Followers

Tuesday, July 6, 2010

வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்

வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

அன்றைய மதுரை மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த வத்தலகுண்டு எனும் ஊரில் பிறந்தவர் தியாகி பி.எஸ்.சங்கரன். இவ்வூர் சுப்பிரமணிய சிவா எனும் மாபெரும் தியாகியை நாட்டுக்களித்த பெருமையுடைய ஊர். கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள ஊர். மேலே கொடைக்கானல், அருகில் பழனி என எங்கும் எழில் கொஞ்சும் இயற்கை அழகு கொண்ட ஊர். இவ்வூருக்கு மற்றொரு பெருமையும் உண்டு. தமிழில் மிகச் சிறந்த நாவலாசிரியராக உருவானவரும், சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவருமான எழுத்தாளர் பி.ஆர்.ராஜம் ஐயர் பிறந்த ஊர் இது. இதில் தியாகி சங்கரனுக்கு என்ன பெருமை என்கிறீர்களா? அவருக்கு இதில் பெருமை இருக்கிறது. ஏனென்றால், பிரபல எழுத்தாளர் பி.ஆர்.ராஜம் ஐயரின் மருமகன் தான் நாம் இப்போது பார்க்கப் போகும் தியாகி பி.எஸ்.சங்கரன்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து மதுரை சென்று அங்கு அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார் சங்கரன். அப்போது, அதாவது 1928இல் பிரிட்டிஷ் அரசு இந்தியா அனுப்பி வைத்த சைமன் கமிஷனை எதிர்த்து நாடும் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த சைமன் கமிஷன் எதிர்ப்பில் பங்கு பெறுவதற்காக அரசியலில் குதித்துக் கல்லூரியை விட்டு வெளியேறினார். ஊர் திரும்பிய இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றத் தொடங்கினார்.

1930இல் மகாத்மா காந்தியடிகள் செய்த தண்டியாத்திரையைத் தொடர்ந்து தென்னாட்டில் ராஜாஜி வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கினார். அதில் பங்கேற்க தொண்டர்களைத் தேர்ந்தெடுக்க ராஜாஜி பல ஊர்களுக்கும் சென்றார். அப்படி தொண்டர்களாக மதுரை மாவட்டத்திலிருந்து இருபது பேருக்கும் மேல் சென்றனர். இதில் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பிய பெருமை சங்கரனைச் சாரும். இவருடன் மட்டப்பாறை சிங்கம் எனப்போற்றப்பட்ட மட்டப்பாறை வெங்கட்டராமையரும் இணைந்து பாடுபட்டார்.

1932இல் நடந்த போராட்டத்தில் இவர் கைதாகி இரண்டாண்டு சிறை தண்டனை பெற்றார். சிறையிலிருந்து 1934இல் வெளிவந்த பிறகு மதுரை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கிராமம் கிராமமாகச் சென்று நாட்டுச் சுதந்திரத்துக்காக மக்களைத் தயார் செய்த ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினார். அதே ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தின் மாநில மகாநாட்டை வத்தலகுண்டில் நடத்த முறற்சிகள் எடுத்து, பெரும் தலைவர்களான மட்டப்பாறை வெங்கட்டராமையர், அப்துல் காதர், அப்துல் அஜீஸ், ரங்கசாமிச் செட்டியார் போன்றவர்களுடன் சேர்ந்து அந்த மாநாட்டைச் சிறப்பாக ராஜாஜியின் தலைமையில் நடத்தினார்.

அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே அதாவது 1937-38 ஆண்டில் இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். 1941இல் மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் கலந்து கொண்டு சங்கரன் ஆறு மாத சிறை தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டார். இவரைக் கொண்டு போய் அலிப்புரம் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இவர் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற நிலையில் இவர் விடுவிக்கப்பட்டார். ஊர் திரும்பிய இவரது நிலைமை மோசமடையவே மதுரை எர்ஸ்கின் (இப்போது ராஜாஜி) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனின்றி இவர் 3-1-1942இல் காலமானார். வாழ்க தியாகி பி.எஸ்.சங்கரன் புகழ்!

1 comment:

  1. இளம் வயதிலே மறைந்த இத் தியாகி இன்னும் வாழ்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete

Please give your comments here