Followers

Monday, May 17, 2010

மதுரை ஜார்ஜ் ஜோசப்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
51. மதுரை ஜார்ஜ் ஜோசப்.
எழுதியவர்: வெ. கோபாலன்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரையின் பங்கு மகத்தானது. தமிழகத்தின் கலாச்சார தலைநகரமாக விளங்கும் இந்த மதுரை இன்றும்கூட புதிதாக தோன்றுகின்ற அரசியல் இயக்கங்களாகட்டும், ஏற்கனவே செயல்படுகின்ற இயக்கங்களின் மாநாடுகளாகட்டும் இந்த மதுரை நகரத்தில் நடந்தால் மிகவும் பிரகாசமான எதிர்காலம் அமைந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அப்படிப்பட்ட மதுரை மண்ணில்தான் எத்தனையெத்தனை அரசியல் இயக்கங்கள்; எத்தனையெத்தனை அரசியல் நிகழ்ச்சிகள். வெகுகாலம் நமது ஆலயங்களின் கதவுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடைக்கப்பட்டிருந்ததே, அப்போது அதை அனைவருக்கும் திறந்து விட்ட பெருமை மதுரையைத்தான் சேரும். ராஜாஜியின் விருப்பப்படி மதுரை தியாகி ஏ.வைத்தியநாத அய்யர் தலைமையில் ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசம் செய்தது இந்த மதுரையில்தான். அந்த ஆலயப் பிரவேசத்தை எப்படியும் தடுத்துவிடுவது என்று ஒரு சாரார் தலைகீழாக நின்று முயன்றதும் இந்த மதுரையில்தான். ஆலயப் பிரவேசம் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற தன் முழு பலத்தையும் பசும்பொன் தேவர் அவர்கள் செலுத்தியதும் இந்த மதுரையில்தான். அதே பசும்பொன் தேவர் ஓர் வழக்கில் கைது செய்யப்பட்டதும் இந்த மதுரையில்தான். அடே அப்பா! இந்த மதுரை மண் எத்தனை வரலாற்றுச் செய்திகளைத் தன் மடியில் வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

அத்தகைய புனிதமான நகரத்தில் காங்கிரஸ் இயக்கம் எத்தனையோ தலைவர்களையும் தொண்டர்களையும் உருவாக்கியிருக்கிறது. மதுரை காந்தி என்ற பெயர் என்.எம்.ஆர்.சுப்பராமனுக்கு. அவர் காலத்திலேயே காந்திய கொள்கையால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்திலும், காங்கிரஸ் தொண்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்காக ஆஜராகித் தன் வாதத்திறமையால் பலரது விடுதலைக்குக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ஜோசப் ஆவார்.

ஜார்ஜ் ஜோசப் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டவர். மக்கள் இவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தனர். அந்த பெயர் "ரோஜாப்பூ துரை" என்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மகாத்மா இந்திய சுதந்திரப் போரை தலைமை ஏற்று நடத்துமுன்பாகவே ஜார்ஜ் ஜோசப் 1917இல் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தக் காலத்தில் அரசியல் போராட்டங்கள் வலிமையடையாமலும், தீவிரமான அரசியல் இயக்கங்கள் நேரடியாக சுதந்திரம் பெற போதுமான அளவில் நடவடிக்கைகள் எடுக்காத காலகட்டத்தில் இந்தியர்களின் பிரச்சினைகளை இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய தலைவர்களைக் கொண்ட குழுவொன்று இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் மூன்று பேர் உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர்தான் மதுரை ஜார்ஜ் ஜோசப். மற்ற உறுப்பினர் சேலம் பி.வி.நரசிம்மையர். இவரைப் பற்றி மகாகவி பாரதியார்கூட தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அன்றைய சென்னை சட்டசபையில் இவர் பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். மூன்றாவது உறுப்பினர் மாஞ்சேரி ராமையா என்பவராவார். இவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் புறப்பட்டு கப்பலில் சென்றனர். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் இவர்களது வரவை விரும்பவில்லையாதலால் தடைசெய்தது. ஜிப்ரால்டர் வரை இவர்கள் போன கப்பல் போய்ச்சேர்ந்தபோதும், இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல் இவர்கள் இந்தியா திரும்ப நேர்ந்தது.

தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இவர் மிகவும் அக்கறை காட்டினார். சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காக தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். இது 1918ஆம் ஆண்டில் நடந்தது. 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாடுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். இவரது மனைவியும் இவரது நடவடிக்கைகள் அனைத்திலும் ஒத்துழைப்புக் கொடுத்ததோடு தாமும் பல போராட்டங்கலிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கணவருக்கு வலது கரமாகச் செயல்பட்டார்.

இவர் பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்த பிரபலமான வழக்கறிஞர். பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இவர் மட்டும் தன் தொழிலில் கவனம் செலுத்தி சம்பாதிப்பது என்று இருந்திருபாரானால் பெரிய கோடீஸ்வரராக ஆகியிருக்கமுடியும். என்றாலும்கூட நாட்டுப் பற்று, ஏழை எளியவர்களின்பால் உள்ள அன்பு, தொழிலாளர் பிரச்சினைகளில் இவருக்கிருந்த ஈடுபாடு இவற்றின் காரணமாக இவர் தன் தொழிலைக் காட்டிலும், நாட்டுச் சேவையையே பெரிதும் மதித்துப் போற்றினார். இந்த காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மதுரை ஜார்ஜ் ஜோசப்பை பெரிதும் கவர்ந்தது. அதில் முழுவதுமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயகத்தில் ஈடுபடுவதற்காக, பெரும் வருவாய் ஈட்டித்தந்துகொண்டிருந்த தனது வக்கீல் தொழிலை உதறித் தள்ளினார்.

ஆங்கில பாணியிலான தனது உடை பழக்கத்தை மாற்றிக்கொண்டு தூய முரட்டுக் கதராடை அணையலானார். மகாத்மா அறிவித்த எல்லா போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப்தான் முன்னணியில் இருந்தார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அலகாபாத் நகரத்திலிருந்து "இண்டீபெண்டெண்ட்" எனும் பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகைக்கு ஜார்ஜ் ஜோசப்தான் அதிபர். அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரைகளுக்காக இவர் அலகாபாத்தில் கைதுசெய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றார். இவரது சிறை தண்டனை நைனிடால் எனும் இடத்தில் கழிந்தது. சிறையில் இவருடன் இருந்த முக்கியமான தலைவர்கலில் ஜவஹர்லால் நேருவும் ஒருவர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அப்போது மகாத்மா காந்தி நடத்தி வந்த "யங் இந்தியா" எனும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியரானார். அந்தப் பத்திரிகை வாயிலாக இவர் எழுதிய கட்டுரைகளின் மூலம் இவர் பல தேசபக்தர்களை உருவாக்கினார். சுதந்திரக் கிளர்ச்சி படித்த மக்கள் உள்ளங்களில் எழ இவரது எழுத்துக்கள் காரணமாயிருந்தன. உலகத் தலைவர்கள் பலருடன் இவர் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர்களில் ராம்சே மக்டனால்டு, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோரும் அடங்குவர்.

1937ஆம் வருடம் காங்கிரஸ் கட்சி சட்டசபைக்கு போட்டியிட்டு பெரும்பாலான இடங்களை வென்று ஆட்சி அமைத்தது நமக்கெல்லாம் தெரியும். அந்த சட்டசபையில் ஜார்ஜ் ஜோசப் அங்கம் வகித்தார். ஓராண்டு காலம் அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த சமயம் 1938இல் இவர் இம்மண்ணுலக வாழ்வை நீத்து அமரர் ஆனார். வாழ்க ஜார்ஜ் ஜோசப் அவர்க ளின் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here