Followers

Thursday, April 28, 2011

ஹாஜி முகமது மெளலானா சாகிப்.


ஹாஜி முகமது மெளலானா சாகிப்.

மதுரையைச் சேர்ந்தவர் இவர். தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. 1886இல் பிறந்த முகமது மெளலானா 1910இல் முதன்முதலில் அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டார். இவரது பேச்சு பொருள் பொதிந்ததாகவும், உலக நடப்புகள், நாட்டு நடப்புகள் இவற்றைத் துல்லியமாக விளக்கும் வகையில் இருக்குமென்பதால், இவரது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பர். பல அறிஞ்சர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் இவைகளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி பேசும் பாங்கு அந்த நாளில் மிக அரிதானது. இவர் அரசை எதிர்த்து அழுத்தமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து பேசினால், அரசுத் தரப்பினர் அச்சம் கொள்வர்.

1921இல் நிலக்கோட்டையில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. அப்போது மறியலை எதிர்த்து உள்ளூர் குண்டர்கள் சிலர் கள்ளுக்கடை முதலாளிகளின் ஏவலால் சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்த அங்கு ஓர் கலவரம் உருவாகி, கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறை தொண்டர்கள் மீது கொள்ளை வழக்கைப் பதிவு செய்து வழக்கு நடத்தினார்கள். அந்த வழக்கில் ஹாஜி முகமது மெளலானா அவர்களும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போனபோது இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூரில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அதில் இவர் பேசிய பேச்சுக்காக, மக்களைத் தூண்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932இல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு மறுமுறை இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தீவிரமான மதப் பற்று உள்ளவர் இவர். அதே அளவுக்கு தேசபக்தியும் மிகுந்தவர். இவர் மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மனாகவும், துணை சேர்மனாகவும் பதவி வகித்திருக்கிறார். எந்த நேரத்திலும் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்தவர்.

இவரது இடைவிடாத பணிகளுக்கிடையிலும் ஒவ்வொரு வேளையிலும் தொழுகை நடத்தத் தவற மாட்டார். சிறையிலும்கூட சிறை அதிகாரிகளிடம் போராடி முஸ்லிம்களுக்காகத் தொழுகைக்கென்று தனியிடம் கேட்டு வாங்கி, பாய், விளக்கு, தண்ணீர் இவை கிடைத்திட வழிவகுத்தவர். வாழ்க ஹாஜியார் முகமது மெளலானா சாஹிப் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here