Followers

Thursday, November 29, 2012

ஏ.என்.சிவராமன்

ஏ.என்.சிவராமன்

ஆம்பூர் நாணு ஐயர் சிவராமன் எனும் இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் "தினமணி" பத்திரிகையும், அதன் தலையங்கங்களும், கட்டுரைகளும்தான் நமக்கு நினைவுக்கு வரும். அந்த அளவு மக்கள் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டவர் ஆசிரியர் ஏ.என்.சிவராமன். 97 வயது வரை வாழ்ந்து மறைந்த இந்த மாமனிதர் பத்திரிகை உலகுக்கு ஓர் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர், சுதந்திரப் போர் தியாகி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயமானாலும், மிக எளிமையாகக் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றவர் என்பதெல்லாம் நம் நினைவுக்கு வரும்.

இவருக்கு 17 மொழிகள் தெரியும், அதில் பிரெஞ், சம்ஸ்கிருதம், உருது இவைகளும் அடங்கும்.1988இல் இவருக்கு பி.டி.கோயங்கா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருது பத்திரிகைத் துறையில் சிறப்பான பணிக்காக அளிக்கப்படும் கெளரவம் ஆகும்.

பல்முனைச் சிறப்புக்களுக்கு உரியவரான ஏ.என்.சிவராமன் 1904 மார்ச் 1ஆம் தேதி கொச்சியில் பிறந்தவர். நெல்லை மாவட்டத்துக் காரரான இவரது இளம் வயதுக் கல்வி திரு நெல்வேலி மாவட்டத்திலுள்ள அவர்கள் கிராமத்தில்தான் தொடங்கியது. நெல்லை மாவட்டம் பல தேசபக்தர்களை உருவாக்கிய இடம். அந்த வரிசையில் ஏ.என்.சிவராமனும் சேர்ந்து கொண்டார்.

பள்ளிப் பருவத்திலேயே ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசண்ட் அம்மையார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இவர் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1921இல் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய போது தனது 17ஆம் வயதில் கல்லூரியில் இன்டர் படித்துக் கொண்டிருந்த இவர் அதில் பங்கு கொண்டார். அடுத்த ஆண்டிலேயே இவரது முதல் சிறை தண்டனையைப் பெற்றார். இதனால் இவர் கல்லூரி படிப்பு முடிவுக்கு வந்தது.

சில காலம் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்த இவருக்குப் பல நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் இந்த நாட்டின் பாரம்பரியம், வரலாறு, நாம் அடிமைப் பட்ட விவரங்கள், சுதந்திர உணர்வு ஆகியவைகளைக் கற்றுக் கொண்டார். இந்த ஞானமெல்லாம் அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் வெளிப்பட்டு கட்டுரைகளாக வெளிவந்தன. ஒவ்வொரு நாளும் இவர் படிப்புக்காக ஒதுக்கும் நேரம் மிக அதிகம்; இந்தப் பழக்கத்தைத் தன் இறுதி நாட்கள் வரை கடைப்பிடித்து வந்தார்.

அந்தக் காலத்தில் டி.எஸ்.சொக்கலிங்கம் என்பவர் பிரபலமான பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அவர் அப்போது "காந்தி" என்றொரு பத்திரிகையை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையில் சிவராமன் முதலில் பத்திரிகைத் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்துக்காகத் திருச்சியிலிருந்து நடைப்பயணமாக வேதாரண்யம் சென்று உப்பு எடுக்கும் சத்தியாக்கிரகப் போரில் இவரும் நூறு பேரில் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டார். அந்தப் போராட்டம் காரணமாக இவருக்கு 20 மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அந்த தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் இவர் பத்திரிகைத் தொழிலுக்குத் திரும்பினார்.

முதன்முதலாக இவரைப் பத்திரிகைத் தொழிலுக்குக் கொண்டு வந்த டி.எஸ்.சொக்கலிங்க்கம் 1934இல் தொடங்கப்பட்ட "தினமணி" இதழில் ஆசிரியர் ஆனார். அப்போது ஏ.என்.சிவராமன் அவரிடம் துணை ஆசிரியராகப் பதவி ஏற்றார். 1944 வரை அதன் ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் பதவி விலகியபின்னர் ஏ.என்.சிவராமன் "தினமணி"யின் ஆசிரியர் ஆனார். அப்போது தொடங்க்கி 1987 வரை அந்த தேசியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு இவரது தலையங்கங்கள் மூலமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சீர்காழியில் உப்பனாறு பாலத்தில் சில இளைஞ்சர்கள் வெடிவைத்த வழக்கில் இவரும், தினமணி இராமரத்தினம் போன்றவர்களும் கைதாகி குற்றவாளிகளாக ஆக்கப் பட்டனர்.
"தினமணி"யில் இவர் ஆசிரியராக இருந்த அந்த காலம் தான் இந்திய வரலாற்றின் சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டமாக இருந்தது. இயற்கையிலேயே தேசபக்தி மிக்க இவரிடம் சக்தி மிகுந்த பத்திரிகைத் துறை கிடைத்த போது இவருடைய பங்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும். தினமணி சுதந்திர எழுச்சிக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது. "தினமணி" என்றால் தேசியம் என்று மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். 1947இல் இந்தியா சுதந்திரம் அடையும் நேரம் நெருங்கி வந்து கொண்டிருந்த காலத்தில் அதுவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் நாட்டம் காட்டிக் கொண்டிருந்த தினமணி இப்போது சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றம், கல்வி, தொழில் வளர்ச்சி குறித்தெல்லாம் அக்கறை காட்டத் தொடங்கியது.

அந்த காலத்தில் "தி ஹிந்து" எனும் ஆங்கில நாளிதழுக்கு ஒரு நற்சான்று உண்டு. அந்தப் பத்திரிகையில் செய்தி என்றால் அது முழு உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதே நம்பகத் தன்மையையும், தேசபக்தி உணர்வையும், முன்னேற்றத்துக்குப் பாடுபட வேன்டிய அவசியத்தையும் தினமணி மக்கள் மனங்களில் விதைத்தது. 'தேசியம்' எனும் சொல்லுக்கு எடுத்துக் காட்டு 'தினமணி' என்பதை எல்லா வகையிலும் நிரூபித்து வந்தது.

சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகள் கழிந்த பின்னரும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் பயன்பாடுகள் சாதாரண மக்களிடம் சென்றடையவில்லை என்பதை கவனித்த ஏ.என்.சிவராமன் அரசின் நடைமுறைகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டத் தொடங்கியது. அப்போது ராஜாஜி தலைமையில் உருவான சுதந்திராக் கட்சி, சுயராஜ்யா பத்திரிகை போன்றவற்றின் கருத்துக்களையொட்டி 'தினமணி'யின் எண்ணங்களும் சார்புடையனவாக அமைந்தன. 1967 தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பதவி இழந்து தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தி.மு.க.வின் வெற்றி சாத்தியமாகியது. இந்த மாற்றத்தில் ஏ.என்.சிவராமனின் எழுத்துக்களும் காங்கிரசுக்கு எதிராக அமைந்தன என்பது பலரது எண்ணம்.

1975இல் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சியில் நாட்டில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. பத்திரிகை தணிக்கை முறை அறிமுகமானது. அரசியல் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சிவராமன் பலத்த குரல் எழுப்பினார். அரசின் இந்தப் போக்கை எதிர்க்கும் வகையில் இவர் பத்திரிகையில் தலையங்கம் எழுதப்படும் இடம் காலியாக விடப்பட்டு பத்திரிகை வெளிவந்தது.

ஸ்தாபன காங்கிரசில் இருந்த காமராஜ் இந்தப் போக்கைக் கண்டு மனம் வெதும்பி திடீரென்று காலமாகி விட்டார். நெருக்கடி நிலையின் முதல் களபலி காமராஜரின் மரணம் என்று ஏ.என்.சிவராமன் தன் பத்திரிகையில் எழுதினார். காமராஜரின் மரணத்தோடு தன்னுடைய பேனாவும் எழுதும் வேகத்தை இழந்து போனது என்றார். நெருக்கடி நிலை அகற்றப்பட்ட பிறகு சிவராமன் சொன்னார், இந்த நிலைமைக்காக காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று.

1980களில் போஃபார்ஸ் பீரங்கி ஊழல் நாட்டையே குலுக்கியது. ஜனாதிபதி ஜெயில் சிங்குக்கும் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து பேதங்கள் சிவராமனை வருத்தியது. 'தினமணி'யில் அவருடைய கையெழுத்திட்டு வெளியான ஒரு தலையங்கத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லையென்றால் அது இந்த நாட்டின் ஜனனாயக முறைக்குக் கேடு விளைவிக்கும் என்று எழுதினார். 1987இல் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தன் வாழ் நாள் இறுதி வரை படித்தும், எழுதியும் வந்தார். வாழ்க ஏ.என்.சிவராமன் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here