Followers

Monday, August 2, 2010

தியாகசீலர் ந.சோமையாஜுலு

தியாகசீலர் ந.சோமையாஜுலு
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தான் முதன்முதலாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்முழக்கத்தை எழுப்பியது. இங்கு ஏராளமான தேசத் தொண்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். முதன்முதலாக ஆங்கிலப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்து மரண தண்டனைக்கு உள்ளான கட்டபொம்மு நாயக்கர், சுதேசிக் கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, இந்தியரைப் புல்லிலும் கேவலமாகக் கருதிய கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீரவாஞ்சி, இவர்கள் வாழ்ந்த பூமி இது. இங்குதான் தியாகசீலர் ந.சோமையாஜுலு பிறந்தார்.

திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் எனுமிடத்தில் 1902 டிசம்பர் 28ஆம் தேதி சோமசுந்தர ஐயர் சீதையம்மாள் தம்பதியருக்குப் பிறந்த குழந்தைதான் நரசிம்ம சோமையாஜுலு. இவரது இளமைக்காலக் கல்வி தூத்துக்குடியில்தான் நடந்தது. இளம் வயதில் விளையாட்டுகளிலும், உடற்பயிற்சியிலும் ஆர்வம் நிறைந்தவராக இருந்தார். அவர் மாணவராக இருந்த காலத்தில் வ.உ.சியின் தேசிய இயக்கப் போராட்டங்கள் இவர் மனதில் கிளர்ச்சியையும், உறுதியையும் ஏற்படுத்தின. அந்தக் காலத்தில் காவல்துறையினர் செய்த அத்து மீறல்கள், அக்கிரமங்கள் இவர் மனதில் புயலை எழுப்பின. ஓரளவு விவரம் புரிந்த வயதில் இவர் வ.உ.சியையும், சாது கணபதி என்ற வழக்கறிஞரையும் சந்தித்திருக்கிறார். இவரது கல்லூரி பருவத்தில் இவரது தேசியப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாகியது. வ.உ.சி.யே இவரது ஆதர்ச தலைவராக விளங்கினார். அவரது துணிச்சலும், நேர்மையும், கொண்ட காரியத்தில் விடாமுயற்சியும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்.

மகாகவியின் இறப்புக்கு முன்பு சோமையாஜுலு அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறார். அவர் பாடல்களைப் பாடும் போது கேட்டிருக்கிறார். இவையனைத்தும் திருநெல்வேலிக்கு பாரதி வந்த போது நடந்தது. இவர் முதன்முதலாக கலந்து கொண்ட தேசியப் போராட்டம் 1920இல் நடத்திய ஒத்துழையாமை இயக்கம். அது முதல் இவர் பல காங்கிரஸ் மாநாடுகளுக்குச் சென்று வரலானார். பல பெரிய தலைவர்களின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. அதோடு இவர் ஆசிரியர் பணியிலும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

1924இல் திருவண்ணாமலையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குப் பல தொண்டர்களைத் திரட்டி அனைவரும் மதுரையிலிருந்து நடந்தே திருவண்ணாமலை சென்றடைந்தனர். வழிநடையின் போது அவர்களுக்குச் சிரமம் தெரியாமல் இருப்பதற்கு பாரதியின் பாடல்கள் பயன்பட்டன. இப்போது கேரளத்தில் இருக்கும் வைக்கம் நகரில் நிலவிய தீண்டாமையை எதிர்த்து மதுரக் ஜார்ஜ் ஜோசப் தலைமையில் பலரும் சென்று கலந்து கொண்டனர். அப்போது சங்கரன்கோயிலில் இருந்த சோமையாஜுலுவும் தொண்டர்கள் புடைசூழ வைக்கம் செல்லப் புறப்பட்டபோது, போராட்டம் முடிவடைந்துவிட்டது என்று செய்தி வரவே பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

வ.உ.சியின் வலது கரம் போல செயல்பட்ட சுப்பிரமணிய சிவா, வ.உ.சியுடன் சிறை சென்றவர். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்கப் பாடுபட்டவர். அவரோடு சோமையாஜுலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிவாவைத் தனது குருவாக பாவித்தார் சோமையாஜுலு. அப்போது நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் ஒரு ஆசிரமம் நிறுவினார். அதுமுதல் சோமையாஜுலுவுக்கு வ.வெ.சு.ஐயரின் நட்பும் கிடைத்தது.

1924இல் பம்பாய் மாகாணம் பெல்காம் நகரில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்காக மதுரையிலிருந்து பெல்காம் வரையிலான 1100 கி.மீ தூரத்தை பல தொண்டர்களைக் கூட்டிக் கொண்டு சோமையாஜுலு கால்நடையாகவே புறப்பட்டுப் பாதயாத்திரை சென்றார். மாநாடு முடிந்து திரும்பும் போதும் நடந்தேதான் திரும்பி வந்தனர். 1927இல் நாகபுரி வேளேந்தும் போராட்டத்தையொட்டி மதுரையில் சோமையாஜுலு பல காங்கிரஸ் தொண்டர்களுடன் வாள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். அடுத்து கர்னல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்திலும் இவர் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போரின்போது இந்தியச் சிப்பாய்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சி செய்து பல மாதங்கள் வடமாநிலங்களைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அடக்கும் விதமாக கர்னல் நீல் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் கல்கத்தா சென்று ஆங்கிலப் படையுடன் சென்று வழிநெடுக அப்பாவி மக்களைப் பெண்கள், குழந்தைகள் உடபட பலரைக் கொன்று இந்தியச் சிப்பாய்களை அடக்கிக் கொடுமை புரிந்தவன். அவனுக்குச் சென்னையில் சிலை வைத்திருந்தார்கள். அந்தச் சிலையை அகற்ற ஓர் போராட்டம் நடந்தது. எனினும் 1937இல் ராஜாஜி அமைச்சரவை அமைந்ததும் முதல் வேலையாக அந்த நீலன் சிலை அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டது. எதிர்த்த ஆங்கில ஆதரவாளர்களுக்கு ராஜாஜி சொன்ன பதில், அதி எங்கள் சிலை, அதனை எங்கு வேண்டுமானாலும் வைப்போம் என்பதுதான்.

1930இல் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை அடுத்து சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் முதல் 15 நாட்கள் யாத்திரை செய்து உப்பு அள்ளிய நிகழ்ச்சி நடந்தது. இந்தப் போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் தொண்டர்களைச் சேர்க்கும் பணியும் மதுரையில் நடந்தது. அதில் ந.சோமையாஜுலுவின் முயற்சியால் முப்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களை மதுரை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பொதுஜன தொடர்பு வேலையை சோமையாஜுலு ஏற்றுக் கொண்டார்.

இவர் கோவில்பட்டியில் பேசிய ஒரு பொதுக்கூட்டச் சொற்பொழிவிற்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு ஆறுமாத கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்த வழக்கு நடந்த காலத்திலேயே இவர் மீது மேலும் பல வழக்குகள் போடப்பட்டன. ஆறுமாத தண்டனை முடிந்து வெளியே வரும்போது மறுபடி கைதுசெய்யப்பட்டு மறுபடி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது இவருக்கு.

மதுரையில் சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது போலீசின் கடுமையான தடியடிக்கு ஆளானார் இவர். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் இவருக்கு. கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு இவர் மீண்டும் தடியடிக்கு ஆளானார். 1932இல் இவருக்கு பத்து மாதம் சிறை தண்டனை கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி எண்ணங்கொண்ட தலைவர்கள் கூடி 1937இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி எனும் அமைப்பை ஏற்படுத்தினர். அதில் இவர் இணைந்தார். 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது இவர் யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் கைது செய்யப்பட்டார். 1940இல் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் காங்கிரஸ் நடத்திய உச்ச கட்டப் போராட்டம். வெள்ளையனே வெளியேறு போராட்டம். இதிலும் இவர் கைது செய்யப்பட்டார், ஆனால் இவரது உடல்நிலை காரணமாக இடையில் விடுதலையானார். கல்கி அவர்கள் எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்டத் தொடங்கியபோது அந்தக் குழுவில் செயலாளராக இருந்து உழைத்தவர் சோமையாஜுலு. இந்திய சுதந்திரத்துக்குப் பின் 1952இல் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து பெரும் வெற்றி பெற்றார். இவரைப் பற்றி மிக உயர்வாக எழுதியுள்ள பெரியோர்கள் இவரைச் "சொற்சோர்விலாத சோமையாஜுலு" என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தியாகிகள் வரலாற்றைத் தொகுக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. அப்படி திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதி தியாகிகள் வரலாற்றினைத் தொகுத்து வெளியிட்டார் நா.சோமையாஜுலு அவர்கள். 1972இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தினைத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதையும் இந்த நாட்டுக்காகச் செலவிட்ட தியாகி நா.சோமையாஜுலு அவர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீங்கி அமரரானார். வாழ்க நா.சோமையாஜுலு புகழ்!

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

ஓமந்தூர், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் திண்டிவனத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள சின்னஞ்சிறு கிராமம். இந்த கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முத்துராம ரெட்டி ரங்கநாயகி தம்பதியருக்கு ஓர் தவப்புதல்வன் பிறந்தான். அந்தக் குழந்தைதான் பின்னாளில் சென்னை மாகாண அரசியலில் பெருமைக்குரியவராக விளங்கிய ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆவார். அரசியலில் நாணயம், ஒழுக்கம், எளிமை, பொறுப்புணர்ச்சி, கடமை தவறாமை இப்படிப்பட்ட தவக்குணங்கள் பெற்று விளங்கியவர்கள் மிகச் சிலரே. அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராகவும், பின்னாளில் காமராஜ் அவ்வளவு குணங்களையும் தன்னகத்தே எற்றுக் கொண்டவராக விளங்க அவருக்கு வழிகாட்டியாக விளங்கியவரும் இந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தான்.

இளம் வயதில் தந்தையை இழந்த ஓ.பி.ஆர் தன் கல்வியை மட்டும் விடாமல் தொடர்ந்தார். கற்பதில் ஆர்வமும், கற்றதை நடத்தையில் காட்ட ஊக்கமும் உடையவராக விளங்கினார் இவர். இலக்கணம் கற்றார், சமய, ஆன்மிக, நீதி நூல்களைக் கற்றார், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளையும் கசடறக் கற்றார். அவரது அறிவும் ஞானமும் விசாலமடைய அடைய அவர் சிந்தனையும் பரந்து விரிந்ததாக, 'சர்வோ ஜனஹ ஸுகினோ பவந்து' இவ்வுலக மாந்தரெல்லாம் நலமோங்கி வாழ்க எனும் மந்திரத்தைத் தனது வாழ்க்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு விளங்கினார். ஊருக்குள் இவருக்கு நல்ல பெயர், போதாதற்கு இவர்தான் அவ்வூரின் மணியகாரர். மக்கள் இவருக்கு அளிக்கும் மரியாதைக்குக் கேட்க வேண்டுமா? உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்போர் நேர்மை, இரக்கம், தூய்மை இவற்றின் இருப்பிடமாக இருந்தால் கேட்க வேண்டுமா? இவரிடம் மக்கள் அன்பு மட்டுமல்ல, பக்தியே செலுத்தி வந்தார்கள்.

இவர் அடிப்படையில் ஒரு விவசாயி. தானே களத்தில் இறங்கி விவசாயம் பார்த்து, அதில் தேவையான முன்னேற்றங்களைச் செய்து அனுபவ விவசாயியாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷியிடம் இவருக்கு ஈடுபாடு, பக்தி. தியாகி வெங்கம்பூர் சாஸ்த்திரி என்றொருவர். அவர்தான் ரெட்டியார் மனதில் தேசிய விதையை ஊன்றி, அதை நன்கு வளர்த்து விட்ட அரசியல் குரு. இவரது அயராத காங்கிரஸ் பணி, தன்னலமற்ற தொண்டு இவரை 1930ஆம் ஆண்டில் தென் ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆக்கியது. இவர் தென் ஆற்காடு மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்து நாட்டின் அரசியல் நிலமையை மக்களுக்கு விளக்கி, கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

காந்தி ஆசிரமம் ஒன்றை சிறுவந்தாடு எனும் கிராமத்தில் தொடங்கி நடத்தினார். தென் ஆற்காடு மாவட்டத்தில் 1927 தொடங்கி 1934 வரையிலான காலகட்டத்தில் பல காங்கிரஸ் மகாநாடுகளைக் கூட்டி மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு காலத்தில் தென் ஆற்காடு மாவட்டம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் தலமை அகமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனி கவர்னராக இருந்த இடம் கடலூர்தான். இங்குள்ள ஒரு மைதானத்தில் எந்தவொரு நிகழ்ச்சியையும் பொதுமக்கள் நடத்தத் தடை இருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஓமந்தூரார் அங்கு ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதிகார வர்க்கம் செய்வதறியாது விழித்தது. ஓமந்தூரரின் புகழ் பெருகியது. கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அம்மாவட்டத்தின் காங்கிரஸ் இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.

1920இல் நாகபுரியில் சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குச் சென்று வந்த ஓ.பி.ஆர். தென் ஆற்காடு மாவட்ட அரசியல் மாநாட்டைக் கூட்டினார். இதில் பண்டித அசலாம்பிகை அம்மையார், 'தி ஹிந்து' ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கிருஷ்ணசாமி சர்மா வ.உ.சி. தண்டிக்கப்பட்டபோது கரூரில் அந்த தண்டனை தீர்ப்பை எதிர்த்து பேசிய பேச்சுக்காக சிறை தண்டனை பெற்றவர்.

1933இல் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து மாவட்ட மாநாட்டை நடத்தினார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தொண்டர்களை அனுப்பிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதுதான் அவரது முதல் சிறை வாசம்.

அதற்கு அடுத்த ஆண்டே, மகாத்மா காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டாம் முறையாக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு இவர் ஊரின் ஓரத்தில் ஒரு ஓலைக் குடிசை அமைத்து அதில் வசிக்கலானார். அரசியலும் ஆன்மீகமும் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் பலரும் இவரைத் தேடி அங்கு வரலாயினர். அந்தக் காலத்தில் தென் ஆற்காடும், செங்கல்பட்டும் இணைந்தது ஒரு பாராளுமன்றத் தொகுதி. இங்கு எம். பக்தவத்சலத்தின் மாமனாரும் பிரபல காங்கிரஸ் தலைவருமான முத்துரங்க முதலியார் காங்கிரஸ் சார்பிலும், கேசவன் எனும் ஜஸ்டிஸ் கட்சிக்காரரும் இங்கு போட்டியிட்டனர். இதில் முத்துரங்க முதலியார் வென்றார்.

1936 தேர்தலில் இம்மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான போட்டி காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும். இதில் ஓ.பி.ஆர். முனைந்து ஈடுபட்டு காங்கிரஸ் சார்பில் ந.சோமையாஜுலு, பசும்பொன் தேவர், ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி ஆகியோரை அழைத்து கூட்டங்கள் நடத்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் பயனாக அகில இந்தியாவும் ஓ.பி.ஆரை. கவனிக்கத் தொடங்கியது. யார் இந்த சாதனையாளர் என்று. ஓ.பி.ஆரின் பெயர் தமிழகமெங்கும் பரவியது.

1938இல் இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார். இவரது புரட்சிகரமான போக்கும், முற்போக்குச் சிந்தனைகளும் இவருக்கு கட்சியிலும் சரி, உறவிலும் சரி எதிர்ப்புகள் அதிகம் ஏற்பட்டன. எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாத, ஊழலற்ற, நேர்மையான இவரைப் போன்ற அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜம்தான். என்ன செய்வது? புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்பதற்காகவும் இவர் பாடுபடலானார். இவரை ஆதரித்துப் பல தலைவர்கள் அன்று அந்த போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர்.

1942 ஆகஸ்ட் 8, பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போரில் ஒன்று செய், அல்லது செத்து மடி எனும் வேத வாக்கியத்தை மகாத்மா தொண்டர்களுக்கு வழங்கினார். அன்று இரவே அங்கு வந்திருந்த அத்தனை தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஓமந்தூராரும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு 18 மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இது இவரது நான்காவது சிறை வாசம்.

இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றும் உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது. சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச்பால்டு நை முதலானோர் இந்த வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தென் ஆற்காடு மாவட்ட கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றது அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும், அதன் பின்னால் இந்திய குடியரசு ஆனபிற்பாடு 1952இல் ராஜாஜியும் 1954இல் காமராஜ் அவர்களும் அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும், ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது. வாழ்க ஓமந்தூரார் புகழ்!

Sunday, August 1, 2010

ப. ஜீவானந்தம்


ப. ஜீவானந்தம்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

"ஜீவா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ப. ஜீவானந்தம் கம்யூனிச இயக்கத்தில் மிகவும் பிரபலமானவராகவும் அக்கட்சியின் அதிகார பூர்வ ஏடான "ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இறங்கி பாடுபட்டதும், மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.

கன்யாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் 21-8-1907இல் பட்டன் பிள்ளை உமையம்மை தம்பதியரின் மகனாகப் பிறந்தார் ஜீவா. இந்தச் சிறுவனுக்கு சொரிமுத்து என்றும் மூக்காண்டி என்றும் பெயர் . இவரே தனது பெயரை ஜீவானந்தம் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இளம் வயதில் மகாத்மா காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு காந்திய வழியில் அரசியல் சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இராமநாதபுரம் மாவட்டம் சிராவயம் எனும் கிராமத்தில் 1927இல் "காந்தி ஆசிரமம்" ஒன்றை இவர் நிறுவினார்.

1927இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாடுதான் ஜீவா கலந்து கொண்ட காங்கிரஸ் மாநாடு. அரசியலில் காந்திஜியையும் சமூகப் பிரச்சினைகளில் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களையும் பின்பற்றத் தொடங்கினார். அரசியல், சமூக மாற்றம் இவற்றோடு இலக்கியத் தாக்கமும் அவரிடம் இயற்கையாக வந்து சேர்ந்து கொண்டது. மகாகவி பாரதியின் பால் மிக்க ஈடுபாடு கொண்டு அவர் எழுதியுள்ள நூல்களும், கட்டுரைகளும் ஏராளம். கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் மனம் ஈடுபட்டு அவற்றை அழகிய தமிழில் இவர் மொழிபெயர்த்துப் பாடுவதை நாள் முழுவதும் கூட கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக தாகூரின் "கீதாஞ்சலி"யை இவர் தமிழாக்கம் செய்திருப்பதைப் போல வேறு யாரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை.

சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது சொத்து என்று பதில் கூறினாராம். இந்தப் பதிலைக் கேட்டு வியந்துபோன காந்திஜி இல்லையில்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்றாராம். இந்தச் செய்தி பலராலும் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த செய்தி.

மகாத்மா காந்தி விதவைகளின் மறுமணம் பற்றிக் கொண்டிருந்த கருத்தை மகாகவி பாரதியும் கண்டித்திருக்கிறார். காந்திஜி இன்னமும் இந்த விஷயத்தில் பிற்போக்கானவர் என்பது அவர் கருத்து. அதுபோலவே ஜீவாவும் சமூக சீர்திருத்தங்களில் காந்திஜி சற்று பிற்போக்கானவர், ஆனால் தேச சுதந்திரம், கதர்த் தொழில் ஆகியவை அவர் கொண்ட உயரிய சேவைகல் என்று கருதினார்.

1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு இயக்கத்திலும் அதனையொட்டி அந்தப் போரில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் மறைவினால் மனம் பாதிக்கப்ப்ட்ட நிலையில் ஜீவா பல ஊர்களுக்கும் சென்று பொதுமக்களிடம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களை விளக்கிப் பொதுக் கூட்டங்களில் பேசினார். 1928இல் பெரியகுளத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சிறிது நேரம் பேசினார். இந்த காலகட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையோடும் ஜீவாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது.

சரி! காங்கிரஸில் இருந்து கொண்டு காந்திஜி, பெரியார் ஆகியோருடைய கொள்கைகளைப் பின்பற்றி வந்த ஜீவா பின் எப்போது கம்யூனிஸ்ட்டாக மாறினார்? இந்த கேள்வி எழுகிறது அல்லவா? ஆம். அதற்கொரு சரியான காரணம் இருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் ஒரு பக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி போலவே நாட்டிலுள்ள அனைவரும் அமைதி, அகிம்சை, சத்தியாக்கிரகம் என்று இருப்பார்கள் என்று எண்ணியதோ என்னவோ பிரிட்டிஷ் அரசு. ஆனால் அவர்களது எண்ணங்களுக்கு மாறாக பல மாகாணங்களில் தொழிலாளர் இயக்கங்கள் உருவாகி, வளர்ந்து, பலம்பெறத் தொடங்கியது. தொழிலாளர் நலன் மட்டுமல்ல, நாட்டு நலனும் முக்கியம் என்று இவர்களது செயல்பாடு இருந்தது கண்டு வெள்ளையர் ஆட்சிக்குக் கிலி பிடித்தது. என்ன செய்வது? இந்த தொழிலாளர் தலைவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளி இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளிவிட எண்ணியது.

அதற்காக வட மாநிலங்கள் மேற்கு வங்கம், பம்பாய், பஞ்சாப், ஐக்கியமாகாணம் போன்ற பகுதிகளில் இருந்த விவசாய, தொழிலாளர் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களைப் பிடித்து அவர்கள் மீது சதிவழக்கொன்றை ஜோடித்து விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தினர். இதற்கு "மீரத் சதிவழக்கு" என்று பெயர். கம்யூனிச இயக்கத்தின் மூத்த பிதாமகர் எஸ்.ஏ.டாங்கே போன்ற முன்னணித் தலைவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 1933இல் வெளிவந்தது. குற்றவாளிகள் என கூண்டில் நிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் மிக விளக்கமாக அறிக்கைகளை வெளியிட்டார்கள். இதையெல்லாம் படித்த ஜீவாவுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுத் தனது எதிர்கால அரசியலை நிச்சயம் செய்து கொண்டார்.

ஜீவாவின் அனல் கக்கும் பேச்சைக் கண்டு பிரிட்டிஷ் அரசு, இவர் இனி எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது என்று தடை விதித்தனர். ஆனால் அந்தத் தடையை மீறி ஜீவா கோட்டையூரில் பேசினார். இது பெரிய குற்றம் அல்லவா, பிரிட்டிஷார் பார்வையில். இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து பிறகு திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது சிறைவாசமும், சிறையில் பகத் சிங்கின் கூட்டாளிகளோடு ஏற்பட்ட பரிச்சயமும், மார்க்சீய நூல்களைப் படித்ததன் பலனும் சேர்ந்து இவரை ஒரு முழு கம்யூனிஸ்ட்டாக மாற்றியது.

கம்யூனிசம் ஒரு புறம், சமூக சீர்திருத்தம் மறுபுறம் என்று இவர் இருமுனை வாளாகச் செயல்பட்டார். பகத் சிங்கின் நூலொன்றை இவர் தமிழில் மொழிபெயர்த்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் ஜீவா. அப்படிக் கைது செய்யப்பட்ட இவரை மிகவும் கொடிய பயங்கரவாதியாகச் சித்தரித்து கைவிலங்கிட்டு ஊர் ஊராக அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவரது செயல்பாடு இன்னும் வேகமாக வளரத் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரி கொள்கையுடையவர்கள் அனைவரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது முதல் மகாநாடு சேலத்தில் நடந்தது. இதில் ஜீவா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் தேர்வானார் ஜீவா. 1938இல் வத்தலகுண்டில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிலிருந்து அகில இந்திய காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்வாயினர். அவர்களில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோரோடு இவர்களைக் காட்டிலும் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார் ஜீவா. அப்போதுதான் ராஜாஜிக்கு யார் இந்த ஜீவா என்ற கேள்வி பிறந்தது.

இவர் பல தொழிற்சங்கங்களுக்குத் தலைமை ஏற்றுப் பல போராட்டங்களை நடத்தினார். இவரது வளர்ச்சியைக் கண்டோ, அல்லது இவருக்குத் தொழிலாளர் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாகவோ, அல்லது இவரது போக்கு காங்கிரசுக்கு பாதகமாக இருக்குமென்றோ தெரியவில்லை காங்கிரஸ் கட்சி இவரை 1939 ஆகஸ்ட்டில் கட்சியை விட்டு நீக்கியது. உடனே ஜீவா தனது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்தார்.

அதன் பிறகு காங்கிரசிலோ, அல்லது காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவிலோ அங்கம் வகிக்காமல் ஜீவா முழுநேர கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். 1940இல் இவரை சென்னை நகரை விட்டு வெளியேறும்படி வெள்ளையர் அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால் இவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காரைக்கால் பகுதிக்குச் சென்றார். அந்த அரசும் இவரை அங்கு தங்க சம்மதிக்கவில்லை. அங்கிருந்து பம்பாய் சென்ற ஜீவாவை அந்த மாகாண அரசு பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றியது. 1942இல் விடுதலையான ஜீவா திருவாங்கூருக்கு அனுப்பப்பட்டார். அந்த சமஸ்தான அரசு இவரை சொந்த ஊரான பூதப்பாண்டியை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இவரால் சும்மாயிருக்க முடியுமா? தடையை மீறினார், கைது செய்யப்பட்டு சிறைவாசமும் ரூ.500 அபராதமும் கிடைத்தது.

அதிலிருந்து தொடர்ந்து ஜீவா தொழிலாளர் போராட்டங்களிலும், அரசியல் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக 1946இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால் அது முதல் இந்திய சுதந்திரம் வரை தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். 1952 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது சென்னை மாகாணத்தில் அமைந்த அரசுக்கு ராஜாஜி முதலமைச்சர் ஆனார். அப்போது ஆளும்கட்சி வரிசையில் ராஜாஜியும், எதிர் வரிசையில் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இருந்து வாதிட்டதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது ராஜாஜி சொன்னார் கம்யூனிஸ்ட்டுகள்தான் எனது முதல் எதிரி என்று.

ஜீவாவின் அரசியல், சமூக சீர்திருத்தக் கொள்கை, தொழிற்சங்க பணிகள் இவற்றோடு இலக்கியத் துறையிலும் இவர் சிறந்து விளங்கினார். இவரது கணீரென்ற குரலில் இவர் தாகூரின் 'கீதாஞ்சலி'யை மொழிபெயர்த்த தமிழ்க் கவிதையை உரக்கப் பாடியதை நேரில் கேட்டு அனுபவித்த பேறு இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. தனது அந்திம காலத்தில் சென்னை தாம்பரத்தில் ஒரு குடிசையில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்த காலத்தில், காமராஜ் முதலமைச்சராக ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற தாம்பரம் வந்தார். இங்குதான் ஜீவா இருக்கிறாராமே அவர் வீட்டுக்கு விடு என்று காரோட்டியைக் கேட்டுக் கொண்டார் காமராஜ். கார் ஒரு குடிசை வாயிலில் நின்றது. இறங்கி உள்ளே போனார் காமராஜ். அங்கு ஒரு கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா. காமராஜ் மனம் கலங்கியது. சரி நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள் போகலாம் என்றார். சிறிது நேரம் ஆகுமே பரவாயில்லையா என்றார் ஜீவா. காமராஜ் காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவா வரக்கணோம். என்னவென்று பார்த்தால் அவருக்கென்று இருந்த ஒரே வேட்டியை துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றார்கள்.

ஜீவா வசிக்க ஒரு அரசாங்க வீட்டை ஒதுக்க காமராஜ் ஜீவாவிடம் அனுமதி கேட்டார். அதை மறுத்துவிட்ட ஜீவா சொன்னார், இந்த நாட்டில் வீடு இல்லாத ஏழைகளுக்கு என்று இருக்க வீடு கிடைக்கிறதோ அன்று எனக்குக் கொடுத்தால் போதுமென்றார். அதன் பிறகு அவர் அதிக நாள் உயிரோடு இல்லை. இறக்கும் தருவாயில் ஜீவா சொன்ன செய்தி, காமராஜுக்குத் தகவல் சொல்லிவிடு என்பதுதான். இந்த நூற்றாண்டின் ஒரு அதிசய மனிதர், கொள்கைப் பிடிப்புள்ள மக்கள் தலைவன், சிறந்த இலக்கியவாதி மறைந்து போனார். ஆனாலும் அவர் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் தொண்டர்கள் இன்றும் ஜீவாவின் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்து வருகிறார்கள். வாழ்க ஜீவாவின் புகழ்!



"ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு"

(இந்தக் கட்டுரை "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலரில் பி.எம்.சோமசுந்தரம் எழுதி வெளியானது)

சுதந்திரப் பொன் விழாவை நாம் உற்சாகமாகக் கொண்டாடும் நேரத்தில் நமக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு நம் முன்னோர்கள் பட்ட பாட்டையும் அவர்கள் செய்த தியாகத்தையும் எழுதிட எந்த அகராதியிலும் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை.

குடும்பத்தைத் துறந்து வெஞ்சிறையில் அடைபட்டு செங்குருதி சிந்தி தம் இனிய உயிரத் தந்து, நமக்கு வாங்கித் தந்த சுதந்திரம் இது. இந்த வேள்வியில் ஆஹூதியானோர் பல்லாயிரக் கணக்கில். அவர்களில் இந்தத் தலைமுறையினர் மறக்க முடியாதவர் மறக்கக்கூடாதவர் ஜீவா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் ப.ஜீவானந்தம்.

1927ஆம் ஆண்டு சிராவயல் கிராமத்தில் ஜீவா ஆரம்பித்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார் காந்தியடிகள். ஜீவாவைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவர் கேட்டார். 'இந்திய மக்கள்தான் என் சொத்து' என்று ஜீவா பதிலளித்தார். இந்த பதிலால் நெகிழ்ந்த காந்தியடிகள் 'இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து' என ஜீவாவைப் பாராட்டினார்.

பதவிக்காகவும் சொந்தச் சூழ்நிலை காரணமாகவும் தங்களது கொள்கைகளையே தியாகம் செய்யும் தலைவர்களை இன்று பார்க்கிறோம். கொண்ட கொள்கையில் எந்தச் சூழ்நிலையிலும் லட்சியங்களைக் கைவிடாத கொள்கைக் கோமானகவே கடைசி வரை வாழ்ந்தவர் ஜீவா.

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது தந்தை பெரியாரின் இணையிலாத் தொண்டனாகவும் வலது கரமாகவும் இருந்தவர்.

குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பெரியாரிடம் கருத்து மாறுபட்டு பலர் பிரிந்து செல்வது வழக்கம். பிரிந்து செல்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். ஒரு சமயத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திசை மாறுவதைக் கண்டார் ஜீவா. 1935இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மகாநாட்டில் பெரியாரின் முன்னிலையிலேயே அவரது கருத்தை போக்கை விமர்சனம் செய்து (தலைவரைத் தொண்டர்கள் விமர்சனம் செய்ய முடிந்த காலம் அது) விட்டு வெளியேறினார்.

ஆத்திகராக பொது வாழ்வை ஆரம்பித்தவர் ஜீவா. காங்கிரஸ் தொண்டராக சோஷலிஸ்டாக சுயமரியாதை வீரராக பொதுவுடமைக் கட்சியின் தொண்டர் தோழர் தலைவர் என்று பல நிலைகளில் பணியாற்றியவர். காந்திஜி, பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், ராய. சொ., கோவை அய்யாமுத்து போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பாரதத்தின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர். இன மத பேதமின்றி பல்வேறு கட்சிகளும் போராடிப் பெற்ற இந்தச் சுதந்திரத்தைக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் பிதுரார்ஜித சொத்தாக அனுபவிக்க நினைத்த போது அதைத் தன் கடைசி மூச்சு உள்ளவரை எதிர்த்தவர் ஜீவா.

பல தலைவர்களையும், கலைஞர்களையும் இந்த நாட்டுக்குத் தந்த நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி எனும் சிற்றூரில் ஏழ்மையான குடும்பத்தில் 21-8-1907ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீவானந்தம். பின்னாளில் இவர் ஜீவா எனப் பெயர் பெற்றாலும் இவரது பெற்றோர் பட்டம் பிள்ளை உமையாம்பாள் தம்பதியினர் இவருக்கு வைத்த பெயர் சொரிமுத்து.

சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் பேசும்போது கைது செய்யப்பட்டார். சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார். இது அவருக்கு முதல் சிறை அனுபவம். அன்று தொடங்கி 1942இல் தடுப்புக் காவல் சட்டப்படி மீண்டும் சிறை. நாடு கடத்தல் என்று அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம்.

ஜீவாவை அவரது தொண்டர்கள் "ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு" என்று சொல்லும் அளவுக்குத் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போராட்டத்திலும் சிறையிலும் கழித்தார்.

பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த சமயம் மதுரையில் மாநாடு ஒன்றை மிகச் சிறப்பான முறையில் நடத்தினார். ஜீவா மாநாடு முடிந்த மறுநாள் சக தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் 'மயக்கம்' தெளிவித்து எழுப்பினர். மயக்கம் ஏன் வந்தது என்று கேட்டனர். கையில் காசில்லாததால் ஜீவா இரண்டு நாள் பட்டினி என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்தது. (பாருங்கள்! இவர் ஒரு அகில இந்திய கட்சியின் மாநிலத் தலைவர்) உடனே அவருக்கு உணவு கொடுத்தனர். அப்போது மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நின்றார். ஜீவா, தன் அரைக்கால் சட்டையிலிருந்து பணக்கத்தை ஒன்றை எடுத்து அவரிடம் தந்தார்.

இவ்வளவு பணம் இருக்கும்போது ஏன் பட்டினியாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்டபோது வந்த பதில் "இது கட்சியின் பணம். நான் சாப்பிட அல்ல". இதுதான் மாசிலா மாணிக்கம் ஜீவா.

பாரத மக்களின் மனதில் சோஷலிசக் கருத்துக்களை ஊன்றியவர் நேரு என்றால், தமிழக மக்களின் மனதில் அதை ஆழ ஊன்றியவர் ஜீவா.

குடிசை வீட்டில் வாழ்ந்த ஜீவாவுக்கு அரசு சார்பில் வீடு கொடுக்க அப்போதைய முதலமைச்சர் காமராஜ் விரும்பினார். அவர் ஜீவாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்த போது, "எல்லோருக்கும் வீடு கொடிங்கள். அப்போது எனக்கும் ஒன்று கொடுங்கள், அதுதான் உண்மையான சோஷலிசம்" என்று அரசு வீட்டை மறுத்தவர் ஜீவா.

எந்த விஷயத்திலும் ஒரு உண்மையான அக்கறையுடனும், தீவிரமான பற்றுதலுடனும் ஈடுபடும் இயல்பு கொண்டவர் ஜீவா. தலைவராக இருந்த போதும் தன்னை ஒரு தொண்டனாக தோழனாக நினைப்பதில் பெருமை கொண்டவர்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.

Saturday, July 31, 2010

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்


பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலுள்ள ஊர்களில் கூட பிரபலமான பெயர். தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்த மகான். மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில் முதன்மையானவர் பசும்பொன் தேவர் அவர்கள். ராஜாஜி அவர்கள் தேவர் மீது அன்பும் பற்றும் கொண்டவர். நான் அர்ஜுனன் என்றால் தேவர்தான் சாரதி என்றார் அவர். மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அப்போது ராஜாஜி தேவர் அவர்களைத்தான் சத்தியாக்கிரகிகளுக்குத் துணையாக இருக்கப் பணித்தார். கதிரவனைக் கண்ட பனி போல எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆலயப் பிரவேசம் மிக விமரிசையாக நடந்தது. தேசியமும் தெய்வீகமும் தேவர் கடைப்பிடித்த இரு கொள்கைப் பிடிப்புகள்.

அந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் தேசிய முழக்கங்களை எதிரொலிக்கச் செய்து "காங்கிரசைக் காத்தவர்" எனும் பாராட்டை தீரர் சத்தியமூர்த்தியிடம் பெற்றவர் தேவர்.

முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் பிறந்தார். தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார். இளம் வயதில் இவர் தாயை இழந்தார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார்.

1927ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார். ராஜாஜி 1937இல் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்றபின் ஆலயப் பிரவேசச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர்.

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் இவர் முதுகுளத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜில்லா போர்டு தலைவராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சிபாரிசு செய்ததும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டார் தேவர். 1937இல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பலம்பொருந்திய கட்சியாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் ராஜா ஜஸ்டிஸ் கட்சி சார்பில் நின்றார். அவர் சமஸ்தானத்தில் மன்னருக்கு எதிராக யார் காங்கிரசில் போட்டியிட முடியும். அப்படி போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியுமா? அந்த நிலையில் தேவரை காங்கிரஸ் கட்சி அங்கு நிறுத்துகிறது. தேவரே வெற்றி பெற்றார்.

அப்போது சாத்தூர் தொகுதியில் காமராஜ் நின்றார். அந்தத் தேர்தலில் கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் தேவர் அவர்கள்தான். காங்கிரசில் அப்போது மகாத்மா காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் போட்டி நிலவியது. திரிபுரா காங்கிரசில் மகாத்மா காந்தி பட்டாபி சீத்தாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார். நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும் காந்திஜி பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக்கூடியவரா தேவர். தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்கிறார். வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில்

18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு தேவர் ஆறாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.

சுதந்திரம் பெறும் காலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. 1946இல் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் முதல்வராகப் பதவியேற்றார். தேவரை தன்னுடைய அமைச்சரவியில் சேரும்படி பிரகாசம் அழைத்ததை தேவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்த நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சி 1948ல் தனிக் கட்சியாக வெளியே வந்தது. அப்போதிலிருந்து தேவர் காங்கிரசில் இல்லை, பார்வர்டு பிளாக்கின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து குடியரசாக 26-1-1950இல் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றுப் பின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

மதுரையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது அதில் பங்குகொண்ட ஒருவர் கொலையுண்ட வழக்கில் தேவர் கைதுசெய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அங்கு இவரது உடல்நலம் கெட்டது. அப்போது தென் மாவட்டங்களில் இருவேறு பிரிவினர்களுக்கிடையே கலவரம் மூண்டது. அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். மதுரையில் இவர் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நாடக பாணியில் அமைந்தது. விடியற்காலை எழுந்து மதுரையிலிருந்து புறப்பட்டு முதுகுளத்தூர் புறப்பட்டு வைகை நதிப் பாலத்தில் அவரது கார் வரும்போது பாலத்தின் நடுவில் போலீஸார் இவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள். காரிலிருந்து கீழே இறங்கிய தேவர் முழங்காலுக்கும் கீழ் வரை தொங்கும் தனது பழுப்பு நிற கதர் ஜிப்பாவில் கைவிட்டதுதான் தாமதம் போலீஸ் அதிகாரிகள் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர் ஏதோ ஆயுதத்தை எடுக்கிறார் என்று. இவர் அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன் பையிலிருந்து பட்டினால் ஆன திருநீற்றுப் பையை எடுத்து அதிலிருந்து கைநிறைய திருநீற்றை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு, ஊம் இப்போது போகலாம் என்றார்.

இவர் இப்போதைய மியன்மார் எனும் பர்மாவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். அவர்கள் இவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு சென்ற பல இந்தியத் தலைவர்களில் இவருக்கு அளித்தது போன்ற வரவேற்பு வேறு யாருக்கும் அளிக்கப்பட்டதில்லையாம். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, உலகின் அத்தனை பகுதிகளிலும் தேவரின் புகழ் பரவிக் கிடந்தது.

1957இல் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இரண்டிலும் போட்டியிடுகிறார். இரண்டிலும் மறுபடி வெற்றி. இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறார். உடல்நலம் கெட்டுவிட்ட நிலையில் 1962ல் நாடாளுமன்றத்துக்கு மட்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆனாலும் இவர் டெல்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது. தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்று விடுகிறார். அங்கு அவர் 30-10-1963இல் தனது 55ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்து உயிர் துறந்தார். வாழ்க தீரர் முத்துராமலிங்கத் தேவரின் புகழ்!

ஐ. மாயாண்டி பாரதி

ஐ. மாயாண்டி பாரதி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

மதுரை நாட்டுக்களித்த தியாகசீலர்கள் அனேகரில் ஐ.மாயாண்டி பாரதி முக்கியமானவர். சுதந்திரப் போரில் மதுரையின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என்பதை என்றும் மறக்க முடியாது. அது போலவே சுதந்திரப் பொன்விழா ஆண்டில் மதுரை தியாகிகள் மலரை தியாகி ந.சோமையாஜுலு அவர்கள் மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவந்திருக்கிறார். இதில் மிக நுணுக்கமாக அனைத்து தாலுகாக்களிலும் இருந்த தியாகிகள் பலரது வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். அவர்களில் ஐ.மாயாண்டி பாரதியின் வரலாறும் ஒன்று.

இவர் 1917ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையார் கு.இருளப்ப ஆசாரி. பின்னாளில் கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டைவர் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதன் முதலாக 1931இல் கள்ளுக்கடை மறியலில் இவர் தனது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் 1932இல் சட்டமறுப்பு இயக்கத்தின் போது, போராட்டத்தைப் பற்றி விளக்கும் துண்டுப் பிரசுரங்களை இவர் விநியோகித்தார்; சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப் படுத்தினார். அது தவிர சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் சுதந்திரச் சங்கு போன்ற பத்திரிகைகளை கூவிக் கூவி விற்றார். ராஜாஜி கொண்டு வந்த ஆலயப் பிரவேசச் சட்டத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்த ஆலயப் பிரவேசத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். 1935இல் ஜவஹர் வாலிபர் சங்கம் எனும் ஓர் இயக்கத்தைத் தொடங்கி இளைஞர்களை ஒன்று திரட்டி தேச சேவையில் ஈடுபடுத்தினார். வாசக சாலைகளை உருவாக்கி அங்கெல்லாம் மக்கள் சுதந்திரப் போர் செய்திகளைப் படிக்கும்படி வகை செய்தார்.

இவர் ஒரு எழுத்தாளர்; இலக்கியவாதி. திரு வி.கலியாணசுந்தரனார் நடத்திய "நவசக்தி" பத்திரிகையிலும், மகாகவி பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பப் பிள்ளையின் "லோகோபகாரி"யிலும் இவர் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். மேலும் பல சிறு பத்திரிகைகளிலும் எழுதி சுதந்திரத் தீயை எங்கும் பரப்பினார். இவரது எழுத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்க்குரல் உரக்க எழும். ஆட்சியாளர்களுக்கு இவரது எழுத்து சிம்ம சொப்பனமாக விளங்கியது.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் எம்.என்.ராயை மதுரைக்கு வரவழைத்து மாநாடு நடத்தி அதில் பெரிய தலைவர்களைப் பேச வைத்தார். 1940இல் இரண்டாம் உலக யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கைதானார். இதில் இவருக்குக் கிடைத்தது 7 மாத கடுங்காவல் தண்டனை. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைந்து கிடந்தார். வேலூர், தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் இவரது சிறை வாழ்க்கைக் கழிந்தது. அடிப்படையில் பொதுவுடமை கருத்துக்களில் மனம் ஈடுபட்ட இவர் முழுநேர கம்யூனிஸ்டாக மாறினார்.

சிறையிலிருந்து விடுதலையான பிறகு வெளியே வந்து அப்போது கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்த ஜீவாவை ஆசிரியராகக் கொண்ட "ஜனசக்தியில்" வேலைக்கு அமர்ந்தார். அதில் இவர் சுமார் 20 ஆண்டுகள் உதவி ஆசிரியராக இருந்து அனல் கக்கும் கம்யூனிச பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

1950இல் இவர் ஒரு சதிவழக்கொன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றார். சுதந்திர இந்தியாவிலும் சிறைவாசம் அனுபவித்த ஒருசில தேசபக்தர்களில் ஐ.மாயாண்டி பாரதியும் ஒருவர். 1952இல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது. அப்போது 1953இல் மாயாண்டி பாரதி விடுதலை செய்யப்பட்டார். 1962இல் சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்தியாவில் கம்யூனிச இயக்கம் இரண்டாகப் பிளவு பட்டது. சீன ஆதரவு நிலை எடுத்த இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட் கட்சி) இவர் அங்கம் வகித்தார். அந்த கட்சி நடத்திய "தீக்கதிர்" எனும் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்ந்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து கொண்டே இவர், அனைத்துக் கட்சி சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் மாவட்டக் குழுவின் பொதுச்செயலாளராக இருந்தார். சமூக சிந்தனை, இலக்கியச் சிந்தனை, எழுத்தாற்றல் மிக்க சுதந்திரப் போர் வீரர் மாயாண்டி பாரதி. வாழ்க இவரது புகழ்!

Saturday, July 10, 2010

புதுச்சேரி வ. சுப்பையா

புதுச்சேரி வ. சுப்பையா
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

புதுச்சேரி இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பகுதி என்பது நமக்கெல்லாம் தெரியும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போரின் போது சென்னை மாகாணத்தில் போலீஸ் அராஜகத்துக்குத் தப்பி மகாகவி பாரதி புதுச்சேரி சென்று தங்கியிருந்தது தெரியும். அதுதவிர ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளை, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் ஆகியோரும் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருந்தனர். அப்படி இந்திய சுதந்திரப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பூமி புதுச்சேரி. அதுவும் ஒரு அன்னியன் வசம் இருந்தது ஆம்! பிரெஞ்சுக் காரர்களின் வசம் இருந்தது. அதன் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு போராளிதான் வ.சுப்பையா. புதுச்சேரி மற்றும் இந்தியாவிலிருந்த புதுச்சேரி காலனிகள் சுதந்திரம் பெற வ.சுப்பையா செய்த தியாக வரலாற்றின் ஒரு சிறு துளியை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இவர் பிறந்தது 7-2-1911. இந்த காலகட்டத்தில் முதலில் குறிப்பிட்ட இந்திய சுதந்திரப் போர் வீரர்கள் பாரதி, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் ஆகியோர் அப்போது அங்குதான் இருந்தார்கள். இவர் தனது 16ஆம் வயதில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றார். அந்த மாநாட்டுக்கு டாக்டர் அன்சாரி தலைமை வகித்தார். சீனிவாச ஐயங்கார் ஏற்பாடுகளைச் செய்தார். அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பின்பு உப்பு சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு கொண்டார். அவ்வாண்டில் 'பிரெஞ்சு இந்திய வாலிபர் சங்கம்' எனும் அமைப்பித் தோற்றுவித்தார். ஒரு பக்கம் சமூக சீர்திருத்தம் இவர் கவனத்தைக் கவர்ந்தது, மறுபுறம் நாட்டு சுதந்திரம் இவருக்கு முக்கியமாகத் தெரிந்தது. எனவே இரு வேறு பாதைகளிலும் பயணிக்க வேண்டியிருந்தது.

இந்த வயதில் இவருக்கு ரஷ்ய புரட்சியும், லெனின் எழுதிய நூல்களும், சிங்காரவேலு செட்டியாரின் நூல்களும் இவருக்கு இடது சாரி எண்ணங்களைத் தோற்றுவித்தது. இவர் சென்னை செல்லும் சமயத்திலெல்லாம் அங்கு சங்கு சுப்பிரமணியம் நடத்திக் கொண்டிருந்த "சுதந்திரச் சங்கு" அலுவலகம் செல்வார். அங்கு இவருக்கு டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ச.து.சு.யோகியார், வ.ரா, பி.வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. மகாத்மா காந்தியின் 1934 புதுச்சேரி விஜயம் இவரது ஆர்வத்தை மேலும் தூண்டியது. கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரையாவின் அறிமுகம் இவருக்கு ஓர் புதிய வழியைக் காட்டியது.

புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர்களின் சங்கங்களை அங்கீகரிக்கவில்லை. எனவே சுப்பையாவின் கவனம் அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காகத் தொழிற்சங்கங்களைத் தோற்றுவிப்பதில் சென்றது. இராப்பகலாக இவர் அந்த வேலையில் இறங்கி தொழிலாளர் இயக்கங்களைத் தோற்றுவித்தார். அந்தக் காலத்தில் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட தொழில் நேரமென்பது கிடையாது. இந்தக் கோரிக்கைகளை வைத்து இவர் ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். 84 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தப் போராட்டம் பின்னர் 1935இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு முடிவுக்கு வந்தது.

1936இல் நடந்த வேலை நிறுத்தத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி பல தொழிலாளர்களின் உயிர்களை பலி கொண்டனர். இந்தப் போராட்டத்தில் சுப்பையாவையும் சுட்டு விட ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அது இயலவில்லை.

சுப்பையாவுக்கு நேருஜியோடு நெருங்கிய தொடர்பு உண்டு. பிரான்சுக்குச் சென்று புதுச்சேரிப் பிரதேசத்தின் சுதந்திரம் பற்றி அவர்களோடு விவாதிக்க சுப்பையாவை நேருஜி அனுப்பினார். இவருக்கு நேருவைத் தவிர, தீரர் சத்தியமூர்த்தி, காமராஜ், ப.ஜீவானந்தம், சுந்தரையா ஆகியோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

1954 நவம்பர் முதல் தேதி பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. இந்த வெற்றிக்குப் பின்னால் சுப்பையாவின் உழைப்பும் தியாகமும் இருந்தது. இந்தப் போராட்டத்திற்காக சுப்பையா நாடுகடத்தப்பட்டு புதுச்சேரி எல்லைக்குள் போகமுடியாத சூழ்நிலை இருந்தது. புதுச்சேரியின் சுதந்திர நாளன்று சுப்பையாவை ஒரு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உட்காரவைத்து லட்சக்கணக்கானவர்கள் வரவேற்றனர். 1955இல் அமைந்த புதிய புதுச்சேரி அரசில் வ.சுப்பையா எதிர்கட்சித் தலைவரானார். இருமுறை புதுச்சேரி அமைச்சரவையிலும் பங்கு பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான வ.சுப்பையா எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக இருந்தார். ஏற்றமும் இறக்கமும் அவருக்கு ஓர் பொருட்டல்ல. இவர் 1993 அக்டோபர் 12இல் காலமானார். வாழ்க புதுச்சேரி வ.சுப்பையா புகழ்!

ஜி.சுப்பிரமணிய ஐயர்

"தி ஹிந்து" பத்திரிகை ஸ்தாபகர் ஜி.சுப்பிரமணிய ஐயர்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

ஜி.சுப்பிரமணிய ஐயர் 'தி ஹிந்து' பத்திரிகையைத் தொடங்கியவர் என்பதோடு, மகாகவி பாரதியாரை மதுரையிலிருந்து அழைத்து வந்து தனது 'சுதேசமித்திரனில்' உதவி ஆசிரியராகச் சேர்த்து விட்டதன் மூலம் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தவர். காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க கால ஸ்தாபகர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கம் வளரவும், உள்நாட்டினர் சுதேசி செய்திகளை அறிந்து கொள்ளவும் பத்திரிகைகளைத் தொடங்கியவர். அகில இந்திய காங்கிரஸ் வரை தனது பெயரையும் புகழையும் ஸ்தாபனம் செய்தவர். பேச்சில் மட்டுமல்ல, தனது செயலிலும் சமூக சீர்திருத்தங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டிய மாபெரும் சமூகப் புரட்ச்சியாளர். இந்த பெருமைகளுக்கெல்லாம் உரியவரான ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றி இப்போது பார்ப்போம்.

இவர் தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் பாவாசாமி மடம் தெருவில், 1855ஆம் ஆண்டில் கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியரின் தவப்புதல்வனாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். சுப்பிரமணிய ஐயருக்கு உடன்பிறந்தோர் அறுவர், ஒரு சகோதரி. இளம் வயதில் இவரது தந்தை காலமாகிவிட்டார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவையாற்றில் பயின்ற பின் தஞ்சாவூரில் மிஷினரி பள்ளியொன்றில் படித்து 1869இல் மெட்ரிக் தேறினார். பின்னர் அதே நிர்வாகம் நடத்திய கல்லூரியில் 1871இல் எஃப் ஏ எனும் இண்டர்மீடியட் தேறினார். சிறுவயதிலேயே மீனாட்சியம்மையை மணந்தார்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். அப்போது அதற்கு நார்மல் ஸ்கூல் என்று பெயர். பிறகு இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் 1877இல் சேர்ந்தார். அங்கிருந்தபடியே பி.ஏ. தேறினார். திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளி அப்போது ஆங்கிலோ-வர்னாகுலர் பள்ளி என்றிருந்தது. அதன் தலைமை ஆசிரியராக ஆனார். 1888இல் இவரே ஒரு உயர்நிலைப் பள்ளியை ஸ்தாபித்தார்.

திருவல்லிக்கேணியில் அந்தக் காலத்தில் 'இலக்கியக் கழகம்' எனும் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதில் பல பெரியவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் டி.டி.விஜயராகவாச்சாரியார், டி.டி.ரெங்காச்சாரியார், பி.வி.ரெங்காச்சாரியார், டி.கேசவராவ் பந்துலு ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த சமயம் 1878இல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஒரு இந்தியரை, சர்.டி.முத்துசாமி ஐயரை நீதிபதியாக ஆங்கில அரசு நியமித்தது. அப்போது ஆங்கிலேயர்களே நடத்தி வந்த 'தி மெயில்' போன்ற சில பத்திரிகைகள் இந்த நியமனத்துக்குப் பலத்த கண்டனம் தெரிவித்தன. தலையங்கங்களும் எழுதின. ஒரு கருப்பர் நீதிபதியாகிவிட்டால் இவர்கள் மற்றவர்களிடம் ஜாதிபாகுபாடு பார்ப்பதோடு பாரபட்சமாகவும் நடந்து கொள்வர் என்றெல்லாம் எழுதின. இதைக் கண்டு கொதித்துப் போன இலக்கியக் கழக உறுப்பினர் அறுவரும் தங்களிடமிருந்த ஒன்றே முக்கால் ரூபாய் பணத்தில் ஒரு பத்திரிகையைத் தொடங்கி முதலில் 80 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டனர். இப்படித்தான் முதன்முதலில் 'தி ஹிந்து' பத்திரிகை 1878 செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாயிற்று. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பொய்ப் பிரச்சாரங்களை இந்த சுதேசி பத்திரிகை முறியடிக்கத் தொடங்கியது.

இந்த பத்திரிகை முதலில் வாரம் இருமுறை, மும்முறை என்றெல்லாம் வெளியாகி பின்னர் தினசரியாக மாறியது. 1898இல் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பத்திரிகையிலிருந்து விலகிக் கொண்டார், உரிமை விஜயராகவாச்சாரியரிடம் போயிற்று. பிறகு கஸ்தூரி ஐயங்கார் வசம் ஆனது. ஜி.எஸ். ஹிந்துவில் இருபது ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சென்னை மகாஜனசபை எனும் அமப்பு உதயமானது. 1883இல் ரிப்பன் பிரபு ஸ்தலஸ்தாபன சுயாட்சி திட்டத்தை அறிமுகம் செய்தார். இன்றைய கார்ப்பரேஷன், முனிசிபாலிடி, பஞ்சாயத்து போர்டு போன்றவற்றுக்கு மூல காரணம் இந்த திட்டம்தான். சென்னை மகாஜனசபையின் ஆண்டுக் கூட்டம் 1884இல் நடந்தபோது மக்களின் கருத்துக்களை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்க ஓர் அமைப்பு தேவை என உணர்ந்தது. அதன் விளைவு பம்பாயில் அதற்கு அடுத்த ஆண்டு காங்கிரஸ் மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் முயற்சியால் இது தோன்றியது. ஒரு ஆங்கிலேயருக்கு ஏன் இந்த முயற்சி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு (சிப்பாய் கலகம்) இந்தியர்கல் விழித்துக் கொண்டுவிட்டார்கள், இனியும் அவர்களை கவனியாமல் விட்டால் ஆபத்து; ஆகையால் அவர்களையும் உள்ளே இழுத்துக் கொண்டு நிர்வாகம் செய்தால் தான் முடியும், மேலும் இந்தியர்களுக்குச் சில சலுகைகளையும் தர வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் எண்ணியதன் பலன் ஒரு ஆங்கிலேயர் காங்கிரசை நிறுவினார்.

முதன்முதலாக 1885இல் பம்பாயில் கூடிய காங்கிரஸ் மகாசபையின் முதல் மாநாட்டில் மொத்தம் கூடிய 72 பிரதிநிதிகளில் சென்னை மாகாண பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டும் 21 பிரதிநிதிகள். காங்கிரசின் தோற்றத்துக்குச் சென்னை எந்த அளவுக்குக் காரணமாக விளங்கியிருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் சான்று. இந்த 21 பிரதிநிதிகளில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். அதுமட்டுமல்ல, இந்த முதல் காங்கிரசின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய பெருமை ஜி.சுப்பிரமணிய ஐயரையே சேரும். அப்போது அவருக்கு வயது முப்பது.

இந்தப் பெருமை குறித்து "காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்" எழுதிய மகாகவி பாரதியார் கூறுகிறார்:- "தமிழ்நாடு தவமுடையது. ஏனெனில் காங்கிரஸ் மகாசபையின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் பெருமை தமிழ்நாட்டுத் தலைவராகிய "சுதேசமித்திரன்" ஜி.சுப்பிரமணிய ஐயருக்கே கிடைத்தது".

சரி! அந்த முதல் தீர்மானம் கூறுவது என்ன? ஜி.சுப்பிரமணிய ஐயர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய உரையின் ஒரு பகுதி இது: "இன்று நாம் பேசும் பேறு பெற்றுள்ள நாள். என் முன்னே மரியாதைக்குரிய பெரியோர்கள் அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருக்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குத் தொடர்பு கொள்ள முடியாத இடத்திலிருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்திருக்கிறார்கள். லாகூர், சிந்து, பம்பாய், கல்கத்தா, சென்னை முதலிய இடங்களிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள். இது தேசிய வாழ்க்கை நம் நாட்டில் தொடங்கி விட்டதை அறிவிக்கின்ற கூட்டம். மிக விரைவில் நாம் இங்கு ஒரு பெரியத் திருப்பத்தைக் காணப்போகிறோம் என்பதை அறிவிக்கின்ற கூட்டம். இது தொடக்கம்தான். இதுவரை வாழ்ந்தது போலன்றி இனி நாம், நம் நாடு, இந்திய தேசியம், தேசியத்தில் நாட்டம் என்ற உணர்வோடு பேசப்போகிறோம்."

இந்திய தேசியம் பற்றிய முதல் முழக்கம் 1885இல் பம்பாயில் நமது ஜி.சுப்பிரமணிய ஐயரால் முழங்கப்பட்டது என்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தரக்கூடிய செய்தி. பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களுக்கு தேசிய உணர்வு தேவை என்று முழக்கமிட்டதுதான் பம்பாய் காங்கிரசின் முக்கிய விளைவு. எனவேதான் 'காங்கிரஸ்' எனப் பெயர் சூட்டப்பட்ட அந்த இயக்கத்துக்கு "தேசிய" எனும் பொருள்படக்கூடிய "நேஷனல்" என்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். இந்திய அரசியலை பகுத்து ஆராய்வதற்காக "ராயல் விசாரணைக் கமிஷன்" நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த முதல் தீர்மானத்தின் சாராம்சம். இந்த முதல் தீர்மானத்தை அடுத்து மொத்தம் எட்டு தீர்மானங்கள் நிறைவேறின. இந்த எட்டு தீர்மானங்களையும் முன்மொழிதல் அல்லது வழிமொழிதலைச் செய்தவர்கள் சென்னை மாகாணத்தவர்கள். அவர்கள்:- பி.அனந்தாச்சார்லு, நீதிபதி எஸ்.சுப்பிரமணிய ஐயர், மு.வீரராகவாச்சாரியார், டி.எஸ்.ஒயிட், பி.ரங்கய்ய நாயுடு, தஞ்சை எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர், எஸ்.வெங்கடசுப்பராயலு பந்துலு ஆகியோர். இவர்களில் ஒயிட் என்பார் ஆங்கிலோ இந்திய அசோசியேஷனின் தலைவர். இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 62 ஆண்டுகள் கழித்து இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், அதன் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த ஜி.சுப்பிரமணிய ஐயரை நினைத்து நாம் பெருமைப் படலாம்.

காங்கிரசில் கோபாலகிருஷ்ண கோகலே ஒரு மிதவாதி. பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி. (இங்கு பயங்கரவாதி என்று பொருள்கொள்ளக் கூடாது - காங்கிரஸ் கொள்கைகளில் புரட்சிகரமான எண்ணங்கொண்டவர் என்பது பொருள்). ஜி.எஸ். திலகரின் வழித்தோன்றல். 1908இல் ஜி.எஸ். சுதேசமித்திரனில் எழுதிய ஒரு கட்டுரைக்காகக் கைது செய்யப்பட்டார். இவர் 1882 லேயே சுதேசமித்திரனைத் தொடங்கி விட்டார். தமிழில் வெளிவந்த முதல் அரசியல் நாளிதழ் சுதேசமித்திரன் தான். அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் என்பது பெருமைக்குரிய விஷயம். இவர் ஒரு முறை மதுரைக்குச் சென்றிருந்த சமயம் அங்கு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக இருந்த பாரதியின் அறிவு கூர்மையையும், எழுதும் ஆற்றலையும் கண்டு அவரை சுதேசமித்திரனுக்கு அழைத்து வந்து உதவி ஆசிரியராக்கினார். நாட்டுக்கு ஒரு எழுத்தாளர், கவிஞர், நல்ல பத்திரிகை ஆசிரியர் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்.

ஜி.சுப்பிரமணிய ஐயர் தான் பேசும் பொதுக்கூட்டங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்ட பிறகு சிறு சிறு துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பார். அதற்காக இவர் தன்னுடன் ஒரு பெரிய பையையும் வைத்திருப்பார். அதில் அரசியல், சமூக சீர்திருத்தம், ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் போன்ற பல சிறு வெளியீடுகள் இருக்கும். அப்படி அவர் விநியோகம் செய்த ஒரு வெளியீடு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரைன் (Bryan) என்பவர் ஆற்றிய ஒரு உரையாகும். அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசிய ஒரு சொற்பொழிவு அது. அதனைத் தமிழில் மொழிபெயர்த்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வெளியிட்டார். அதைத்தான் அவர் எல்லா கூட்டங்களிலும் மக்களிடம் விநியோகித்தார். இது குறித்த புகார் ஒன்று சென்னை போலீஸ் கமிஷருக்குச் சென்றது. இந்த விவரங்கள் சென்னை போலீஸ் ஆவணங்களில் காணப்பட்டது.

இவருக்கு ஒரு மகள். அவர் இளம் வயதிலேயே விதவையானார். அந்த காலத்தில் எந்த வயதானாலும் அவர்கள் விதவைக் கோலம் பூண்டு வாழ்நாள் முழுவதும் உள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும். ஆனால் ஜி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தன் மகளுக்கு மறுமணம் செய்விக்க முயற்சிகள் எடுத்து பம்பாய் சென்று அங்கு அந்தப் பெண்ணுக்குத் திருமணமும் செய்து வைத்தார். வைதீகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவர் அஞ்சாமல் செய்ததோடு, விதவைகள் மறுமணத்தை ஆதரித்து எழுதியும் வந்தார். பாரதியின் 'சந்திரிகையின் கதை' எனும் புதினத்தில் இந்த விவரங்கள் அனைத்தையும் சேர்த்திருப்பதைப் பார்க்கலாம்.

ஜி.எஸ். ஐயருக்கு தோலில் ஒரு வித நோய் ஏற்பட்டு மேலேயிருந்து நீர்வடியத் தொடங்கி அது மிகவும் மோசமான கட்டத்தை அடைந்தது. வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கியிருந்த இவரைப் பார்க்க மகாத்மா காந்திஜியே வந்து அவரது புண்களைத் தன் மேல் துண்டால் துடைத்து ஆறுதல் கூறிச் சென்றார். இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு இவர் 1916ஆம் ஆண்டில் காலமானார். வாழ்க ஜி.சுப்பிரமணிய ஐயர் புகழ்!