Followers

Monday, August 23, 2010

பி.சீனிவாச ராவ்

விவசாயிகளின் எழுச்சி நாயகர் பி.சீனிவாச ராவ்

த்மிழ்நாட்டில் சுதந்திரப் போட்டாத்தில் ஈடுபட்டு தொண்டு புரிந்தவர்களில் பி.சீனிவாச ராவ் ஒருவர். இவர் தனது போராட்டத்தை ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் நிலையில், அந்த ஏகாதிபத்தியம் இந்த நாட்டில் வேரூன்ற காரணங்கள் எவை என்று கண்டு, அந்த ஆணிவேரை அறுத்தெறிய முயன்றவர். வயல்களில் உழைக்கும் விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலிகள், உழைப்பாளிகள் இவர்களைச் சுரண்டிக்கொண்டு, வெள்ளைக்காரர்களுக்குச் சாமரம் வீசும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை அகற்றினாலே, வெள்ளைக்காரர்கள் தானாகவே இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுவார்கள் என்பது இவரது கருத்து. இந்த நோக்கத்துக்காக அவர் என்ன செய்தார்?

1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. அந்தச் சங்கத்தை தமிழகம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி கிராமம் தோறும் பிரச்சாரம் செய்து சுற்றி அலைந்து உழைத்தவர் சீனிவாச ராவ். இவரைப் பற்றி இன்றுகூட கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தவிர மற்றையோர் அறிந்து கொள்ளவில்லை, அறிந்துகொள்ள முயன்றதுமில்லை. இவர் கர்நாடக மாநிலத்தில் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி இருக்கும் குடகு நாட்டில் பிறந்தவர். இவர் யார் எவர் எங்கிருந்து வந்தார் என்பதையெல்லாம்கூட பிறருக்குத் தெரிவிக்க விரும்பாமல் தான் ஈடுபட்டிருக்கும் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் சீனிவாச ராவ்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் சென்னையில் இவருடன் சிறையில் இருந்தவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அமீர் ஹைதர்கான் போன்றவர்கள். சுதந்திரப் போர் ஒரு புறம், விவசாயிகளின் எழுச்சி மற்றொரு புறம் என்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் இவர் தனது இயக்கத்தை மையமாகக் கொண்டார். இவர் ஆரம்ப கால அரசியலின்போது இவருடன் இணைந்து போராடிய பல தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் எஸ்.வி.காட்டே, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்டராமன் ஆகியோர். இவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைசிறந்த தொண்டர்கள்.

இவர் அதிகமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பாமல், செயல் ஒன்றே குறியாகத் தன் வாழ்நாளைக் கழித்தார். கீழத் தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி போன்ற பகுதிகள்தான் இவரது போராட்டக் களமாக இருந்தது. இந்த ஓய்வறியாத தொண்டனின் மறைவுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகையான "ஜனசக்தி" இவர் நினைவாக கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டது. அதில் பல தலைவர்களும் இம்மாமனிதன் பற்றிய பல செய்திகளைக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்துமே மிக விளக்கமாக அமைந்திருந்தன. அவற்றில் ப.ஜீவானந்தம் போன்றோர் எழுதிய கட்டுரைகள் பல செய்திகளை உள்ளடக்கி இருந்தன. அதிலிருந்து சில பகுதிகளை இங்கு காணலாம்.

ப.ஜீவானந்தம்: "தன் பெற்றோர் உற்றாரைப் பற்றி, ஊர் பேர் பற்றி இதுவரை மறந்தும் பேசாத ஒரு விசித்திர மனிதர் அவர். அதே பொழுதில் 1930லிருந்து நம்மை விட்டுப் பிரிந்த வரை தமிழகத்தையே தாயகமாகக் கொண்டு வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்திருந்தார். எனது வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தேசபக்தரையோ, புரட்சி வீரனையோ நான் எதிர்ப்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஓர் அபூர்வ பிறவி அவர்."

"1930இல் சென்னையில் பிரகாசம் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ரத்த பைசாசமே போலீஸ் கமிஷனர் கன்னிங்காம் உருவத்தில் வந்து நடத்திய கொடிய அடக்குமுறைச் சித்திரவதையை இன்று நினத்தாலும் உடலும் குடலும் பதறும். அந்தப் போராட்டத்தில் புலுசு சாம்பமூர்த்தி, காஸா சுப்பாராவ், துர்க்காபாய் முதலான தேசபக்தர்களோடு மாணவராக இருந்த சீனிவாச ராவும் கலந்து கொண்டார். நாட்டின் பெருமையைக் காத்த வீரர்களில் ஒருவர் இவர்."

"ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆளாகி, நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று மூச்சுகூட விடமுடியாத நிலையில் 2/65 பிராட்வேயை உறைவிடமாகக் கொண்டு ஒரு எடுப்புச்சாப்பாட்டை மூன்று பேர், சில வேளைகளில் நான்கு பேர் உண்டு பணிபுரிந்த காலம் அது. அப்போது சீனிவாச ராவி எங்களுக்கு ஒரு நட்சத்திரமாக விளங்கினார்."

ஹெச்.டி.ராஜாவின் 'நியு ஏஜ்' பத்திரிகையில் முழுநேரமும் பணிபுரிந்தார். 1935இல் காங்கிரஸ் கட்சிக்குள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் சென்னைக் கிளையை முதலில் அமைத்தவர் சீனிவாச ராவ். இவர் சிறிது அதிகமான நேர்மையாளர். தனக்கு சரி என்றும் நீதி என்றும் பட்டுவிட்டால் அதில் உறுதியாக நிற்பார். அவருடைய கண்டிப்புக்கும், பொறுப்புணர்ச்சிக்கும் பயந்து பலரும் சற்றுத் தள்ளியே இருப்பார்கள். அவருடைய கொள்கை பிடிப்பும், சுயநலமின்மையும் அத்தகையது."

"வெளிமாநிலக்காரர் என்பதாலும், தமிழ் சரியாகப் பேச முடியாததாலும் மணலி கந்தசாமி போன்றோருடன் சேர்ந்து 1943இல் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அவர்களை ஒரு போராட்ட சக்தியாக உருவாக்கினார். அதுமுதல் 30 ஆண்டுகள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்த தமிழகத்தின் ஒப்பற்ற தலைவன். அந்த விவசாயிகளின் தலைவர் இறந்த போது திருத்துறைப்பூண்டியில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆயிரமாயிரம் விவசாயிகள் கண்ணீர் சிந்தி அந்தத் தலைவனை வழியனுப்பிய காட்சி கல்லும் கரையச் செய்யும் காட்சியாகும்."

எம்.ஆர்.வெங்கட்டராமன்: "வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அக்கிரமம் என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டித்து விடுவார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அங்கத்தினராக இருந்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் செயலாளராகவும் இருந்தார். அன்னியத் துணிகள் பகிஷ்காரம் நடந்த போது இவர் போலீசாரால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார். பூட்ஸ் காலால் மிருகத்தனமாக மிதிக்கப்பட்டார். அத்தனை அடிகளையும் அஞ்சாத நெஞ்சத்தோடு எதிர் கொண்டவர் சீனிவாச ராவ்."

பி.ராமமூர்த்தி: "கண்டிப்பு, கட்டுப்பாடு, எளிய வாழ்க்கை இவைகளுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் சீனிவாச ராவ். தொண்டனுக்குத் தொண்டனாக, நண்பனுக்கு நண்பனாக, தலைவனுக்குத் தலைவனாகத் திகழ்ந்தார். ஆகவே தான் அவரது மறைவுச் செய்தி கேட்ட சில மணி நேரத்தில் தஞ்சை மாவட்டமே, தமிழகமே கதறி அழுதது. அவரது இறுதிப் பயணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்."

ஏ.எம்.கோபு: "கன்னடத்தில் உயர்சாதியான பிராமண குலத்தில் பிறந்து, காவிரி நதி தீரமான தஞ்சைத் தரணியின் வற்றாத வளத்தின் வித்தாகவும், வேராகவும், விளங்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் அவதரித்த லட்சக்கணக்கான வேளான் தொழிலாளரின், குத்தகைதாரர்களின், குறுநில உடைமையாளர்களின் விமோசனத்துக்காக அரும்பாடுபட்டு, தஞ்சையில் உயிர் நீத்து, திருத்துறைப்பூண்டியில் மீளாத்துயில் கொண்ட் தமிழகத்தின் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் சீனிவாச ராவ்."

பி.சீனிவாச ராவி 1961ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குத் தஞ்சாவூரில் காலமானார். அவர் உயிர் பிரிந்தபோது அவருடன் அப்போது தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காத்தமுத்து, தஞ்சை ஏ.வி.ராமசாமி, கே.நல்லகண்ணு ஆகியோர் உடனிருந்தனர். அவர் உடல் பி.ராமமூர்த்தி, எம்.காத்தமுத்து, கே.டி.ராஜு ஆகியோரால் திருத்துறைப்பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முல்லை ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், தொண்டர்களும் கண்ணீர் சிந்த 30-9-1961 இரவு 10-30 மணிக்கு எரியூட்டப்பட்டது.

போராட்டத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்த ஒரு ஏழைப்பங்காளனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வாழ்க தோழர் பி.சீனிவாச ராவ் புகழ்!

2 comments:

  1. மறைந்த தலைவர் சீனிவாச ராவ் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை விட விவசாயிகளின் ஒட்டுமொத்தக் குரலாகவே ஒலித்தார் என்பதே சரி!

    ReplyDelete
  2. நானும் சிறுவயதில் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்ப்புக் கொண்டவன். அது பாரதியைப் படித்ததால் வந்ததோ என்று நினைப்பதுண்டு....
    திரு பி சீனிவா ராவின் பேரைக் கேள்விப் பட்டிருக்கின்றேன் இத்தனை விவரங்களையும் நீங்கள் சொல்லி கேள்விப் படுகிறேன்.
    அப்பழுக்கற்ற அரசியல் வாதிகள் அந்தக் கால கம்யூனிஸ்டுகள்... காந்தியம் தளம் என்றால் கம்யூனிசம் கூரையாக இருந்தால் அந்த சமுதாயம் வறியோரின் வசந்த மாளிகையாகும் என்பது எனது எண்ணம்.

    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete

Please give your comments here