Followers

Friday, July 15, 2011

பொட்டி ஸ்ரீராமுலு

பொட்டி ஸ்ரீராமுலு

ஆந்திர மாநிலத்தின் பிதா பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி. இவருடைய உயிர்த்தியாகம்தான் ஆந்திரா உருவாகக் காரணமாக இருந்தது. ஆகவே ஆந்திர தெலுங்கு மக்கள் போற்றும் தியாகியாக இவர் விளங்குகிறார். நாமும் நமது சென்னை மாகாணம் எப்படி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்தது என்ற வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாமே.
Charminar, Hussaini sagar

காந்தியத்தில் நம்பிக்கையுடைய தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு. சத்தியம், அகிம்சை, தேசபக்தி இவற்றில் ஈடுபாடும் ஹரிஜன் முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர். இவர் சென்னையில் அண்ணாபிள்ளை தெருவில் வசித்து வந்த குருவய்யா மகாலக்ஷ்மம்மா தம்பதியரின் மகனாக 16-3-1901இல் பிறந்தார். தெலுங்கு ஆரிய வைசிய குலத்தைச் சேர்ந்தவர் இவர். இவர்கள் பொதுவாக சைவ உணவை உட்கொள்பவர்காளக இருப்பார்கள். இளம் வயதில் காந்திஜியின் தாக்கம் இவருக்கு இருந்ததால் அவருடைய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது இருபதாம் வயது வரை சென்னையில் படித்தார், பின்னர் Sanitary Engineering படிப்பை பம்பாயில் விக்டோரியா ஜுபிலி டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டில் படித்தார். அந்த நாளில் ரயில்வே மண்டலங்கள் பல பெயர்களில் அறியப்பட்டன. சென்னையில் சதர்ன் மராட்டா ரயில்வே (MSM) என்றும், நாகைப்பட்டினத்திலும் பின்னர் திருச்சியிலும் இருந்த மண்டலம் தென் இந்திய ரயில்வே (SIR) என்றும் இருந்தது. அது போல இவர் Great Indian Peninsular Railwayயில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இவர் சுமார் நான்கு ஆண்டுகள் ரூ.250 மாதச் சம்பளத்தில் பணியாற்றினார். இவர் தனது 26ஆம் வயதில் 1927இல் மனைவியை இழந்தார். அதன் பின் உலக வாழ்க்கையில் பற்று நீங்கியவராக வேலையிலிருந்தும் வெளியேறினார். தனது சொத்துக்களை தனது சகோதரர்களுக்கும் தாய்க்கும் எழுதிக் கொடுத்துவிட்டு மகாத்மா காந்தி நடத்தி வந்த சபர்மதி ஆசிரமத்தில் சென்று சேர்ந்து கொண்டார்.
Hightech city

சொந்த வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தவிர்க்க இவர் நாட்டுச் சுதந்திரப் போரில் தீவிர பங்கு கொண்டார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு கைதானார். 1941இல் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு கொண்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு எனும் போராட்டத்தின் போது இவர் மூன்று முறை கைதானார். குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் கிராம புனருத்தாரண பணிகளை மேற்கொண்டு செயல்பட்டார். ஆந்திர பகுதியில் கிருஷ்ணா ஜில்லாவிலும் இவர் ஏமனி சுப்பிரமண்யம் என்பவர் தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். 1943, 1944 ஆகிய ஆண்டுகளில் நெல்லூர் மாவட்டத்தில் ராட்டையில் நூல் நூற்க மக்களுக்கு ஊக்கம் அளித்தார். இவர் எல்லோரிடமும் சமமாகப் பழகுவதோடு, கிடைத்த இடத்தில் யார் வீடாக இருந்தாலும் அங்கு உணவை ஏற்றுக் கொள்வார். 1946 முதல் 48 வரையிலான காலகட்டத்தில் இவர் நெல்லூர் ஜில்லாவில் ஹரிஜனங்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து மூன்று முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நெல்லூரில் மூலப்பேட்டை எனுமிடத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் ஹரிஜன ஆலய பிரவேசத்துக்காகப் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஹரிஜன முன்னேற்றத்துக்காக இவர் பல முறை போராடியிருக்கிறார்.
Osmania University

இவருடைய போராட்டங்கள் காரணமாக மாவட்ட கலெக்டர்கள் வாரத்தில் ஒரு நாள் ஹரிஜன முன்னேற்றம் குறித்த பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர். வயதான காலத்தில் இவர் நெல்லூரில் தங்கியிருந்தார். ஹரிஜன முன்னேற்றம் தான் இவருடைய வாழ்க்கையின் குறிக்கோள். அந்த வாசகங்கள் அடங்கிய அட்டையை இவர் எப்போதும் அணிந்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார். இப்படி இவர் தெருத் தெருவாக பிரச்சார அட்டையைத் தூக்கிக் கொண்டு அலைவதைக் கண்டு இவர் ஒரு மனநலம் இல்லாதவர் என்றுகூட மக்கள் கருதத் தொடங்கினர்.
Location of Hyderabad

அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ் பேசும் பகுதிகள் தவிர, ஆந்திரத்தின் பெரும் பகுதி, கன்னடம் பேசும் பெல்லாரி போன்ற பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவைகளெல்லாம் சென்னை மாகாணத்திற்குட்பட்டிருந்தன. மொழிவாரி மாகாணப் பிரிவினை அப்போது ஏற்படவில்லை. ஆகையால் பொட்டி ஸ்ரீராமுலு சென்னை மாகாணத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களின் நலன்களைக் காப்பதற்காகவும், தெலுங்கு மக்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தைக் காப்பதற்காகவும், இந்த தெலுங்கு மக்களின் உரிமைக் குரலை அரசாங்கம் கேட்கவேண்டும் தனி ஆந்திர மாநிலத்தைப் பிரித்து அமைத்திட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். இவருடைய தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி இவர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.
Tirupathy Venkateshwara temple

இவரது போராட்டத்தைக் கண்டு பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இவருக்கு ஒரு உறுதி மொழி அளித்தார். தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழிதான் அது. இந்த உறுதி மொழியின் பேரில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். அதன் பிறகு உடனடியாகவோ, பல காலம் கழித்தோ தனி ஆந்திர மாநிலம் பிரிப்பது குறித்து எந்த நடவடிக்கையைக் காணோம், இப்போதைய தெலுங்கானா பிரச்சினை இழுத்தடிப்பது போலத்தான் அப்போதும் நடந்தது. பார்த்தார் பொட்டி ஸ்ரீராமுலு. இவர்கள் சும்மா வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று நினைத்தார். ஆகையால் இவர் மறுபடியும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 1952 அக்டோபர் 19 அன்று சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் தனி ஆந்திரம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.
Godavari bridge near Rajamundhry

அவரது கோரிக்கையின் முக்கிய அம்சம் சென்னை மாநகரம் புதிதாக அமையப்போகும் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஆகவேண்டும் என்பதுதான். மிக சாதாரணமாகத் தொடங்கிய உண்ணாவிரதம் ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவைப் பெறாமலேயே, பொதுமக்களிடையே ஒரு பரபரப்பை உண்டாக்கத் தொடங்கியது. இந்த கோரிக்கைகள் குறித்து பல வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகும் கூட அன்றைய அரசாங்கம் இவைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவு எதையும் அறிவிப்பதாகத் தெரியவில்லை. உண்ணாவிரதம் தொடர்ந்து நடந்தது. நாளாக நாளாக பொட்டியின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. அவர் நிலைமை கவலைக்கிடமாக ஆகியது. இந்த நிலையில் 1952 டிசம்பர் மாதம் 15 நள்ளிரவு, 16 விடியற்காலம் பொட்டி ஸ்ரீராமுலுவின் ஆவி பிரிந்தது.
Andhra Pradesh

தனி ஆந்திர மாநில கோரிக்கைக்காக பொட்டியின் உயிர் தியாகம் நிறைவேறியது. தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு மக்களின் ஏகோபித்த போற்றுதலுக்கு உள்ளானார். அவரது இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு மக்கள் அவரது தியாகத்தைப் பாராட்டி கோஷங்கள் எழுப்பினர். சவ ஊர்வலம் மெளண்ட் ரோடை அடைந்த போது, ஊர்வலம் மிகப் பெரியதாக ஆகியது. கோஷங்களுக்கிடையே ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அந்தப் பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன. கலவரம் நடக்கும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. மற்ற பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து சேர்ந்தனர், கலவரம் பெரிதாகியது. சென்னை மாநகரில் தொடங்கிய இந்த கலவரங்கள் மெல்ல பரவி, ஆந்திரப் பகுதிகளான விஜயநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமகேந்திரபுரம், எல்லூரு, குண்டூர், தெனாலி, ஓங்கோல், நெல்லூர் ஆகிய இடங்களிலும் கலவரம் தொடங்கியது. அனகபள்ளி எனும் ஊரிலும் விஜயவாடாவிலும் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்ந்து நாலைந்து நாட்களாம வேகம் அடைந்து கொண்டிருந்தது. சென்னை நகரிலும் ஆந்திர நகரங்களிலும் கலவரம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது.
Kuchipudi dance

1952 டிசம்பர் 19ஆம் தேதி பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா எனும் புதிய மாநிலம் பிரிக்கப்படும் என்ற முடிவை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கலவரங்கள் அடங்கின. புதிய மாநிலம் அமைவதை எதிர்பார்த்து ஆந்திர மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். 1953 அக்டோபர் முதல் தேதி கர்நூலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திரா எனும் புதிய மாநிலம் உருவாகியது. எனினும் ஹைதராபாத் சமஸ்தானத்துக்குட்பட்ட தெலுங்கு பேசும் தெலுங்கானா பகுதிகள் 1956 வரை ஹைதராபாத்துடனேயே இருந்து வந்தது. 1956 நவம்பர் 1ஆம் தேதி தெலுங்கானா பகுதிகள் ஆந்திரத்துடன் சேர்ந்து ஆந்திரப் பிரதேசம் என்று பெயர் பெற்று விளங்கிற்று. இந்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்துக்கு ஹைதராபாத்தை தலைமையிடமாக அரசு அறிவித்தது.

1956இல் அதே நாளில் கேரளா என்றும் கர்நாடகா என்றும் புதிய மாநிலங்கள் தோன்றின. அதனைத் தொடர்ந்து பம்பாய் மாகாணத்திலிருந்து குஜராத், மஹாராஷ்டிரா எனும் மாநிலங்கள் 1960இல் உருவாகின. தென் இந்தியாவில் பல தென்னிந்திய மொழிகள் பேசப்படுவதால் ஒன்றுபட்ட சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மொழிவாரி மாநிலம் என்பது பண்டித ஜவஹர்லால் நேரு செய்த புரட்சிகரமான நடவடிக்கை. மொழியின் அடிப்படையில் மொழிவாரி மாநிலம் அமைந்த காரணத்தால் அந்தந்த மொழிகள் வளரவும், மேன்மையடையவும் வழிவகுத்தது.

புதிய ஆந்திர மாநிலம் உருவாவதற்காக சென்னை நகரில் பொட்டி ஸ்ரீராமுலு 82 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அவர் புதிய ஆந்திரா மாநிலத்துக்கு சென்னை நகரம் தலைநகராக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார். சென்னை இல்லாத ஆந்திர மாநிலம் தலையில்லாத முண்டம் என்று அவர் வர்ணித்தார். அவர் உண்ணாவிரதம் இருந்த இந்த 82 நாட்கள் வரையிலும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும், சென்னை மாகாண பிரதமர் (அன்று அதுதான் முதல்வருக்குப் பெயர்) ராஜாஜியும் என்ன காரணத்தினாலோ அவருடைய உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்தவோ, மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ஆகாரம் கொடுக்கச் செய்யவோ முயற்சி செய்யவில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்ததில் இவர்கள் இருவரும் இந்திய ஒற்றுமையில் நம்பிக்கை வைத்திருந்ததும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து போனால் அவரவர் போட்டியில் ஒருவருக்கொருவர் பூசலிட்டு இந்திய ஒற்றுமை அழிந்து போகும் என்று நம்பியதாகத்தான் இருக்க முடியும். எனினும் இந்திய வரலாற்றில் ஜதின் தாஸ் ஒருவர்தான் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர், மற்ற அனைவரும் தடுக்கப்பட்டோ, கட்டாயப்படுத்தி உண்ணா நோன்பை கைவிட்டிருக்கிறார்கல். பொட்டி ஸ்ரீராமுலு அதற்கு விதிவிலக்காக அமைந்து விட்டார். அவரது உயிர்த்தியாகம் புதிய மொழிவாரி மாநிலம் பிரியக் காரணமாக இருந்தது.

Jawaharlal Nerhru & Gandhiji
இந்த உயிர்த்தியாகத்தின் காரணமாக பொட்டி ஸ்ரீராமுலுவை "அமரர்" எனும் பொருளில் தெலுங்கில் "அமரஜீவி" என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். எப்படியிருந்தாலும் ஆந்திர மக்கள் பொட்டி ஸ்ரீராமுலுவை அமரர் ஸ்ரீராமுலு என்று என்றென்றும் மனதில் வைத்துப் போற்றுவார்கள்.

No comments:

Post a Comment

Please give your comments here