Followers

Thursday, November 29, 2012

எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்

                                                        எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்

செருகுடி அனந்தராம சுவாமி நாத ஐயர் எனவும் தஞ்சாவூர் சாமி நாத ஐயர் எனவும் எஸ்.ஏ.எஸ். என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் ஒரு வழக்கறிஞ்சர். அது தவிர பிரம்மஞான சபையில் உறுப்பினர், நல்ல நிர்வாகி இவையெல்லாவற்றையும் காட்டிலும் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்.

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தைச் சேர்ந்தவரான இவர் தனது இளமைக் கல்வியை அதே ஊரில் இருந்த ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் படித்தார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து எஃப்.ஏ. எனப்படும் இன்டர்மீடியட் படித்தார். தொடர்ந்து சென்னைக்குச் சென்று 1874இல் பட்டப் படிப்பை முடித்த பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.

வழக்கறிஞராக இவர் திறமையோடு பணியாற்றியதைத் தொடர்ந்து இவர் நாகப்பட்டினத்தில் அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டார். நாகப்பட்டினம் நகரசபை உறுப்பினராகவும் இவர் இருந்தார். அப்போது சென்னை சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் போட்டியிட்ட தொகுதி ஊராட்சி நகர் மன்றங்கள் தொகுதியாகும்.

அப்போதெல்லாம் இப்போது போல தொகுதிகள் கிடையாது. ஆசிரியர்கள், ஊராட்சி மன்றங்கள் போன்ற தனித்தனி தொகுதிகள் இருந்தன. இவரைத் தோற்கடித்தவர் திருச்சினாப்பள்ளியைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் ஐயர் ஆவார். 1883க்கும் 1885க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் தஞ்சாவூரில் பப்ளிக் பிராசிகியூட்டராக நியமனம் பெற்றார்.

அந்த பதவியை இவர் வகித்த காலத்தில் 1892இல் தஞ்சாவூர் மாவட்ட மிரசுதார்கள் அரசு அப்போது விதித்த நிலவரி அதிகரிப்பை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் சாமி நாத ஐயர்.

மிதவாத காங்கிரசார் மட்டுமே அப்போதைய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். பால கங்காதர திலகர் காலத்துக்குப் பிறகுதான் தீவிர காங்கிரசாரும், சுதந்திரம் எனது பிறப்புரிமை எனும் கோஷமும் எழுந்தது. சுவாமி நாத ஐயர் காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு பெட்டிஷன் போட்டு சலுகைகளைக் கேட்கும் மிதவாதம் மட்டுமே இருந்தது. அப்படிப்பட்ட மிதவாத காங்கிரஸ்காரராக திரு சுவாமி நாத ஐயர் விளங்கினார்.

காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாட்டோடு பிரம்மஞான சபையின் பால் ஈர்க்கப்பட்டார் இவர். இந்து மதத்தின் தேவையற்ற கசடுகளை நீக்கி உண்மையான பிரம்ம ஞானத்தைப் பரப்பும் நோக்கத்தோடு உருவான தியாசபிகல் சொசைட்டி எனப்படும் இந்த சபையில் அவர் ஆர்வம் கொள்ளத் தொடங்கி 1880 முதல் அதில் உறுப்பினராக ஆனார். இந்த சபையை உருவாக்கியவர் மேடம் பிளாவ்ட்ஸ்கி என்பவரும் கர்னல் ஹெச்.எஸ்.ஆல்காட் ஆகியோராவர். 1883யில் இவர் நாகப்பட்டினம் பிரம்ம ஞான சபையின் செயலாளராக ஆனார். தொடர்ந்து இவர் தஞ்சாவூர் வந்த பின்னர் தஞ்சை கிளையின் தலைவராக 1892இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னையில் இருந்த மஹாஜன சபையின் உறுப்பினர்கள் சேர்ந்து காங்கிரஸ் அமைப்பை உருவாக்க முடிவெடுத்து அதற்கான கூட்டத்தை பம்பாய் நகரத்தில் 1885இல்நடத்தினார்கள். அப்போதுதான் முதன் முதலாக காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. முதலில் அது ஒரு வெள்ளையரின் தலைமையில் தொடங்கப்பட்ட போதும், அந்த கூட்டத்துக்குச் சென்று கட்சி தொடங்கியவர்களில் சுவாமி நாத ஐயரும் ஒருவர். காங்கிரஸ் இயக்கம் அப்போது மக்கள் சங்கம் எனும் பெயரில் ஏற்பட்டபோது தஞ்சை மக்கள் சங்கத்தில் இவர் தலைவராக இருந்து செயல்பட்டார். பம்பாயில் நடந்த முதல் கூட்டத்தில் மொத்தமாக 72 பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேர் சென்னை ராஜதானியிலிருந்து சென்றனர். பம்பாயில் தேஜ்பால் சம்ஸ்கிருத கல்லூரியில் நடந்தது இந்தக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் சுவாமி நாத ஐயர் உப்புக்கு வரி போடும் வழக்கத்தை எதிர்த்து சிறப்பானதோர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1930இல் மகாத்மா காந்தி உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடத்தியதை நாம் அறிவோம். அதற்கு முன்பாகவே இந்தப் பிரச்சினை முதல் காங்கிரசிலேயே விவாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. உப்பு வரி தவிர சுவாமி நாத ஐயர் காங்கிரசில் குரல் கொடுத்த மற்ற பிரச்சினைகளில் கடுமையான சுங்க வரி மற்றும் பர்மாவை இணைத்துக் கொண்டது ஆகிய பிரச்சினைகளும் அடங்கும்.

                                            Delegates in the first Congress Session in 1885

இந்து கோயில்களின் நிர்வாகம் குறித்தும் இவர் ஆர்வம் காட்டினார். கும்பகோணம் தேவஸ்தான தேர்தலில் இவருக்கும் பூண்டி வீரையா வாண்டையார் அவர்களுக்குமிடையே போட்டி இருந்திருக்கிறது. 1888-89 ஆண்டுகளில் இவ்விருவர் கட்சிகளும் சமமான பலத்துடன் இருந்ததால் இவ்விருவர் கட்சியிலிருந்தும் மூன்று நபர்கள் தேவஸ்தானம் போர்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சுவாமி நாத ஐயர் கர்னாடக சங்கீதத்தில் ஆர்வமுடையவர். இவர் காலத்தில் தஞ்சையில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். சங்கீத ஆய்வில் முன்னணியில் இருந்த எஸ்.ஏ.கே.துர்கா இவருடைய பெயர்த்தி ஆவார்.
பிற்காலத்திய காங்கிரஸ் தலைவர்களோடு ஒப்பிடமுடியாவிட்டாலும் காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்த மிதவாத காங்கிரஸ்காரர் என்ற முறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் முதல் காங்கிரஸ் காரர் என்கிற முறையிலும் அவருடைய புகழ் வாழ்க!

ஏ.என்.சிவராமன்

ஏ.என்.சிவராமன்

ஆம்பூர் நாணு ஐயர் சிவராமன் எனும் இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் "தினமணி" பத்திரிகையும், அதன் தலையங்கங்களும், கட்டுரைகளும்தான் நமக்கு நினைவுக்கு வரும். அந்த அளவு மக்கள் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டவர் ஆசிரியர் ஏ.என்.சிவராமன். 97 வயது வரை வாழ்ந்து மறைந்த இந்த மாமனிதர் பத்திரிகை உலகுக்கு ஓர் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர், சுதந்திரப் போர் தியாகி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயமானாலும், மிக எளிமையாகக் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றவர் என்பதெல்லாம் நம் நினைவுக்கு வரும்.

இவருக்கு 17 மொழிகள் தெரியும், அதில் பிரெஞ், சம்ஸ்கிருதம், உருது இவைகளும் அடங்கும்.1988இல் இவருக்கு பி.டி.கோயங்கா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருது பத்திரிகைத் துறையில் சிறப்பான பணிக்காக அளிக்கப்படும் கெளரவம் ஆகும்.

பல்முனைச் சிறப்புக்களுக்கு உரியவரான ஏ.என்.சிவராமன் 1904 மார்ச் 1ஆம் தேதி கொச்சியில் பிறந்தவர். நெல்லை மாவட்டத்துக் காரரான இவரது இளம் வயதுக் கல்வி திரு நெல்வேலி மாவட்டத்திலுள்ள அவர்கள் கிராமத்தில்தான் தொடங்கியது. நெல்லை மாவட்டம் பல தேசபக்தர்களை உருவாக்கிய இடம். அந்த வரிசையில் ஏ.என்.சிவராமனும் சேர்ந்து கொண்டார்.

பள்ளிப் பருவத்திலேயே ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசண்ட் அம்மையார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இவர் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1921இல் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய போது தனது 17ஆம் வயதில் கல்லூரியில் இன்டர் படித்துக் கொண்டிருந்த இவர் அதில் பங்கு கொண்டார். அடுத்த ஆண்டிலேயே இவரது முதல் சிறை தண்டனையைப் பெற்றார். இதனால் இவர் கல்லூரி படிப்பு முடிவுக்கு வந்தது.

சில காலம் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்த இவருக்குப் பல நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் இந்த நாட்டின் பாரம்பரியம், வரலாறு, நாம் அடிமைப் பட்ட விவரங்கள், சுதந்திர உணர்வு ஆகியவைகளைக் கற்றுக் கொண்டார். இந்த ஞானமெல்லாம் அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் வெளிப்பட்டு கட்டுரைகளாக வெளிவந்தன. ஒவ்வொரு நாளும் இவர் படிப்புக்காக ஒதுக்கும் நேரம் மிக அதிகம்; இந்தப் பழக்கத்தைத் தன் இறுதி நாட்கள் வரை கடைப்பிடித்து வந்தார்.

அந்தக் காலத்தில் டி.எஸ்.சொக்கலிங்கம் என்பவர் பிரபலமான பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அவர் அப்போது "காந்தி" என்றொரு பத்திரிகையை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையில் சிவராமன் முதலில் பத்திரிகைத் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்துக்காகத் திருச்சியிலிருந்து நடைப்பயணமாக வேதாரண்யம் சென்று உப்பு எடுக்கும் சத்தியாக்கிரகப் போரில் இவரும் நூறு பேரில் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டார். அந்தப் போராட்டம் காரணமாக இவருக்கு 20 மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அந்த தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் இவர் பத்திரிகைத் தொழிலுக்குத் திரும்பினார்.

முதன்முதலாக இவரைப் பத்திரிகைத் தொழிலுக்குக் கொண்டு வந்த டி.எஸ்.சொக்கலிங்க்கம் 1934இல் தொடங்கப்பட்ட "தினமணி" இதழில் ஆசிரியர் ஆனார். அப்போது ஏ.என்.சிவராமன் அவரிடம் துணை ஆசிரியராகப் பதவி ஏற்றார். 1944 வரை அதன் ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் பதவி விலகியபின்னர் ஏ.என்.சிவராமன் "தினமணி"யின் ஆசிரியர் ஆனார். அப்போது தொடங்க்கி 1987 வரை அந்த தேசியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு இவரது தலையங்கங்கள் மூலமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சீர்காழியில் உப்பனாறு பாலத்தில் சில இளைஞ்சர்கள் வெடிவைத்த வழக்கில் இவரும், தினமணி இராமரத்தினம் போன்றவர்களும் கைதாகி குற்றவாளிகளாக ஆக்கப் பட்டனர்.
"தினமணி"யில் இவர் ஆசிரியராக இருந்த அந்த காலம் தான் இந்திய வரலாற்றின் சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டமாக இருந்தது. இயற்கையிலேயே தேசபக்தி மிக்க இவரிடம் சக்தி மிகுந்த பத்திரிகைத் துறை கிடைத்த போது இவருடைய பங்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும். தினமணி சுதந்திர எழுச்சிக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது. "தினமணி" என்றால் தேசியம் என்று மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். 1947இல் இந்தியா சுதந்திரம் அடையும் நேரம் நெருங்கி வந்து கொண்டிருந்த காலத்தில் அதுவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் நாட்டம் காட்டிக் கொண்டிருந்த தினமணி இப்போது சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றம், கல்வி, தொழில் வளர்ச்சி குறித்தெல்லாம் அக்கறை காட்டத் தொடங்கியது.

அந்த காலத்தில் "தி ஹிந்து" எனும் ஆங்கில நாளிதழுக்கு ஒரு நற்சான்று உண்டு. அந்தப் பத்திரிகையில் செய்தி என்றால் அது முழு உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதே நம்பகத் தன்மையையும், தேசபக்தி உணர்வையும், முன்னேற்றத்துக்குப் பாடுபட வேன்டிய அவசியத்தையும் தினமணி மக்கள் மனங்களில் விதைத்தது. 'தேசியம்' எனும் சொல்லுக்கு எடுத்துக் காட்டு 'தினமணி' என்பதை எல்லா வகையிலும் நிரூபித்து வந்தது.

சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகள் கழிந்த பின்னரும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் பயன்பாடுகள் சாதாரண மக்களிடம் சென்றடையவில்லை என்பதை கவனித்த ஏ.என்.சிவராமன் அரசின் நடைமுறைகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டத் தொடங்கியது. அப்போது ராஜாஜி தலைமையில் உருவான சுதந்திராக் கட்சி, சுயராஜ்யா பத்திரிகை போன்றவற்றின் கருத்துக்களையொட்டி 'தினமணி'யின் எண்ணங்களும் சார்புடையனவாக அமைந்தன. 1967 தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பதவி இழந்து தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தி.மு.க.வின் வெற்றி சாத்தியமாகியது. இந்த மாற்றத்தில் ஏ.என்.சிவராமனின் எழுத்துக்களும் காங்கிரசுக்கு எதிராக அமைந்தன என்பது பலரது எண்ணம்.

1975இல் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சியில் நாட்டில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. பத்திரிகை தணிக்கை முறை அறிமுகமானது. அரசியல் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சிவராமன் பலத்த குரல் எழுப்பினார். அரசின் இந்தப் போக்கை எதிர்க்கும் வகையில் இவர் பத்திரிகையில் தலையங்கம் எழுதப்படும் இடம் காலியாக விடப்பட்டு பத்திரிகை வெளிவந்தது.

ஸ்தாபன காங்கிரசில் இருந்த காமராஜ் இந்தப் போக்கைக் கண்டு மனம் வெதும்பி திடீரென்று காலமாகி விட்டார். நெருக்கடி நிலையின் முதல் களபலி காமராஜரின் மரணம் என்று ஏ.என்.சிவராமன் தன் பத்திரிகையில் எழுதினார். காமராஜரின் மரணத்தோடு தன்னுடைய பேனாவும் எழுதும் வேகத்தை இழந்து போனது என்றார். நெருக்கடி நிலை அகற்றப்பட்ட பிறகு சிவராமன் சொன்னார், இந்த நிலைமைக்காக காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று.

1980களில் போஃபார்ஸ் பீரங்கி ஊழல் நாட்டையே குலுக்கியது. ஜனாதிபதி ஜெயில் சிங்குக்கும் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து பேதங்கள் சிவராமனை வருத்தியது. 'தினமணி'யில் அவருடைய கையெழுத்திட்டு வெளியான ஒரு தலையங்கத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லையென்றால் அது இந்த நாட்டின் ஜனனாயக முறைக்குக் கேடு விளைவிக்கும் என்று எழுதினார். 1987இல் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தன் வாழ் நாள் இறுதி வரை படித்தும், எழுதியும் வந்தார். வாழ்க ஏ.என்.சிவராமன் புகழ்!

Wednesday, November 28, 2012

தியாகி ஆர்.சிதம்பர பாரதி

தியாகி ஆர்.சிதம்பர பாரதி

தமிழ் நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் பலரை  நாம் மறந்தே போய்விட்டோம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறைப்பட்டு வட நாட்டுச் சிறைகளில் சுமார் 14 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த தியாகி ஒருவரைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் ஆர்.சிதம்பர பாரதி.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு 1957 தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆர்.சிதம்பர பாரதி 1905 ஜூன் 5ஆம் தேதி மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த 'ராமாயணச் சாவடி' எனும் இவர்களது இல்லத்தில் ரெங்கசாமி சேர்வைக்கும் பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார். வறுமை காரணமாக இவரது படிப்பு நின்று போயிற்று. அப்போது தேசிய இயக்கத்தில் முன்னணியில் இருந்து வீர கர்ஜனை புரிந்து வந்த சுப்பிரமணிய சிவாவின் பால் இவருக்கு பற்று ஏற்பட்டு அவரது அடியொற்றி இவரும் சுதந்திர தாகத்துடன் செயல்படத் தொடங்கினார். சிவா தொடங்கிய பாப்பாரப்பட்டி ஆசிரமத்தில் இரண்டு ஆண்டுகள் இவர் இருந்திருக்கிறார். காங்கிரஸ் தொண்டராக இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலம் இது.

காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் எனப் பிரிந்து கிடந்த நேரத்தில் இவர் பால கங்காதர திலகரின் தலைமையில் இயங்கிய தீவிர வாதப் பிரிவில் வ.உ.சி., சிவா ஆகியோரைப் போல தீவிர காங்கிரஸ்காரராகச் செயல்பட்டு வந்தார். பிரிட்டிஷ் அரசு இவரைப் பல வழக்குகளில் குற்றவாளியாகக் கருதி இவரைத் தேடியது. மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப் பட்டது. பெரிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட சூழ் நிலையில் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் ஒரு ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்துப் பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு போலீசார் திரும்பி விட்டனர். அருகிலிருந்த கிராமத்து மக்கள் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்த கொடுஞ்செயலைச் செய்தவர் போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயர் எனப்படும் தீச்சட்டி கோவிந்தன் ஆவார். அவரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து விஸ்வனாதன் நாயர் மீது திராவகம் வீசி அவரை அலங்கோலப் படுத்திவிட்டனர். அந்தக் குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டவர்களுள் சிதம்பர பாரதியும் ஒருவர். இதனையும் சேர்த்து இவர் மொத்தமாக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து விடுதலை ஆனபின் தனது மாமன் மகளான பிச்சை அம்மாளை மணந்து கொண்டார். இவரது ஒரே மகள்தான் சண்முகவல்லி.

சுதந்திரத்துக்குப் பிறகு இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். இதன் பின்னர் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969இல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டது. இந்திரா காந்தியின் தலைமையில் இந்திரா காங்கிரசும், நிஜலிங்கப்பா, காமராஜ் ஆகியோரின் தலைமையில் சின்டிகேட் காங்கிரசும் உருவாகின. சிதம்பர பாரதி காமராஜ் அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டவரானபடியால் இவரும் சின்டிகேட் காங்கிரசில் செயல்பட்டார்.

இவருடைய அரசியல் வாழ்க்கையில் எந்த காலத்திலும் ஒரு சிறு குற்றச்சாட்டுக்குக்கூட ஆளாகாமல் ஒரு உண்மையான காந்தியத் தொண்டராகவே விளங்க்கினார். மத்திய அரசு தியாகிகளுக்குக் கொடுக்கும் மரியாதைச் சின்னமான 'தாமிரப் பட்டயம்' பெற்ற தியாகி இவர்.
இவரது மனைவி பிச்சை அம்மாள். இவர்களுக்கு ஒரேயொரு மகள் சண்முகவல்லி கணேஷ், மூன்று பேரப் பிள்ளைகள். இவர் மதுரையில் இருந்த இவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30இல் தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார். வாழ்க தியாகி சிதம்பர பாரதி புகழ்!

சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்

சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்

காங்கிரஸ்காரராக இருந்த போதோ அல்லது இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை புகுந்தபோதோ, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது கிடைக்காத பெயரும், புகழும், விளம்பரமும் இவர் செய்த ஒரு வீரதீர சாகசத்தினால் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்தபோது மதுரை வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியது. திறந்த ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திரா காந்திமீது கல்லும், தடிகளும் வீசப்பட்டன. கும்பல் அருகில் வந்து தாக்கவும் தொடங்கினர். அவர் இருந்த ஜீப் மீது கற்கள் விழுந்து கொண்டிருந்தன. அப்பொது அருகில் இருந்த ஆர்.வி.சுவாமி நாதனும், மதுரை நெடுமாறனும், இந்திரா காந்திமீது கற்கள் விழாமலும், அவர் அடிபடாமலும் அவருக்குக் கேடயமாக இருந்து காப்பாற்றினார்கள். அந்த செய்தி மறு நாள் செய்தித் தாள்களில் வந்தபோது ஆர்.வி.சுவாமி நாதனுக்கு அதுவரை கிடைக்காத பெயரும், புகழும் பாராட்டுகளும் வந்து குவிந்தன. யார் இந்த ஆர்.வி.சுவாமி நாதன் என்பதை இப்போது பார்ப்போம்.

அன்றைய இராமனாதபுரம் மாவட்டம் பாகனேரி வரலாற்றுப் புகழ் கொண்ட ஊர். அந்த ஊரில் வாழ்ந்த வெள்ளையப்பத் தேவருக்கு 1910, ஆகஸ்ட் 5இல் மகனாகப் பிறந்தவர் காங்கிரஸ் தலைவர், தியாகி ஆர்.வி.சுவாமி நாதன். இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். சமூக சேவையில் நாட்டம் கொண்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னுடைய 19ஆம் வயதிலேயே தன்னை முழு மூச்சுடன் இணைத்துக் கொண்டார். இவர் தன்னுடைய உண்மையான உழைப்பாலும், நேர்மையாலும் காங்கிரஸ் தொண்டராக இருந்து படிப்படியாக உள்ளூர் காங்கிரஸ் கமிட்டி முதல், தாலுகா கமிட்டி, மாவட்ட கமிட்டி, மா நில கமிட்டி என்று பதவி உயர்ந்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சரவையில் விவசாயத்துறை துணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் திறமையாகப் பணிபுரிந்து, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, காமராஜ் ஆகியோருடைய பாராட்டுக்களைப் பெற்றவர்.

இந்திய பாராளுமன்ற குழுவோடு இவர் நியுசிலாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, இங்கிலாந்து, கொரியா, பிலிப்பனிஸ் போன்ற நாடுகளுக்கும் ஸ்காண்டினேவியன் நாடுகள் எனப்படும் டென்மார்க், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். அகில உலக விவசாய மானாட்டுக்காகவும் இவர் வெளினாடு பயணம் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் தேவர் வகுப்பு பின் தங்கிய ஜாதியாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிற்பட்ட இந்த ஜாதியார்தான் தமிழகத்தில் பெரும்பான்மையான தனிப்பெரும் குழுவாகவும் இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த வகுப்பினருக்குப் பல கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு அளித்து வேட்டையாடியது. இந்த கொடுமையான சட்டத்தை நீக்கி இவர்களின் நிலை உயர 1947-48 காலகட்டத்தில் சென்னை சட்டசபையில் சட்டம் கொண்டு வந்து இவர்களின் விடிவெள்ளியாக உருவானார் ஆர்.வி.சுவாமி நாதன். அரசியலில் நுழைந்த நாள் முதல் தனது கடைசி மூச்சு ஓயும் வரையிலும் ஒரு சுத்தமான காந்தியவாதியாகவும், காந்தி விரும்பிய உண்மையான காங்கிரஸ்காரராகவும், உயர்ந்த பண்பாளராகவும் வாழ்ந்து காட்டியவர் ஆர்.வி.எஸ். வாழ்க ஆர்.வி.சுவாமி நாதன் புகழ்!

கோமதிசங்கர தீட்சிதர்

கோமதிசங்கர தீட்சிதர்

தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் பெருந்தலைவர்களுள் திரு கோமதிசங்கர தீட்சிதருக்குத் தனியிடம் உண்டு. மிகவும் மரியாதைக்குரியவராகவும் அவர் கருதப்பட்டார். காந்தியம் எனும் தத்துவத்துக்கு ஓர் வடிவம் கொடுத்ததைப் போல தன்னை உருவாக்கிக் கொண்டவர் 'தாத்தா' என்று பலராலும் அழைக்கப்பட்ட இந்த கோமதிசங்கர தீட்சிதர்

கோமதிசங்கர தீட்சிதர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் பிறந்தவர்..பின்னர் சேரன்மாதேவிக்குக் குடிபெயர்ந்தவர். இளம் வயதிலேயே திரு நெல்வேலி மாவட்டத்தில் அப்போது வேகமாகப் பரவிய தேசபக்தி உணர்வின் காரணமாக தீட்சிதரும் சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மகாத்மா காந்தியின் ஆணைப்படி சற்றும் மகாத்மாவின் ஆணையிலிருந்து பிறழாமல் தன்னையொரு காந்தியத் தொண்டனாக ஆக்கிக் கொண்டார். எப்போதும் தூய கதராடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, எங்கு போவதென்றாலும் நடந்தே போவது என்ற கொள்கையைக் கடைசி வரை கடைபிடித்து வாழ்ந்தவர் தீட்சிதர்.

சுதந்திரத்துக்காகப் போராடிய காலத்தில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய இவர் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை சட்டசபையில் மூன்று முறை உறுப்பினராக இருந்திருக்கிறார். அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து இவர் 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றவர் இவர். தமிழக அரசியலில் திரு காமராஜ் தலைமையை ஏற்றுக் கொண்டு உண்மையான காங்கிரஸ்காரராக திரு காமராஜ் காலத்திலும், பின்னர் அமைந்த திரு எம்.பக்தவத்சலம் அவர்கள் காலத்திலும் இவருடைய பங்களிப்பு சட்டசபையில் குறிப்பிடத்தக்கதொன்று. 1967 தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் தோற்று அந்த ஆண்டில் தி.மு.க.முதன்முறையாக அரசு அமைத்தபோதும், இவர் போட்டியிட்ட அம்பாசமுத்திரத் தொகுதி மக்கள் இவர்பால் காட்டிய நம்பிக்கை, அன்பு காரணமாக இவர் அபாரமான வெற்றியைப் பெற்றார்.

எந்த பதவிக்கோ அல்லது தனது பதவியைக் கொண்டு எந்தவிதமான ஆதாயங்களுக்கோ ஆசைப்படாமல் ஒரு துறவியைப் போல் வாழ்ந்தவர் தீட்சிதர். அரசாங்கத்திலாகட்டும், வெளியிலாகட்டும் தனது பதவி, அந்தஸ்து இவற்றைக் கொண்டு தனக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ எந்தவித ஆதாயத்தையும் தேடவும் இல்லை, மற்றவர்கள் தேடவும் விடவில்லை. அத்தனை கெடுபிடியான தூய வாழ்க்கையை வாழ்ந்தவர் இந்த முரட்டுக் கதருடை அணிந்த காங்கிரஸ்காரர்.

சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் தொடங்கிய பாரத்வாஜ ஆசிரமம், அவர் காலத்துக்குப் பிறகு கைமாறி இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஆளுமைக்குள் வந்திருக்கிறது. வ.வெ.சு.ஐயர் காலமான பின் இவருடைய மகன் திரு மகாதேவன் என்பவர் இங்கு மேலாளராகவும், விடுதி காப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். தேசிய பாரம்பரிய உறவு, சேவைக்காக மட்டுமே பயன்பட்டது, ஆதாயத்துக்காக அல்ல என்பது இவரது வாழ்வு காட்டுகிறது.

இவருடைய தொகுதி மக்கள் தங்கள் குறைகளுடன் இவரிடம் வந்துவிட்டால், உடனே அந்தக் குறைகளைக் களைய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வார். அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த பிரதிபலனையும் இவர் எதிர்பார்த்ததில்லை. சேரன்மாதேவியில் தாமிரவருணி ஆற்றைக் கடந்து செல்ல மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையை அங்கொரு பாலம் அமைத்து அவர்கள் சிரமத்துக்கு முடிவு கட்டினார். இவருடைய முன் முயற்சியால் கட்டப்பட்டப் பாலத்தைத் திறந்து வைக்க அப்போதைய சென்னை கவர்னர் ஜெயசாமராஜ உடையார் வந்தார். இந்தப் பாலத்தால் பயண தூரம் மிகக் குறைந்தது கண்டு மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை சட்டமன்றத்தில் இவர் பதவி வகித்த காலத்தில் சும்மா சென்று உட்கார்ந்துவிட்டு வரும் பழக்கம் இவரிடத்தில் கிடையாது. தினமும் இவருடைய பங்கேற்பு இருக்கும். அவை அத்தனையும் சட்டமன்ற ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. சட்டமன்றம் நடக்கும் நாட்களில் தினமும் செய்தித் தாட்களில் இவர் கேட்ட கேள்வி அல்லது எழுப்பிய பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். அந்த அளவுக்குத் தன்னை மக்கள் சேவையில் இணைத்துக் கொண்டவர் கோமதிசங்கர தீட்சிதர். வாழ்க கோமதிசங்கர தீட்சிதர் புகழ்!

Monday, August 13, 2012

சுதந்திரதின விழா

சுதந்திரதின நினைவுகள்.

இந்திய சுதந்திரதின விழா நாடெங்க்கும் நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் மக்களுக்கு வாழ்த்து சொல்வதோடு, சுதந்திரப் போரில் ஈடுபட்ட அகில இந்திய தலைவர்கள் சிலரது படங்களையும் பார்க்கலாமல்லவா? பாருங்கள்.
Jawaharlal Nehru, First P.M.

Star Patriots of India

Mahatma Gandhi with Nehru and Patel
Mahatma with his spinning wheel


Lal Bahadur Sastri, Simpleman Prime Minister

Babu Rajendra Prasad, Gentleman President

Rajaji with his Tiruchengode Ashram inmates

Bal Gangadar Tilak "Freedom is my Birthright"
"KappalOttiya Thamizahan" V.O.Chidambaram Pillai, who was responsible to kindle the spirit of Nationalism in Tamilnadu and sacrificed everything for the sake of the country. Every Tamizhan should remember him and pay respect to him on our Independance Day.

Friday, April 27, 2012

"இதுதான் இந்தியா" இதுபோன்ற அரிய காட்சிகளை இங்குதான் பார்க்கலாம். இது போல மேலும் பல அரிய காட்சிகளை நீங்களும் காணமுடியும். இவற்றைக் கண்டு ரசிக்கவா அல்லது வருந்துவதா? தெரியவில்லை.
(சீட்டு) விளையாட இது நேரமா?

ஊர் வம்பு பேச இதுதான் இடமா?

காக்கி உடையும் தொப்பி மட்டுமா அடையாளம்?