Followers

Friday, November 5, 2010

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை தந்த பல தேசபக்தர்களில் பழனிக்குமாரு பிள்ளையும் ஒருவர். இவர் 24-9-1898இல் பிறந்தார். 1908இல் தேச விடுதலைக்காக நடைபெற்ற போராட்டம் இவரை இழுத்துக் கொண்டது. அப்போது சுயராஜ்ய வேட்கை உள்ளவர்கள் பலர் இந்தியாவில் புதிது புதிதாகத் தோன்றிய பல ஆன்மிக, அரசியல் இயக்கங்களில் சேரந்தனர். அதன்படி இவர் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினர் ஆனார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு சுயராஜ்யக் கட்சி என்று தனியாக காங்கிரசிலிருந்து பிரிந்து போய் ஒரு கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக பழனிக்குமாரு பிள்ளை பதவி வகித்தார்.

சுதந்திரப் போராட்டம் நேரடியாக இந்திய சுதந்திரம் எனும் கோரிக்கையை வைத்துப் போராடுவதற்கு முன்பாக மகாத்மா காந்தியின் ஆணைக்கிணங்க பல சமூக, அடித்தட்டு மக்களைக் காப்பாற்றும் பல இயக்கங்களை அறிவித்தார். அதில் ஒன்றுதான் ஏழை உழைப்பாளிகளை குடியின் கேட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற கள்ளுக்கடை மறியல் போராட்டம். 1922இல் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஒரு வாரம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கூட்டங்களில் பேசும்போது எதிர்கட்சியாக இருந்த ஜஸ்டிஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி இவர் பல முறை அவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். 1930இல் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரையிலான உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை மேற்கொண்டார். அதில் இவர் தொண்டராகக் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், உப்பு சத்தியாக்கிரகத்தை ஆதரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அதன் காரணமாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு சிவகாசி சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இவர் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

1932ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். ராமநாதபுரம், மதுரை ஆகிய ஜில்லாக்களில் காங்கிரஸ் கமிட்டியில் போராட்டக் குழுவில் தலைமை வகித்து இவர் வழிநடத்திச் சென்றதால் இவர் மீது வழக்கு வந்தது. மறியல் நடத்தியக் குற்றத்துக்காக இவருக்கு 2 வருட தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் தண்டனைகளை அலிப்பூர், திருச்சி சிறைகளில் கழித்து விடுதலையானார்.

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் (தீச்சட்டி கோவிந்தன்) மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில் இவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவருக்கெதிராக வலுவான சாடிசிகள் எதுவும் இல்லாமல் போகவே இவர் விடுவிக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவரது தீவிரமான ஈடுபாட்டைக் கவனித்த போலீஸ் இவரை போலீஸ் காவலில் வைத்துக் கொண்டு, சில நாட்களுக்குப் பின் வெளியே விட்டனர்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, ந.சோமையாஜுலு, காமராஜ் ஆகிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் பழனிக்குமாரு பிள்ளை. பெருந்தலைவர் காமராஜருடன் ஒன்றாக இவரும் அவரும் ஒரே சிறையில் இருந்திருக்கின்றனர். இவருக்கு காமராஜருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது விருதுநகரில். அப்போது இவர் அவ்வூரில் ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார். இவர் பொது நலனுக்காக அயராது பாடுபட்டு எப்போதும் பிறருக்கு உதவுவதிலேயே காலத்தைச் செலவிட்டார். இவர் 14-7-1977இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க பழனிக்குமாரு பிள்ளையின் தியாகம்!

1 comment:

  1. பழனிகுமாருப் பிள்ளை போன்ற எளிய தொண்டர்களாலேயே சுதந்திரம் கிடைத்தது. தலைவர்களில் பலரும் பதவியை அனுபவித்துப் பலன் பெற்றனர்.பல முகவரி தெரியாத தொண்டர்களாலேயே இயக்கம் நன்கு வேர் பிடித்தது!

    ReplyDelete

Please give your comments here