும் இருக்கின்றன. இப்போது இங்கு அவற்றைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை என்பதால் தீண்டாமையைப் பற்றி மட்டும் கவனிப்போம்.
EVR's statue at Vaikkom

இந்தியாவில் இந்து சமூகத்தில் இடைப்பட்ட காலத்தில் மனிதருக்குள் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாட்டைக் கடைபிடித்து, மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரைத் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருந்தார்கள். இதன் காரணமாகவே ஒப்பிலாத இந்த சமுதாயம் பலம் இழந்து, ஒற்றுமை கெட்டு, தாழ்ந்து போயிற்று. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாத்மா காந்தி இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமானால் இந்த வேறுபாடுகளை முதலில் களைந்த பின்னர்தான் நாம் சுதந்திரம் பெறவோ, அதனைக் காப்பாற்றவோ முடியும் என்பதை உணரத் தொடங்கினார்கள். இந்தப் பின்னணியில்தான் 1924-25இல் கேரளப் பிரதேசத்தில் வைக்கம் எனும் ஊரில் நடைபெற்ற போராட்ட களத்தை நாம் பார்க்க வேண்டும்.
Vaikkom Hero E.V.R.

அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் எனும் தலம் ஒரு புண்ணிய க்ஷேத்திரம். இங்கு உள்ள ஆலயத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகள். எல்லா பிரிவு மக்களும் இந்த நான்கு வீதிகளையும் பயன்படுத்திக் கொண்டு ஆலயத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள் ஒரு காலகட்டம் வரை. திடீரென்று ஒரு நாள் இந்த மாட வீதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக்கூடாது என்று வைதீக இந்துக்கள் சிலர் தடை போட்டனர். நான் முன்பே குறிப்பிட்டபடி கேரள மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்ட மிகக் கடுமையான தீண்டாமை உச்சத்தில் இருந்த காலம் அது. சமூக அந்தஸ்தில் நம்பூதிரிகள் மேலாகவும், ஈழவர்கள் எனப்படும் பிரிவினர் கீழ்தட்டிலும் வைத்துப் பார்க்கப் பட்டனர்.
Travancore Diwan Sir C.P.Ramaswamy Iyer

தீண்டாமை எனும் கொடுமை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து கேரளத்தில் சற்று மாறுபட்டிருந்தது. அங்கு மேல் ஜாதியினர் தாழ்த்தப்பட்ட ஈழவர்களை பார்த்தாலோ, கிட்டத்தில் நெருங்கினாலோ, தீண்டினாலோ தீட்டு எனும் எண்ணம் பரவலாக இருந்து வந்தது.
Travancore Maharaja

இப்படிப்பட்ட நிலைமைக் கண்டு காங்கிரஸ்காரர்கள் மகாத்மா காந்தியடிகளின் ஆலோசனையைக் கேட்டு அங்கு இந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்வது என்று முடிவு செய்தனர். சத்தியாக்கிரகம் நினைத்தவுடன் அந்த நாட்களில் தொடங்கிவிட முடியாது. அதிலும் வைக்கம் என்பது திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டது. சுதேச சமஸ்தானங்களில் சுதந்திரப் போராட்டம் விரைந்து நடக்காத காலம் அது. ஆகவே அங்குள்ள சீர்திருத்தக்காரர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது.
Mannathu Padmanabhan

சத்தியாக்கிரக முகாம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் நாட்டின் பல பாகங்களிலிருந்து தொண்டர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தைத் தலைமை வகித்து நடத்த கே.பி.கேசவ மேனன் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர் தவிர கேளப்பன் நாயர், டி.கே.மாதவன், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு, திருவனந்தபுரம் வக்கீல் குஞ்சுகிருஷ்ண பிள்ளை, சாத்தக்குடி நாயர், சிட்டேத்தில் சங்குப் பிள்ளை, செங்கணாச்சேரி பரமசிவம் பிள்ளை, மன்னத்து பத்மநாபன் நாயர் ஆகியோர் இதில் பங்கு கொண்டனர். இந்த மன்னத்து பத்மநாபன் பிந்நாளில் கேரள முதன் மந்திரியாகவும் ஆனார் என்பது நினைவில் கொள்வோம்.
Barristar Madurai George Joseph

பஞ்சாபிலிருந்து ஆர்ய சமாஜத்தினர் இங்கு முகாமிட்டு தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாடு காங்கிரசில் பெரும் தலைவராக விளங்கிய ஈரோடு வே.ராமசாமி நாயக்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் வைக்கம் போய்ச்சேர்ந்தனர். அந்தக் குழுவில் பங்கு கொண்டவர்களில் கோவை அய்யாமுத்து, 'சமதர்சினி' பத்திரிகை ஆசிரியர் பாலகிருஷ்ண பிள்ளை, சாமி சத்தியவரதன், கரூர் பி.கே.அய்யா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். கோவை அய்யாமுத்து ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் நெருங்கிப் பழகிய நண்பர், தமிழகத்தில் கதர் இயக்கத்தின் தந்தையாக இருந்தவர். ஈ.வே.ரா.வுடன் அவரது மனைவி நாகம்மையும் பங்கு கொண்டார்.
Mannath Padmanabhan

மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்தத் தொடங்கிய காலத்தில் ஈ.வே.ரா. அதில் தீவிர பங்கு கொண்டார். 1921இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் பெற்றார். அப்போது அவர் கோவை, சென்னை ஆகிய சிறைகளில் இருந்தார். இவருடைய அண்ணனும் மறியலில் ஈடுபட்ட போராட்ட வீரர். ஈ.வே.ரா. ராஜாஜியின் நெருங்கிய நண்பர். திருச்செங்கோடு புதுப்பாளையத்தில் காந்தி ஆஸ்ரமம் அமைக்கும் பணியில் ராஜாஜிக்கு உறுதுணையாக இருந்தவர் ஈ.வே.ரா. கதர் தொண்டில் ஈடுபட்டு கதர் மூட்டைகளைத் தோளில் சுமந்துகொண்டு தெருத் தெருவாக விற்று வந்தவர். ராஜாஜியின் ஆதரவோடு இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பதவி வகித்தார்.

வைக்கம் கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளிலும் வேலி அமைத்து போலீஸ் காவல் இருந்தது. போராட்ட முகாமிலிருந்து தொண்டர்கள் பலர் சென்று அந்த வேலிக்கருகில் நின்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். நாள் முழுவதும் அங்கு போராட்டக் காரர்கள் பஜனை செய்து கொண்டும், நூல் நூற்றுக் கொண்டும், கோஷங்கள் போட்டுக் கொண்டும் அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்கள் களைப்படைந்த பின்னர் வேறொரு கோஷ்டி அங்கு வந்து அதே வழியில் போராட்டம் நடத்துவர். இவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டால், மற்றொரு கோஷ்டி வரும், கைதாகும். இப்படி பல மாதங்கள் சத்தியாக்கிரகம் நடைபெற்று வந்தது. மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலோடு போராட்டம் அமைதியாக நடைபெற்று வந்தது.

வைக்கத்தில் நடக்கும் இந்த போராட்டத்தை காந்திஜி ஆதரிக்கக்கூடாது என்று ஏராளமானோர் அவருக்குக் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் போராட்ட தலைவர் கே.பி.கேசவ மேனன் கைது செய்யப்பட்டார். அவர் இடத்தில் மதுரை தேசபக்தரும், பிரபல காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ஜார்ஜ் ஜோசப் என்பவர் தலைமை வகித்து நடத்தினார். அப்போது காந்திஜி இந்து சமூகத்தில் வேரோடியுள்ள இந்த சமுதாயக் கேட்டை எதிர்த்து இந்துக்களே போராடட்டும், ஜார்ஜ் ஜோசப் கிறிஸ்தவர் என்ற பிரச்சினை எழுப்பப்படும், ஆகவே அவர் இதில் நேரடியாக தலையிட வேண்டாமென்று ஒரு கடிதம் எழுதினார். போராட்டத்தில் தெருக்களில் போட்டுள்ள வேலிகளை அப்புறப்படுத்த சிலர் முயன்றபோது, காந்திஜி அப்படிச் செய்ய வேண்டாம், வன்முறை நமது வழி அல்ல என்பதை ஒரு கடிதம் மூலம் தெரியப் படுத்தினார். வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது உண்ணாவிரதம் இருக்க வேண்டாம், உண்ணாவிரதம் யாருக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் ஒரு வறையறை உண்டு. ஒரு கொடுங்கோலனை எதிர்த்து நீங்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. அவர்களது உத்தரவுகளை ஏற்க மறுத்து கைது செய்தாலும் தண்டனை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டுமேயொழிய, நீங்களே உங்களுக்கு உண்ணாவிரதம் என்ற தண்டனையைக் கொடுத்துக் கொள்ளக்கூடாது என்றார்.

மகாத்மா காந்தி வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நோக்கம் குறித்து தெளிவு படுத்தினார்.

"இந்துக்களைப் பொறுத்தமட்டில் இந்தப் போராட்டம் ஆழ்ந்த மத முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து மதத்தில் ஏற்பட்டுவிட்ட பெரும் மாசைத் துடைக்க நாம் முயற்சிக் கிறோம். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளை அனைவருக்கும் திறந்துவிட வேண்மென்று நாம் போராடுகிறோம். நம் குறிக்கோளை அடைய முதல் தொடக்கம் இந்தப் போர். நமது இறுதி லட்சியம் தீண்டாமைக் கொடுமையை அடியோடு ஒழித்து இந்துமதத்தைத் தூய்மைப் படுத்துவது. தீண்டாதவர்களின் நிலைமையை உயர்த்தி மற்ற மக்களுக்குச் சமமாக அவர்களை யும் ஆக்குவதுதான் நமது இறுதி லட்சியம்"

1924இல் தொடங்கிய போராட்டம் ஓராண்டுக்கும் மேல் நடந்தது. ஒவ்வொரு நாளும் பலர் போராடி கைதானார்கள். தொண்டர்கள் அணி அணியாக வைக்கம் வரத் தொடங்கினர். 1925 பிப்ரவரி மாதம் மகாத்மா காந்தி தென்னகம் வந்தார். திருவிதாங்கூருக்குச் சென்றார். மகாத்மா வந்ததாலோ என்னவோ, திருவிதாங்கூர் சமஸ்தான அரசு அந்தச் சந்தர்ப்பத்தில், அதுவரை மேல்ஜாதியினருக்குக் கொடுத்து வந்த ஆதரவை நீக்கிக் கொண்டது. கோயிலைச் சுற்றி நான்கு தெருக்களிலும் போடப்பட்டிருந்த வேலிகள் அகற்றப் பட்டன.

போராட்டம் போகும் திசையை உணர்ந்து சநாதனிகளும் ஒதுங்கிக் கொண்டனர். போராட்டம் முடிவுக்கு வந்தது. வெற்றி பெருமிதத்துடன் தீண்டாதார் உட்பட மக்கள் அனைவரும் வைக்கம் தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு வலம் வந்தனர். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு 1924இல் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டும் பணி மகாத்மா காந்தியடிகளின் முயற்சியால் நிறைவேறத் தொடங்கியது.