Followers

Thursday, August 26, 2010

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

இவர் 1888ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் வந்து பிறந்த எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம். ராமேஸ்வரம் சென்று ஆண் குழந்தை வேண்டிப் பிறந்ததால் ராமலிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. கவிஞரின் தாயார் அம்மணி அம்மாள் இதிகாச புராணங்களை யெல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார்.

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912இல் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய "கத்தியின்றி" பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது "சுதந்திரச் சங்கு" பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

இவரது அத்தை மகள் முத்தம்மாளை மணந்து கொண்டாரல்லவா, அவர் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தைல் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள். இவர் எழுதிய "மலைக்கள்ளன்" எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு 'அரசவைக் கவிஞர்' எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் 'பத்மபூஷன்' விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய "காந்தி அஞ்சலி" எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞரின் ஆயுள் முடிந்து விட்டது. வாழ்க நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புகழ்

.
நினைத்த மாத்திரத்தில் சுதந்திரம் பெறலாம்
சொல்கிறார் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம்;
பிச்சை கேட்க வேண்டுமோ, பிறர் கொடுக்க வல்லதோ?
'வேண்டும்' என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும்
யாண்டிருந்து வருவது? யார் கொடுத்துப் பெறுவது?

'அடிமையல்ல நான்' எனும் ஆண்மையே சுதந்திரம்;
தடியெடுக்க வேண்டுமோ? சண்டையிட்டு வருவதோ?
ஆசைவிட்ட பொழுதிலே அடிமை வாழ்வும் விட்டிடும்;
மீசை துள்ளி வாயினால் மிரட்டினால் கிடைப்பதோ?

அஞ்சுகின்ற தற்றபோது அடிமையற்றுப் போகுமே
நஞ்சுகொண்டு யாரையும் நலிவு செய்து தீருமோ?
நத்திவாழ்வ தில்லையென்ற நாளிலே சுதந்திரம்
கத்தி கொண்டு யாரையும் குத்தினாற் கிடைக்குமோ?

கள்ளமற்ற நேரமே காணலாம் சுதந்திரம்;
உள்ளிருக்கும் ஒன்றை வேறு ஊரிலார் கொடுப்பவர்?
தீமையோடு உறவுவிட்ட திண்மையே சுதந்திரம்
வாய்மையோடு உறவறாத வன்மையே சுதந்திரம்.


ஒப்பற்ற காந்தியால் உலகம் வாழும்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை
கற்பனைக்கிங் கில்லையந்தக் காளிதாசன்
செவிநாடும் கீர்த்தனைக்கு தியாகராஜரில்லை
தேசிய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா
உத்தமராம் காந்திதனை உவந்து பேச.

சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும்
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்
எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள்
எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார்
தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.

கொலைகளவு பொய்சூது வஞ்சமாதி
கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு
தலைசிறந்த பிறவியெனும் மனித வர்க்கம்
சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி
உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ
ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி
விலைமதிக்க முடியாத செல்வமன்றோ
வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்?

புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும்
போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவைதன்னில்
களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும்
சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த
தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும்
உத்தமரைக் 'கண்டோமா' என்னும் ஏக்கம்
ஒவ்வொரு நாள் நமக்கெல்லாம் உதிப்பதுண்டே!

குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடரி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம் வரத் தடியடியால் ரணமுண்டாக்கி
நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட
அத்தனையும் நான்பொறுத்து அகிம்சை காத்து
அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்துடட்டில் சிரிப்பினோடும்
உயிர்துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை.

என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால்
எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகுமன்றோ?
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ?
கன்றினுக்குத் தாய்போல உயிர்கட்காகக்
கரைந்துருகும் காந்தியை நாம் நேரில் கண்டோம்
இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம்
எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க.

கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்
கடலென்றாற் குறைவாகும் கருணை வெள்ளம்
புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம்
தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி
தளர்வாகும் எழுபத்து ஒன்பதாண்டில்
யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்
ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க.

தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டு ஓட்டுவோம்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டு கிடிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார்
சுத்தமெனும் ஜாதியால் தொடப்படாது என்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும் கொடிய ரென்று சொல்வதோ?

நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம்
நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம்
ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞான மனிதனை
அருகிலே வரப் பொறாமை அறிவிலே பொருந்துமோ?

செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை
ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!
முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?

உயிரிருக்கும் புழுவையும் ஈசனுக்கு உறையுளாய்
உணருகின்ற உண்மை ஞானம் உலகினுக் குரைத்த நாம்
உயருகின்ற ஜீவருக்குள் நம்மோடொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற தொத்துக் கொள்ள லாகுமோ?

அமலனாகி அங்குமிங்கும் எங்குமான கடவுளை
ஆலயத்துள் தெய்வமென்று அங்கிருந்து எண்ணுவோம்
விமலனான கடவுள் சக்தி மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவர் யாவும் அந்த விமலனென்ப தெப்படி?

ஞாயமல்ல ஞாயமல்ல ஞாயமல்ல கொஞ்சமும்
நாடுகின்ற பேர்களை நாமிடைத் தடுப்பது
பாயுமந்த ஆற்றிலே பருகிவெப்பம் ஆறிடும்
பறவையோடு மிருகமிந்தப் பாரிலார் தடுக்கிறார்?

3 comments:

  1. "சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும்
    சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்
    எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள்
    எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார்
    தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
    சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல
    இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
    இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்."


    இதுதான் ம‌ஹ‌த்மாவின் ச‌ரியான‌ நிலை.ஆமாம். அவ‌ரும் "சொன்னதுபோல் செயல் முயன்றார் " ஏனையோர் "எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார்"

    1960ல் 10 வ‌ய‌து சிறுவ‌னாக‌ நான் நாம‌க்க‌ல் க‌விஞ‌ர் அவ‌ர்க‌ளின் ம‌டியில் அமர்ந்துள்ளேன். சேல‌த்தில் எங்க‌ள் இல்ல‌த்திர்க்கு ஓரிருமுறை வ‌ந்து என்
    த‌ந்தையாருட‌ன் உரையாடிச் சென்றுள்ளார்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை....

    இவரும் பாரதியின் பாராட்டைப் பெற்றவர் அல்லவா!
    வேறு ஒரு சான்று தேவையில்லை தமிழ்ப் பெருந்தகையின்
    பெருமையை உரைக்க!

    புத்தரையும், கர்த்தரையும், நபிகள் என்னும் நாயகரையும்
    கற்றும், கேட்டும் அறிந்திட்டோம், அப்படியொரு
    உத்தமரை மகாத்மாவின் வடிவிலே கண்டுவிட்டோம்
    என்ற அவரின் ஆத்ம மகிழ்ச்சி, நெகிழ்ச்ச்யைத் தருகிறது.

    "செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை
    ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!
    முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே
    மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?"

    இவரின் அற்புத கவிதைகள்.....
    பிரம்மத்தின் விழுமம்,
    அவைகள் அத்தனையும்
    சத்தியக் குழுமம்,
    இவரின் புரட்சி வரிகள் காந்தியம் கலந்தது, ஆகவே அழைத்துச்
    செல்லும் பாதை வேறானாலும் சென்றடையும் இடமோ....
    பாரதியூருக்குத்தான் (மஹாகவி பாரதி அழைத்த இடத்திற்குத் தான்...)

    உங்களின் சிறந்தப் பணிக்கு பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete

Please give your comments here