Followers

Thursday, September 2, 2010

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
திருமதி மங்களம் பகவதி, பி.ஏ.,பி.எட்.,
திருவாரூர்.

நீலகண்ட பிரம்மச்சாரி - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன். தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன். இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர். இவர் ஒருவருக்காக இருபதுக்கும் மேற்பட்ட சிறை அறைகள் கொண்ட பகுதியில் நடுவில் ஒரு அறையத் தேர்ந்தெடுத்து அதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர். இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், பர்மாவில் ரங்கூன் சிறையிலும் அடைபட்டுக் கிடந்தவர். தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88ஆவது வயதில் 1978ம் வருஷம் மார்ச் மாதம் 4ம் தேதி காலமானவர். நம் காலத்தில், நம் கண்முன்பாக வாழ்ந்து மறைந்த இந்த வீர புருஷனின் வரலாற்றை மக்கள் மறந்து விடக்கூடாது. இவரை நந்தி மலையில் மகாத்மா சந்திக்க முயன்றும், இவர் இருந்த குன்று மிக உயரத்தில் இருந்தமையால் மகாத்மாவின் செயலாளர் மகாதேவ தேசாய் சென்று இவரை அழைத்து வந்து மகாத்மாவைச் சந்திக்க வைத்த வரலாறும் நமக்குக் கிடைக்கிறது. யார் இந்த நீலகண்ட பிரம்மச்சாரி? இவரது சாதனைகள்தான் என்ன என்பதை இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டாமா? தேசப்பற்று என்பது என்ன, அதற்காக ஒருவர் எந்த அளவுக்குத் தியாகங்களைப் புரியலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நீலகண்ட பிரம்மச்சாரியின் வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பார்த்தால் போதும். இனி இந்த தியாக புருஷனின் வரலாற்றைச் சிறிது பார்க்கலாம்.

திருவையாறு பாரதி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம் ஒவ்வோராண்டும் "மகாகவி பாரதியார் பற்றிய ஓர் அஞ்சல் வழிக் கல்வியை" நடத்தி வருகின்றனர். அதில் இவ்வாண்டு ஒரு பாடத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி எழுதிவிட்டு, அதுகுறித்த ஒரு கேள்வியையும் கேட்டிருந்தனர். அதற்கு விடை தெரிந்து கொள்ள முயன்றபோது சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட திரு ரா.அ.பத்மநாபன் எழுதிய "புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி" எனும் நூல் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த நூல் இப்போது கிடைப்பதில்லை, அதனை மறுபதிப்பு செய்து வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த நூலில் உள்ள சில செய்திகளை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1911ல் மணியாச்சி ரயில் நிலயத்தில் வாஞ்சிநாதன் எனும் வீர தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டபோதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. இவர் 1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகவாகப் பிறந்தார். இவருக்கு 2 தம்பிகள் 5 தங்கைகள். இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்த செல்வம் வறுமைதான். சீர்காழி இந்து உயர்நிலைப்பள்ளியில் 4ம் பாரம் எனும் ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இவர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்த 'ஊட்டுப்புரை' சத்திரத்தில் தங்கிக் கொண்டார். அங்கு சிலகாலம் இருந்தபின் சென்னைப் பட்டணம் வந்து திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் டி.யு.சி.எஸ்.சில் பணிபுரிந்தார். அவரது நேர்மைத் திறத்தால் இவர் அங்கு சாமான்கள் வாங்கும் முகவராக நியமனமானார். அப்போது 1905ல் லார்டு கர்சான் வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர். அவர்களில் நமது நீலகண்டனும் ஒருவர்.

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. அப்போது சென்னை வந்திருந்த தூத்துக்குடி தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நீலகண்டனுக்கு பாரதியார் அறிமுகம் செய்து வைத்தார். அவரது சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுத் தருவதாக நீலகண்டன் உறுதியளித்தார். எனினும் அப்படி செய்ய முடியாமல் அரசியல் வேலைகள் நீலகண்டனை தன்வசம் இழுத்துக் கொண்டன. வங்காளத்து புரட்சி வீரரும் தேசபக்தருமான சந்திரகாந்த் சக்ரபர்த்தி என்பவர் சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் நீலகண்டனைத் தனது புரட்சி இயக்கத்து ஏற்றவராகக் கருதியதால் அவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு செயலாற்றினார்.

தஞ்சை மாவட்ட ஒரு ஆசாரமான பிராமண குடும்பத்துச் சின்னங்களோடு விளங்கிய நீலகண்டன், தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியை எடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார். தமிழகத்தின் முதன்முதல் குடுமியை எடுத்த இந்து இவராகத்தான் இருப்பார். 1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் இங்கும் தொடங்கப்பட்ட இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். இதில் பாரதியாரின் உறவினர் சங்கரகிருஷ்ணன் என்று ஒருவர். இவர் 1908ல் சென்னை வந்தார். இந்த காலகட்டத்தில் நீலகண்டனை இரகசியப் போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். இவர் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். பிரம்மச்சாரி என்பதற்கு திருமணமாகாமலும், பெண்கள் தொடர்பே இல்லாதவர் எனும் பொருள்படக்கூடிய சொல். இருந்த போதிலும், குடும்ப பந்தங்களில் ஈடுபடாத, கொண்ட குறிக்கோளுக்காகப் பாடுபட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற பொருளில் அவர் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டார். மேலும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொள்ளாமல் பொதுவாக இந்தத் திருநாட்டின் தேசபக்தன் எனப் பொருள்படும்படி இந்தச் சொல்லை அவர் பயன்படுத்தினார்.

போலீசாரின் கண்களில் படாமல் தங்களது புரட்சி இயக்க வேலைகளில் ஈடுபட இந்த "அபினவ பாரதம்" எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு. பாரதியார் சென்னையிலிருந்து பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த போது, நீலகண்டனும் அங்கே சென்றார். சைகோன் சின்னையா என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் இவர் "சூர்யோதயம்" எனும் பத்திரிகையைத் தொடங்கி அதில் பாரதியாரின் சீடனும், தம்பி என்று அவரால் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பரை பணியில் அமர்த்திக் கொண்டார். வ.உ.சியின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறைவாகப் புதுச்சேரியில் இருந்தார். இவர் வ.உ.சிக்குத் தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுத்தார். அதையறிந்த நீலகண்டன் தனி நபர் கொலைகளில் தனக்கு நம்பிக்கையில்லை எனவும் நாட்டில் ஒரே சமயத்தில் புரட்சி செய்து வெள்ளையனை வெளியேற்ற வேண்டுமென்பதே தான் ஈடுபட்டுள்ள அபினவ பாரத இயக்கத்தின் நோக்கம் என்பதையும் தெளிவு படுத்திவிட்டு ஆஷ் கொலைசெய்யப்படும் போது தான் இங்கிருந்தால் தன்னையும் அதில் பிணைத்து விடுவார்கள் என்று எண்ணி வடக்கே காசிக்குச் சென்று அங்கு ஓர் தேசபக்தர் வீட்டில் தங்கி இருந்தார்.

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிக்கு அவர் வன இலாகாவில் வேலை பார்த்து வந்ததால் தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் போலீசிடம் சிக்கியதால் வாஞ்சிக்கு துணை நின்றதாக நீலகண்டனும் தேடப்பட்டார். 1911 ஜூலையில் நீலகண்டன் கல்கத்தா போலீஸ் கமிஷனர் சர் சார்லஸ் டக்கார்டு என்பவருக்குத் தான் சரணடைய விரும்புவதாகக் கடிதம் எழுத, இவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார். இவரை விசாரணை செய்த நீதிபதி ஏ.எம்.சி.டாம்போ என்பவர் இவர் மீது மரியாதை கொண்டு நெல்லை நீதிமன்றத்தில் இவர் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட்டபோது, இவரது தோற்றத்தையும், முகத்தில் இருந்த தேஜசையும் கண்டு இவருக்கு ஒரு நாற்காலி கொடுத்து அமர வைக்குமாறு உத்தரவிட்டார். நீலகண்டனை அந்த நீதிமதி மிகவும் மரியாதையோடு நடத்தியதோடு, அவர் மீது தனது வாழ்நாளின் கடைசி வரை பக்தி பாராட்டி அவருக்கு சகல மரியாதைகளையும் செய்து வந்தார், இவரது நண்பராகவும் திகழ்ந்தார்.

ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. சங்கரகிருஷ்ணனுக்கு 22. 1912 பிப்ரவரி 12ல் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை. விசாரணையின்போது சென்னையிலும் தண்டனை காலத்தைக் கோவை சிறையிலும் கழித்தார். சிறையிலும் இவரது புரட்சி ஓயவில்லை. சிறையில் தனக்குக் கடுங்காவல் தண்டனை என்பதால் விறகு வெட்டச் சொல்லுகிறார்கள், நான் ஒரு அரசியல் கைதி எனக்கு இந்த வேலைகள் தரக்கூடாது, படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார். இவர் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாறியது. அரிசிச் சொறும் படிக்க நூல்களும் தரப்பட்டன. ஜெயில் உடை நீக்கி சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து இவர் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார், பிறகு பெல்லாரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பிரிட்டிஷ் ஆதிக்க வர்க்கம் அந்த நாளில் சுதந்திரப் போர் வீரர்களை எந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தி யிருந்தால் நீலகண்டன் போன்ற மன உறுதி படைத்த வீரர்கள் கூட தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 1914ல் உலக யுத்தம் தொடங்கியது. அப்போது இவர் சிறையிலிருந்து தப்பியோடி பிறகு மாட்டிக்கொண்டு அதற்கும் சேர்த்துத் தண்டனை அடைந்தார்.

இவர் சிறையில் ஒழுங்காக நடந்துகொண்டால் ஏழாண்டு சிறை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றார்கள். ஆனால் இவரது செயல்பாடுகளால் இவரது தப்பிச் செல்லும் முயற்சியும் சேர்த்து இவருக்குத் தண்டனைக் காலம் ஏழரை ஆண்டுகளாக்கப்பட்டது. 1912 பிப்ரவரி 15ல் தொடங்கி இவரது தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாரைத் தொடர்பு கொண்டார். பாரதியாரும் இவருக்கு அவ்வப்போது தனது சிரம தசையிலும் உதவி புரிந்தார். பாரதியார் காலமானபோது இவரைத்தான் பாரதிக்கு கொள்ளிவைக்கச் சொன்னார்கள், இவர் மறுத்துவிடவே அந்தப் பொறுப்பு பாரதியாரின் உறவினரும், தமிழ்நாடு இந்தி பிரச்சார இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஹரிஹர சர்மாவுக்குச் சென்றது.

பாரதியார் இவருக்கு அறிமுகப்படுத்திய தொழிலாளர் இயக்கங்களின் முன்னோடியும், பொதுவுடமைவாதியுமான தேசபக்தர் சிங்காரவேலரின் தொடர்பு இவரைப் "போல்ஷ்விக் பிரசுரங்கள்" வெளியிடத் தூண்டின. அது ஆயுதப் புரட்சியைத் தூண்டும் பிரசுரங்கள். இந்த குற்றத்துக்காக இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தண்டனை 1922 முதல் தொடங்கியது. சிறையில் நன்னடத்தைக்காக சில ஆண்டுகள் குறைக்கப்பட்டு 1930ல் ரங்கூன் மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். இந்த தண்டனைக் காலம் முழுவதும் இவர் நாட்டின் பல்வேறு ஊர்களில் இப்போது பாகிஸ்தானிலுள்ள முல்டான், பெஷாவர், பர்மாவில் ரங்கூன் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார். விடுதலையானதும் சென்னை திரும்பி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி', 'இந்து' பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

இளம் வயது தொடங்கி புரட்சிப் பாதையில் பயணித்த நீலகண்டனுக்கு இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 'பரிவிராஜக' (பற்றுக்களை விடுத்த சந்நியாச வாழ்க்கை) வாழ்க்கையை மேற்கொண்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் இவை எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்வது அவருக்கு ஒரு மாறுதலாக இருந்தது. இந்த வாழ்க்கையில் அவர் பெயர், புகழ், குற்றச்சாட்டு என்று எதையும் சுமக்காமல் வாழ்க்கை கனமில்லாமல் இருந்ததை உணர்ந்து கொண்டார். வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்த இவர் வேறு எதிலும் மனம் ஈடுபடாதிருக்க வேண்டி சதா சர்வ காலமும் அனைத்துக்கும் மூலாதாரமான பிரணவ மந்திரமான "ஓம்" எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார். இவரை இப்படிப் பார்த்தவர்களுக்கு இவர் எருக்கஞ்சேரி நீலகண்டனாக இல்லாமல், சுவாமி ஓம்காரானந்தாவாகத் தெரிந்தார். இவரது மன உறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். பரதேசி வாழ்க்கை மேற்கொண்ட இவர் அதனை விரும்பாமல் ராணியிடம் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

1933ல் டிசம்பர் மாதம் அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள நந்தி எனும் சிற்றூரை அடைந்தார். இப்போது அவர் சுவாமி ஓம்கார். அப்போது அவருக்கு வயது 44. அது தொடங்கி தனது இறுதிக் காலம் 88ம் வயது வரை அவரது இருப்பிடமாக இவ்விடம் அமைந்தது. நந்தி கிராமத்துக்கு அருகேயுள்ள சுல்தான்பேட்டை அருகேயுள்ள சென்னகிரி எனும் மலையடிவாரத்தில் இவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். இவர் இருந்த இடம் மிக செங்குத்தான மலைச்சரிவு என்பதனால் எவரும் அவ்வளவு எளிதில் இந்த இடத்துக்குச் செல்ல முடியாது. அவர் இந்த ஆசிரமத்தில் தனது ஆன்மிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய புரட்சி வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள், துறவற வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள் என வாழ்க்கை இரு சரிசமமான பிரிவுகளாக அமைந்து விட்டது.

அந்த மலைவாழ் மக்கள் சிலர் அடிக்கடி சாது ஓம்காரை வந்து சந்தித்துத் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அப்படியொரு முறை அவர் கொடுத்த பூஜை தீர்த்தம் அவர்களது நோய்களைத் தீர்த்தது என்ற செய்தி பரவ, பலரும் இவரிடம் தீர்த்தம் பெற்றுக்கொள்ள வரலாயினர். 1934ல் இவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது இவர் மனத்தில் ஓர் கேள்வி எழுந்தது: "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். நோய்களை குணப்படுத்தும் அதிசய மனிதன் என்ற பெயரும் புகழும் பெறவா என்னை ஆண்டவன் படைத்தான். எப்போதும் கூட்டம் சூழ்ந்திருக்க மன அமைதியின்றி தியானத்தில் ஈடுபடமுடியாமல் இருப்பதற்கா இங்கு வந்தேன். என் யோகப் பயிற்சி என்ன ஆவது" என்பது அவர் மனம் எழுப்பிய கேள்வி.

அவ்வளவுதான், அவர் அந்தக் கூட்டத்திலிருந்தும், பெயரும் புகழும் தேடிவரும் சந்தர்ப்பத்தைக் கைகழுவிவிட்டு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சென்னகிரி மலையின் உச்சியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓர் பாழடந்த மண்டத்தைச் சிறிது செப்பனிட்டு அங்குள்ள ஒரு சுனையைச் சுத்தம் செய்து அங்கேயே தங்கினார். இந்தப் பணிகளில் அவருக்கு உதவிய கிராம மக்களுக்கு 1934ல் அவர் ஓர் சமாராதனை செய்து உணவளித்து நன்றி தெரிவித்தார். அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் இவர் பாலும் பழமும் மட்டுமே உண்டு வந்தார். 1936ல் மகாத்மா காந்தி மைசூர் வந்திருந்தபோது சாது ஓம்காரை சந்திக்க விரும்பினார். அவர் இருந்த மலையுச்சிக்கு அவரால் போகமுடியாததால் அவரது செயலாளர் மகாதேவ தேசாயை அங்கு அனுப்பி அவரைச் சந்தித்து மகாத்மாவைக் காண அழைத்தார். அவரும் அப்படியே வந்து மகாத்மாவுடன் சில மணிகள் ஆன்மிக சிந்தனைகள் பற்றி உரையாடினார்.

1936 முதல் அவர் சுமார் 30 ஆண்டுகாலம் சுற்றுப்பயணம் செய்தார். பிறகு 1966ல் முதுமை காரணமாக ஊர் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார். அவர் இருந்த சென்னகிரி உச்சியில் காட்டுத்தீ பரவியதால் மறுபடியும் சுவாமி ஓம்கார் மலையடிவாரத்துக்குத் தனது ஆசிரமத்தை மாற்றிக் கொண்டார். இவருக்கு சமூகத்தின் பலமட்டத்திலும் சீடர்கள் உருவானார்கள். பல சாதியினர், கடவுள் நம்பிக்கை உள்ளோர், அற்றோர், அரச குடும்பத்தினார், அடிமட்ட மக்கள், இளையோர், முதியோர் என்று இவரைத் தேடி வரும் மக்கள் அதிகமானார்கள். இவரது நீண்ட நெடிய அரசியல், பொது வாழ்வு, ஆன்மிகம் பற்றி மூன்று நூல்களை எழுதியுள்ளார். 1909 முதல் 1917 வரை இவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளை "மெய் ஒப்புதல்" எனும் நூலாக எழுதினார், ஆனால் அதை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை.

இவரது இரண்டாவது நூல் "உபதேஷ்" எனும் தலைப்பிலானது. 1946ல் பெங்களூரில் வெளியிடப்பட்டது. மூன்றாவது நூல் "தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்". இதுவும் பெங்களூரில் வெளியானது. தீவிரவாதம், புரட்சிகர இயக்கம் இவற்றில் இளமை வேகத்தில் ஈடுபட்டு பின்னாளில் ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டுத் துறவியாக மாறிய இவரது வாழ்க்கை இன்றைய பல புரட்சிகர இயக்கத்தாருக்கும் ஓர் நல்ல வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி சத்குரு ஸ்ரீ ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், பிங்கள வருஷம், மாசி மாதம் 20ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண பக்ஷம் தசமி திதியில் 1978 மார்ச் மாதம் 4ம் தேதி மாலை 4.10க்கு இவ்வுலக பந்தங்கள் நீங்கி இறவா புகழுடம்பு எய்தினார்.

அவருக்கு இறுதிக்காலம் சமீபித்துவிட்டது என்ற தகவல் சீர்காழி எருக்கஞ்சேரியிலிருந்த அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவரது இளவல் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி வந்து அவருக்கு சாம வேத முறைப்படி சுவாமி ஓம்காரின் காதில் கர்ண மந்திரம் ஓதினார். அவரது உடல் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரளான மக்கள் வந்து மரியாதை செலுத்தினர். மறுநாள் மார்ச் 5ம் தேதி ஞாயிறு காலை சுமார் 2000 பேர் ஆசிரமத்தில் கூடியிருக்க, ஆசிரமத்து வளாகத்திலேயே சுவாமி ஓம்கார் அவர்களின் பூதவுடல் அக்னிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

நீலகண்ட பிரம்மச்சாரி போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. தனது எண்பத்தி எட்டு ஆண்டு வாழ்க்கையில் நாற்பத்தி நான்கு வயது வரை இந்திய சுதந்திரத்துக்காக பலம் பொருந்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராகத் தன்னையே சுதந்திர வேள்வியில் ஆஹூதியாக அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரருக்கு எங்காவது ஒரு இடத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கிறதா? எங்காவது ஒரு சிலை உண்டா? இவரது புரட்சி வாழ்க்கை எந்த பாட நூலிலாவது இடம் பெற்றிருக்கிறதா? நாட்டில் எங்கு திரும்பினாலும் ஒரே சிலைகள் மயமாகக் காட்சி அளிப்பதும், பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஏதேதோ எழுதப்பட்டிருப்பதும் கண்டு இந்த சுதந்திர வீரனுக்கு எதுவுமே இல்லையா? இப்படிப்பட்டவர்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்கப்பட்டால், புதிதாகத் தியாகிகள் உருவாக முடியுமா? தன்னலமற்ற நாட்டுச்சேவை இனி கிடைக்குமா என்று நல்ல உள்ளங்கள் வருந்தத்தான் செய்யும். என்ன செய்வது? இதுபோன்ற தியாகிகளை வணங்கினால்தான் இந்த நாட்டில் தேசபக்தி வளரும், புதிய தியாகப் பரம்பரை தோன்றும். வாழ்க நீலகண்ட பிரம்மச்சாரி (சுவாமி ஓம்காரானந்தா) புகழ்!

(1889ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த தினம்)
(1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி இவரது நினைவு தினம்.)

3 comments:

  1. நீலகண்டரின் 3 புத்தகங்களும் கிடைக்குமா? படிக்க ஆவலாக உள்ள‌து.
    அருமையான பதிவு. அம்மையாருக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு,
    அற்புத தகவல்கள்.
    உட்ச்சத்திலேயே இருந்திருக்கிறார்,
    அது தேசப் பற்றானாலும் சரி,
    பற்றற்ற துறவானாலும் சரி.
    பாரதியின் நண்பர் என்பதால்
    இன்னும் சொல்லவும் வேண்டுமோ!
    மனிதநேயமும் தேசப்பற்றும்
    ஆன்மிகமும் ஒருங்கே பெற்ற
    அற்புத மனிதர் நீலகண்ட பிரமச்சாரி.
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete

Please give your comments here